சொரணையற்றவர்கள், முதுகெலும்பில்லாதவர்கள்… ஒற்றுமையில்லாதவர்கள், எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்…


நேரடியாக ஒன்றைச் சொன்னால், மறைமுகமாக அதற்கு
பொருளென்ன…என்பதைக்கூட உணர இயலாமல் போய் விட்டார்களா
என்ன நம் மக்கள் …?

“உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி,
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால்,
கன்னட மக்கள் பொங்கி எழுவார்கள்… கர்நாடகம்
கொந்தளிக்கும்… கலவரம் நடக்கும்…சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக
குலைந்து போகும்…”

-இந்த ரீதியில், உச்சநீதிமன்றத்திடமே சொல்வது யார்…?
பாஜக சார்பாக மத்தியில் அமர்ந்திருக்கும் அதன் தலைமை….

நேற்று அவர்கள் சார்பில் “விளக்கமும், 3 மாத அவகாசமும்”
கேட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில்
தான் இதைக்கூறுகிறார்கள்….இதை நிறைவேற்றா விட்டால்,
தமிழகத்தில் விளைவுகள் எப்படி இருக்கும் ….?
இதைப்பற்றி மனுவில் ஒன்றும் சொல்லப்படவில்லை…

அதாவது –
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தினால் – கர்நாடகா கொந்தளிக்கும் ..
கலவரம் வெடிக்கும்.

ஆனால், தீர்ப்பையே அமல்படுத்தாமல் ஏமாற்றினாலும்,
அல்லது தீர்ப்பை எவ்வளவு திரித்து – நடைமுறைப்படுத்தினாலும்,

அல்லது எவ்வளவு கால தாமதம் செய்தாலும் –
தமிழகத்தில் ஒரு எதிர்விளைவும் ஏற்படாது…

அதாவது, தமிழர்கள் சூடு,சொரணையற்றவர்கள்,
எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்…இளிச்சவாயர்கள்…

தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்வார்கள்…
ஒருவரையொருவர் தாக்கி குற்றம் சாட்டிக்கொள்வார்கள் …

மிஞ்சி மிஞ்சி போனால் என்ன செய்வார்கள்…?
வழக்கம்போல் (ஆளுக்கொரு) சர்வ கட்சி கூட்டம் போட்டு
போராட்டத்திற்கு முகூர்த்தம் குறித்து விட்டு,

தொலைக்காட்சி நிருபர்களுக்கு –
மாநில அரசின் கையாலாகதத் தனத்தையும்,
மத்திய அரசின் துரோக மனப்பான்மையையும்
வெட்டி விளாசி பேட்டி கொடுத்து விட்டு…..

————————-

ஒரு குடியரசில்,
– மக்கள் தங்களுக்கு பொருத்தமானவர்களையே
தலைவர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்…

அப்படியானால், இவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும்
மக்களும் அது போலத்தானே இருப்பார்கள்…?

————-

ஆனால் ஒரு சந்தேகம் –
நிஜமாகவே தமிழர்களுக்கு இவர்கள் தான் தலைவர்களா…???

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to சொரணையற்றவர்கள், முதுகெலும்பில்லாதவர்கள்… ஒற்றுமையில்லாதவர்கள், எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்…

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    // நிஜமாகவே தமிழர்களுக்கு இவர்கள் தான் தலைவர்களா…???//

    யார் சொன்னது ?
    அவர்களே சொல்லிக்கொள்வது தானே ?
    பொறுத்திருந்து பாருங்கள்;
    தமிழ் மக்களுக்கு தலைவர்கள் தேவையில்லை என்பதை
    அவர்கள் வெளிப்படையாகவே உணர்த்தும் காலம் வந்து விட்டது.

  2. BVS's avatar BVS சொல்கிறார்:

    // காவிரி: சென்னையில் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டு கைதான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை

    Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/all-parties-involved-protest-near-valluvar-kottam-315933.html

    – அரை மணி போராட்டம் நடத்தி, அனைத்து டிவிக்களிலும் செய்தி வந்து,
    “வேண்டிய அளவு ” புகழ் பெற்ற “செயல்” வாழ்க… தீர்ந்தது காவிரி பிரச்சினை.

    முடிந்தால் நாளையும் அரை மணி நேரம் போராடுவார்கள்.

  3. BVS's avatar BVS சொல்கிறார்:

    போராடுவோம் போராடுவோம் – டிவி கேமராக்கள் எதிரில் உள்ள வரை
    தொடர்ந்து போராடுவோம்.

  4. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    தமிழகம் என்னும் ஒரு ஆரோக்கியமான நபரை முழு நோயாளியாக்கிய “பெருமை” திமுக,காங்கிரஸ்,அதிமுக என்ற மூன்று மருத்துவர்களையே சாரும்.இப்போ கடைசியா வந்துள்ள பிஜேபி எனும் வைத்தியரை குறை கூறி என்ன பயன்? மேலும் பிஜேபி யை தமிழகம் என்றும் தேர்ந்தெடுத்ததில்லை.அதனால் அவர்களுக்கு நம்மீது எந்த அக்கறையும் இருக்க முடியாது.இதை நான் சரி என்று சொல்லவில்லை.இந்திய அரசியல் அப்படி பட்டது. கையில் காசு கொடுத்தவர்களுக்கே வாயில் தோசை கிடைப்பது அரிது என்ற நிலையில் காசும் கொடுக்காமல் தோசையை எதிர்பார்ப்பது எங்கனம்?

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வருக கண்பத்,

    //மேலும் பிஜேபி யை தமிழகம் என்றும் தேர்ந்தெடுத்ததில்லை.அதனால் அவர்களுக்கு நம்மீது எந்த அக்கறையும் இருக்க முடியாது//

    இதில் அவர்களின் அக்கறையை வேண்டி நாம் பிச்சை கேட்டு நிற்கவில்லை.

    இது நமது உரிமை. அரசியல் சாசனம் சொல்வதை, சுப்ரீம் கோர்ட் சொல்வதை செய்ய வேண்டியது அவர்கள் கடமை. சுப்ரீம் கோர்ட்டையும் ஒருவேளை பாக்கெட்டில் வைத்திருக்க முடியுமென்று அவர்கள் நம்பலாம்.

    ஆனால் அது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
    மாநில அரசு அரசியல் சாசனப்படி செயல்படவில்லை என்றால், மத்திய அரசு தலையிடலாம்.. மத்திய அரசே அந்த தவறைச் செய்தால்..?

    பாஜக மத்திய அரசு, மிக மோசமான முன்னுதாரணமாகக்கூடிய ஒரு செயலில் ஈடுபட்டிருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் பாஜக என்கிற கட்சியை மட்டுமல்ல; இந்த நாட்டையே பாதிக்கக்கூடியதாக இருக்கும்.

    மத்திய அரசின் இந்த போக்கை லேசாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  6. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இன்று தமிழகம் சந்திக்கும் போராட்ட நிலைகளுக்கு முழுக்க முழுக்க
    மத்திய அரசே காரணம்…எந்தவித குற்ற உணர்வுமின்றி, வெளிப்படையாகவே
    ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. சுப்ரீம் கோர்ட் உத்திரவை நிறைவேற்றினால் கர்நாடகாவில் கலவரம் நிகழுமென்று மிகைப்படுத்தி கூறுகிறது. நிறைவேற்றவில்லை என்றால், தமிழகத்தில் தென்றல் தவழுமா…?

    திமுக செயல்தலைவர், இந்த சூழ்நிலையில் மிகவும் தவறாகச் செயல்படுகிறார். மத்திய அரசின் மீது காட்டப்பட வேண்டிய கோபத்தை, மாநில அரசின் மீது திசை திருப்பி, தனக்கு சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்.

    அரசியல் கட்சிகள் தாக்குதல் தொடுப்பது போல், ஒரு மாநில அரசு – மத்திய அரசோடு சண்டை போட முடியாது… அரசியல் சட்டத்தின் கீழ் என்ன செய்ய முடியுமோ, அதைத்தான் மாநில அரசு செய்ய முடியும். காவிரி விவகாரத்தில்
    மாநில அரசு, மத்திய அரசோடு – நீதிமன்றம் மூலமாகவே மோத முடியும்.
    அந்த கடமையை மாநில அரசு ஒழுங்காகத்தான் செய்து கொண்டிருக்கிறது.
    6 வாரங்கள் பொறுத்த பின்னரும், மத்திய அரசு செயல்படவில்லை என்றால் தான் கோர்ட்டுக்கு போக முடியும். 6 வாரம் முடிந்த மறுநாள் மாநில அரசு, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் மீது “நீதிமன்ற அவமதிப்பு வழக்கு” போட்டாகி விட்டது.

    இந்த சமயத்தில், தமிழக மக்கள், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராடினால் தான், நமது உரிமைக்கு நியாயம் கிடைக்கும். அதை விடுத்து – ஆளாளுக்கு தனிக்கச்சேரி நடத்தினால் – மற்றவர் நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும் நிலை தான் உருவாகும்.

    சரியான தலைமை இல்லையெனில் தமிழகம் கட்டுப்பாடற்ற நிலைக்கு தான் செல்லும்.

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      நிச்சயமாக உங்கள் கருத்தினை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.ஒரு உண்மையான நல்ல நிர்வாகம் நீங்கள் சொன்னபடிதான் நடந்து கொள்ளும்.ஆனால் நான் சொன்னது யதார்த்த நிலைமையை.மேலும் மத்திய அரசை விமரிசிக்கும் உரிமை காவிரிமைந்தன் ,கண்பத்
      மற்றும் எந்த கட்சியும் சார்பற்ற நண்பர்களுக்கு மட்டும்தான் உள்ளது மற்ற எவர்க்கும் குறிப்பாக காங்கிரஸ் திமுக ஆகியோருக்கு சிறிதும் கிடையாது.காவிரி பிரச்சினை பூதாகாரமானதற்கு இவர்களே கரணம்.

      • mekaviraj's avatar mekaviraj சொல்கிறார்:

        ( இப்போ கடைசியா வந்துள்ள பிஜேபி எனும் வைத்தியரை குறை கூறி என்ன பயன்? ) வாழ்க வளர்க Ganpat அவர்களே – எப்படி எல்லாம் பேசுகிறீரகள் – (நிச்சயமாக உங்கள் கருத்தினை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.ஒரு உண்மையான நல்ல நிர்வாகம் நீங்கள் சொன்னபடிதான் நடந்து கொள்ளும்.ஆனால் நான் சொன்னது யதார்த்த நிலைமையை ???)

  7. நெல்லை பழனி's avatar நெல்லை பழனி சொல்கிறார்:

    அப்படியானால், இவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும்
    மக்களும் அது போலத்தானே இருப்பார்கள்…?………………..ஆம் நாம் இளிச்சவாயர்கள் தான் ..நம்மிடம் ஒரு கடையடைப்பு செய்வதில் கூட ஒற்றுமை இல்லை …விக்கிரமராஜா ஒரு தேதி சொல்கிறார். விட்டேனா பார் என வெள்ளையன் ஒரு தேதி அறிவிக்கிறார் …திமுகா மற்றும் பாமகா ஒரு தேதி என அறிவித்து கடை அடைப்பையே ஒரு கேள் கூத்தாக்கி விட்டனர் ….இதை தான் மத்திய அரசு புரிந்து கொண்டு நம்மை கண்டு கொள்வது இல்லை ..பலவீனம் நம்மிடையே ,,நமக்கு ஒரு சரியான தலைமை இப்பொழுது இல்லை என்றே கருதுகிறேன் …

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.