சென்னையில் விக்னேஸ்வரன் அவர்கள் வெளிப்படையாகவே பேசினார்….

மனதில் உள்ளதை எல்லாம் அப்படியே பேசினால்,
இலங்கைக்கு திரும்பிப் போகும்போது தீவிரவாதி என்று முத்திரை குத்தி செயல்பட முடியாமல் முடக்கி விடுவார்கள்  
என்பதை உணரச்செய்தார் இன்று (09/11/2014) சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட மாகாண முதல்வர்
திரு. விக்னேஸ்வரன் அவர்கள்.

PUCL ( People’s Union for Civil Liberties ) அமைப்பு இன்று
சென்னையில், காலஞ்சென்ற கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் நினைவு உரை நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்டு சுமார் ஒன்றரை மணி நேர அளவிற்கு சிறப்பு சொற்பொழிவாற்றினார் திரு.விக்னேஸ்வரன் அவர்கள்.

நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன்.( கீழேயுள்ள புகைப்படங்கள் அங்கு நான் எடுத்தவை )

v-1

v-2

v-3

v-5

இங்குள்ள அமைப்புகளும், தமிழக அரசும் தான் இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றி மிகைப்படுத்திக் கூறுகின்றன.
அங்கு வாழும் தமிழர்கள் யாராவது இவ்வாறு கூறுகிறார்களா ..?

என்று முன்பு காங்கிரசும், இப்போது பாஜக வும்
கூறிக்கொண்டிருக்கின்றன.

அதற்கான விளக்கங்கள் விக்னேஸ்வரன் அவர்களின்
உரையிலேயே இருக்கிறது –

———————

“போரினால் பாதிக்கப்பட்ட வலுவற்றவர்கள்,
மாற்று வலுவுடையவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று
18,000 க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு லட்சத்திற்கும் கிட்டிய தொகையினரான
இளம் விதவைகள் இருக்கின்றார்கள்.

தாய் தந்தையரை இழந்த அநாதைக் குழந்தைகள்
இருக்கிறார்கள்.

வேலையற்ற இளைஞர், யுவதிகள் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

மக்களின் மனோநிலை போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைப் போக்க வேண்டிய வைத்திய வசதிகள், ஆலோசனை கூறும் வசதிகள் எங்களிடம் இல்லை.

இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு அறிவித்த
வீடுகட்டும் திட்டம், (சிங்கள அரசின்) அரசியல் சகாயம்
பெற்றவர்களுக்கே கிடைத்து வருகிறது. ஊழல்கள் மலிந்து காணப்படுகிறது.

“புலி வரப்போகிறது”, “புலி வரப்போகிறது” என்று கூறி சுமார் ஒன்றரை லட்சம் ராணுவத்தினர் வட மாகாணத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் கூட
அவர்கள் குறுக்கிடுகிறார்கள்.

பள்ளிக்கூடங்களில் நடக்கும் சிறிய நிகழ்ச்சிகளில் கூட ராணுவத்தினர் வந்து உட்கார்ந்து கொள்கின்றனர்.

பெண்களின் கதி பெரும் சங்கடமாக உள்ளது.

ராணுவத்தினருக்காக – குடியிருப்புகளையும்,
கல்லூரிகளையும், கோயில்களையும் அழித்து,

பாரிய வாஸஸ்தலங்களையும்,
கோல்ப் விளையாட்டு திடல்களையும்,
நீச்சல் தடாகங்களையும் கட்டி வருகின்றனர்.

இவ்வாறு எமது நிலையை அடுக்கிக்கொண்டே போகலாம். எமது கருத்துக்களை வெளிப்படுத்தும்போது பலவிதமான
கட்டுப்பாடுகளை நாம் உபயோகித்தே பேச வேண்டியுள்ளது.

உண்மைகளைக் கூறினால் ” உனக்கும் புலிகளுக்கும்
தொடர்புண்டு ” என்று கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இளைய வயது எம் மக்கள் எத்தனையோ வருடங்களாக சிறையில் வாடி வருகிறார்கள்.

அவர்களை வெளியே எடுக்க நாம் எடுத்த பிரயத்தனங்கள்
யாவும் பலனற்றுப் போயுள்ளன.

சில ஊடகங்கள் எங்களை கையாலாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பி வருகின்றன. நாம் உங்கள் உணர்ச்சிகளை புரியாதவர்கள் என்கிற மாயையை சில பத்திரிகைகள் ஏற்படுத்தியுள்ளதை நான் அறிவேன்.

ஆனால் – நாங்கள் இங்கு பேசும் பேச்சுக்கள்,
உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் இறுக்கும் பதில்கள் –
எம்மை மட்டுமல்ல, எமது வடமாகாண சபையையும் பாதிக்கும் என்பதை இங்கிருக்கும் நீங்கள் மறந்து விடக்கூடாது.
அதாவது, உணர்ச்சி பூர்வமான எமது பேச்சுக்களை வைத்து, எமக்கு பயங்கரவாத பூச்சைப் பூசி, எமது வடமாகாண சபையை கலைக்கவும் தயங்காது எமது மத்திய அரசாங்கம்.

ஒன்றரை லட்சம் படை வீரர்கள் முகாம் இட்டிருக்கும் இடத்தில் எம் மக்களை பாதிக்கும் கருத்துக்களை நாம் எடுத்தியம்பும்போது, மிக்க கவனம் அவசியம். அந்த நிதானத்தை வைத்து நாம் கையாலாகாதவர்கள் என்று நினைத்து விடாதீர்கள்…

சூழலுக்கு ஏற்பச் சூளுரைப்பதே –
இன்றைய சூழலில் சூரத்தனம்…!!!

இல்லையென்றால் -சுத்த முட்டாள் என்று பட்டம்
கட்டி விடுவார்கள்….

————————–

சொல்ல வேண்டியதை, மிகச்சரியாக, மிகக் கம்பீரமாக – ஓங்கி உரக்கச் சொல்கிறார்.

மிகவும் தெளிவாக இருக்கிறார் திரு விக்னேஸ்வரன் அவர்கள். மிகவும் பொருத்தமான ஒருவரைத்தான் ஈழ மக்களும், ஈழ அரசியல் கட்சிகளும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

 

செய்தியாளர்கள் பெரிய அளவில் குழுமி இருந்தார்கள்.
நாளை அவர்களை சந்திப்பதாகக் கூறி இருக்கிறார்.
நாளைய கூட்டத்தில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது இன்னும் பல செய்திகள் வெளியாகலாம்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to சென்னையில் விக்னேஸ்வரன் அவர்கள் வெளிப்படையாகவே பேசினார்….

  1. yarlpavanan's avatar yarlpavanan சொல்கிறார்:

    சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

  2. இ.பு.ஞானப்பிரகாசன்'s avatar இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    //மிகவும் பொருத்தமான ஒருவரைத்தான் ஈழ மக்களும், ஈழ அரசியல் கட்சிகளும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்// – இந்த வார்த்தைகள் தங்களிடமிருந்து வருவது எனக்குப் பெரிய ஆறுதலைத் தருகிறது ஐயா. ஏனெனில், காலங்காலமாகத் தமிழ்நாட்டுத் தமிழர்களாகட்டும், இலங்கைத் தமிழர்களாகட்டும் சரியான தலைமை இல்லாததால்தான் எல்லாக் கொடுமைகளுக்கும் ஆளாகி வருகிறார்கள். இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் விக்கினேசுவரன் அவர்கள் எப்படி இருப்பாரோ எனும் கவலை தொடர்ந்து இருந்து வந்தது. தங்களிடமிருந்து இப்படியொரு கருத்து வந்திருப்பது அந்தக் கவலையைத் தீர்த்தது. நன்றி ஐயா!

  3. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    Many Thanks for the exclusive report and photos sir.

  4. yogeswaran's avatar yogeswaran சொல்கிறார்:

    Dear Sirs,

    We the tamils deserve the leaders whom we get.

    why blame only the leaders.

    rgs

    yogesh

  5. BC's avatar BC சொல்கிறார்:

    உங்கள் நாட்டவரான சீமான் அவர்கள் விக்னேஸ்வரனை பற்றி கேள்விகள் கேட்கிறார்.

    முதலில் ஐயா விக்னேஸ்வரன் யார்? இவ்வளவு காலமும் அவர் எங்கிருந்தார்?
    60 வருடங்களாக போராட்டம் நடந்து வருகின்றது. இதில் எதிலாவது இவருக்கு பங்கு உண்டா? உதாரணமாக சொல்ல போனால் அரசியல் போராட்டமாக இருக்கட்டும் இல்லை, ஆயுதப் போராட்டமாக இருக்கட்டும். அப்போது எங்கே போய் இருந்தார் விக்னேஸ்வரன்.இறுதிக் கட்டப் போரில் கூட எந்தவிதமான நன்மைகளும் தமிழ் மக்களுக்கு செய்யவில்லை. ஒரு கடிதம் கூட வெளிநாடுகளுக்கு இவர் எழுதவில்லை. இவருக்கு எப்படி தெரியும் போராட்டம் என்றால் என்ன என்று?
    ஐயாவிற்கு தெரிந்தது கோவில் வாசலும், நீதிமன்ற வாசலும்தான் வேறு ஒன்றும் இவருக்கு தெரியாது.
    இதில் உண்மை என்னவென்றால் இலங்கையில் தனது மண்ணுக்காக போராடிய போராளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கொடுத்தது, ஐயா மட்டும் தான் அது போன்று அதிக பேரை சிறையில் தள்ளியதும் ஐயா தான்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பரே,

      இது மிகவும் அபத்தமான வாதம் என்று
      உங்களுக்கே தெரியவில்லை….?

      சட்டப்படி நடந்த தேர்தலில், பெரும்பாலான
      வட மாகாண மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட
      முதல்வர் திரு விக்னேஸ்வரன் அவர்கள்.
      அவரைத் தேர்ந்தெடுத்த மக்கள், தகுந்த
      காரணங்களுக்காகத்தான் அதனைச் செய்து
      இருக்கிறார்கள்.

      இங்குள்ள மக்களை விட, அவர்களுக்கு
      திரு விக்னேஸ்வரனை நன்றாகவே தெரியும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.