டெல்லியை நோக்கி ஆயிரம் சிப்பாய்கள் நகர்ந்ததால் ராணுவப்புரட்சி என்று தலைப்பு செய்தி வந்ததன் பின்னணியில் உள்ளவர் யார் ?

டெல்லியை நோக்கி ஆயிரம் சிப்பாய்கள் நகர்ந்ததால் ராணுவப்புரட்சி என்று தலைப்பு செய்தி வந்ததன் பின்னணியில் உள்ளவர்   யார் ?

சில நாட்களுக்கு முன்  ஆக்ராவிற்கு அருகிலுள்ள ராணுவ முகாமிலிருந்து திடீரென்று இரண்டு டிவிஷன் (சுமார் ஆயிரம்) சிப்பாய்கள்  -டெல்லியை நோக்கி நகர்ந்ததற்கு காரணம் ராணுவப்புரட்சிக்கான  முயற்சியா என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில்  முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தி  வெளிவந்தது  நினைவிருக்கலாம்.   இந்த செய்தி டெல்லி அரசியல் வட்டாரங்களில்  மிகப்பெரிய புயலைக் கிளப்பியது. ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் சம்பந்தமாக மிகப்பெரிய கேள்விக்குறி ஒன்றை அது கிளப்பியது. அவரது நேர்மையையும், நாட்டுப்பற்றையும் பற்றிய பலத்த விவாதம் ஒன்றை அது கிளப்பியது.

அது பற்றிய சூடு தணிந்த பிறகு நிதானமாக விஷயத்தை ஆராய்ந்த அரசியல்  ஆய்வாளர்கள் கீழ்க்கண்ட வினாக்களை எழுப்புகிறார்கள் –

வெறும் ஆயிரம் சிப்பாய்கள், பயிற்சிக்காக நகர்ந்ததை வைத்துக்கொண்டு ராணுவப்புரட்சியா என்று பரபரப்பை கிளப்பி முதல் பக்கத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தலைப்புச்செய்தி போட்டதற்கு காரணம் என்ன ?

இந்த செய்தியின் பின்னணியில் இருப்பது யார் ? இப்படி ஒரு செய்தி வெளிவருவதற்கான  காரணம் என்ன ? அவசியம் என்ன ? இப்படி ஒரு செய்தியை வெளியிடுவதனால் அவர்கள் எதிர்பார்த்த விளைவுகள் என்ன ? இதன் மூலம் பலன் அடையக்கூடியவர்கள் யார் யார் ?

இப்படி ஒரு செய்தி வந்தது – செய்தியை முந்தித்தரும் பத்திரிகைகளின் ஸ்கூப்  முயற்சி அல்ல  என்றும் இதன் பின்னணியில் ஒரு பெரிய சதிவலையே இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.

எத்தகைய சதி ? ஏன் சதி ?

ஆண்டு தோறும ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பெருமானமுள்ள தளவாடங்களும் பொருட்களும் ராணுவத்திற்காக வாங்கப்படுகின்றன. இதை வாங்குவதற்காக பிரத்யேகமான வகுக்கப்பட்ட முறைகள் இருக்கின்றன. இடைத்தரகர்கள் யாரும் இதில் சம்பந்தப்படக்கூடாது – எந்த எஜெண்டுகளுக்கும் கமிஷன் கொடுக்கப்படக்கூடாது என்றெல்லாம் பல விதிமுறைகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் மீறி முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு பணம் போய்க்கொண்டு தான் இருக்கிறது.

தற்போதைய ரானுவத்தலைமை தளபதி வி.கே.சிங், மற்றும்  பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி இருவருமே கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்கள் ! ராணுவத்தின் பல கொள்முதல் திட்டங்களுக்கு இவர்களின் ஒப்புதல் தேவைப்படுகிறது.

தங்கள் உத்தேசங்களுக்கு ஒத்துவராத இவர்கள் இருவரையுமே அந்த பொறுப்பிலிருந்து  அப்புறப்படுத்துவதில் ராணுவத்திற்கு  தேவையான தளவாடங்களை விற்பதில் ஈடுபட்டுள்ள தரகர்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது. இவர்கள் இருவருக்குமே எந்தவிதத்திலாவது  பிரச்சினைகளை உண்டு பண்ணி, ஒன்று அவர்கள் தானாகவே பதவி விலக வேண்டும் அல்லது அவர்கள் விலக்கப்பட்டாக  வேண்டிய இக்கட்டான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்கிற முயற்சியில்  ஒரு சிலர்  ஈடுபட்டிருக்கிறார்கள்  – என்பது நிலையை உன்னிப்பாக அவதானித்து வரும் சில பார்வையாளர்களின் கருத்து.

அண்ணா ஹஜாரே குழுவை சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் – சில முக்கியத்துவம் வாய்ந்த, இலேசாக ஒதுக்கி விட முடியாத – தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் சிலரே –  ராணுவதலைமை தளபதியையும், ராணுவ அமைச்சரையும் சங்கடத்தில் சிக்கவைக்க இத்தகைய செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளிவர ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பது அவர்களது குற்றச்சாட்டு !

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இந்த பரபரப்புசெய்தி வெளிவந்த நாளுக்கு முன்தினம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியர் சேகர் குப்தாவும், உள்துறை அமைச்சரும் டெல்லி ஒபேராய் நட்சத்திர ஓட்டலில் ஒன்றாக உணவருந்தினார்கள் என்று ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார் பூஷன். எதை நம்பலாம் – எதை நம்பக்கூடாது என்றே தெரியவில்லை ! இது குறித்து சண்டே கார்டியன் பத்திரிக்கை வெளியிட்டிருக்கும் தகவல் நாட்டின் பாதுகாப்பை பற்றிய பெரும் கவலையை உண்டு பண்ணுவதாகவும் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து பிரதமருக்கு புகார்  கடிதம் எழுதியுள்ள பிரசாந்த் பூஷன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ராணுவ நடமாட்டம் குறித்த இந்த தகவல் வெளிவந்தது எப்படி என்கிற   பின்னணியை மத்திய புலனாய்வு துறை இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது எப்படி ? கண்டு பிடிக்க முடியவில்லையா இல்லை -கண்டு கொள்ள விருப்பம் இல்லையா ?

உள்துறை அமைச்சகம  முனைந்தால் இந்த தகவலை வெகு சுலபமாக வெளிக்கொண்டு வந்திருக்க முடியாதா  என்றும் வினா எழுப்பி உள்ளார்.

அர்விந்த் கெஜ்ரிவால் – இது ஒரு  ஆதாரமில்லாத செய்தி என்று மத்திய அரசு அறிவித்தால் போதுமா ? இந்த செய்தி வெளிவந்ததன் பின்னணியில் உள்ள  மர்மம என்ன ? இதற்கு யார் காரணம் என்பதை மத்திய அரசு சுதந்திரமான ஒரு அமைப்பின் மூலம் உடனடியாக விசாரணை நடத்தி கண்டறிய  வேண்டும் என்கிறார் !

ஆறு மாதங்களுக்கு முன்னர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் ஒட்டுக்கேட்கும் சாதனங்கள் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்தது குறித்து செய்திகள் வெளியாயின. இப்போது ராணுவ அமைச்சருக்கு சிக்கல் ஏற்படுத்த முயற்சி !

வர வர மத்திய அரசில் என்ன நடக்கிறது – யார், யாரைக்கவிழ்க்க முயற்சிக்கிறார்கள் என்பதே தெரியவில்லை !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to டெல்லியை நோக்கி ஆயிரம் சிப்பாய்கள் நகர்ந்ததால் ராணுவப்புரட்சி என்று தலைப்பு செய்தி வந்ததன் பின்னணியில் உள்ளவர் யார் ?

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    சாரே ஜஹான்சே அச்சா…
    ஹிந்துஸ்தான் ஹமாரா

  2. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    போபர்ஸ் ஊழல் , மாட்டுத் தீவன ஊழல், சர்க்காரிய கமிஷன் ஊழல் , பல்வேறு ஊழல்களை கண்டும்
    காணாத மத்திய அரசு ராணுவ அணிவகுப்பை பற்றி கவலைப்படுமா? ஏதேனும் ஆதாயத்துக்காக இந்த செய்தி பரப்பப்பட்டதா யாரால் உள்வேலை செய்யப்பட்டது என்பதை பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட தயாராக இல்லை.

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    என்னமோ போங்க,எல்லாமே ஒரே சிதம்பர ரகசியமா இருக்கு!!

  4. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அன்பின் கா.மை.
    RTE பற்றிய ஒரு விரிவான பதிவு இங்கு மிகவும் தேவைப்படுகிறது.
    தயவுசெய்து ஆவன செய்யவும்.
    நன்றி,

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் கண்பத்,

      ஒரே குழப்பமாக இருக்கிறது –
      நடைமுறையில் எப்படி செயல்படுத்த போகிறார்கள்
      என்பதே புரியவில்லை !

      கொஞ்சம் பொறுத்து – பார்த்துக்கொண்டு விவாதிக்கலாமே !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        நன்றி ஐயா.
        முல்லைப்பெரியாறு அணை பற்றி நீங்கள் எழுதிய விளக்கம் பலருக்கு (அடியேன் உட்பட) ஒரு பாடம் போல அமைந்தது.இந்த குரங்கு காங்கிரஸ்
        அடுத்து எடுத்திருக்கும் பூமாலை ஆன RTE இன்னொரு மெகா குழப்பம்.
        இதை பற்றி பதிவர் பத்ரி ஓரிரு நாட்களுக்கு முன் சில பதிவுகள் இட்டுள்ளார்.
        உங்கள் கருத்துக்களையும் அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.
        நன்றி.

  5. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.

  6. HOTLINKSIN.COM's avatar HOTLINKSIN.COM சொல்கிறார்:

    இப்போது http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
    அதே போல ஆங்கிலத்தில் செய்திகளை http://www.hotlinksin.com இணையதளத்திலும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.