திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்…


பாஜக தலைமை, செய்தி ஊடகங்கள், தங்களுக்கு சாதகமாக செயல்பட கொடுத்து வரும் அழுத்தங்கள் குறித்த ஒரு செய்தி கீழே –

அமித் ஷா செய்தி: நீக்கிய ஊடகங்கள்…

பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்னதாக, குஜராத்திலுள்ள மாவட்ட
கூட்டுறவு வங்கியொன்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிய விவகாரத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவைத் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின.

டைம்ஸ் நவ், நியூஸ் 18, பர்ஸ்ட் போஸ்ட் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் எந்தவித விளக்கங்களும் இல்லாமல் நீக்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று பண மதிப்பழிப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

அதன்பின் சரியாக ஐந்து நாட்கள் கழித்து, பழைய நோட்டுகளைச் செலுத்தி புதிய நோட்டுகளை வழங்கும் நடவடிக்கையில் கூட்டுறவு வங்கிகளை ஈடுபடுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இடைப்பட்ட ஐந்து நாட்களில், அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியானது 745.59 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றியது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த வங்கியின் இணையதளத்திலுள்ள தகவல்கள் படி, இதன் இயக்குனராக நீண்டகாலமாகப் பதவி வகித்து வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா. இரண்டாயிரமாவது ஆண்டு வாக்கில், இந்த வங்கியின் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கணக்குப்படி இந்த வங்கியின் மொத்த முதலீட்டுத் தொகை 5,050 கோடியாகவும் 2016-17ஆம் ஆண்டுக்கான லாபம் 14.31 கோடியாகவும் இருந்தது.

மனோரஞ்சன் ராய் என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்திக் கேட்டதன்படி, நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளராக இருந்த சரவணவேல் என்பவர் அளித்த தகவல்படி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம்.

இதுபற்றி டைம்ஸ் நவ், நியூஸ் 18, பர்ஸ்ட்போஸ்ட் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளங்களில் செய்தி வெளியிடப்பட்டது.

ஆனால், ஜூன் 21ஆம் தேதியன்று, எந்த விளக்கமும் அளிக்கப்படாமல்
உடனடியாக இந்த செய்தி அகற்றப்பட்டது.

பர்ஸ்ட் போஸ்ட் மற்றும் நியூஸ் 18 ஆகியன ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நெட்வொர்க் 18 குழுமத்தினால் நடத்தப்படுகிறது.

இதனால், அதன் ஆசிரியரிடமும் மற்ற நிறுவனங்களைச் சார்ந்த ஆசிரியர்களிடமும் கேள்விகளை முன்வைத்தது தி வயர். சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்கள் அனைத்தும், இதுவரை இதுகுறித்துப் பதிலளிக்கவில்லை.

நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழு இயக்குனர் பிரபு சாவ்லாவிடம் இதுபற்றி கேள்வி எழுப்பியது தி வயர். அதற்கு, ஒரு தினசரியின் ஆசிரியரே எல்லா செய்திகளையும் வெளியிடுவது குறித்த இறுதி முடிவை மேற்கொள்வார் என்று விளக்கமளித்துள்ளார்.

பாஜக தலைவர்கள் பற்றிய செய்திகள் வெளியானபிறகு, அவை நீக்கப்படும் விவகாரம் முதன்முறையாக இப்போது மட்டும் நடக்கவில்லை.

2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாஜக தலைவர் அமித் ஷாவின் சொத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியாவின் அகமதாபாத் பதிப்பில் தகவல் வெளியானது.

அதன்பின் சில மணி நேரங்களில் அதன் இணையதளத்திலிருந்து அந்த செய்தி நீக்கம் செய்யப்பட்டது. இதேபோல மத்திய ஜவுளி, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வணிகவியலில் பட்டம் பெறவில்லை என்ற செய்தியை வெளியிட்டன டிஎன்ஏ மற்றும் அவுட்லுக் இந்தி இணையதளங்கள். அதன்பின் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல், அவற்றில் இருந்து அந்த செய்தி நீக்கப்பட்டது.

தற்போது சம்பந்தப்பட்ட ஊடகங்கள் என்ன விளக்கம் அளிக்கப் போகின்றனவோ?

( நன்றி – https://scroll.in/article/883650/mystery-of-the-missing-report-about-
amit-shah-linked-banks-old-note-collections-on-demonetisation
https://minnambalam.com/k/2018/06/24/26 )

.
——————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்…

  1. Raghavendra's avatar Raghavendra சொல்கிறார்:

    This is how the Media is controlled.
    But they will never accept and will never come out openly.

  2. பிங்குபாக்: திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்… – TamilBlogs

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது –

    “மூன்றாவது அணியில் திமுக இணையாது” என்று அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

    டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில ஊடகத்துக்கு இன்று (ஜூன் 25) அவர் அளித்துள்ள பேட்டியில், ” 2019ஆம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியால் உருவாக வாய்ப்புள்ள பிராந்தியக் கட்சிகளை உள்ளடக்கிய அணியிலோ, அல்லது வேறு எந்த மூன்றாவது அணியிலோ திமுக இணையாது” என்று தெரிவித்துள்ளார்.

    அண்மையில் தான், மமதா பேனர்ஜியை சந்தித்த பிறகு திரு.ஸ்டாலின்
    ” தேர்தலுக்கு ஒரு வருடம் உள்ளது. உரிய நேரத்தில் ஆலோசித்துக் கூறுகிறோம் என்று கூறியுள்ளேன்” – என்று கூறி இருந்தார்.

    இப்போது ஏன் துரைமுருகன் மூலமாக திடீரென்று இந்த அறிவிப்பு …?

    ராகுல் காந்தி, வேறு கட்சிகளை (விசிக, கமல், தினகரன்…) சேர்த்துக்கொண்டு தனியாக புதிய அணியை துவங்கி விடுவாரோ என்று ஸ்டாலின் பயப்படுகிறாரா…..?

    • Bagawan's avatar Bagawan சொல்கிறார்:

      Yes. This may be the reason. It is the time to isolate DMK and AIADMK so that a new team of like minded parties to join which has the chance to win hearts of TamilNadu

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      மூன்றாவது அணி அமைவது பாஜகவுக்கு உதவுவதாகவே அமையும்.

      காங்கிரஸோடு எந்த வகையிலாவது உடன்பாடு கண்டு இருமுனை போட்டியாக அமைத்தால் தான் பாஜகவை 2019ல் ஆட்சியில் இருந்து அகற்ற முடியும்.

      எல்லா தலைவர்களும் அதை நோக்கிய நகர்வை செய்யவேண்டும்.

      செய்வார்களா….!?

  4. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    இப்ப ஊடகங்களை அடக்கிவிட்டால்….

    பூனை தன் கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடுமா…!? அப்படியே மூடிக்கொண்டு இருக்கட்டும். 2019ல் மக்கள் கண் விழிக்க வைப்பார்கள்.

    திருடனுக்கு தேள் கொட்டியது போல்…என்று சொல்வார்களே அது இது தானோ.

    ஊழலை பத்தி எவ்வளவு பேசினோம்.

    நானும் துண்ணமாட்டேன், (என் கட்சிகாரர்கள் அல்லாத) யாரையும் துண்ண உடமாட்டேன் என்றெல்லாம்…

    இப்ப புரிகிறது. ஒவ்வொரு கோஷத்துக்கும ஒரு உள் அர்த்தம் ஒன்னு இருக்கும் என்று.

    எல்லா தீய விஷயதிற்கும் மௌனமாக இருந்து அவைகளை அங்கீகரித்தது போல் இதற்கும் மௌனமாக இருந்து இதை அங்கீகரிப்பது கண்டு….

    ஐய்ய்யோ….!

    என்ன ஒரு பொற்காலத்தில் இந்த நாடு இருக்கிறது.

    இந்த லட்சணத்தில் காங்கிரஸ பார்த்து ஏளனம் வேறு.

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    சும்மா ஒரு கணக்குக்கு மட்டும் :— // ஐந்து நாட்களில், அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியானது 745.59 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றியது தற்போது தெரியவந்துள்ளது.// ஒரு நாளில் 149 கோடிகள் — வங்கியின் அலுவல் நேரம் 10 மணிகள் என்றால் ஒரு மணி நேரத்திற்கு 14 . 90 கோடிகள் — ஒரு நபருக்கு ஒரு லட்சம் என்றால் 1490 நபர்கள் ஒரு மணி நேரத்தில் மாற்றியிருக்க வேண்டும் — அப்பாடி என்ன ஒரு சுறு சுறுப்பு விரைவான சேவை என்பது இதுதானோ …! இந்தளவுக்கு சேவை செய்த வங்கியை எப்படி ” கின்னஸ் அமைப்பினர் ” கண்டுக்காமல் விட்டார்கள் …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.