…
…

…
( இடைவெளி விட்டு விட்டு எழுதுவதால் – )
இவையெல்லாம் 1950-55 காலகட்டங்களில்
நடந்தவை என்பதை மறுபடியும் நினைவில் நிறுத்திக்
கொள்ள வேண்டும்….!
————————-
( பகுதி -7 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…பார்க்க
————————–
என் அப்பாவிற்கு அரசு குடியிருப்பு ( govt. quarters )
கிடைப்பதற்கு முன்னால், நாங்கள் சில வருடங்கள்
வாடகை வீட்டில் வசித்து வந்தோம்… அந்த கால கட்டத்தில்,
4-5 முறை வீடுகள் மாற்றி இருப்போம்….
ஒரு சமயம், முக்கியமான பஜார் ஏரியாவிற்கு அரை
கிலோமீட்டர் அருகிலேயே ஒரு வீட்டில் இருந்தோம்….
அப்போது, ஸ்கூட்டர் பற்றி எல்லாம் யாருக்கும் தெரியாது;
கேள்விப்பட்டதே இல்லை… எல்லாருக்கும் பொதுவாக
இருந்த ஒரே வாகனம் சைக்கிள் தான். எனக்கு சைக்கிள்
ஓட்டவேண்டும் என்று மிகவும் ஆசை.
சொந்தமாக சைக்கிள் வைத்திருப்பதே அப்போதெல்லாம்
ஒரு luxury தான். எங்கள் வீட்டில் சைக்கிள் கிடையாது.
பெரும்பாலானவர்கள் வாடகைக்கு சைக்கிள் எடுத்து தான்
பயன்படுத்துவார்கள். சைக்கிள் கடைகள் நிறைய இருக்கும்.
பெரிய கடைகளில், 10-15 சைக்கிள்கள் கூட, வாடகைக்கு
விடுவதற்கென்றே வைத்திருப்பார்கள். அந்த கடைகளில்,
சைக்கிள் ரிப்பேர், பஞ்சர் ஒட்டுவது, காற்று அடிப்பது
போன்ற வேலைகளும் நடக்கும். இப்போது இருப்பது போல்
காற்றடிக்க கம்ப்ரசர்கள் எல்லாம் கிடையாது. கையால் தான்
பம்ப் பிடித்து அடிக்க வேண்டும்.
பஜாரில் ஒரு பெரிய சைக்கிள் கடை இருந்தது.
ருஸ்தம் சேட் என்று ஒருவர் வைத்திருந்தார். ஒரு சர்தார்ஜி
தான் எல்லாவற்றையும் கவனித்து வந்தார். இரண்டு ஆட்கள்
அங்கே ரிப்பேர், மற்ற வேலைகளைச் செய்து வந்தனர்.
மாலை வேளைகளில் அங்கே நிறைய கூட்டம் இருக்கும்.
நிறைய பேர் பஞ்சர் ஒட்ட, காற்றடிக்க என்று காத்திருப்பார்கள்.
சைக்கிள் ஆசையில் – நான் மாலை வேளைகளில்,
பள்ளி விட்ட பிறகு, வீட்டில் சுமைகளை இறக்கி விட்டு,
இந்த கடை வாசலில் வந்து நின்று வேடிக்கை பார்த்துக்
கொண்டிருப்பேன்… வாசலில் பெரிய திறந்தவெளி இருக்கும்…
மாலையில் தொழிற்சாலை விட்ட பிறகு, 5 மணி வாக்கில்,
ஒரே சமயத்தில் நிறைய பேர் கடைக்கு காற்றடிக்க,
பஞ்சர் ஒட்ட வருவார்கள்…
நிறைய பேர் காற்றடிக்க காத்திருப்பதைப் பார்த்த எனக்கு
ஒரு ஐடியா தோன்றியது. அங்கே வேலை செய்துகொண்டிருந்த
மெக்கானிக்கிடம், நான் காற்றடிக்கட்டுமா என்று கேட்டேன்.
(அவரும் பல நாட்கள் நான் அங்கே நின்று வேடிக்கை பார்த்துக்
கொண்டிருப்பதை கவனித்திருக்கிறார்…! )
ஆள் கிடைத்ததே என்கிற சந்தோஷத்தில், அவர் உடனேயே
எனக்கு எப்படி பம்பை பிடிக்க வேண்டும், எப்படி காற்று அடிக்க
வேண்டுமென்று கற்றுக் கொடுத்தார்….
அவ்வளவு தான் …! துவங்கியது என் வாழ்க்கையில்
நான் செய்யத் துவங்கிய முதல் வேலை. இதற்கு கூலி
என்னவென்று நினைக்கிறீர்கள்…? அதையும்
அந்த மெக்கானிக்கிடம் முதலிலேயே
சொல்லி விட்டேன். காற்று அடிப்பேன். பதிலுக்கு எனக்கு
ஃப்ரீயாக சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுக்க வேண்டும். ஓட்டிப்பழக
சைக்கிளும் கொடுக்க வேண்டும்….!!!
அப்போதெல்லாம் சைக்கிளுக்கு வாடகை ஒரு மணி
நேரத்திற்கு ஒரணா ( 6 பைசா …! ).வாடகைக்கு சைக்கிள்
எடுத்து கற்றுக்கொள்ள எனக்கு வசதி இல்லை…
கொஞ்ச நாட்களில், அந்த முதலாளி,
சர்தார்ஜியும் தோஸ்த் ஆகி விட்டார்… ( – தெரிந்தவர்,
தெரியாதவர் எல்லாரிடமும் சரளமாகப் பேசிப் பழகும்
சுபாவம் அந்த வயதிலேயே எனக்கு வந்து விட்டது –
கடவுள் கொடை …!!! )
முதலில் ஃப்ரேமுக்கு இடையில், கால்வைத்து
குரங்கு பெடல், கொஞ்ச நாட்கள் கழித்து –
பார் மீது நின்றுகொண்டே முழு பெடல் – என்று என் சைக்கிள்
சவாரி தொடர்ந்தது… சீட்….? உம்ஹூம்… சீட்டில் உட்கார்ந்தால்
பெடல் காலுக்கு எட்டாது… ( எட்டு வயது உயரம்…!!! )
மாலை 6 மணிக்கு மேல், கூட்டம் குறைந்த பிறகு, நான்
சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒருமணி நேரம் சுற்ற அனுமதி
உண்டு.
சில நாட்கள் நான் ஜாலியாக வீட்டுக்கு கூட சைக்கிள்
ஓட்டிக்கொண்டு வந்து, பெருமையாக எல்லாருக்கும் என்
சாதனையை காட்டுவேன்….!
6 மாதங்களுக்குள், நான் நன்றாக சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டதோடு
நில்லாமல், பஞ்சர் ஒட்டவும் சில மைனர் ரிப்பேர் வேலைகள்
செய்யவும் கூட கற்றுக்கொண்டு விட்டேன்.
தொடரும்….
————————————————————————————————————————————————————-
பாதாள பைரவி படம் 1952-ல் விஜயா பிக்சர்சால் (நாகிரெட்டி,
சக்ரபாணி ) எடுக்கப்பட்டது. தெலுங்கிலும், தமிழிலும்
ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. செலவைக் குறைக்க –
பல பகுதிகள் தமிழில் டப் செய்யப்பட்டது.
அந்தக் காலத்தில் வெளிவந்த அற்புதமான ஃபண்டசி படம்.
கண்டசாலா இசையமைத்திருந்தார். கண்டசாலாவுக்கு
மிகவும் வித்தியாசமான குரல்… (சி.எஸ்.ஜெயராமன் போல )..
எனக்கு மிகவும் பிடிக்கும்.
28 செண்டர்களில் 100 நாட்களையும் தாண்டி வெற்றிகரமாக
ஓடியது இந்தப்படம். 2013-ல் இந்திய சினிமாவின் நூற்றாண்டு
விழா கொண்டாடப்பட்டபோது, மறக்க முடியாத 100 படங்களின்
வரிசையில் “பாதாள பைரவி”யும் இடம் பெற்றது.
பாதாள பைரவி’யிலிருந்து சில இனிமையான பாடல்கள் கீழே –
……………..
என்னதான் உன் பிரேமையோ …
…………….
அமைதியில்லாதென் மனமே….
.
—————————————————————————————————————————————————–



இது நவுஷத் அலி இசையில்
நன்றி மெய்ப்பொருள்.
அற்புதமான மெலடி…
நாம் இந்த விஷயத்தில்
ஒரே ரசனை வட்டத்துள் இருக்கிறோமோ…?
சின்ன வயதில், பள்ளிப்பசங்கள் எல்லாம்
இந்தப்பாடலின் முதலிரண்டு வரிகளை
பாடிக்கொண்டே திரிவோம். “தில்லகி” படம்
வெளிவந்து பல வருடங்கள் வரை இந்தப்பாடல்
பாப்புலராக இருந்தது.
ஆமாம் – உங்களுக்கு எப்படி இந்தப்பாடல்
பழக்கம்…? வடக்கே இருந்தீர்களா…?
முடிந்தால் விவரம் எழுதுங்களேன்…
நான் இந்தத் தொடரில் மறக்க முடியாத
நிறைய பழைய ஹிந்தி பாடல்களையும்
நினைவுபடுத்துவதாக இருக்கிறேன்.
அவை பின்னால் வரும் இடுகைகளின்
கூடவே வரும்… !!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா மை சார்
அற்புதமான மெலடி… என நீங்கள் மட்டுமல்ல , கண்டசாலா மாஸ்டரும்
தன் பாட்டில் போட்டு உள்ளார் .
“அமைதியில்லா என் மனமே ” என வரும் மெட்டு நவுஷத் பாட்டில்
இருந்து எடுத்தது .
பாடல் ரேடியோவில் கேட்டது – படம் இது வரை பார்த்தது இல்லை .
இந்த தளத்தில் இன்னும் நெறைய ரசிகர்கள் உள்ளார்கள் .
அவர்கள் எழுதுவதில்லை – அவ்வளவுதான் .
50 களில் பூனா (இன்று புனே ) ஆரவாரம் இல்லாமல்
அமைதியாக இருந்திருக்கும் .
உங்கள் எழுத்தில் அப்படியே வந்துள்ளது – நன்றி
நீங்கள் சொல்வது போல நான் வடக்கே வேலை பார்த்தேன் .
படித்தது எல்லாம் தமிழ்நாடு .
மெய்ப்பொருள்,
உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
// இந்த தளத்தில் இன்னும் நெறைய ரசிகர்கள் உள்ளார்கள் .
அவர்கள் எழுதுவதில்லை – அவ்வளவுதான் //
ஓரளவு நானும் இதை உணர்கிறேன். ஆனால், அதில்
சில பேராவது இங்கு விவாதங்களில், கருத்து பரிமாற்றங்களில்
கலந்து கொண்டால், நமது ரசனைகளை பகிர்ந்துகொள்ள
முடியும். அதிக அளவில் கருத்து, ரசனை பரிமாற்றங்கள்
இருந்தால், இடுகைகள் இன்னும் சுவாரஸ்யமாக அமையும்.
இதை அத்தகைய நண்பர்கள், புரிந்து கொண்டால்
எனக்கு மகிழ்ச்சி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பிங்குபாக்: ( பகுதி -9 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்