80 % க்கு மேல் வருமானம் தரும் விளம்பரதாரர்களுக்கு
பிடிக்காத விஷயங்களை நாங்கள் எப்படி எழுத முடியும் – ?
கேட்பது கொள்கையாளர் “இந்து- என்.ராம்” !
பத்திரிகைப் பேட்டிகளை விட, தொலைக்காட்சிகளில்
நிகழ்த்தப்படும் பேட்டிகள் பல விதங்களில் சிறந்தவை.
“நான் அப்படிச் சொல்லவில்லை” என்று சம்பந்தப்பட்டவர்
எதிர்காலத்தில் மறுக்க முடியாது என்பது ஒரு வசதி.
இன்னொரு முக்கியமான வசதி – கேட்பவரின்,மற்றும் பதில்
சொல்பவரின் முக பாவங்கள் – body language !
வாய் என்ன சொன்னாலும், முக பாவங்களும்,
உடல்மொழியும் நமக்கு உண்மையை உணர்த்தி விடும்.
(எடிட் செய்ததையும் தாண்டி ..)
கடந்த சனி (11/08/12) இரவு 8 மணிக்கு
புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியில் –
திரு குணசேகரன் அவர்கள்”இந்து முன்னாள் ஆசிரியர்”
என்.ராம் அவர்களை பேட்டி கண்ட நிகழ்வு “அக்னி பரீட்சை”
என்கிற தலைப்பில் ஒளிபரப்பப்பட்டது.
அது பற்றி –
நான் அப்போது தான் வெளியே போய்த் திரும்பியிருந்தேன்.
இந்த நிகழ்ச்சி பற்றி முன்னதாகத் தெரியாது. எதேச்சையாக
செய்தி சேனலைப் பார்த்தபோது காண நேர்ந்தது.
தயாராக இல்லாததால், குறிப்புகள் எதுவும் எடுக்க
முடியவில்லை. என் நினைவில் இருப்பதை வைத்துக்கொண்டு
இதை எழுதுகிறேன். வார்த்தைகள் கொஞ்சம் இங்கும் அங்கும்
மாறி இருக்கலாம். ஆனால் – கருத்தில் மாற்றம் இருக்காது.
பேட்டி கண்ட திரு குணசேகரன், அற்புதமாகத் தன் பணியை
செய்தார். கேட்க வேண்டிய கேள்விகளை, மிகச்சரியான
குறுக்குக் கேள்விகளுடன் கேட்டார். நேரம் தான் போதவில்லை.
இந்து பத்திரிகையாளர் என்.ராம் (ஆசிரியர் பதவியிலிருந்து
ஓய்வு பெற்று விட்டாலும், பத்திரிகையில் அவர் செல்வாக்கு
தான் இன்னும் நிலவுகிறது !) – அளித்த பதில்களிலிருந்து
சுருக்கமாக சில விஷயங்கள் மட்டும் விவாதத்திற்கு –
1) ராம் ஒரு இடதுசாரி ஆதரவாளர் என்றும்,
செய்திகளைத் தேர்ந்தெடுக்கும்போதும், பிரசுரிக்கும்போதும்
அவரது கண்ணோட்டம் அதில் பிரதிபலிக்கிறது என்றும்
சில வாசகர்கள் கூறுகிறார்களே என்று கேட்டபோது
அவர் மறுக்கவில்லை (ஆமோதிக்கவுமில்லை !).
2)தலாய் லாமா பற்றி தனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை
என்றும், அவர் சிஐஏ (அமெரிக்க உளவு நிறுவனம்)
ஆலோசனைப்படி நடப்பவர் என்றும் கூறினார்.தலாய் லாமா
இந்தியாவிற்கு வந்தது ஜவஹர்லால் நேரு காலத்தில் !
அப்போது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் 7ஆம்
பொருத்தம். ரஷ்யாவுடன் மிக நெருக்கமாக இருந்த நேரு
இதை அனுமதித்திருப்பாரா ? ராம் – தனது சீன ஆதரவு
கண்ணோட்டத்தை இவ்வளவு மட்டமாகவா பயன்படுத்துவது ?
3) பல அயல்நாடுகளில் எழுச்சி பெறும் விடுதலை
இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஈழத்தமிழர்கள்
விஷயத்தில் மட்டும் தொடர்ந்து எதிராகவே எழுதுவது ஏன்
என்று கேட்டபோது, அவை எல்லாம் காலனி ஆதிக்கத்திற்கு,
எதிராக கிளம்பிய சுதந்திரப் போராட்டங்கள்.
ஆனால் – இலங்கையில் நிகழ்ந்தது லெஜிடிமேட் அரசுக்கு
எதிராக, ஆயுதம் தாங்கிய கும்பல்கள் நிகழ்த்திய வன்முறை
என்று புலிகளைக் கண்டித்து தொடர ஆரம்பித்தார்.
மே 2009 க்குப் பிறகும் கூட, புலிகள் அழிக்கப்பட்டதற்குப்
பிறகும் கூட – இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக
எழுதாதது ஏன் என்று கேட்டதற்கு – பதிலாக,
ராஜபக்சே அரசு, பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் நிவாரணப்
பணிகளை மிகச்செம்மையாகச் செய்து வருகிறது என்று
பாராட்டினார்.
(தமிழர்களுக்கான நிவாரணப்பணிகளை ராஜபக்சே அரசு
செம்மையாகச் செய்து வருகிறது என்று சொல்லும்
தமிழர் இந்த உலகத்திலேயே என்.ராம் ஒருவராகத்தான்
இருக்க முடியும்!)
ராம் தொடர்ந்து –இலங்கை அரசை ஒரே ஒரு
விஷயத்திற்கு வேண்டுமானால் குறை சொல்லலாம்.
அதிகாரப் பங்கீர்வுக்கான தீர்வைக் காண்பதில்
தாமதம் ஆவதைச் சொல்லலாம்.
ஆனால் அங்கேயும் கூட தாமதத்திற்கு காரணம் ராஜபக்சே
அரசு அல்ல.TNA தான். பேச்சு வார்த்தை நடத்தாமல்
ஏதேதோ காரணம் சொல்லி இழுத்தடிக்கிறார்கள் -என்றார்.
(ராஜபக்சே தமிழர்களுக்கு கௌரவமான தீர்வை
விரும்பவில்லை – ராஜபக்சே மனம் வைத்தால் –
ஒரே நாளில் முடித்து வைக்கப்படக்கூடிய பிரச்சினை
இது என்று அவருக்கா தெரியாது ?)
அடுத்து, இன்னும் பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டார்-
இலங்கைத் தமிழர்களைப்பற்றிய விஷயத்தை –
தமிழ் நாட்டுத் தமிழர்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளவே
இல்லை. சில அரசியல்வாதிகள் மட்டுமே தங்கள்
சுயநோக்கத்திற்காக இதை பெரிதுபடுத்துவதாகவும் –
தான் இதை நன்றாகவே உணர்ந்திருப்பதாகவும் கூறினார்!
தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதோடு இலங்கை
ராஜபக்சே அரசிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி
இருக்கையில் – நீங்கள் எப்படி தமிழ் மக்களுக்கு
இதில் அக்கரை இல்லை என்று சொல்கிறீர்கள்
என்று வினவியதற்கு,
–அசெம்பிளி தீர்மானத்தை தான் சீரியஸாக
எடுத்துக் கொள்வதாக இல்லை என்றும் மக்கள் மன நிலை
தனக்கு நன்கு தெரியும் கூறினார்.
(இந்த அளவிற்கு விதண்டாவாதம் – அந்த அளவிற்கு
ராஜபக்சே விசுவாசம் ! இந்த தருணத்தில்,
வெளிநாட்டினர் ஒருவருக்கு இலங்கை அரசாங்கத்தால்
அளிக்கப்படும் உயர்ந்த பட்ச விருதான
“ஸ்ரீலங்கா ரத்னா”விருது ராஜபக்சேயால், என்.ராம்
அவர்களுக்கு வழங்கப்பட்டது நினைவிற்கு வருவது
தவிர்க்க முடியாதது.)
பன்னாட்டு நிறுவனங்களின் முறைகேடுகள் பற்றி எல்லாம்
இந்து பத்திரிகையில் கண்டு கொள்ளுவதே இல்லையே
என்று கேட்டதற்கு –
பத்திரிகைக்கு 80 % க்கு மேல் வருமானம் வருவது
விளம்பரங்களினால் தான். அந்த கம்பெனிகளுக்கு பிடிக்காத
விஷயங்களை எழுதினால் – விளம்பரமும் போய் விடும்.
அதன் மூலம் வரும் வருமானமும் போய் விடும் –
இத்தகைய சூழ்நிலையில் பிராக்டிகலாகத் தான்
இருக்க முடியும் என்கிறார் !
அதே போல் – தமிழ் நாடு அரசாங்கத்திலும் அப்படித்தான்..
கண்டித்து எதாவது எழுதினால்,
உடனே விளம்பரத்தில் கை வைப்பார்கள்.
வழக்கு தொடுப்பார்கள். சிவில் வழக்கு என்றாலாவது
பரவாயில்லை. கிரிமினல் வழக்கு தொடுப்பார்கள்.
கோர்ட்டில் போய் நிற்கும் கொடுமையை சந்திக்க நேரிடும் –
என்றார்!
மொத்தத்தில் – திரு என்.ராம்அவர்கள்
எப்பேற்பட்ட கொள்கையாளர், அவர் ஈகோ லெவல்
எப்படிப்பட்டது, அவரது உண்மையான முகம்
(real personality) என்ன என்பதை
மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக இருந்தது
இந்த பேட்டி. ( நாங்கள் வெறும் வியாபாரிகள் தான் – எங்களிடம்
அநாவசியமாக லட்சியம், கொள்கை, நியாய அநியாயம்
என்றெல்லாம் எதிர்பார்ப்பது அபத்தம் என்று இதைவிட
வெளிப்படையாக ஒரு பத்திரிகை முதலாளியால்
சொல்ல முடியுமா ?)
இந்து பத்திரிகை சொன்னால் தப்பாக இருக்காது என்று –
இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு –
இந்த பேட்டியை சமர்ப்பணமாக்கலாம் !
பேட்டி எடுத்த திரு.குணசேகரனுக்கு பாராட்டுகள் !



எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நண்பரே, எல்லோரும் வியாபாரிகள் தான்.
போடும் முகமூடிகள் தான் வேறு.
சாதி ஆதிக்கம் மிகுந்த பத்திரிக்கை உலகில் வேறு எதை எதிர்பார்க்க? இவரு இப்படித்தான்னு தலைதலையா அடிச்சுகிட்டப்போ மக்கள் நம்பல. இன்னைக்கு நம்பி என்ன பிரயோசனம்?
பத்திரிகை உலகம் விசித்திரமானது. குறைந்த பட்சம்
தமிழ் நாட்டிலாவது அப்படித்தான் இயங்குகிறது. ஆயிரம்
கட்டுப்பாடுகளும் கைவிலங்குகளும் உள்ளன.
பத்திரிகையாளர்களின் தர்க்க நியாங்களும் கூட சம
அளவில் விசித்திரங்கள் நிறந்தவை. இந்த நிலையில்தான்,
குணசேகரனும் இதை அறிவார்.
“இதில்” வந்தால், “இவர்” எழுதினால் சரியாகத்தானிருக்கும்
என நம் மாதிரி ஆட்கள் “படித்துக்” கொண்டிருக்கிறோம்.
பத்திரிகைகள் என்றில்லை; சேனல்களுக்கும் கூட “பலவித”
நெருக்கடிகள் உள்ளன. முதலில் வருமானம். பின்னர், அதன்
உரிமையாளர் சார்ந்துள்ள அமைப்பு சார்ந்த இலட்சியங்கள்,
த்லைமை எடிட்டரின்/முதன்மை செய்தியாளரின்
அபிலாஷைகள்…… என பட்டியல் நீளும்.
சங்கடமான வினா எழுப்பும் செய்தியாளருக்கு, அவர் செய்தியை
அனுப்பி வைக்கும் முன்னர் அவரது தலைமையிடத்திலிருந்து
“கண்டணம்” பறந்து வரும்.
வினா எழுப்பும் செய்தியாளரை நோக்கி, “நீ எந்த பத்திரிகை?” என
தலைவர் கேட்பதெல்லாம் தமிழகத்தில் சகஜம். அது தொண்டரடி
போடிகளுக்கு ஒருவித சமிக்ஜையும் கூட.
அம்மா தமிழக செய்தியாளர்களை மதிப்பதேயில்லை.
விழா நடக்கும் காம்பஸில் காரிலிருந்து இறங்கும் முன்/
ஏறும் முன் அல்லது வண்டி கிளம்பிய நிலையில்
கொடுக்கும் “பைட்ஸ்”தான் செய்தியாகிறது.
நாட்டு விஷயங்களை நன்கறிந்த தோழர்களை, மாநில
தலைவரே ஆனாலும். பத்திரிகையாளர்கள் கண்டு
கொள்வதேயில்லை.
பத்திரிகை/சேனல் அதிபர்கள், தலைமை/முதன்மை
செய்தியாளர்கள் எல்லோருக்கும் அரசியல் தலைமையிடத்தில்
ஏதேனும் ஒரு தேவை இருக்கத்தான் செய்கிறது.
*****
தமிழக மக்களிடத்தில் புலிகளுக்கு தனி ஈழத்திற்கு ஆதரவான
ஒரு நிலை நிலவுவதாக கருதுவது தவறென கருதுகிறேன். நடந்து
முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் செந்தமிழன் சீமான் போன்றோரின்
காங்கிரஸ் எதிர்ப்பு பேச்சுகள் தமது அணிக்கு உதவியதாக கருதியே
அம்மா “விட்டு” வைத்திருக்கிறார். டெசோ மாநாடு பிசுபிசுத்துப்
போனதை நாடறியும். அம்மாவே மாநாடு நடத்தினாலும் (ஆட்சி
அதிகாரத்தில் இருப்பதினால் உண்டாகிற இம்பேக்ட்டைத் தவிர)
பெரியதாக ஒன்றும் நடந்துவிடாது.
“(தமிழர்களுக்கான நிவாரணப்பணிகளை ராஜபக்சே அரசு செம்மையாகச் செய்து வருகிறது என்று சொல்லும் தமிழர் இந்த உலகத்திலேயே என்.ராம் ஒருவராகத்தான் இருக்க முடியும்!)”
ராஜபக்சே அழைப்பின் பேரில் இலங்கை போயிட்டு வந்த T R பாலுவும், சிறை மீண்ட வீர தமிழச்சி கனிமொழியும் கூட அப்போது இப்படி தான் கூறினார்கள்.
ஒரு வேளை T R பாலுவுக்கும் கனிமொழிக்கும் One time payment; ராம் க்கு monthly wages ஆக இருக்குமோ?!
“சுதந்திர தினம்”
இன்று “கப்பலோட்டிய தமிழன்” படத்தை மீண்டும்
ஒரு முறை பார்த்தேன்.
ஒவ்வொரு தடவையும் இந்த படத்தை பார்க்கும்போது
உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க முடிவதில்லை.
மற்றவர்களுடன் உட்கார்ந்து இந்தப் படத்தைப் பார்க்க
என்னால் முடிவதில்லை.
ஒவ்வொருவரும் எப்பேற்பட்ட தியாகங்களைச் செய்தார்கள் –
இந்த நாடு சுதந்திரம் பெற !
நம்மை விட கேடு கெட்டவர் யாருமுண்டோ ?
அவ்வளவு துன்பப்பட்டு, துயரப்பட்டு, போராடிப்பெற்ற
சுதந்திரத்தை மீண்டும் அடகு வைத்திருக்கிறோமே !
என்னால் சுதந்திர தின வாழ்த்துக்களை
பரிமாறிக்கொள்ள முடியவில்லை.
“என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்”
-காவிரிமைந்தன்
பாரத சுதந்திரத்துக்காக சுபாஷ் சந்திர போஸ் வீரன் பகத்சிங் மற்றும் வீரன் வாஞ்சிநாதனை போன்றவர்கள் வெள்ளை காரனை எதிர்த்து உயிர் நீத்தது போல் இலங்கை வாழ் தமிழர்களுக்காக ராஜ பக்ஷே என்ற வெள்ளைக்காரனை எதிர்த்து உயிர் நீத்தவர்கள் விடுதலை புலிகள். இந்த இயக்கத்துக்கு இன்னும் தடை விதிக்கப்படுகிறது மேலும் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவை
அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஒரு கருத்து முந்தைய விமர்சனம் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே கருத்து இந்து பத்திரிகைக்கும் பொருந்தும். மேலும் ஸ்ரீராம் ஒய்வு பெற்றுவிட்ட நிலையில் அவரது கருத்து சொந்த கருத்தாகும் .
அந்த channel ku ஆப்பு ரெடி ஆகி விட்டது போல…!!!
naanum paarththen.Itoo saw the program.What ever I thought you have written.பேட்டி எடுத்த திரு.குணசேகரனுக்கு பாராட்டுகள் !
karthik+amma