பாராளுமன்றத்தில் இரண்டு மிகத்திறமையான வக்கீல்கள் – திருவாளர்கள் ப.சி.யும் அருண் ஜெட்லியும் – ஜெயித்தது யார் ?
நேற்றைய தினம் பாராளுமன்றம் ஒரு கோர்ட் ஹாலாகவே மாறியது. வாத, பிரதிவாதங்கள் பிரமாதம். இரண்டு மிகத்திறமையான வக்கீல்கள் திரு ப.சிதம்பரமும், திரு அருண் ஜெட்லியும் – அவர்களின் சிறப்பான வாதத் திறமையை நேரடி ஒளிபரப்பில் நேற்று கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
விவாதப் பொருளும், செய்தியும் அனைத்து செய்தித்தாள்களிலும் வந்திருக்கின்றன. எனவே நான் செய்திகளின் உள்ளே விவரமாகப் போகவில்லை.
இது ஒரு அலசல் மட்டுமே –
இரண்டு கம்பெனிகள் – ஆஸ்ப்ரிட்ஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் – அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் –
முன்னால் கூறப்பட்டுள்ள கம்பெனிக்கும் ஏர்செல் கம்பெனிக்கும் தொடர்பு இருந்தது என்றும் முன்னால் உள்ள கம்பெனிக்கும் இரண்டாவதாக கூறப்பட்டுள்ள கம்பெனியின் சொந்தக்காரரான கார்த்தி ப சிதம்பரத்திற்கும் தொடர்பு இருந்தது என்பது ஜெட்லியின் குற்றச்சாட்டில் கூறப்பட்ட விஷயங்களில் ஒன்று.
தனது மிகத்திறமையான வாதத்தால் இந்த குற்றச்சாட்டை தகர்க்க முயன்றார் நம் பெரியவர்.
முதல் கம்பெனி இரண்டு லட்ச ரூபாய் முதலில் துவங்கப்பட்டிருக்கிறது. கம்பெனியின் சொந்தக்காரர் வெறும் இருபதாயிரம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். அடுத்தவர் மீதி ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். ஆனால் இது வெறும் கடன் தான் – பங்கு அல்ல – எனவே அவரை பங்குதாரராக கருதக்கூடாது என்பது ஒரு வாதம். (பத்து பெர்சன்ட் போட்டவர் முதலாளி – தொண்ணூறு பெர்சன்ட் போட்டவர் வெறும் கடன் கொடுத்தவர் !)
இரண்டு இளைஞர்கள் தாங்கள் விரும்பும் தொழிலை நடத்த உரிமை இல்லையா என்பது அடுத்த வாதம். இது மிக நீண்ட நாட்களுக்கு முன்னர் -சஞ்சய் காந்தி ( பல மறைமுகமான அரசு உதவிகளுடன் ) மாருதி கார் கம்பெனியை துவங்கியபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி – என் மகன் என்பதால் சஞ்சய் அவன் விரும்பும் தொழிலில் ஈடுபடக்கூடிய உரிமையை ஏன் இழக்க வேண்டும் ? என்று கேட்டதை நினைவு படுத்துகிறது !!
முதல் கம்பெனிக்கும் – இரண்டாவது கம்பெனிக்கும் 2011 ஆம் ஆண்டு வரை எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பது அடுத்த வாதம்.
அதே சமயம் – பாதுகாப்பாக – இரண்டு கம்பெனியையும் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் முன்பின் அறியாதவர்கள் அல்ல என்று யாரும் கூறவில்லையே ! இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் – ஒரு காலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் – எனவே ஒருவருக்கொருவர் உதவியாக இருந்திருந்தால் அதில் அதிசயம் ஒன்றும் இல்லையே – என்பது இன்னொரு வாதம் !
ஆனால் இறுதியில் – அருண் ஜெட்லி இறக்கியது தான் துருப்புச்சீட்டு –
2011 ஆம் ஆண்டு வரை இரண்டு கம்பெனிகளுக்கும் தொடர்பு இல்லை என்றால் – இரண்டும் தனித்தனி கம்பெனிகள் தான் – தனித்தனி உரிமையாளர்கள் தான் என்றால் – 2006 ஆம் ஆண்டுக்கான தகவல் அறிக்கைகளில் இரண்டு கம்பெனிகளுக்கும் ஒரே ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டிருப்பது எப்படி ? இரண்டு கம்பெனிகளுக்கும் சென்னையில் ஒரே விலாசம் கொடுக்கப்பட்டிருப்பது எப்படி ?
அருண் ஜெட்லி இறக்கிய இந்த துருப்புச்சீட்டுக்கு இன்னும் பதில் சீட்டு இறங்கவில்லை ! விரைவில் இதற்கும் பதில் வரும் என்று எதிர்பார்க்கலாம் !
போன பணம் எப்படியும் திரும்ப வரப்போவதில்லை – என்ன தான் சொல்கிறார்கள் என்றாவது பார்ப்போமே !



அதுதான் திருவாளர். ப. சி. நெஞ்சுலே குத்தச்சொல்லிவிட்டாரே!
வாருங்கள் அனைவருமாக ஒன்று சேர்ந்து குத்திவிட்டு வருவோம்.
இவர்களெல்லாம் எச்சையை நக்கி பசியார நினைப்பவர்கள்.
எவ்வளவு வந்தாலும் பத்தாது!
அந்த ஈமெயில் ஐடி மிகவும் பிடித்திருந்தது அதனால் வைத்துக் கொண்டோம் என்று சொல்லலாம்.
அவர் அந்த முகவரி இருக்கும் இடத்தின் மேலே உள்ள ஒரு அறையில் சும்மா தங்கியிருந்தார். புதிதாக கம்பெனி ஆரம்பித்ததும் மறதியில் அதையே தனது முகவரியாகக் கொடுத்து விட்டார் என்றும் சொல்லலாம்.
நரம்பு இல்லாத நாக்கு நாலும் பேசும்.
பார்ப்பொம் என்ன நடக்கிறதென்று…
நிர்வாக வசதியை முன்னிட்டு ஒரே இ.மெயில் அட்ரஸ் ஏற்படுத்தப்பட்டது என திரு ப.சி . கூறுவாரோ?