….
….

….
திரையிசையின் பின்னணிகளை அறிந்தவர்களுக்கு
மதுரை ஜி.எஸ்.மணி அவர்களைப் பற்றியும் ஓரளவு
தெரிந்திருக்கும். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.
விஸ்வநாதனுடன் சேர்ந்து, அவரது உதவியாளராக
பல ஆண்டுகள் பணியாற்றியவர் திரு. ஜி.எஸ்.மணி.
கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த புலமை…
நல்ல குரல் வளம்..
கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட
திரைப்படப்பாடல்களை அடையாளம் காட்டி,
திரைப்பட பாடல் ரசிகர்களுக்கு ஓரளவு கர்நாடக இசையை
பழக்கம் செய்தவர். இவரது நிகழ்ச்சிகளில் பெரும்பாலும்,
கர்நாடக இசையும், திரையிசையும் கலந்தே இருக்கும்.
கீழே – முதலில் மதுரை ஜி.எஸ். மணி அவர்களின்
உரையிலிருந்து கொஞ்சம் – பிறகு அவரது நிகழ்ச்சியிலிருந்து
கொஞ்சம்….!!!
———————
-150 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது போல கச்சேரிகள்
நடத்தப்படவில்லை. பஜனை நிகழ்ச்சிகள் மட்டுமே இருந்தன.
அதில் சில ராகங்களை இசைப்பார்கள், அவ்வளவே.
அதன் பின்னரே கச்சேரிகள் வந்தன. கச்சேரிகளின் நோக்கமே
ரசிகர்களைத் திருப்திபடுத்துவதுதான். இசைக் கலைஞர்கள்
ஜனங்களைத் திருப்திப்படுத்த பாடுகிறோம். இலக்கணம்
நிறைந்தது கர்நாடக சங்கீதம். பஜனை அல்லது நாம சங்கீர்தனம்
அப்படிப்பட்டதல்ல. மனம் உருகி இறைவனைப் பாடுவது.
அதில் சங்கீதத்தைவிட பக்திக்குத்தான் முன்னுரிமை.
எம்.கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம்
போன்றோருக்கு இணையான குரல் வளமுள்ளவர்கள்,
இன்னும் இசைக்குக் கிடைக்கவில்லை. அதற்கு நிகரான குரல்
என்றால் டி.எம். செüந்தரராஜனை வேண்டுமானால் கூறலாம்.
தங்களது குருநாதர் சொல்லிக் கொடுத்த வழியில்
ராகங்களையும், ஸ்வரங்களையும் தங்களது கற்பனையையும்
சேர்த்து இசைப்பதுடன் நின்று விடுகிறது சங்கீத
விற்பன்னர்களின் திறமை.
எங்களைப் போன்ற சங்கீத வித்வான்களுக்கு என்று
தனிச் சிறப்போ, பெருமையோ கிடையாது. குரல் வளம்,
பாடும் திறமை போன்றவற்றைப் பொருத்துப் புகழ்
அமைகிறது, அவ்வளவே.
ஆனால், திரையிசை அமைப்பவர்கள் அப்படியல்ல.
கர்நாடக சங்கீத ராகங்களைப் பிழிந்தெடுத்து, பாடலாக்கி
3 நிமிஷங்களில் கொடுக்கும் திறமை திரை
இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே உள்ளது. இதற்கு
இணையான கற்பனை வளமோ, ராகங்கள் பற்றிய
ஆழமான புரிதலோ பெரிய பெரிய வித்வான்களுக்கே
இருக்குமா என்பது சந்தேகம்தான்.
பாமர மக்களை கர்நாடக இசை சென்றடையவில்லை.
அதனை அவர்களைச் சென்றடைய யாரும்
அனுமதிக்கவில்லை. அதைச் செய்து காட்டியவர்கள்
திரையிசை அமைப்பவர்கள்தான்.
கல்யாணி, தோடி, சிந்துபைரவி போன்ற ராகங்களின்
அடிப்படையில் மெட்டமைத்துப் பாடல்களை உருவாக்கி,
சங்கீதமே தெரியாத பாமரர்களையும் பாட வைப்பவர்கள்
சினிமா இசையமைப்பாளர்கள். ஆனால், அவர்களை நாம்
உரிய முறையில் அங்கீகரிப்பதில்லை, கௌரவிப்பதில்லை…..
…
…
.
——————————————————————————————————————————————-



மதுரை டி.எஸ்.மணி நீண்ட காலங்களாகவே
இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
கர்நாடக இசையுடன், திரைப்பட பாடல்களை
லிங்க் செய்வது சுவாரஸ்யமாகவே
இருக்கிறது. பல பாடல்களின் அடிப்படை
கர்நாடக இசை தான் என்பது தெரியாமலே
நாம் ரசித்து வருகிறோம். வரவேற்கப்பட வேண்டிய
நல்ல நிகழ்ச்சி.