28,000 ரூபாய்க்கு குடித்து விட்டு பணம் கொடுக்காமல் ரகளை செய்த பெரிய வீட்டுப் பிள்ளை …..

28,000 ரூபாய்க்கு குடித்து விட்டு பணம் கொடுக்காமல் ரகளை செய்த பெரிய வீட்டுப் பிள்ளை …..

இவர்கள் காதலர்களாம்  – பாவத்தின் சம்பளம் !!

(   அவி முகர்ஜியும், அஷ்வின்  ஸ்ரீனிவாசனும்  )

உண்மையில் இந்த செய்திக்கு அந்த ஆங்கில செய்தித்தளம் கொடுத்த தலைப்பையே போட்டிருந்தால் மிகக்கேவலமாக இருந்திருக்கும்.. எனவே வீரியம் குறைந்த தலைப்பையே கொடுத்திருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு வரிச்செய்தியாக எங்கோ பார்த்தேன்.  ” குடித்து விட்டு பில் கொடுக்காமல் ரகளை  செய்ததால் பி.சி.சி.ஐ தலைவர் ஸ்ரீனிவாசன் மகன் அஷ்வின் மும்பையில் கைது”  –  என்று.

சரி விவரமாக செய்தித்தாளில் வரும் – அப்போது பார்த்துக் கொள்வோம் என்று விட்டு விட்டேன். காத்திருந்தேன் – காத்திருந்தேன் – பின்னர் எந்த பத்திரிகையிலும் (குறிப்பாக – தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் எந்த பத்திரிகையிலும்  ) இது பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை !

எப்படி வரும் ? வந்திருந்தால்  தான் அதிசயம் ! செல்வமும் செல்வாக்கும் சேர்ந்து அந்த செய்தியை அப்போதைக்கு அதற்கு மேல் வெளிவராமல் அமுக்கி விட்டன.

பின்னர் நான் வலையில் நீண்ட நேரம் தேடிய பிறகு, இது குறித்த  செய்தி விவரங்கள் கிடைத்தன.  ஆனால் அந்த தளம்

கொடுத்திருந்த தலைப்பு என்ன தெரியுமா ?

” பணக்கார ஓரின சேர்க்கையாளர்களுக்கு சென்னை சௌகரியமான  இடம் இல்லை ”

இந்த ஆங்கில செய்தித் தளத்தில் வந்திருக்கும் செய்தியை சுருக்கமாக கீழே தமிழில் தந்திருக்கிறேன் –

ஏப்ரல் 30ந்தேதி அன்று  பி.சி.சி.ஐ தலைவர் ஸ்ரீனிவாசன்  மகன் அஷ்வின் தன் பார்ட்னர்  அவி முகர்ஜி என்பவருடன்  மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு பப் / பார்  க்கு சென்று  மது அருந்தி இருக்கிறார்.  நள்ளிரவை கடந்து அதிகாலை 1.30 am  ஆன பிறகும், பார் நேரம் முடிந்து விட்டது – பில்லுக்கு உண்டான பணத்தை கொடுத்து விட்டு வெளியே கிளம்புங்கள் என்று திரும்ப திரும்ப கூறப்பட்டபோதும்,  வெளியேற மறுத்திருக்கிறார்கள். பில் பணம் 28,000 ரூபாயையும் கொடுக்க மறுத்து ரகளை செய்திருக்கிறார்கள்.  பின்னர் பார் மேனேஜர் போலீசுக்கு புகார் கூற – நள்ளிரவில்  போலீஸ் வந்து அவர்களை கொண்டுபோய் “லாக்-அப்” பில் வைத்திருக்கிறது.

இதன் பின்னர் மறுநாள் ஜாமீனில் வெளியே வந்த – 43 வயது  அஷ்வின்  ஸ்ரீனிவாசன் அந்த செய்தி தளத்திற்கு கொடுத்த பேட்டியின் சுருக்கம் –

“நான் ஓரின சேர்க்கையாளன். என்னை என் தந்தை இதற்காக மிரட்டியும், இருட்டறையில் அடைத்து வைத்து,  வலுக்கட்டாயமாக மருந்துகள் கொடுத்தும் கொடுமைகள் செய்ததன் காரணமாக நான் 1998-லேயே  வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன்.

நானும் அவி முகர்ஜியும் காதலர்கள். (காதலர்கள் படம்  தான்  மேலே இருப்பது ! ) எங்கள் காதலை சகித்துக்கொள்ள முடியாத ( ?) என் தந்தை எங்கள் இருவரையும் படாதபாடு படுத்தினார். பயமுறுத்தினார். ஆட்களை விட்டு துன்புறுத்தினார்.  என்னிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே அவி முகர்ஜி காதலனாக நடிப்பதாகவும் அவன்  தொடர்பை நான் அறுத்தெறிய வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார்.

2002- ஆம் ஆண்டு அஷ்வினையும், அவி முகர்ஜியையும் அவரது தந்தை கடுமையாகத் தாக்கி தனியே ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்ததாகவும் – ஓரின சேர்க்கையாளர்களுக்கு உதவுவதற்காக செயல்படும் அமைப்பை சேர்ந்த அசோக் ராவ் கவி என்பவரின் உதவியால் தாங்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதாகவும் கூறுகிறார் அஷ்வின்.

அஷ்வினின் இந்த கூற்றை அந்த அசோக் ராவ் கவி என்பவரும் அந்த செய்தித் தளத்தில் உறுதி செய்திருக்கிறார்.  அஷ்வினின்  தந்தையால் அவர்கள் இருவரின் உயிருக்கும் ஆபத்து நேரக்கூடும் என்பதால் அவர்கள் தப்ப நான் உதவி செய்தது உண்மை தான் என்கிறார் அசோக் ராவ் கவி !

இதற்கு மேலும் அஷ்வின் கூறுவது – என் தந்தை என்னுடைய என்.ஆர்.ஐ அந்தஸ்தைப் பயன்படுத்தி ஏகப்பட்ட  நிதி முறைகேடுகளை  செய்துள்ளார்.  அவற்றிற்கான ஆதாரங்கள்  என்னிடம் உள்ளது. எங்களது உயிருக்கு என் தந்தையால் அச்சுறுத்தல் உள்ளது” .

இது குறித்து அந்த வலைத்தளம் திரு ஸ்ரீனிவாசனிடம் கேட்டதற்கு  -” இது என் குடும்ப விவகாரம் – இதைப்பற்றி உங்களுடன் விவாதிக்க நான் விரும்பவில்லை ” என்று கூறி இருக்கிறார்.

பின் குறிப்பு –  இந்த குடும்பத்தின் இன்றைய வருத்தங்கள் குறித்து நான் மகிழ்ச்சி அடையவில்லை. எந்த குடும்பத்திற்கும் இது நிம்மதியை குலைக்கும் செயல்தான். அவர்களின் இந்த நிலைக்காக நான் வருந்துகிறேன்.

ஆனால் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மனசாட்சி என்கிற ஒன்று அனைவருக்கும் உயிர்ப்புடன் செயல்பட  வேண்டும்.

வெறும் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு மனிதன் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து விட முடியாது.

நியாயமான வழியில் வரும் செல்வமே  – நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொடுக்கும்.

அடுத்தவரை வருத்தியும், ஏமாற்றியும்  நாம் சேர்க்கும் செல்வம் நிலைக்காது. அதன் மூலம் இறுதியில்  விளைவது நிம்மதியின்மையும், துயரமும், அவமானமுமே  என்பதை உணர வேண்டும்.

இது ஒரு பாடம் !  இவர்களுக்கு மட்டும் என்றில்லை  – இன்று ஆயிரக்கணக்கான கோடிகளை குவித்துக் கொண்டிருக்கும் மற்ற அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் கூடத்தான்  – ? இதைக் கண்ட பிறகாவது, தமிழ்நாட்டில் யாராவது   – குறைந்த பட்சம் ஒரே ஒருவராவது –  திருந்துவாரா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to 28,000 ரூபாய்க்கு குடித்து விட்டு பணம் கொடுக்காமல் ரகளை செய்த பெரிய வீட்டுப் பிள்ளை …..

  1. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    இதுபோன்ற பிள்ளைகளை பெற்று இதுபோல் வளர்த்திய தாய் தந்தையர்கள் எத்தனை பெரியவர்கள் ஆக இருந்தாலும் வருந்தியே ஆகவேண்டும். ஒரு இரவு கூட அவர்களால் தூங்க முடியாது. இது போன்றவர்கள் நாட்டுக்கும
    வீட்டுக்கும் பாரமாக இருப்பவர்கள் இல்லாமல் இருப்பதே மேல்.

  2. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    தினமும் கடவுள் முன் நின்றதுக்கு சாட்சியாக ஒரு குங்கும போட்டு வைத்து கொள்கிறாரே… அப்போதெல்லாம் இறைவன் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வு கூடவா இல்லாமல் போய் விடுகிறது?!

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நன்றி நண்பரே ஒரு அருமையான இடுகைக்கு!

    குற்றங்களில் இருவகை உண்டு:

    சட்டப்படி குற்றம்,
    மற்றும்
    தர்மப்படி குற்றம்..

    முதல் வகை மனிதன் உருவாக்கியது.
    நாட்டிற்கு நாடு,காலத்திற்கு காலம் மாறுபடும்.
    ஒரு நாட்டின் சட்ட திட்டங்கள், அவை செயல்படுத்தப்படும் விதம,
    இவை அந்நாட்டு குடிமக்களின் மன முதிர்ச்சியையும் நாகரீக
    முன்னேற்றத்தையும் குறிக்கும்.

    அவ்வகையில் ஒரு பசுவின் குற்றசாட்டை ஏற்று,தன் மகனை தேர்க்காலில்
    இட்டு கொல்ல முற்பட்ட மனுநீதி சோழனும்,மக்களின் கருத்துப்படி தன் கரத்தை
    வெட்டிக்கொண்ட பாண்டிய மன்னனும் நம் தமிழ் கலாச்சாரத்தை உலகிற்கு
    பறைசாற்றிகொண்டிருக்கின்றனர்.

    இப்பொழுது தர்மப்படி குற்றம் எனும் பிரிவை எடுத்துக்கொண்டால்,
    இது ஜாதி,மத,நாடு எல்லைகளைக்கடந்து மனித இனத்திற்கு பொதுவானது.

    இறையால் உருவாக்கப்பட்டு அவராலேயே நிர்வகிக்கப்படுகிறது.

    சரி, கடந்த சில பத்தாண்டுகளாக நம் நாட்டில் நடப்பது என்ன?

    நம் சட்ட திட்டங்கள் செயல் படுத்தும் முறை, வலுவிழந்து,செயலிழந்து போய்
    நாம் அத்துணை குற்றங்களையும் தருமகுற்றமாக கருதி “மேல்” கோர்ட்டிற்கு
    அனுப்பியவண்ணம் இருக்கிறோம்.இது நம்முடைய பெரும் தோல்வி.

    மனசாட்சியே அற்ற மனிதர்கள் பயப்படுவது,சொத்து பறிமுதல்,சிறை,தூக்கு போன்ற மனித தண்டனைகளுக்கே …மற்றபடி மானம்,சூடு சொரணை என்பதெல்லாம் மத்திய, கீழ்த்தட்டு மக்களுக்கு உரியவை..இதையெல்லாம் விட்டால்தான் ஒருவன் மேல்தட்டிற்கே போக முடியும்.

    இதை விளக்க “பகல் நிலவு” எனும் திரைப்படத்தில் ஒரு அருமையான காட்சி ஒன்று.அதுவே climax உம் கூட..
    தீயவரான சத்யராஜ் தன் உயிரைக்காத்துக்கொள்ள தன் மகன்கள் இருவர் உயிரையும் பறிப்பார்.

    எதை செய்தாவது பணம் சம்பாதிக்கவேண்டும் என முடிவு செய்து,அதை செயல் படுத்தும் வெறியன்,ஒரு மிருகத்திற்கு சமம்.அவனுக்கு மனைவி,குழந்தைகள் உற்றார், உறவினர் என்பதெல்லாம் துச்சம்..அவனை சட்டப்படி தண்டிப்பதே சரியான வழியாகும்.அதற்கான வழிமுறைகளில் நாம் இறங்கவேண்டும்.
    அவன் மகன் குடிகாரன்,பெண் ஒழுக்கங்கெட்டவள் என்பதெல்லாம் just a staus symbol for him..and not at all a punishment..

    அம்புலிமாமா கதைகளில் வருவது போல …

    மேல் வர்க்கத்தின் உயிர், அவர்கள் சேர்த்து வைத்துள்ள பணத்திலும்,

    நடுத்தர வர்க்கத்தின் உயிர், அவர்களின் குடும்பத்திலும்,சுயகெளரவத்திலும்..

    கீழ் வர்க்கத்தின் உயிர் அவர்கள் குடும்பத்திலும்,மானத்திலும்,வயிற்றிலும்
    உள்ளன..
    இடம் மாறி அடித்து பயனில்லை…

    கடவுள் அவர் வேலையை அவர் விரும்பும்போது செய்யட்டும்..அதற்கு
    நம் நினைவூட்டல்களோ,பிரார்த்தனைகளோ தேவையில்லை.
    அதுவரை நாம் ஓய்வெடுத்துக்கொள்ளாமல்,சட்டப்படி தண்டிக்கும் நம்
    வேலையை ஒழுங்குப்படுத்துவோம்/துரிதப்படுத்துவோம்.

    நிதிகள் இறையருளால் நீண்டகாலம் வாழட்டும் ..
    அவர்கள் தந்தையரும்,பாட்டனாரும்,நம் ‘அருளால்” நீண்டகாலம் சிறையில் வாடட்டும்..
    இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?..உண்மைதான்..
    ஆனால்,
    இன்று என்பது,நேற்றைய நாளை அல்லவா? இதையும் மறக்கவேண்டாம்..

    வாழ்த்துக்கள்..

  4. valaiyakam's avatar valaiyakam சொல்கிறார்:

    வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
    நன்றி

    வலையகம்

  5. venkataramanir's avatar venkataramanir சொல்கிறார்:

    புவியில் மனிதர்கள் விஞ்ஞானத்தை எத்தனைதான்
    கொண்டாட்டுமே. ஜைனக்காலாஜிஸ்ட் அன்றாலாஜிஸ்டு
    கூட்டனணியில் ஆங்காங்கே டிரிப்லட்ஸுகள் ஜனிக்கட்டுமே.
    பெற்றோருக்கு, குழந்தைகள் வரம் தான். தான், விரும்பியோ
    விரும்பாமலோ, பெற்ற பிள்ளைகளால் பெருமிதமும்
    கெளரவமும் அடைந்த பெற்றோர் எத்தனை பேர்?

    இக்காலத்தில், பெரும்பாலும் பிள்ளைகளின் (பெண்களும் தான்)
    எதிர்காலத்தை பெற்றோர் தீர்மானிக்க முடிவதில்லை. இவ்விஷயத்தில், பெற்றோருக்குள்ளேயே கருத்து மாற்றம் வேறு. ஆட்டோ வசனம்
    போல “அவன்/ள் வாழ்க்கை அவன்/ள் கையில்” என்கிறதாய்
    “நீயா நானா”க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எதிலும்
    குழம்புவது போலவே, இவ்விஷயத்திலும் பிள்ளைகளும் பெற்றோரும்
    குழம்பி தவிக்கிறார்கள்.

    நவீன யுகத்தில் சாதரண குடியில் பிறந்தவனே மனம் தடுமாறாமல்
    இருக்க மிக்க சிரமப்பட வேண்டியுள்ளது. மேல் தட்டு/ அதிமேல்தட்டு
    குடிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். விரும்பினாலும் விரும்பா-
    விட்டாலும் எல்லாமே அவர்களுக்கு கிடைக்கிறது. அவர்கள் கூட்டணியும் அவ்விதமே. எல்லாவற்றையும் சுவைக்கவும், சுகிக்கவும் கற்றப் பிறகு,
    அவர்கள் அதிலிருந்து மீள்வது குதிரைக் கொம்புதான்.

    sex is no issue for elite community… என்று நேற்றுதான் கொலையுண்ட
    ஆருஷியின் பெற்றோரின் (அவகள்தான் பிரதான குற்றவாளிகள்)
    வழக்கறிஞர் CBI-க்கு எதிரான தனது வாதத்தில் பதிவு செய்துள்ளார்.

    ஓரினச்சேர்க்கை என்றில்லை எந்த தகாத உறவுமே பெற்றோருக்கும்,
    அவர் சார்ந்த உறவுகளுக்கும் தலை குனிவுதான். இவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடும் “பெரிய வீட்டு பிள்ளைகள்” எல்லோருமே, தன் செயலை நியாயப்படுத்துவதாக எண்ணி, பெற்றோரை, குறிப்பாக தந்தையரை, களங்கப்படுத்தும் விதமாக அறிக்கையும் பேட்டியும் கொடுத்துவிட்டு,
    மறைந்து கொள்கின்றனர்.

    வேடிக்கை என்னவென்றால், எங்கிருந்தோ இவர்களின் செயல்களுக்கு
    ஆதரவாக சிலர் கிளம்பி விடுகின்றனர். பாவம்தான் சீனுவாசன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.