
அப்போதெல்லாம் நான் நிறைய திரைப்படங்கள்
பார்ப்பேன் – அதில் அநேகம் முதல் நாள், முதல் ஷோ.
14 May 1976 – ஒரு புதிய படம்.
திருச்சி, ராமகிருஷ்ணா தியேட்டர் –
தியேட்டர்களில் அப்போதெல்லாம்
ஒரு வழக்கம் இருந்தது – எந்த
படம் திரையிடப்பட்டிருக்கிறதோ,
அந்தப்படத்தின் பாடல்களை படம் துவங்கும் முன்னரும்,
இடைவேளையிலும் (ரிக்கார்டு) போடுவார்கள்.
ரிசர்வேஷன் சிஸ்டம் எல்லாம் கிடையாது….
முதல் ஷோவாக இருந்தாலும் கூட தியேட்டரில் கூட்டம்
இல்லை. சுலபமாக டிக்கெட் வாங்கிக்கொண்டு நானும்
என் நண்பன் பத்மநாபனும் உள்ளே சென்று அமர்ந்தோம்.
படம் இன்னும் துவங்கவில்லை….
அற்புதமான, மிகவும் வித்தியாசமான பாடல்கள்
வரிசையாக ஒலித்துக்கொண்டே இருந்தன.
அந்த காலத்தில் – சினிமா பாடல்கள் எல்லாம்
எனக்கு அத்துப்படி….
ஆனால், தியேட்டரில் போட்டது எல்லாமே,
அதுவரை நான் கேட்டறியாத புது பாடல்கள்.
அப்போதெல்லாம் ஆடியோ ரிலீஸ் என்று
தனியாக எதுவும் கிடையாதே…! படம் வெளிவந்த பிறகு
தான் பாடல்களைப் பற்றி தெரிய வரும்.
இதெல்லாம் இந்த படத்தின் பாடல்கள் தான் என்றால்,
இந்தப்படம் சூப்பர் ஹிட் ஆகப்போகிறது என்று என்
நண்பனிடம் சொன்னேன்.
“அப்படியா சொன்னே..?” என்று கேட்க இன்று நண்பன்
பத்மநாபன் இல்லையென்கிற காரணத்தால், நானும்
கலைஞர் மாதிரி “கப்சா”வெல்லாம் விட மாட்டேன்….
கிட்டத்தட்ட இதே தோரணையில் தான் சொல்லிக்
கொண்டிருந்தேன்…. ஏனென்றால், அவனுக்கு சினிமா
பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிமுகம்
செய்து வைத்தது நான் தான்.
(இரண்டு வருடங்களுக்கு முன்னர் மறைந்து விட்ட
என் நண்பனை நினைவுபடுத்திக் கொள்ள, எதேச்சையாக
இந்த இடுகை உதவி இருக்கிறது….)
ஆம்… தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய Musical Super Hit
ஆக அமைந்தது ” அன்னக்கிளி ”

———————–
திரு.பஞ்சு அருணாசலம் அவர்களின் மறைவு வருத்தம்
தருகிறது. மிக நீண்ட காலமாக, 40-45 ஆண்டுகளுக்கும்
மேலாக அவரது நினைவு என் மனதில் வித்தியாசமாக
பதிந்திருக்கிறது.
எப்போதெல்லாம் டைட்டிலில் கவிஞர் கண்ணதாசன்
அவர்களின் பெயர் தோன்றுகிறதோ, அங்கெல்லாம்
கூடவே – உதவி -பஞ்சு அருணாசலம்
என்று இவரது பெயரும் வரத்தவறாது. எனவே
பஞ்சு அருணாசலம் அவர்களின் பெயரைப் பார்க்கும்
போதெல்லாம் எனக்கு கவிஞர் கண்ணதாசனின் நினைவு
கூடவே வரும்.
அதே போல், எப்போதெல்லாம் திரையில் இளையராஜா
அவர்களின் பெயரைக் காண்கிறேனோ, அப்போதெல்லாம்
பஞ்சு அருணாசலம் அவர்களும் தவறாமல் என் நினைவில்
வந்து விடுவார். இசைக்கடல் இளையராஜா அவர்களை
நமக்கெல்லாம் அறிமுகம் செய்த அற்புதமான மனிதர்
அல்லவா பஞ்சு அருணாசலம்….!
திரு.பஞ்சு அருணாசலம் அவர்களின் நினைவாக,
அவர் இளையராஜா அவர்களைப் பற்றி ஒரு பேட்டியில்
பகிர்ந்து கொண்ட சில செய்திகளையும்,
கூடவே இசைஞானி, திரு.பஞ்சு அருணாசலம் அவர்களைப்
பற்றி சொன்ன சில விஷயங்களை இங்கு பதிவுசெய்ய
விரும்புகிறேன்.
முதலில் திரு.பஞ்சு அருணாசலம் –
இளையராஜா அவர்களை அறிமுகப்படுத்தியது பற்றி –





இசைஞானி இளையராஜா திரு.பஞ்சு அருணாசலம்
பற்றி அண்மையில் சொன்னவை –

அண்ணன் பஞ்சுவை ஆயுளில் மறக்க முடியுமா…? –
“நாங்கள் சினிமாவில் இசையமைக்க முயற்சி
செய்துகொண்டிருக்கும் வேளையில் அண்ணன் பாஸ்கர்
எனக்காக நிறைய நடந்திருக்கிறார். யாராவது புதிதாக
ஒரு கம்பெனியை தொடங்கியிருந்தால் அங்கு போய்
வாய்ப்புக் கேட்டு நிற்பார் பாஸ்கர்.
அது போலியான கம்பெனியாகக் கூட இருக்கலாம்.
‘சார் என் தம்பி நல்லா மியூசிக் பண்ணுவான். அவனுக்கு
ஒருசான்ஸ் கொடுங்க’ என்று போய்க் கேட்பார். நான்
எந்த கம்பெனிக்கும் போய் வாய்ப்புக் கேட்டதில்லை.
வாய்ப்புக் கேட்கவும் அனுப்ப மாட்டார் பாஸ்கர்.
அப்போது நாங்கள் இசைக் குழு வைத்து மெல்லிசைக்
கச்சேரி நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது நிறைய
புதுமுக இயக்குநர்கள் வந்துகொண்டிருந்தார்கள்.
வி.சி.குகநாதன், எஸ்.பி.முத்துராமன், தேவராஜ் மோகன்
போன்றவர்கள் வந்தநேரம் அது. இவர்களையெல்லாம்
ஒரு கல்யாண மண்டபத்துக்கு வரவழைத்து நான்
கம்போஸ் செய்த பாடல்களைப் பாடிக்காட்டி வாய்ப்புக்
கேட்டோம்.
வந்தவர்கள் எல்லோரும் சரி பார்க்கலாம், பாட்டு
நல்லாருக்கு, என்று சொல்லிவிட்டுச் சென்றார்களே தவிர,
அந்த இயக்குநர்கள் யாருக்கும் இந்த இளையராஜாவைத்
தெரியவில்லை. அதுவும் நான் இந்தந்த பாட்டு
பண்ணியிருக்கேன். லட்டு பண்ணியிருக்கேன், பூந்தி
பண்ணியிருக்கேன், காரம் பண்ணியிருக்கேன்னு காட்டின
பின்னாடி கூட இது நன்றாக இருக்கிறதென்று
தெரியவில்லை.
ஆனால் என் நண்பன் ஆர்.செல்வராஜ், பஞ்சு
அருணாசலத்திடம் ‘என் நண்பன் ஒருத்தன்
ஜி.கே. வெங்கடேஷ்கிட்ட உதவியாளரா இருக்கான்.
நல்லா மியூசிக் பண்ணுவான். நீங்க ஒரு வாய்ப்பு தர
வேண்டும்’ என்று கேட்டிருக்கிறான். அவர் அப்போது
சின்ன படங்களுக்கு எழுதிக் கொண்டிருந்தார்.
சரி வரச் சொல்லு பார்க்கலாம் என்று அவர் சொல்லி
யிருக்கிறார். மாம்பலத்தில் ஒரு சிறிய அறையில்
லுங்கியும் பனியனும் மட்டும் அணிந்து உட்கார்ந்திருந்தார்
பஞ்சு சார். ரொம்பவும் சின்ன அறையில் ஒரே ஒரு
டேபிள் மட்டும் இருந்தது. லேசான மது வாடையும்
சிகரெட் வாடையும் அறையில் மிதந்தன.
‘அண்ணே, நான் உங்களைப் பாத்திருக்கேன். சபதம்
படத்துக்குப் பாட்டெழுத கவிஞர் கண்ணதாசன் வந்தபோது
நீங்களும் வந்தீங்க’ என்று நான் சொல்லவும், ‘ஆமாம்
நானும் உன்னைப் பாத்திருக்கேன். ஆமா, நீ தனியா
மியூசிக் பண்றியா’ என்று கேட்டார். ‘ஆமாம்’ என்றேன்.
‘எங்கே பாடிக் காட்டு’ என்றார். அங்கிருந்த டேபிளில்
நான் கம்போஸ் பண்ணியிருந்த பாடல்களை அவருக்கு
தாளம் போட்டு வாசித்துக் காட்டினேன். அவர், ‘நான்
காமெடி படங்களுக்குத்தான் எழுதிகிட்டிருக்கேன்.
நீ வாசிச்ச பாடல்களுக்கென்று படம் எடுத்தால்தான்
பாட்டெல்லாம் நல்லாயிருக்கும்’ என்றார்.

செல்வராஜ் மருத்துவச்சி என்ற கதையை எழுதினான்.
அந்த கதையையே அன்னக்கிளி என்ற பெயர் வைத்துத்
தயாரித்தார். பின்னணிப் பாடகர்களைப் பாடவைத்து
ஆர்க்கெஸ்ட்ராவை வைத்துப் பாடிக் காட்டியும்
அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இயக்குநர்கள்
மத்தியில் வெறும் டேபிளில் தாளம் போட்டுக் காட்டிய
உடனே இவன் வருவான் என்று ஒரு நம்பிக்கையில்
வாய்ப்புக் கொடுத்தார் பஞ்சு அருணாசலம்.
பின்னால் நான் பெயர் பெற்றபோது அவரிடம் ‘எப்படி
நீங்கள் இளையராஜாவை அடையாளம் கண்டுபிடித்தீர்கள்?’
என்று கேட்டார்கள். உடனே வேகமாக ‘நான் என்ன
அவனை அடையாளம் கண்டுபிடிப்பது? அவன்
எங்கிருந்தாலும் வந்திருப்பான்’ என்று சொன்னார்
அண்ணன் பஞ்சு அவர்கள்.
இதை ஆயுளில் நான் மறக்க முடியுமா?”



பலருக்கு வாழ்க்கையில் ஒளி கொடுத்தவர் பஞ்சு அவர்கள் — அவர் தனது முதல் பாடலான “’பொன்னெழில் பூத்தது புது வானில் ” என்று திரு எம்.ஜி.ஆருக்கு ’கலங்கரை விளக்கம்’ படத்துக்கு எம்.எஸ்.வியின் இசையில் இவர் எழுதியது — காலத்தால் அழியாத ஒரு பாடல் …
அதுமட்டுமல்ல ரஜினியை கே பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினாலும், அவரை ஒரு ” சூப்பர் நடிகர் ” என நிலை நாட்டியவர் பஞ்சு அருணாச்சலம். ஆறிலிருந்து அறுபது வரை,… எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் ரஜினியை பல்வேறு பரிமாணங்களில் காட்டியவர் இவர்தான் — அந்தக் காலத்திய பாடல்களின் ஆரம்ப இசையை கேட்டவுடனே — என்ன பாட்டு அது என்பதை சுலபமாக அடையாளம் தெரிந்துக் கொள்ளலாம் ….
அன்னக்கிளி உன்னை தேடுதே என்கிற அந்த பாடலின் ஆரம்பமான ஜானகியின் ஹம்மிங்கை கேட்பதே ஒரு சுகானுபவம் — அந்த இளையராஜாவின் முதல் பாடல் — முதல் ஹம்மிங் போலவே சிறக்கும் என்று கண்டறிந்த “பஞ்சு ” என்றும் நம்மிடையே வாழ்ந்துக் கொண்டுதான் இருப்பார் என்பது உண்மை — !!!
Sir,
Thanks to Panchu Sir, Ilayarajah Sir and Maindhan Sir.
May his soul rest with lord Shiva.
He was instrumental in rediscovering our Tamil in cinema by introducing Ilaya Rajah Annan.
Yogi
JI it was a great gesture magnanimous action of
recommending a talented youth for music direction in his film
And panchus lyrics in tamil pictures are always remembered by the
tamil film lovers>
MAY HIS SOUL REST IN PEACE