…
…

பொதுத்துறை வங்கிகளில் போடப்படும் பணத்தின் கதி …?
( நன்றி -கேஷவ் கார்ட்டூன்…)
…
சிங்கப்பூரிலிருந்து ஒளிபரப்பாகும் WION ஆங்கில தொலைக்காட்சி
இந்திய தொலைக்காட்சிகள் சொல்லத்தவறிய ஒரு செய்தியைச்
சொல்கிறது….
இந்த தகவலை இந்திய ஊடகங்கள் ஏன் சொல்லவில்லை…?
யோசிக்கப்பட வேண்டிய விஷயம்…!
(Demonetization) – 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு அறிவிக்கும்
சமயத்தில் புழக்கத்தில் இருந்த மொத்த கரன்சி நோட்டுகளின் மதிப்பு
17 லட்சம் கோடி என்றும்,
இன்றைய தினம் இந்தியாவில் புழங்கும் கரன்சி நோட்டுகளின் மதிப்பு
18 1/2 (பதினெட்டரை லட்சம்) கோடி ரூபாய் என்றும் WION செய்தி
தொலைக்காட்சி நேற்றைய தினம் அறிவித்தது.
பணப்புழக்கத்தை குறைப்பதற்காகவே
கொண்டு வரப்பட்ட திட்டம்
வெற்றிகரமாக (…..?… ) நிறைவேற்றப்பட்ட பிறகு –
பண மதிப்பிழப்பீட்டுக்கு முன்பு இருந்ததை விட
இப்போது ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள்
அதிகம் புழக்கத்தில் இருக்க காரணமென்ன…?
இத்தனைக்கும் டிஜிடல் முறையிலான பணபரிவர்த்தனைகள் முன்பை
விட இப்போது பல மடங்கு அதிகரித்து விட்டது என்று வேறு மத்திய அரசு கூறுகிறது….( ஓரளவு இந்த செய்தி உண்மையும் கூடத்தான்…!)
பின் ஏன்….?
பயம்… அச்சம்…மிரட்சி.. இதற்கீடான எந்த வார்த்தையையும் இங்கே சொல்லலாம்….
வங்கிகளில் பணத்தை போட,
சேர்த்துவைக்க – மக்கள் பயப்படுகிறார்கள்.
மிரளுகிறார்கள்…. தங்கள் பணம் வங்கிகளில்
பத்திரமாக இருக்கும் என்கிற நம்பிக்கை
அவர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து
தகர்ந்தே போய் விட்டது.
எனவே, வங்கிகளிலிருந்து பொதுமக்களால் எடுக்கப்படும் பணம் மீண்டும் வங்கிகளுக்கு போவது குறைந்து விட்டது.
மக்களுக்கு இந்த சந்தேகம், இந்த பயம் ஏன் ஏற்படுகிறது…?
2017-18-ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கும்
மொத்த நஷ்டம் 87,000 கோடி ரூபாய் என்று தனியே வேறொரு செய்தி
வெளிவந்திருக்கிறது….
இது யாருடைய பணம்…?
இந்த நஷ்டத்தை, கொள்ளையை –
எப்படி சரிக்கட்டப் போகிறார்கள்…?
நம்முடைய வரிப்பணத்தை வைத்து தானே…?
கடந்த ஒரு நிதியாண்டில் (2017-18 ) சில முக்கியமான பொதுத்துறை வங்கிகள் தங்களது மோசமான செயல்பாட்டால் அறிவித்திருக்கும் நஷ்டக்கணக்கு கீழே –
பாரத ஸ்டேட் வங்கி – 6547 கோடி ரூபாய்.
பஞ்சாப் நேஷனல் வங்கி – 12,282 கோடி ரூபாய்.
ஐ.டி.பி.ஐ. வங்கி – 8237 கோடி ரூபாய்
இரண்டு நாட்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்.வி.ரெட்டி, கோலாப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூறியது –
————-
“வங்கியில் செய்யப்படும் முதலீடுகளை
பாதுகாப்பது, கண்காணிப்பது
ஆகிய நடைமுறைகள் குறித்து மத்திய அரசு
கவலைப்பட வேண்டும்.
வரி செலுத்துவோர், அரசை நம்பித்தான்,
தங்கள் பணத்தை அரசுக்கு சொந்தமான
வங்கிகளில் முதலீடு செய்கின்றனர்;
” வங்கி மோசடி நடப்பதை தடுக்க தவறியது ஏன்…?” என்று இந்த
முதலீட்டாளர்களாகிய மக்கள், அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளின் நம்பிக்கையை
காப்பாற்றும் பொறுப்பிலிருந்து
மத்திய அரசு தப்பிக்க முடியாது.
———
அதையே தான் நாமும் வலியுறுத்த வேண்டி இருக்கிறது.
பொதுத்துறை வங்கிகளில் போடப்படும் பணம் – பத்திரமாக இருக்கும்;
வங்கிகள் லாபகரமாக செயல்படும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த
வேண்டியது மத்திய அரசின் உடனடி கடமை / பொறுப்பு.
இல்லையேல், வருங்காலம் இதைவிட மோசமான ஒரு சூழ்நிலையை
சந்திக்க வேண்டியிருக்கும். மக்கள் வங்கிகளில் பணம் போடும் வழக்கத்தை அடியோடு விட்டு விடுவார்கள்….
————————————————————————————————-



பிங்குபாக்: பணமும் …. பயமும் …. ஏன்…??? – TamilBlogs