திரு.ஸ்டாலின் குறித்து – எழுத்தாளர் சாரு நிவேதிதா …. (இது தேர்தல் காலம்-4 )


திறமையும், வேகமும் இல்லாத
தளபதியாக ஸ்டாலின் …!
-சாரு நிவேதிதா…

——————

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது, எனக்கு தனிப்பட்ட
அன்பு உண்டு. காரணம், ஐந்து முறை முதல்வராக இருந்த தலைவரின் புதல்வரால், 66 வயதாகியும்,
முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லையே என்பது தான்.

அது மட்டும் அல்ல; பன்னீர்செல்வம், 2001-ல்
முதல்வரான போது, அவர் பெயரே யாருக்கும் தெரியாது.
2014-ல் முதல்வரான போதும், அதுதான் நிலை.
தற்போதைய முதல்வர் பழனிசாமியும், முதல்வராகும் முன்
அத்தனை பிரபலம் இல்லை. ஜெயலலிதாவின் நுாற்றுக்கணக்கான,
பெயரற்ற விசுவாசிகளில் ஒருவராகவே இருந்தார்.

தி.மு.க.,வை போல, அ.தி.மு.க.,வில், தனித்தனி ஆளுமைகள் என்றெல்லாம் கிடையாது. குறைந்த பட்சம், ஜெயலலிதா இருந்தவரை, அவ்வளவு பிரபலம் ல்லாத பன்னீர் செல்வம், பழனிசாமி போன்றவர்கள் எல்லாம் முதல்வராகும் போது, தனி பாரம்பரியம் உடைய, ஒரு மாபெரும் கட்சி தலைவரின் புதல்வரால், ஏன் முதல்வர் ஆக முடியவில்லை?

அதிலும், 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் உடையவர் ஸ்டாலின்.

இங்கே, எனக்கு ஒரு வரலாற்று சம்பவம் ஞாபகம் வருகிறது. கியூபா, ஹெய்த்தி, டொமினிகன் குடியரசு ஆகிய மூன்றையும், ‘கரீபியன் நாடுகள்’ என, அழைப்பர். இதில், டொமினிகன் குடியரசின் அதிபராக இருந்தவர், ரபேல் த்ருஹியோ. கொடும் சர்வாதிகாரியாக, 31 ஆண்டுகள் இருந்த அவரை கொன்று விட்டு, ஆட்சியைப் பிடிக்கலாம் என, திட்டம் போட்டார் ராணுவ தளபதி.

அவருக்கு துணையாக, சில உயர்மட்ட ராணுவ அதிகாரிகளும் செயல்பட்டனர். திட்டப்படி, ரபேல் த்ருஹியோ கொல்லப்பட்டார்.

ஆனாலும், தளபதியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. காரணம், அதிபரை கொன்ற உடனேயே, அதிபரின் ஆதரவாளர்களை சிறையில் அடைத்து விட்டு, ஆட்சியில் அமரும் திறமையும், வேகமும் அந்த தளபதிக்கு இல்லை.

ராணுவ புரட்சி செய்தவர்களை கொன்று விட்டு, த்ருஹியோவின் நாற்காலியில், அவரின் புதல்வரை உட்கார வைத்து விட்டனர், அவரது ஆதரவாளர்கள். காலியாகி விட்ட நாற்காலியில் அமரும் திறமையில்லாத, அந்த கரீபிய நாட்டு தளபதியை போலத்தான் இருக்கிறார், நம்முடைய தி.மு.க., தளபதியும்.

தளபதியை நோக்கி, அதிக பிரபலம் இல்லாத, அ.தி.மு.க., அமைச்சர் ஒருவர் கேட்கிறார்,

‘எங்களை பார்த்து, பா.ஜ.,வின் அடிமை என்கிறீர்களே;
கடந்த லோக்சபா தேர்தலில் மாபெரும் வெற்றி அடைந்து,
பெரும்பான்மையான, ‘சீட்’டுகளை வைத்திருக்கும் பா.ஜ.,வுக்கு,
நாங்கள் கொடுத்தது ஐந்து, ‘சீட்’டுகள் தான்.
‘ஆனால், கடந்த தேர்தலில் படு தோல்வி அடைந்து, வெறும்,
44 சீட்டுகளையே பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு, நீங்கள்,
10 சீட்டுகளை தந்திருக்கிறீர்களே…
நீங்கள் அடிமையா; நாங்கள் அடிமையா?’ என்று.

ஆட்சியை பிடிக்க தேவையான குணங்கள் இரண்டு. ஒன்று, தேர்தல் வியூகத்தை அமைக்கும் கூர்மை; இரண்டு, மனோதிடம். இந்த இரண்டும், ஸ்டாலினிடம் இருந்தால், அவர் முதல்வர் நாற்காலியில் அமரலாம்.

சென்ற சட்டசபை தேர்தலில் கூட,
தி.மு.க., தன் வியூகத்தை சரியாக அமைத்திருந்தால்,
ஸ்டாலின் முதல்வராகி இருக்கலாம்.

ஆனால், அப்போதும் டொமினிகன் குடியரசு ராணுவ தளபதி செய்தது போன்ற தவறையே, ஸ்டாலின் செய்தார். 2016ல், தேசம் முழுவதும், மோடி அலை வீசிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் மீது, மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

அந்த நேரத்தில், மக்களின் நாடித் துடிப்பை உணராமல், காங்கிரசுக்கு, 41 சீட்டுகளை வாரி வழங்கினார்.

அதற்கு முன், 2011 தேர்தலிலும்
இதே தவறு தான் நடந்தது. அப்போது, காங்கிரசுக்கு,
தி.மு.க., கொடுத்தது, 63 சீட்டுகள்.
தி.மு.க., படுதோல்வி அடைந்தது.
அதில் கிடைத்த பாடத்தை, ஸ்டாலின், 2016 தேர்தலில் மறந்து விட்டார். கணக்கை தப்பாகப் போட்டார்.

சரியாகப் போட்டிருந்தால்,
இந்நேரம் ஸ்டாலின் தான், முதல்வர் நாற்காலியில் இருந்திருப்பார்.

( நன்றி – https://www.dinamalar.com/news_detail.asp?id=2231097 )

.
———————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திரு.ஸ்டாலின் குறித்து – எழுத்தாளர் சாரு நிவேதிதா …. (இது தேர்தல் காலம்-4 )

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சாரு நிவேதிதாவின் அனுமானம் சரி என்று தோன்றவில்லை. அரசியலில் ஊறின கருணாநிதியே சோனியாவின் பயமுறுத்தலுக்குப் பயந்துகொண்டு 65 சீட்டுகள் தாரைவார்த்தார். பிறகு கஷ்டப்பட்டு 40+ ஆக அடுத்த தேர்தலில் குறைத்தார்கள். இந்த நாடாளுமன்ற டீல், ‘கேஸ்களை நீர்த்துப்போகச் செய்யவும், தொலைக்காட்சி ஊழலில் தயாளு…. போன்றவர்கள்மீது சட்டம் பாயாமல் இருக்கச் செய்யவும், முக்கியமான மந்திரிப் பதவிகளைக் கைப்பற்றி பணம் பண்ணுவதற்குமான டீலாகத்தான் நான் நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் காங்கிரஸ் தேவையான சீட்டுகளைப் பெறாது. 150க்கு மேல் நிச்சயம் பெறமாட்டார்கள். அதனால வலிமையான அமைச்சர் பதவிதான் டீல்ல இருந்திருக்கும்.

    ஸ்டாலினுக்குத் தேவை ஒரு வெற்றிதான். பிறகு அவருக்கும் நம்பிக்கை பிறக்கும். இப்போது அவர் நம்புவது இஸ்லாமிய, கிறித்தவ வாக்குகளைத்தான். கருணாநிதிக்கு 89ல் கிடைத்த அதே வாய்ப்பு இப்போது ஸ்டாலினுக்கு வந்திருக்கிறது.

    இயற்கை எந்தக் கட்சிக்கு யார் தலைவராக ஆகவேண்டுமோ அதற்கேற்றபடிதான் ரிசல்ட் கொடுக்கும். சட்டசபைத் தேர்தலில் ஒருவேளை ஸ்டாலின் தினகரன் போட்டி நடக்குமோ?

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! 18 – 03 – 2019 அன்று திரு சாரு நிவேதிதா எழுதிய கட்டுரை ஒன்று — இதில் திரு மோடிஜி பற்றியும் — ஸ்டாலின்.பற்றியும் : —
    // ‘சோனியாவுக்கு பிரசாரம் செய்யும் மோடி’ // https://www.dinamalar.com/news_detail.asp?id=2235963
    என்ற தலைப்பில் தினமலரில் வந்தது — இதுவும் சுவாரஸ்யம் நிறைந்தது தான் — ! போகப் போகத்தான் தெரியுமோ ..?

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! 18 – 03 – 2019 அன்று திரு சாரு நிவேதிதா எழுதிய கட்டுரை ஒன்று — இதில் திரு மோடிஜி பற்றியும் — ஸ்டாலின்.பற்றியும் // ‘சோனியாவுக்கு பிரசாரம் செய்யும் மோடி’ // https://www.dinamalar.com/news_detail.asp?id=2235963
    என்ற தலைப்பில் தினமலரில் வந்தது — இதுவும் சுவாரஸ்யம் நிறைந்தது தான் — ! போகப் போகத்தான் தெரியுமோ ..?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      ஏற்கெனவே பார்த்தேன்.
      இதை நாளைய விவாதத்திற்கு வைத்திருக்கிறேன்.
      காலையில் பதிவிடுகிறேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    ஸ்டாலின் இப்போதே முதல்வர் ஆகி விட்டமாதிரி
    பேசுகிறார். 2016 சட்ட சபை தேர்தலில் எல்லா கருத்து
    கணிப்புகளும் குறிப்பாக லயோலா கல்லூரி உள்பட
    திமுக ஆட்சி அமைக்கும் என்றன. அனால் நடந்ததோ வேறு .
    சாரு கூறுவது சரிதான் . so near, yet so far. அதுதான் அரசியல்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.