தற்போது வெளிவந்திருக்கும் தகவல்கள் …..முடிவிற்கு வருமா முல்லைப்பெரியாறு பிரச்சினை ?

தற்போது வெளிவந்திருக்கும் தகவல்கள் …..

முடிவிற்கு வருமா முல்லைப்பெரியாறு பிரச்சினை ?

உச்ச நீதி மன்றத்திற்கு – ஐந்து உறுப்பினர் empowered committee ‘ தன் அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. அறிக்கையின் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று உறுப்பினர்களுக்கு சொல்லப்பட்டிருப்பதால் – அதிகாரபூர்வமாக எந்த விவரமும் இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இது பற்றிய பல தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மூலமாக இவை வெளிவந்திருக்கலாம். இவை எவ்வளவு தூரம் நம்பத்தகுந்தவை என்பது – சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை துவங்கும்போது தெரிய வரலாம். இப்போது தெரிய வரும் சில விவரங்கள் –

——————————————————-

நிபுணர்களின் பரிசோதனையில் அணை பலமாக இருப்பது தெரிகிறது. நில அதிர்வுகளால் எந்த பாதிப்பும் இல்லை.

அணையில் -கேரளா அரசு தற்போது தடுத்தி நிறுத்தி வைத்திருக்கும் 136 அடிக்கு பதிலாக 142 அடி வரை தமிழ் நாடு நீரைத்தேக்கி வைத்துக்கொள்ளலாம்.

கேரளா புதிய அணை கட்டுவதாக இருந்தால், கட்டப்போகும் இடமும், அதன் நீர்வரத்தும், இப்போதுள்ள அணையை எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். புதிய அணையின் அதிகபட்ச நீர்மட்டம் 155 அடி தான் இருக்க வேண்டும். நீர் பகிர்வு, அணையின் பராமரிப்பு போன்றவை குறித்து – இரு மாநில அரசுகளும் கலந்து பேசி புதிய ஒப்பந்தம் செய்துக்கொள்ள வேண்டும்.

(இது குறித்த சில விஷயங்கள் தெளிவாக வரவில்லை )

—————————————————————

இப்போதெல்லாம் நீதிமன்றங்கள் அரசியல்வாதிகளைப் போலவே தாங்கள் தப்பித்துக்கொள்ளும் வித்தையை தெரிந்து வைத்திருக்கின்றன. இந்த பக்கமும் போகாமல், அந்த பக்கமும் போகாமல் – வழ வழ வென்று தீர்ப்பு கொடுக்க கற்றுக்கொண்டுள்ளன.

இன்றைய தினம் இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தின் முன் இப்படி கால கடுக்க நிற்க நியாயமான காரணமே இல்லை. இந்த வழக்கில் கொடுக்கப்பட வேண்டிய தீர்ப்பு ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே கொடுக்கப்பட்டு விட்டது. அதை கேரளா அரசு நிறைவேற்ற மறுத்து – அரசியல் சட்டப்படி செல்லுபடியாகாத ஒரு சட்டத்தை மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி – உச்சநீதி மன்ற தீர்ப்பையே அவமதித்திருக்கிறது. தமிழ்நாடு உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கை கொண்டு சென்றவுடனேயே – கேரளா அரசை கண்டித்து, உடனடியாக ஏற்கெனவே கொடுத்த தீர்ப்பை நிறைவேற்றச்சொல்லி இருக்க வேண்டும் நீதிமன்றம். அதை விடுத்து, மீண்டும் ஒரு கமிட்டி – மீண்டும் நிபுணர்கள் ஆராய்ச்சி, சோதனை – என்று இன்னும் ஆறு ஆண்டுகள் வேதனை – கால தாமதம். இப்போது கூட பழைய தீர்ப்பை நிறைவேற்ற மறுத்ததற்காக கேரளா அரசை கண்டித்து நீதிமன்றம் எதுவும் சொல்லி இருப்பதாக தெரியவில்லை.

மேற்கூறிய விதத்திலேயே இப்போது தீர்ப்பு வந்தாலும் கூட – அதை நிறைவேற்றும் நிலையில் கேரளா இல்லை. மீண்டும் ஏதாவது பிரச்சினையை உண்டு பண்ணி காலதாமதம் செய்து குழப்பம் ஏற்படுத்தவே முயற்சிக்கும். அணை நீரை பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக 136 அடியை தாண்டாமல் தடுத்து வைத்திருந்ததால், காலியாகக் கிடந்த சுமார் நாலாயிரம் ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து ரியல் ஈஸ்டேட்காரர்களும், ஓட்டல்காரர்களும், ரிசார்ட்டுகளும் தங்கள் பிடியில் வைத்துள்ளன.

இப்போது – 142 அடி வரை நீர் மட்டத்தை உயர்த்தினால் – இந்த இடங்கள் நீரில் மூழ்கி – ஓட்டல்களையும், ரிசார்ட்டுகளையும் கட்டியிருக்கும் கேரளா ரியல் எஸ்டேட் ஆசாமிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் இதில் புகுந்து, உள்ளூர் அரசியல்வாதிகளையும் சேர்த்துக்கொண்டு பெரிய அளவில் குழப்பம் ஏற்படுத்தவே முயற்சி செய்வார்கள்.

பணம் பாயாத இடம் எது ?

இந்த முறை தீர்ப்பு வந்தால், எந்தவித காலதாமதமும் செய்யாமல், வேறு யாருடைய அனுமதிக்காகவும் காத்திராமல், உடனடியாக ஷட்டரை 142 அடிக்கு உயர்த்தி விடுவது தான் புத்திசாலித்தனம். பேச வேண்டிய விஷயங்களை எல்லாம் அதன் பின்னர் ஆற அமர உட்கார்ந்துகொண்டு பேசிக்கொள்ளலாம்.

தமிழக அரசும் சரி – மக்களும் சரி விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது. ஏற்கெனவே நிறைய விலை கொடுத்தாகி விட்டது. எனவே விழிப்புடன் இருப்போம்.

———————————————————————————————————-

அண்மையில் நல்ல வாசகங்களுடன் கூடிய சில கல்வெட்டுகளைப் பார்த்தேன் – நீங்களும் அவற்றைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வப்போது – ஒவ்வொன்றாக உங்களுடன் அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

முதலாவது கீழே –

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to தற்போது வெளிவந்திருக்கும் தகவல்கள் …..முடிவிற்கு வருமா முல்லைப்பெரியாறு பிரச்சினை ?

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இரு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையை,மைய அரசு,தகுந்தமுறையில் ஆராய்ந்து தீர்த்து வைக்க வேண்டும்.அவ்வாறு செய்யும்போது அதில் சம்பந்தப்பட்ட ஒரு மாநிலத்திற்கு அந்த தீர்ப்பில் உடன்பாடு இல்லையெனில் அது உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.பிறகு அது கொடுக்கும் தீர்ப்பே இறுதியானது.இதை செயல்படுத்தும் பொறுப்பு மைய அரசை சார்ந்தது.அப்பொழுது சம்பந்தப்பட்ட மாநில அரசு ஏதேனும் பிரச்சினை செய்தால் அதை நீக்கி விட்டு (DISSOLVE) ஆளுநர் ஆட்சி அமைக்க மைய அரசிற்கு அதிகாரம் உண்டு.–இதுதான் நம் அரசியல் சாசன சட்டம்..

    ஆனால் இது வெறும் எழுத்தளவே உள்ளது.நாம் எவ்வளவுதான் பேசினாலும் நினைத்தாலும் இந்தியா ஒரு நாடு இல்லை.பல மாநிலங்களின் கூட்டு இருப்பு.இதற்கு முக்கிய காரணம் நாட்டை மொழிவாரி மாநிலங்களாக பிரித்த முட்டாள்தனம்தான்.ஆனால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது.

    காவிரி நீர் பங்கீட்டை எடுத்துக்கொள்வோம்.உச்ச நீதிமன்றம் நமக்கு சாதகமாக கொடுத்த தீர்ப்பை,கர்நாடக அரசு இடது கையால் தள்ளிவிட்டு தன் இஷ்டப்படி நீரை தேக்கி வைத்துகொள்கிறது.இதை பற்றி மைய அரசு கவலை படவும் இல்லை.
    ஒரு பேச்சிற்கு மைய அரசு ,கர்நாடக மாநில அரசை டிஸ்மிஸ் செய்வதாக வைத்துக்கொள்வோம்.மிகப்பெரிய கலவரம் அங்கு வெடிக்கும்.பல உயிர்கள் பலியாகும்.மீண்டும் நடக்கும் தேர்தலில் நீக்கப்பட்ட கட்சி மீண்டும் அசுர பலத்துடன் வந்து ஆட்சி அமைக்கும்.நீர் அழிப்பது நிறுத்தப்படும்.இதுவே முல்லைபெரியாறு விவகாரத்திலும் நடக்கும்.எனவே இந்த தீர்ப்பும் காவிரி நீர் தீர்ப்பின் கதியைதான் அடையும்.இதை எதிர்பார்த்துதான் உச்ச நீதிமன்றமும்,தன் சுய கெளரவத்தை காக்கும் வகையில் ஏதேனும் வழவழா தீர்ப்பு கொடுக்கிறது.

    துரதிருஷ்டவசமாக நம் மாநிலமும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கழகங்கள் கையில் அகப்பட்டு சீரழிகிறது.காவிரி நீர் விவகாரத்தில் தோற்றது கருணாவின் சாதனை.முல்லைபெரியாறு விவகாரம் எம்.ஜி ஆர்.நமக்கு அளித்த வெகுமதி.

    முடிவாக இப்பிரச்சினை முடிவேதுமின்றி நீட்டிக்கப்படும் என்பது என் கருத்து.

  2. ravee's avatar ravee சொல்கிறார்:

    கலக்கறீங்க காவிரி, நேற்று சொன்னீங்க இன்னிக்கு செய்தி ஆகிவிட்டது…..super scoop!!!

  3. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

  4. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    No suitable action will be taken by the Central Government represented by Congress Party.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.