…
…

…
அண்மையில் “நீட்” தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றமைக்காக,
தற்கொலை செய்துகொண்ட ஒரு பெண்ணின் வீட்டிற்கு –
“வருத்தம் தெரிவிக்கச் சென்று” – தொலைக்காட்சி/செய்தியாளர்களுக்கு
எதிரே “ஷோ” செய்த ஒரு அரசியல்வாதியை அந்த காட்சியை
பார்க்கும்போது, செருப்பால் அடிக்க வேண்டுமென்று வன்முறையில்
நம்பிக்கை இல்லாத எனக்கே தோன்றியது.
காரணம் அவரது பொறுப்பற்ற பேச்சு…
சிலருக்கு டிவி காமிராவை பார்த்தாலே சகட்டுமேனிக்கு
பேச்சு பொத்துக் கொண்டு வருகிறது….
அப்படி என்ன சொன்னார் அவர்…?
“இறந்து போன பெண்ணின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி
( ஒரு கோடி ) ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்….”
இந்த காட்சியை டிவியில் காணும், மற்ற பல மாணவர்களுக்கும்
அவர்களின் குடும்பத்தினருக்கும் மனதில் எத்தகைய எண்ணங்கள்
தோன்றும்….? கொஞ்சமாவது யோசிக்கிறார்களா…?
….
தேர்வில் வெற்றி பெறாவிட்டால் என்ன குடியா மூழ்கி விடும்..?
ஆயிரம் வகை படிப்பு இருக்கிறது…
ஆயிரம் வகை தொழில் இருக்கிறது…
திறமையும், தன்னம்பிக்கையும் இருந்தால் –
வாழ்க்கையில் – யாரும் வெற்றிகரமாக உருவாகலாம்….
இந்த தேர்வைப்பற்றி வெகு தீவிரமாக யோசிக்க வேண்டிய
அவசியம் இல்லை.
தேர்வு முடிவை தூரத் தூக்கி போட்டு விட்டு,
நம்பிக்கையோடு அடுத்த வேலையில் இறங்குங்கள் –
….
– என்று தன்னம்பிக்கையை உருவாக்கும் விதத்தில் பேசுவதை விட்டு
விட்டு, தன்னை பெரிய சமுதாயவாதியைப் போல் காட்டிக்கொள்ள –
அரசின் இழப்பீட்டு மதிப்பை ஏற்றிக்கொண்டே போகிறார்.
இதன் விளைவு என்னவாக இருக்கும் என்று சற்றாவது யோசித்தாரா
இவர்..? இவரைத் தொடர்ந்து ஒவ்வொரு அரசியல்வாதியும் இழப்பீடு
தொகையை ஏலம் போடுவது போல் ஏற்றிக்கொண்டே போகிறார்கள்.
மக்களிடம் அவர்களுக்கு அவ்வளவு அக்கறை இருக்கிறதாக
காட்டிக் கொள்கிறார்களாம்.
ஒரு பாட்டில் சாராயத்திற்காக எதையும் செய்யத்தயாராக இருக்கும்
கேடு கெட்ட மனிதர்கள் பலர் இருக்கும் நமது சமுதாயத்தில்,
ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டால் ஒரு கோடி கிடைக்கும்
என்கிற நம்பிக்கையை உருவாக்கினால், அந்த குடும்பத்திலேயே
அது கொலைகாரர்களை உருவாக்கி விடாதா ..?
இதை கண்டித்துப் பேச, உண்மையைப் பேச இன்று எந்த ஒரு
அரசியல்வாதியும் இல்லை….. இருக்கின்ற ஒன்றிரண்டு
ஓரளவு நேர்மையானவர்களுக்கும் –
வேறு மாதிரி பேசும் துணிச்சல் இல்லை…
unpopular ஆகி விடுவோம் என்று பயம்…
விளைவு..? ஊரோடு ஒத்து வாழ்…. ஆளாளுக்கு நஷ்ட ஈடு தொகையை
ஏலம் போட்டுக்கொண்டே போகிறார்கள்.
நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் “நீட்” தேர்வு பற்றிய ஒரு
வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கூறிய ஒரு வார்த்தை
இந்த அத்தனை அரசியல்வாதிகளையும் செருப்பாலடித்த திருப்தியை
எனக்கு தருகிறது.
என்ன சொன்னார் நீதிபதி – ?
——————
” மாணவர்களின் தற்கொலை சம்பவங்களைப்
பயன்படுத்தி தமிழகத்து அரசியல்வாதிகளும்,
அரசியல் கட்சிகளும் – ஆதாயம் தேடுகிறார்கள்…”
——————
நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை…
ஆனால் இன்றைய சூழ்நிலையில் இந்த உண்மையை
கூட இங்கு யாராலும் சொல்ல முடியவில்லை –
நீதிமன்றத்தால் மட்டுமே முடிகிறது…
———————————————————————————



/// நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் “நீட்” தேர்வு பற்றிய ஒரு
வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கூறிய ஒரு வார்த்தை
இந்த அத்தனை அரசியல்வாதிகளையும் செருப்பாலடித்த திருப்தியை
எனக்கு தருகிறது.
என்ன சொன்னார் நீதிபதி – ?
” மாணவர்களின் தற்கொலை சம்பவங்களைப்
பயன்படுத்தி தமிழகத்து அரசியல்வாதிகளும்,
அரசியல் கட்சிகளும் – ஆதாயம் தேடுகிறார்கள்…”
நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை…///
நிச்சயமாக, நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை.
இழவு வீட்டில் போய்…அரசியல் ஆதாயம்…இவர்களை என்ன செய்தால் தகும்…?
இதனால் தானோ என்னவோ எந்த ஒரு அரசியல் வா(வியா)திகளை கண்டாலும் எரிச்சலா வருகிறது.
வருகிறேன் என்று சொல்பவர்களும் முழு அளவில் நம்பிக்கையை தரமாட்டேன் என்கிறார்கள்.
என்று மாறும் இது.
பார்ப்போம், நம்பிக்கை தான் வாழ்க்கை.
கே.எம்.சார்,
நீங்கள் சொன்னது மிகவும் சரி.
ஒருத்தர் 10 லட்சம் என்கிறார். அடுத்தவர் போய் 25 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்கிறார். மூன்றாமவர் போய் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு
என்கிறார். உண்மையில், இந்த பெண்பிள்ளைகள் இப்படி தன்னம்பிக்கை இல்லாமல் வளர்ந்ததற்கு அவர்களின் பெற்றோர்களும் கூட ஒரு காரணம்.
நன்றாகப் படி என்று ஊக்குவிக்கலாமே தவிர, டாக்டராகாவிட்டால் வாழ்ந்தே
பிரயோஜனமில்லை என்கிற அளவிற்கு அந்த பிஞ்சுகள் மனதில் விதைத்து
விடுகிறார்கள். நன்றாகப் படி. ஒன்றில்லையென்றால் இன்னொன்று. படித்தால் நிச்சயம் முன்னுக்கு வந்து விடலாம் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பிங்குபாக்: இதைச் சொல்லும் துணிச்சல் – எந்த அரசியல்வாதிக்கும் இல்லை…. – TamilBlogs
நமக்கு எதற்கு வம்பு.
மக்கள் இருக்கும் மன நிலையில் ,நீட் தேர்விற்கு எதிராகவோ அல்லது இது போல் தற்கொலை செய்து கொண்டவர்களை கண்டித்து பேசினாலோ அவர்களை தமிழின துரோகி என்று கட்டம் கட்டுவார்கள்.எனவே தற்கொலை செய்து கொண்டவர்களை தியாகிகள் போல் சித்தரித்து கருத்து தெரிவிப்பதே நல்லது.
ஒருவேளை நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தை ரஜினி தெரிவித்திருந்தால் இந்த மீடியாக்கள் அவரை சும்மா விட்டிருக்காது.
என்னை யார் எப்படி முத்திரை இட்டாலும், கட்டம் கட்டினாலும், நான் கவலைப்படுவதாக இல்லை.
என் மனசாட்சிக்கு சரியென்று படுவதை தொடர்ந்து எழுதிக்கொண்டே தான் இருப்பேன்…. உண்மையை ஏற்பவர்கள், என்னை ஏற்பார்கள்.
யாருமே ஏற்கா விட்டாலும் கூட, குறைந்த பட்சம்….என் மனதுக்கு நிச்சயம் நான் எழுதுவதில் திருப்தி இருக்கும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இன்றைய சூழலில் பொய்யை கூட தைரியமாக சொல்லிவிடலாம்… உண்மையை சொல்ல பயமாக இருக்கிறது…
நல்ல வேளை காந்தியோ இல்லை காமராசரோ இன்று நம்மிடமில்லை இருந்திருந்தால் அவர்களை ரொம்ப ரொம்ப கேவலபடுத்தியிருப்பார்கள்
My opinion is abolish the Neet
ஏன் நீட் என்ற பொதுத் தேர்வு இந்தியா முழுமைக்கும் இருக்கக்கூடாது? அந்தத் தேர்வில், மாநிலத்துக்கு ஏற்ப கேள்வி தயாரிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது திருத்துவதில் தவறு இருந்தாலோ கேள்வி கேட்கலாம். அதைவிட்டுவிட்டு ‘நீட் தேர்வு’ கூடாது என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கு என்றே தெரியவில்லை. வெளிநாட்டில் மருத்துவப் படிப்புக்குக்கூட இப்போது நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
இன்னொன்று, தேர்வில் தோல்விக்காக தற்கொலை செய்துகொண்டால், நாம் ஏன் அதற்காகக் கவலைப்படவேண்டும்? ஒரு தோல்வியைத் தாங்கமுடியாதவர், நாளை மருத்துவராக வந்தால், ஒரு நோயாளியைக் காப்பாற்றமுடியவில்லையே என்று மீண்டும் தற்கொலை எண்ணம் வராது என்று என்ன நிச்சயம்? இவர்களுக்கெல்லாம் இழப்பீடு கொடுப்பது, ஆட்சியாளர்கள் செய்யும் தவறு. ஒரு தேர்வில் தோல்வி அடைந்தால் என்ன. வேறு ஆயிரம் வழிகள் இருக்கு முன்னேற. தைரியம் இல்லாத மாணவர்கள் மருத்துவத்தில் நுழைய நினைப்பதே மாபெரும் தவறு.
பொதுத் தேர்வில் எத்தனைபேர் தோல்வியுறுகின்றனர். அதனால் எத்தனைபேர் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கின்றனர். அவர்களுக்கு இந்த அரசியல் கட்சிகள் இழப்பீடோ அல்லது ஆதரவு தெரிவிக்கவோ முன்வருமா?
” மாணவர்களின் தற்கொலை சம்பவங்களைப்
பயன்படுத்தி தமிழகத்து அரசியல்வாதிகளும்,
அரசியல் கட்சிகளும் – ஆதாயம் தேடுகிறார்கள்…”
I salute the judge for his candid observation of certain tamilnadu
politicians. They think one crore is a small amount, We pay taxes
tolls through our hard earned money and these people ask the
govt to pay one crore . If they are really concerned, let them pay from their
own pockets Hereafter govt should not pay any money to the families
whose members committed suicide.
மிக எளிதாக ஒரு கோடி கொடுக்க வேண்டும் என்று சொல்லும் பொழுது நானும் இதை தான் நினைத்தேன் …கோடியின் மதிப்பு தெரிந்து தான் அதை சொல்கிறார்களா ..வார்த்தைகளை அள்ளி தெளிப்பதால் அவருக்கு ஒன்றும் நஷ்டமில்லையே …அவர் கட்சியில் இருந்து ஒன்றும் கொடுக்கப் போவதும் இல்லை .. அப்படி அரசு கொடுக்க ஆரம்பித்தால் எல்லா தோல்வி அடைந்த மாணவ மாணவியரும் அதை தான் செய்வார்கள் …நாம் போனாலாவது நமது குடும்பத்துக்கு ஒரு கோடி கிடைக்கும் என நினைக்க ஆரபித்தால் என்ன ஆவது …நண்பர் புதியவன் சொல்வது போல ஒரு தேர்வில் தோல்வி அடைந்தால் என்ன. வேறு ஆயிரம் வழிகள் இருக்கு முன்னேற. தைரியம் இல்லாத மாணவர்கள் மருத்துவத்தில் நுழைய நினைப்பதே மாபெரும் தவறு. தான் …அதை நானும் ஒத்து கொள்கிறேன் …கோடியின் மதிப்பை அறியாதவர்கள் எல்லாம் அரசியல் வியாதிகள் …எல்லாம் நம் தலை எழுத்து …நொந்து தான் கொள்ள வேண்டும்