அய்யோ பாவம் – திருவாளர் தினகரன் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவார்…?

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்ததால்
இந்த பரிதாபமான விஷயம் வெளியே தெரிய வந்திருக்கிறது..
இல்லையென்றால், ஒரு அப்பாவி பொது நல ஊழியர்
படும் துன்பம் நமக்கு தெரியாமலே போயிருக்கும்…..

தேர்தல் கமிஷன் உத்திரவுப்படி இடைத்தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்
வெளியிடப்பட்டுள்ளன.

மற்றவர்கள் எக்கேடும் கெட்டுப்போகட்டும். நமது
அக்கரை தமிழக மக்களின் நல் வாழ்வுக்கு உழைக்கவென்றே
பிறந்து வந்திருக்கும் அவதார புருஷர் திருவாளர் தினகரன்
அவர்களைப்பற்றி மட்டும் தான்.

அவரது சொத்து விவரங்கள் குறித்து வெளிவந்திருக்கும்
செய்தி –

————————–

– பணம் உள்ளிட்ட அசையும் சொத்துக்களின்
மதிப்பு 11,45,781 ரூபாய் 94 பைசா…
(அதாவது சுமார் 11.45 லட்சம்)

-அவர் பெயரில் இப்போதைய மதிப்பின்படி
57.44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா
சொத்துக்கள் மட்டுமே..

-அவருக்கு சொந்தமாக ஒரு கார் கூட கிடையாது….
– ஆனால், நல்ல வேளை “நோ” கடன்….!!!

—————

அவரது மனைவி பெயரில் இருக்கும் ரொக்கம்,
வங்கி கணக்கு இருப்பு உள்ளிட்டவற்றின் மதிப்பு
7,18,66,055 ரூபாய் 23 பைசா (அதாவது சுமார் 7.18 கோடி..)

-மனைவி பெயரில் இருக்கும் அசையா சொத்துக்களின்
மதிப்பு – 2,40, 71,687 ரூபாய் (அதாவது சுமார் 2.40 கோடி )

– சஃபாரி கார் ஒன்று…

– ஆனால், மனைவி பெயரில் உள்ள கடன் 5,40,04,946 ரூபாய்
(அதாவது சுமார் 5.40 கோடி…)

——————

– மகளின் பெயரில் உள்ள அசையும் சொத்து
– 4,95,4,942 ரூபாய் (அதாவது சுமார் 49 லட்சம் …)

நோ – அசையாத சொத்து…
நோ – கடன்…
நோ – கார்…

—————————————-

நம் கவலை என்னவென்றால் –
அவர் மீது அந்நியச்செலாவணி வழக்கு ஒன்றில்
28 கோடி ரூபாய் அபராதம் கட்டச் சொல்லி உத்திரவாகி
இருக்கிறது.

உயர்நீதிமன்றமும் – கருணையே இல்லாமல்,
அப்பீலை தள்ளுபடி செய்து,
அபராத தொகையான 28 கோடியை கட்டச் சொல்லி விட்டது…

—————–

குடும்பத்தின் மொத்த சொத்தையும் ( self – 69 லட்சம்,
மனைவி – ( 9.58 கோடி மைனஸ் கடன் 5.40 கோடி கடன்)
= 4.18 கோடி… மகள் – 49 லட்சம் – ) சேர்த்துப் பார்த்தாலும்
கூட சுமார் 5.36 கோடி தான் வருகிறது….

இந்த நிலையில் 28 கோடி ரூபாய் அபராதத்தை கட்டச்
சொன்னால், பணத்திற்கு அவர் எங்கே போவார்…?

எனவே, மக்களுக்காக பணியாற்றவே தேர்தலில்
நிற்கும் அவருக்கு,

அவரது தொகுதி மக்களாகிய ஆர்.கே.நகர்
வாக்காளர்களாக பார்த்து ………………….எதாவது
செய்தால் தான் உண்டு …!!!

நம் மக்கள் – “பார்த்து” ……… செய்வார்களா ….!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to அய்யோ பாவம் – திருவாளர் தினகரன் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவார்…?

  1. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    Sarcastic ஆக எழுதியிருந்தாலும், எனக்கு நம் மக்களைப் பற்றி, அதுவும் 70% சாதாரண, வறுமையில் இருக்கும் மக்களைப்பற்றித்தான் கவலை. அவர்கள்தான் அன்றைக்குக் கிடைக்கும் கொஞ்சப் பணத்துக்காக, தன் வாக்கினை, அதன் மதிப்பு தெரியாமல் விற்றுவிடுகிறார்கள்.

    இவ்வளவு ஏழ்மையில் இருக்கும் தினகரனுக்காக, வாக்குக்கேட்டு, தொகுதி மக்களே சொந்தக் காசில் நடிகை எமி ஜாக்சனை அழைத்துவருகிறார்கள். இத்தகைய மக்கள் காவலர் வெற்றிபெற வேண்டாமா என்று நாஞ்சில் சம்பத் அவர்கள் (உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்காது. அவரை மக்கள் இன்னோவா சம்பத் என்று அழைப்பார்கள்) கடுமையாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். சொல்லமுடியாது, 70% வாக்குகளை, மதுசூதனன், தினகரன், தீபா பெற்று, 30% வாக்குகளைப் பெற்று திமுக வெற்றி பெறலாம்.

    தினகரனின் இப்போதைய தோற்றம், எப்போதும் தொப்பியோடு, சங்கர்லால், தமிழ்வாணன் ரேஞ்சுக்குக் காட்சியளித்த மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த க.ப. அறவாணனை நினைவுபடுத்துகிறது.

    இடுகைக்குச் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி உங்களிடம்.
    அரசியல்வியாதிகள், பினாமிகளை வைத்துக்கொண்டு தப்பிவிடுவதால் (எல்லோரிடமும் உண்மையாக இருக்கும் பணத்தில் நூறில் ஒரு பங்குதான் கணக்கு காண்பிக்கிறார்கள். ஸ்டாலின் குடும்பத்தில் எல்லோரிடமும் 25 கோடிக்குக் குறையாமல் சொத்து காண்பித்துள்ளார்கள். ஸ்டாலின் அரசியலில் மிகவும் பிஸியாக உழைத்துக்கொண்டிருந்தாலும், ஏகப்பட்ட தொழில்களைச் செய்து சம்பாதித்திருக்கிறார். கனிமொழியின் தொழிலே அரசியல்தான். அதில்தான் அவர் 25 கோடிக்குமேல் சொத்து காண்பித்துள்ளார். கேடி சகோதரர்களிடம் சொந்தமாக வாகனம் கூட இல்லை. இப்போ தினகரன் மற்றும் சசிகலா போன்றோர், கிட்டத்தட்ட வறுமைக்கோட்டில் இருக்கிறார்கள்), ஒரு தொழிற்சாலையை அல்லது நிறுவனத்தை எடுத்து, அதன் பங்குதாரர்கள் யார், அவர்களிடம் முதலுக்கு எங்கிருந்து பணம் வந்தது என்று நொங்கு எடுக்கமுடியாதா? அப்படிப் பிடித்தால், ‘நாங்க இருக்கோம்’ கடைக்காரர்களும், சாராய அதிபர்களும் சுலபமாக மாட்டமாட்டார்களா? ஆ.ராசா, ரியல் எஸ்டேட்டில் அவர்களது சொந்தக்காரர்கள் எல்லோரும் பலகோடிகளுக்கு அதிபதி ஆகிவிட்டார்கள் என்று கணக்குக் காண்பிக்கிறார். அன்புமணியும் அப்படித்தான் (எல்லாச் சொத்தும் ரியல் எஸ்டேட் தொழிலில் வந்ததாம்). இவர்களுக்கு, ஆரம்பகாலப் பணம் எங்கிருந்து வந்தது, யார் யார் பங்குதாரர்கள், அவர்களுக்கு முதல் போடும் அளவிற்கு படிப்பறிவு உள்ளதா என்றெல்லாம் ஆராய்ந்தால், 3 மாதத்துக்குள்ளாகவே இவர்கள் எல்லோரையும், அரசு இலவச உணவகங்களில் (வேறு என்ன சிறைச்சாலைதான். அன்று சுதந்திரப் போராட்ட தியாகிகள் இருந்து புகழ் பெற்ற சிறைகள் இன்று கொள்ளையர்களால் நிரப்பப்படுவது மட்டும்தான் சகிக்கமுடியவில்லை) அனுமதித்துவிட முடியாதா? ஏன் நம்முடைய SYSTEM இப்படி இருக்கிறது?

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    காமை சார்.. ஒரு செய்தி என்னை DISTURB செய்கிறது. ‘கிறிஸ்தவக் கூட்டமைப்பு’ தினகரனுக்காகப் பிரச்சாரம் செய்யப்போகிறது என்பது. எப்போது முஸ்லீம் கட்சிகளும் (லீக் இன்ன பிற), கிறித்துவக் கட்சிகளும் அரசியலில் இறங்கியதோ, அப்போது இந்துத்துவா சிந்தனையையும் அலையையும் ஆளுமையையும் தவிர்க்க இயலாது. இந்த இரண்டு மதங்களும் அரசியலில் இறங்குவதால்தான் இந்துத்துவாவுக்கு பெரிய வெற்றிடம் ஏற்படுகிறது. கிறித்தவக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த முடிவால்தான், கன்யாகுமரி மாவட்டத்தில் 2016ல் (?), மற்ற எல்லா இடங்களிலும் அதிமுக பெரும்பாலும் வென்றபோதும், திமுக அங்கு மட்டும் எல்லா இடங்களையும் கைப்பற்றியது. அப்போ, பாஜக ‘இந்துத்துவா’வை மட்டும் எடுத்துப் பிரச்சாரம் செய்வதில் என்ன குறை காண இயலும்? ‘மதம்’ என்ற ஒன்று அரசியலில் புகுந்துவிட்டால், இந்துக்கள், தமிழகத்தில் பாஜகவுக்கு மட்டும்தான் வாக்களிக்கவேண்டும். அது ஒன்றுதான் அவர்களுக்கு நல்லது. ‘மதச்சார்பு’ என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது உண்மையே…
      அது கிறிஸ்தவ அமைப்போ, இஸ்லாமிய அமைப்போ –
      எதுவாக இருந்தாலும் சரி – அரசியலில் மதத்தை
      கலந்தால் – விளைவுகளுக்கு அவர்களும்
      பொறுப்பேற்றாக வேண்டும்.

      என்னைபொருத்த வரையில் –
      அரசியல் வேறு – மதம் வேறு…

      அது எந்த மதமாக இருந்தாலும் சரி –
      எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் சரி-
      இரண்டையும் கலந்து குழப்புபவர்கள்
      சமுதாய ஒற்றுமைக்கு பெரும் தீங்கு
      விளைவிக்கிறார்கள் என்பதே என் கருத்து….

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. Rajamanickam Veera's avatar Rajamanickam Veera சொல்கிறார்:

    தமிழர்கள் அப்பாவிகள் பாவம் என்ன செய்வார்கள் 5000 ரூபாயோ, 10,000 ரூபாயோ தங்க நாணயமோ கொடுக்கும் தானைத்தலைவர், புர்ச்சி தலைவர் ஜீனியர் தினகரருக்கு ஓட்டு போட்டு விட்டு வந்து மெரீனாவிலோ, ஐஸ் ஹவுசிலோ, வாய்ப்பிருந்தால் டெல்லியிலோ அடுத்த முறை பணம் கிடைக்கும் போது போராடுவார்கள். அவர்களை ஏன் இந்த கருத்தை எல்லாம் கேட்கிறீர்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.