ஆன்மிகமா – (ஏமாற்று) வியாபாரமா ?
(லிங்கபைரவி – பகுதி-2)
—
எத்தனை தான் சொல்லுங்கள் –
பெரும்பாலான நேரங்களில் – மனிதருக்கு அசலுக்கும் –
போலிக்கும் சட்டென்று வித்தியாசம் காணத் தெரிவதில்லை.
(இந்த வார்த்தை எனக்கும் சேர்த்து தான்..!)
நிஜத்தை விட, போலி அதிகம் ஒப்பனையோடு
உலா வருவதாலோ என்னவோ ?
–
உண்மை எது – பொய் எது ?
ஆன்மிகம் எது – ஏமாற்று வியாபாரம் எது ?
என்று என்று தெரிந்து கொள்ள முடியாதபடி,
மக்கள் லேசில் புரிந்து கொள்ள முடியாதபடி திட்டம் போட்டு,
பிரமாதமாக ஏமாற்றுகிறார்கள்..!
யாராவது பொய் சொன்னால் உடனே நம்பி விடும் நாம்-
உண்மையை நம்ப மட்டும் –
ஆயிரம் தடவை யோசிக்கிறோம் –
ஆதாரங்கள் கேட்கிறோம்.
இத்தகைய விஷயங்களில், மற்றவர்கள் சொன்னாலும்
மனம் கேட்க மாட்டேனென்கிறது.
சுயமாக அனுபவித்து,
என்றாவது ஒரு நாள் உணரும்போது –
காலம் கடந்து போய் விடுகிறது.
ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.
இந்த இடுகையின் முதல் பகுதியில்
நான் கூறி இருப்பது அனைத்தும், பிரபலமான
“அத்தனைக்கும் ஆசைப்படு”ம்
சாமியாரின் ( ரிலீஸ் ஆகி 2 வருடங்கள் ஆன)
புதிய வியாபார விஷயங்கள்.
அவர்களின் விளம்பரப்படி –
The Birth of a GODDESS ….
ஒரு பெண் கடவுள் புதிதாய் பிறந்திருக்கிறார்..
ஒவ்வொரு வீட்டிலும், கடையிலும், அலுவலகத்திலும்,
அவரது கண்டுபிடிப்பான லிங்கபைரவியை நிறுவினால்,
மனிதர் கேட்டதெல்லாம் கிடைக்கும்.
நினைத்ததெல்லாம் நடக்கும்.
அற்புதமான பிசினஸ்மேன்.
இவருக்கு ஏகப்பட்ட பயிற்றுவிக்கப்பட்ட,
விற்பனைப் பிரதிநிதிகள்(sales representatives).
எக்கச்சக்கமான விளம்பரங்கள். ஏகப்பட்ட வெப்சைட்கள்.
உண்மையில் நான் இதை எப்படி எழுத வந்தேன் என்று
சொன்னால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.
பாகிஸ்தான் வலைத்தளம் ஒன்று.
அதில் இவர்களது லிங்கபைரவியைப்பற்றிய விளம்பரத்தை
பார்த்து அசந்து விட்டேன்.

அதிலிருந்து பிடித்த நூல் தான் இது !
வெளிநாடுகளில் எல்லாம் நிறைய விளம்பரம் செய்கிறார்கள்.
இவர்களின் டார்கெட்டில் வெளிநாட்டினருக்கும் முக்கிய
இடம் உண்டு –
இளிச்சவாயர்களில் உள்நாடென்ன – வெளிநாடென்ன …?
உலகளாவிய வலைத்தளங்களில் –
இளிச்சவாயர்களுக்கு என்ன பஞ்சம் – ?
என்பது அவர்கள் சித்தாந்தம் போலும் ..
விஷயம் simple.
இவர் சொல்கிற சமாச்சாரங்கள் எல்லாம்
நம்ம ஊர் பிரபலமான கோவில்களில்
ஏற்கெனவே செய்யப்படுவது தான்.
இவர் சொல்லி இருக்கும் – கிட்டத்தட்ட அத்தனை-
சடங்குகளும் எத்தனையோ நூற்றாண்டுகளாக நம் சமயபுரம்
மாரியம்மன் கோவிலிலேயே செய்யப்பட்டு வருகின்றன.
இது போல் பழனியிலும், இன்னும் நிறைய கோவில்களிலும்.
நம்ம ஊர்களில் இல்லாத கோவில்களா – சாமிகளா ?
அதற்கு இவர் ஜிகினா வேலையெல்லாம் செய்து,
புதுப்புது பெயர் வைத்து, தான் புதிதாகக்
கண்டுபிடித்ததாகச் சொல்லி,
ஆங்கில வலைத்தளங்களில் பளபளப்பாக
விளம்பரங்கள் செய்து தன் கோவை லிங்கபைரவி
கோவிலுக்கு பிசினஸ் பிடிக்கிறார்.
ஒரே ஒரு வித்தியாசம் –
அந்த பைரவியின் உருவத்தை, வெவ்வேறு டிசைன்களில்,
தேவைக்குத் தகுந்த மாதிரி –
வேண்டுவோர்க்கு தகுந்த மாதிரி வெவ்வேறு அளவுகளில்
தயார் செய்து, ஆயிரக்கணக்கில் விற்பனை செய்கிறார்கள்.
விலையும் – ஆயிரக்கணக்கில் தான்.
என்ன விலை என்று எந்த விளம்பரத்திலும் சொல்லவில்லை.
தொலைபேசியில் கேட்டாலும் சொல்வதில்லை.
உங்க்ள் தேவையை, விலாசத்தை சொல்லுங்கள்.
எங்கள் ஆட்கள் (Sales Representatives …!)
நேரில் வந்து விளக்கம் தருவார்கள் என்கிறார்கள்…
சரி – நம்புகிறவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள் –
உனக்கென்ன வந்தது ? என்று கேள்வி வரலாம்.
நான் சொல்ல வருவது –
ஆன்மிகத்தை ஆன்மிகமாக வைத்துக் கொள்ளுங்கள்.
வியாபாரமாக இருந்தால் – அதை வெளிப்படையாகச்
செய்யுங்கள் என்பதைத் தான்.
ஆன்மிகத்தை வியாபாரமாக்கி –
வியாபாரத்திற்கு ஆன்மிக முகமூடி போட்டு –
மக்களை ஏமாற்றும் வேலை வேண்டாம் என்கிறேன்.
என்ன தான் விஷயம் என்று தெரிந்து கொள்வோமே
என்று ஆவல் காரணமாக இவர்களிடம் யாராவது
போனால் – போனது போனது தான்.
ஆயுள் பூராவும் அவர்களது
அடிமையாக கிடக்க வேண்டியது தான்.
அந்த அளவுக்கு மூளைச்சலவை -ஹிப்னாடிசம் !
இவர்கள் கூட்டங்களில், பல பெண்கள்
ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்பட்டு ஓவென்று கதறுவதை
காணலாம். நான் இதை நேரில் பார்த்திருக்கிறேன்.
ஒரு பெரிய நெட்வொர்க்கை ஏற்படுத்திக் கொண்டு –
தொடர்ந்து அப்பாவி மக்களை இப்படி ஏமாற்றலாமா ?
பல திரைப்பட நட்சத்திரங்களும், பிரபலங்களும் –
இவருடன் பேட்டி எடுத்து, அது தொலைக்காட்சியில்
(விளம்பரமாகத்தான்) வந்தால் அதுவே ஜென்ம சாபல்யம்
என்று நினைக்கின்றனர்.
பத்திரிகைகளுக்கு, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு
இந்த நிறுவனம் செய்யும் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்த
வேண்டிய கடமை இல்லையா ?
அல்லது நித்யானந்தா சீன் போல் –
இவரது காட்சி எதாவது கிடைத்தால் தான்
போடுவார்களா ? நித்யானந்தாவை விட இவர் அதிபயங்கர
புத்திசாலி – அவ்வளவு சுலபத்தில் சிக்க மாட்டார் !
இவர்கள் லட்சக்கணக்கான பொருட்களைத் தயாரித்து
இவர்களின் பேனரில் விற்கின்றனர். லிங்கபைரவி
மட்டுமல்ல. இன்னும் எது எதுவோ எல்லாம்.
வெறும் வியாபாரம் என்று எடுத்துக் கொண்டால் கூட,
இதில் பல அரசு விதிமுறைகள் இதில் மீறப்படுகின்றன.
அரசு அதிகாரிகள் இதை அனுமதிக்கலாமா ?
முழு நேர, பகுதி நேர வாலண்டியர்களைத் தவிரவும்,
நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் இவரது
ஆசிரமத்திலும் அதன் பல்வேறு கிளைகளிலும்
சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள்.
அவர்கள் சம்பந்தமான பணி விதிமுறைகள்
கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று
துறை சம்பந்தப்பட்ட எந்த அதிகாரியாவது உறுதி
செய்கிறாரா ?
இந்த லிங்கபைரவி மாடலையே எடுத்துக் கொள்ளுங்கள்.
இவை எங்கு உற்பத்தியாகின்றன ?
எவ்வளவு எண்ணிக்கையில் உற்பத்தியாகின்றன ?
அங்கு பணி புரிபவர்கள் எத்தனை பேர் ?
அது தொழிற்சாலைகள் சட்ட விதிமுறைகளின்படி
இயங்குகிறதா ? (Factories Act, 1948,
Shops and Establishments Act etc.)
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு கணக்கு வழக்கு
இருக்கிறதா ? அது என்ன விலைக்கு விற்கப்படுகிறது ?
விலை விவரம் ஏன் ரகசியமாக வைக்கப்படுகிறது ?
ஒருசாதாரண, சின்னஞ்சிறிய மளிகைக்கடை கூட
கணக்கு காட்ட வேண்டி இருக்கிறது.
வரி கட்ட வேண்டி இருக்கிறது.
இவர்கள் விஷயத்தில் –
goods and services tax,
service tax,
sales tax போன்றவை செலுத்தப்படுகின்றனவா ?
ரசீதுகள் கொடுக்கப்படுகின்றனவா ?
லாபம் வரவில் வைக்கப்பட்டு, அதற்கு வருமான வரி
செலுத்தப்படுகிறதா ?
நிறைய கேள்விகள் எழுகின்றன.
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.
கோவிலுக்குச் செல்கிறவன்.
தினமும் பிராணாயாமம், தியானம் செய்பவன்.
தனிப்பட்ட முறையில் எனக்கு இவர்களுடன் எந்த
விரோதமும் இல்லை.
ஆனாலும் – என்னால் இவற்றை எல்லாம்
சகித்துக் கொள்ள முடியவில்லை. கண்ணெதிரே
மிகப்பெரிய அளவில் fraud நடப்பது நமக்கு தெரிகிறது.
இது குறித்து எழுத வேண்டியது நமது கடமை என்று
தோன்றுகிறது – எனவே எழுதுகிறேன்.
என் எழுத்தின் மூலம் –
இவர்கள் வலையில் புதிதாக விழுபவர்களில்
ஒரு நாலு பேராவது தடுக்கப்பட முடியும் என்றால் –
அதுகூட எனக்கு மகிழ்ச்சியே !




மனம் தளரவேண்டாம் நண்பரே!
இன்று நாடு இருக்கும் நிலையில்..
அறிவு இருந்தால் நம்மை காப்பாற்றி கொள்ளலாம்.
நம்மை நம்பும் சில நண்பர்களையும் காப்பாற்றலாம்.
அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது.
அதை நீங்கள் செவ்வனே செய்கிறீர்கள்..
மிக்க நன்றி..
உண்மையில் நான் இந்த சாமி படித்தவர்களும் தடுமாறிப்போகும் தியானம், யோகம், குண்டலினி, காயகல்பம் போன்ற ஆன்மீக ‘buzz words’ வச்சு பொழப்பு நடத்துகிறது என்று எண்ணியிருந்தேன். இப்போ முட்டு சந்துல லேகியம் விக்கிறவன் அளவுக்கு தாழ்ந்து போயிருப்பதை பார்க்கும் போது அத்தனைக்கும் ‘பேராசை’ப்படுன்னு ஸ்லோகனை ‘upgrade ‘ பண்ணியிட்டார் போல தெரிகிறது.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. இந்த ஆன்மிக வியாபாரம் உண்மையான ஆன்மிகத்திற்கு எதிரானது. இவர்களை அடையாளம் காணத் தவறுவது நம் முட்டாள்தனம்
நான் ஒரு முறை புத்தக கண்காட்சிக்கு சென்ற பொழுது ஜக்கி வாசுதேவினுடைய ஒரு புத்தகத்தை எடுத்து விலை என்ன என்று இவர்களுடைய வாலண்டியர்களை கேட்ட பொழுது அவர்கள் சொன்னார்கள் “புத்தகத்துக்கு விலை எல்லாம் ஒண்ணும் கிடையாது ஆனால் நன்கொடை 35 Rs ” என்று சொன்னார்கள். அப்புறம் தான் நான் அவர்களிடம் விளக்கினேன் நானா பார்த்து கொடுத்தாதான் அது நன்கொடை நீங்கள் விற்பனை செய்தீர்கள் என்றால் அது நன்கொடை ஆகாது.