கார்த்தி ப.சி. – டாக்டர் சுவாமி சொல்வதில் எது எது பொய் என்று மட்டும் சொன்னால் போதும் – எது எது நிஜம என்பதைநாமே புரிந்து கொள்ளலாமே !!

கார்த்தி ப.சி.  –  டாக்டர் சுவாமி சொல்வதில் எது  எது பொய் என்று மட்டும் சொன்னால்   போதும் – எது எது நிஜம  என்பதை நாமே  புரிந்து கொள்ளலாமே !!

டாக்டர் சுவாமி அடுத்து சில  கணைகளை வீசி இருக்கிறார் ! இந்த முறை எதிரில் இருப்பது கார்த்தி ப.சி. யும் அவரது தந்தையும் !

சம்பந்தப்பட்ட கம்பெனிகள் பெயர் ஒன்றைக்கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாது – யாரும் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடாது என்றே இப்படி பெயர்  வைத்திருப்பார்கள் போலிருக்கிறது !

டாக்டர் சுவாமி சொன்னதிலிருந்து சில விஷயங்கள் – மிகச்சுருக்கமாக –

1)   ஆஸ்ப்ரிட்ஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் – 2) கைசர் சூர்யா சமுத்திர ரிசார்ட்  ப்ரைவேட் லிமிடெட்- 3) அட்வான்டேஜ் ஸ்ட்ராடேஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் 4) ஏர்செல் டெலிவேன்சர்ஸ்

முதல் கம்பெனியில் 94% பங்கு வைத்திருப்பதன் காரணமாக அதன் முதலாளியாகிறார் கார்த்தி ப.சி.

முதல் கம்பெனி அதிக அளவில் இரண்டாவது கம்பெனியில் முதலீடு செய்திருப்பதால் இரண்டாவது கம்பெனியும் முதல் கம்பெனியின் கட்டுப்பாட்டில் வருகிறது. இரண்டாவது கம்பெனி சென்னையை அடுத்த முத்துக்காட்டை ஒட்டிய கடற்கரை ஓரத்தில், நூறு கோடி ரூபாய்  பட்ஜெட்டில் –  100 ரூம்கள் கொண்ட ஒரு சூப்பர் விடுமுறை வாசஸ்தலம் ( luxury holiday resorts ) அமைக்க 4.62 ஹெக்டேர் நிலத்தை திமுக ஆட்சியின் போது கையகப்படுத்துகிறது. கடற்கரை ஓரங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தான சகலவித அனுமதிகளையும்  அதற்கு  மிதமிஞ்சிய வேகத்தில் திமுக அரசு  அளிக்கிறது.

இது குறித்து உரிய விசாரணம் நடத்துமாறு தமிழக முதலமைச்சருக்கு டாக்டர் சுவாமி  ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்புகிறார். ஆறு நாட்களுக்குள்ளாக, கார்த்தி இரண்டாவது கம்பெனியின் டைரக்டர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்கிறார். இத்தனையும் நடந்திருப்பது ஏப்ரல் மாதத்தில் !

– எனக்குத் தெரிந்து இந்த செய்தி இதுவரை எந்த தமிழ் பத்திரிகைகளிலும் (ஜூனியர் விகடனில் கூட ) வரவில்லை – ஏனோ தெரியவில்லை !

———————————-

அடுத்து –

முதல் கம்பெனி  அதிக அளவு பங்கை வைத்திருப்பதால் – மூன்றாவது கம்பெனியும் முதல் கம்பெனி கட்டுப்பாட்டின்  கீழ வருகிறது !

மூன்றாவது கம்பெனி – நான்காவது கம்பெனிக்கு கன்சல்டேஷன் (?) கொடுத்த வகையில் நான்காவது கம்பெனி – மூன்றாவது கம்பெனிக்கு 2006-ம் வருடத்தில்  ரூபாய்  26,00,444/- பணம் கொடுக்க முன்வருகிறது. மூன்றாவது கம்பெனி பணத்திற்கு பதிலாக அதே  கம்பெனியில் (இதே கம்பெனி தான் பிற்காலத்தில் ஏர்செல் என்று மாறுகிறது ) ஷேர் ஆக கொடுத்து விடச்சொல்கிறது. ( அந்த நான்காவது கம்பெனியைத்தான் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் நிறுவனம் பின்னர் விலைக்கு வாங்கிக்கொள்கிறது. )

மூன்றாவது   கம்பெனிக்கு, நான்காவது கம்பெனி  பணத்திற்கு பதிலாக ஷேர் கொடுக்கும் விஷயம் இழுத்தடிக்கிறது.  ஆனால்  ஷேர் விஷயம் செட்டில் ஆகும் வரை மலேசிய கம்பெனிக்கு  ஏர்செல் கம்பெனியை வாங்குவதற்காக நிதி அமைச்சகம் கொடுக்க வேண்டிய  அனுமதி  கிடைப்பதில்லை. ஷேர்விஷயம் சரியானவுடன் அனுமதி கிடைத்து விடுகிறது !

இது தந்தை மகனுக்கு ஆற்றிய  உதவி என்று சொல்கிறார் சுவாமி  !    ——————————-

அடுத்து –

டாக்டர் சுவாமி இந்த விவரங்களை  டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படுத்திய பிறகு,  மூன்றாவது  கம்பெனி – டாக்டர் சுவாமி மீது பொய்யான புகார்களை கூறியதற்காக தங்கள் கம்பெனி   மானநஷ்ட வழக்கு போடப்போவதாக  ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. இந்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சக பத்திரிகைத் தொடர்பு பிரிவைச்சேர்ந்த  அலுவலர்களால் விநியோகம் செய்யப்பட்டதாக செய்தி வெளிவருகிறது. ஒரு தனியார் கம்பெனி அறிக்கை உள்துறை அமைச்சகப் பிரிவால் விநியோகம் செய்யபடுவானேன் என்று  கேட்கிறார் டாக்டர் சுவாமி ! .

இதென்னையா கேள்வி –  தந்தை மகனுக்கு இதைக்கூட ஆற்றக்கூடாதா ? என்கிறார்கள் வேண்டப்பட்டவர்கள்  !

————————-

அடுத்து –

– கம்பெனிக்கு வழக்கு போடும் உரிமை எப்படி வரும் ? நான் கார்த்தியைப் பற்றி தானே கூறினேன் – அவர் தான் வழக்கு போட முடியும் ! கார்த்தி என்மீது வழக்கு போட்டால் மகிழ்ச்சியாக சந்திப்பேன் – குறுக்கு விசாரணை செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும் அல்லவா என்கிறார் டாக்டர் சுவாமி.

————————————

அடுத்து –

காங்கிரஸ் கட்சி டாக்டர் சுப்ரமணியன்சுவாமி சொன்னதை வன்மையாக மறுக்கிறது. மத்திய அரசும் – சுவாமி பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுகிறார்  என்று  கூறுகிறது. தனிப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை – கட்சியோ அரசோ மறுப்பது வியப்பாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் அல்லவா இதை செய்ய வேண்டும் ?

—————————————-

ஆனால் – இத்தனைக்கு  பிறகும்  இதுவரை  – தனயனோ, தந்தையோ எந்தவித கருத்துக்களையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை !

டாக்டர் சுவாமி சொல்வது முழுவதும் பொய்யோ – அல்லது பாதி நிஜம பாதி பொய்யோ  – நமக்குத் தெரியாது. எந்தப் பகுதி  பொய் என்பதை மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லி விட்டால் போதும் – எல்லாவற்றையும் விளக்கியாக வேண்டும் என்று அவர்களை அனாவசியமாக கஷ்டப்படுத்த வேண்டாம் – மீதியை  நாமே புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே ! !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கார்த்தி ப.சி. – டாக்டர் சுவாமி சொல்வதில் எது எது பொய் என்று மட்டும் சொன்னால் போதும் – எது எது நிஜம என்பதைநாமே புரிந்து கொள்ளலாமே !!

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பன் என்கிற கதையாக உள்ளது உங்கள் முயற்சி!
    அதான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று “தனியார் கம்பெனி அறிக்கை உள்துறை அமைச்சகப் பிரிவால் விநியோகம்” ஆகியிருப்பதிலேயே புரிகிறதே!
    ஆனாலும் உங்களுக்கு ஒரு கேள்வி காவிரி மைந்தன்!
    இந்த சு. சுவாமியும் தான் எத்தனை கேஸ் போடுகிறார். அதெல்லாம் என்னதான் ஆகிறது? அதை ஏன் யாரும் FOLLOW UP பண்ணுவதில்லை அல்லது அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில்லை?

  2. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

  3. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    “அந்த இன்னொரு வாழப்பழந்தான்னே இது” என்கிற கதையாய் போகிறது கம்பனிகளுக்குள் உள்ள சங்கிலி தொடர்பு.

    108 -க்கு பின் வந்துள்ள புதிய கதை. சுவாரஸ்யமாகவும் வியப்பாகவும்
    இருக்கிறது.

    தமிழில் செய்தி இதுவரை வெளிவரவில்லை என வியப்படைய
    வேண்டியதில்லை. தமிழ் பத்திரிகையாளர்கள் “கவருக்குத்” தான்
    எழுதுவார்கள். தவிரவும், சு சாமி சொல்லும் விஷயத்தின்/செய்தியின்
    பின்னணி அறியாதவர்கள். (தமிழக) ஆங்கில செய்தியாளர்கள்,
    பெரும்பாலும் செய்தி ஆசிரியரின்/முதலாளியின் அபிலாஷைகளுக்கு
    தக்கவாறு எழுதுவார்கள்.

    விஷயம் முற்றி, தெருக்கோடி ஆசாமியும் அறிந்து கொண்ட பின்னர்,
    “இனியும் எழுதாவிட்டால் நல்லா இருக்காது” என்பதால், பூசி மொழுகி
    எழுதுவார்கள். அந்த சமயம், அந்த விஷயம் அதன் வீரியத்தை
    இழந்திருக்கும். செய்தித்தாள் அதன் இறுதி உபயோகத்திற்கு போகும்.

    “படித்தவன் பாதகம் செய்தால்
    போவான் போவான்
    ஐயோ என்று போவான் …” என்று சின்ன வயசில் படித்த நினைவு. இதை
    அவர்களும் படித்திருக்கக் கூடும்.

  4. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    வர வர வெறுப்பாக இருக்கிறது. இந்த அளவுக்கு இந்த தேசம் இதற்கு முன்னால் ஊழலில் திளைத்திருக்காது என்றுதான் தோன்றுகிறது. இது எப்போது சரியாகப் போகிறது என்பது தெரியவில்லை. மக்கள் புரட்சியாலோ அல்லது ஒருமித்த உயர் மனநிலை ஆற்றலினாலோதான் அது சாத்தியப்படக் கூடும். நம் வருங்காலத் தலைமுறைகளாவது ஊழலற்ற நேர்மையான தேசத்தில் வாழும் வழி ஏற்பட வேண்டும். இது விரைவில் நிறைவேற பிரார்த்திப்பதையும், மக்கள் மனங்களில் நல்ல மாற்றம் ஏற்பட இறைவனிடம் இறைஞ்சுவதையும் தவிர வேறு வழியில்லை.

  5. பிங்குபாக்: ப.சிதம்பரம் – கார்த்தி சிதம்பரம் – ரகசியம் « அனாதி

  6. ராஜராஜ சொழன்'s avatar ராஜராஜ சொழன் சொல்கிறார்:

    ஒரே ஆள் ஏகப்பட்ட பெயரில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்
    கம்பெனிகள் ஆரம்பிப்பதே மோசடிவேலைகள் செய்யத்தான்.

    தமிழக அரசுக்கு புகார் போனவுடன் டைறேக்டர் பதவியை
    ராஜினாமா செய்திருப்பது -தொடர்ந்து இருந்தால் தமிழக அரசிடம்
    மாட்டுவோமே என்று தான் !

    காவிரிமைந்தன் – தமிழ் பத்திரிகைகள் போடா விட்டால் என்ன –
    நீங்கள் தான் இருக்கிறீர்களே – தொடருங்கள் உங்கள் சமூகப் பணியை !
    நாங்களும் பின்னால் வருகிறோம் துடைப்பத்தொடு !

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      இந்த பெருச்சாளிகளை பீரங்கி கொண்டே அழிக்க முடியாது.துடைப்பம் எல்லாம் எந்த மூலைக்கு.அரசியல் சாசனத்திலிருந்து எல்லாம் மாற்றப்படவேண்டும்.அதற்கு ஏதேனும் வழி உள்ளதா எனப்பாருங்க.
      இன்னொன்னும் ஞாபகம் இருக்கட்டும்.இன்று அத்தனை அரசு ஊழியர்களும் ஏதேனும் ஒரு வகையில் ஊழல செய்பவர்கள்.அளவுதான் மாறுபடும்.தற்பொழுது இந்தியா உடல் முழுவதும் புற்று நோய் வந்த ஒரு நோயாளிக்கு சமம்.உண்மை கசக்கும் ஆனால் என்ன செய்வது?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.