இன்றைய ஹீரோ – சந்தேகமே இல்லாமல்
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தான் !
73 வயது -உடல் தளர்ந்து, நடை தளர்ந்து,
இவர் வயதினர் எல்லாரும் நிம்மதியாக ஓய்வு
எடுக்கும் வயதில்,
தன்னந்தனியாக ஒவ்வொரு நீதிமன்றமாக
ஏறி இறங்கி – எதிர்பாராத நேரத்தில்,
எதிர்பாராதவிதமாக –
வெற்றிகளைக் குவிக்கும் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி –
சந்தேகமே இல்லை – இன்றைய ஹீரோ இவர் தான் !
சுப்ரீம் கோர்ட் இன்று கொடுத்திருக்கும் தீர்ப்பு –
ஒரு வரலாற்றுத் தீர்ப்பு.
(ஆ.ராஜா மீது வழக்கு நடந்து வருவது தனி கதை.
இதற்கு அடிப்படையாக இருந்த, சுப்ரமணியன் சுவாமி
பிரதமருக்கு கொடுத்த மனு பற்றிய வழக்கு இது )
சுருக்கமாக வழக்கைப் பற்றிய பின்னணி –
2ஜி அலைக்கற்றை புகார்கள் சம்பந்தமாக, அப்போது
மத்திய தொலை தொடர்பு அமைச்சராக இருந்த
ஆண்டிமுத்து ராஜா மீது கிரிமினல் வழக்கு தொடுக்க
அனுமதி கோரி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு
ஒரு மனு கொடுத்திருந்தார் டாக்டர் சுவாமி.
16 மாதங்கள் கடந்தும், பிரதமர் அலுவலகத்திலிருந்து
பதில் ஏதும் இல்லாததால், தனக்கு அனுமதி
கொடுக்காத பிரதமர் அலுவலகத்தின் மீது
டெல்லி உயர் நீதி மன்றத்தில்
வழக்கு தொடுத்தார் சுவாமி. அவரது இந்த மனு முதலில் டெல்லி உயர் நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதைத் எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
செய்திருந்தார் சுவாமி. அந்த அப்பீலின் மீதான தீர்ப்பு
தான் இன்று சுப்ரீம் கோர்ட்டால் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தீர்ப்பின் மிக முக்கியமான 2 அம்சங்கள் –
1) சாதாரணமாக, ஊழல் தடுப்பு சட்டத்தின்படி,
அரசு ஊழியர்கள்(அமைச்சர்கள் உட்பட) மீது வழக்கு
தொடுக்க, சம்பந்தப்பட்ட அரசிடம் முன்
அனுமதி வாங்க வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது.
இந்த அனுமதியை சம்பந்தப்பட்ட (மாநில/மத்திய)
அரசுகள் இலேசில் அளிக்காமல் காலவரையின்றி
இழுத்தடிக்கின்றன.
ஊழல் தடுப்பு சட்டத்தின் (prevention of
corruption act ) இந்த பிரிவிற்கு, மத்திய அரசு
ஒரு திருத்தம் செய்தாக வேண்டும்.அதிக பட்சம்
4 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட அரசு தன் முடிவைத்
தெரிவிக்கா விட்டால் –
-வழக்கிற்கு அனுமதி தரப்பட்டதாகவே கோர்ட்டால்
எடுத்துக் கொள்ளப்படும் என்று திருத்தம் செய்யப்பட
வேண்டும்.
2) இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும்
அரசின் எந்த ஊழியர் மீதும் விசாரணை கோரி
மனு கொடுக்க அரசியல் சட்டத்தின்படி
உரிமை உண்டு. இத்தகைய மனுக்கள் உரிய முறையில்
பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும்.
(குறிப்பு – முந்தாநாள் சிபிஐ பற்றி நான் இதே
வலைத்தளத்தில் போட்டிருந்த பதிவில், மாநில
மற்றும் மத்திய அரசுகளிடம் –
அனுமதி கேட்டு நீண்ட காலமாகக் காத்திருக்கும்
வழக்குகள் பற்றிய விவரங்கள் தந்திருக்கிறேன்.
தேவைப்படுவோர் அங்கு விவரங்களைப் பார்க்கலாம்)
ஒரு புறம் ஊழல் வழக்குகளை, குறிப்பிட்ட
காலக் கெடுவிற்குள் விசாரித்து தீர்ப்பு கூற –
தன்னிச்சையான ஜன்லோக்பால் அமைப்பு தேவை
என்று கோரி, மக்களைத் திரட்டி போராடி வரும்
அன்னா ஹஜாரே குழுவினர் –
இன்னொரு புறம், சட்டத்தின் நெளிவு சுழிவுகளில்
புகுந்து கொண்டு அரசு ஊழல் பெருச்சாளிகளுக்கு
புகலிடம் கொடுப்பதை எதிர்த்து சட்டபூர்வமாக
நீதிமன்றங்களை அணுகி விடை பெற முயற்சிக்கும் –
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி –
இரண்டு பேருமே இந்திய ஜனநாயகத்திற்கு
ஆற்றும் சேவை அளப்பரியது.
பின்குறிப்பு – டாக்டர் சுவாமியின் நிலைப்பாடு
குறித்து, பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு
கிடையாது என்றாலும், அவருடைய சாதனைகளை
நான் பாராட்டுவதில் எனக்கு எந்தவித
தயக்கமும் இல்லை.




இந்தியாவின் மற்றும் இந்தியர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதையே தங்கள் ஒரே நோக்காக கொண்ட நூற்றுக்கணக்கான மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள்,ஆயிரக்கணக்கான எம்.பி, மற்றும் எம்.எல் ஏ க்கள,பத்தாயிரக்கணக்கான கவுன்சிலர்கள் மற்றும் இவர்கள் அனைவர்க்கும் செயல்திட்டம் வகுத்து நடைமுறைபடுத்தும் பற்பல IAS,IPSஅதிகாரிகள் Chartered Accountants Lawyers..
இவர்களை எதிர்த்து போராடுபவர்கள் அன்னா ஹசாரே,
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, சில உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு சில IAS அதிகாரிகள்.
மேற்கண்ட சீரழிவால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் வறுமைகோட்டிற்கு கீழே வாழும் 60 சதவிகித இந்தியர்கள்.
மேற்கண்ட எதைப்பற்றியும் கவலை இன்றி IPL match பார்த்துக்கொண்டு கொலவெறி பாட்டு கேட்டுக்கொண்டு
குளிர் காய்ந்து கொண்டிருக்கும் மீதி இந்தியர்கள்.
உருப்பட்டாற்போலத்தான்!!
வருக நண்பர் கண்பத்,
நிச்சயம் உருப்படும் – நம்புங்கள்.
இன்றில்லா விட்டாலும் நாளையாவது
நிச்சயம் மாறும் !
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
pleas don’t compare subramania swamy with Anna hazare and other fighters
Anna hazare is a perfect fighter against the corruption but swamy’s move are with the self gain
Always he need a publicity for his politics
வருக நண்பரே,
பப்ளிசிடி பிரியராகவே இருக்கட்டும்.
ஆனாலும் – நல்ல விஷயங்களை யார் செய்தாலும்
பாராட்டுவதில் தயக்கம் கூடாது என்பது என் கருத்து !
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
//but swamy’s move are with the self gain//
அந்த self gain ஆல் தான் இவ்வளவு ஊழல் விஷயங்கள் வெளியே வந்திருக்கின்றன. இத்தனை தீர்ப்புகளும் வெளியாகி இருக்கின்றன. யார் என்ன சொன்னாலும் டாக்டர் சுவாமி உண்மையிலேயே ஒரு ஹீரோதான். அவரை ஆதரித்து அவரது ஊழல் எதிர்ப்பு முயற்சிக்கு உறுதுணையாக இருப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை.
நாட்டின் மேல் ஏற்பட்ட தீராத பற்றால் சுப்பிரமணிய சுவாமி இதை எல்லாம் செய்கிறார் என்று தோன்றவில்லை. தனது சுய விருப்பு வெறுப்புகளின் வழியில் சில தனி நபர் மீது கொண்டுள்ள வன்மத்தின் வெளிப்பாடுகளே இந்த வழக்குகள். என்ன இந்த வழக்குகளின் byproducts மூலம் நன்மை விழைகிறது. அண்மையில் டெல்லி கோர்ட்டுக்கு சுவாமி ‘தான் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விழைவிக்கும் கட்டுரைகளை எழுத மாட்டேன்” என்று எழுதி கொடுத்தது நான் மேல் கூறிய கருத்துக்கு எடுத்து காட்டு.
//தான் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விழைவிக்கும் கட்டுரைகளை எழுத மாட்டேன்” என்று எழுதி கொடுத்தது நான் மேல் கூறிய கருத்துக்கு எடுத்து காட்டு.//
உண்மை. அது அவரது அதீத மதப்பற்றால் விளைந்த, பிற்போக்குத்தனமான ஒன்றுதான். அதற்காக அவரது ஊழல் எதிர்ப்பையும் அவதூறு செய்வது சரியானதாக இருக்காது. சுவாமி செய்யும் நல்ல காரியங்களை (மட்டும்) ஆதரிப்போம். அது போதும்.
thanks mr ezhil ,you discovered correctly about cunning swami,pls tell this to Kavirimainthan too
நண்பர் எழில், ஷண்டு
தயவு செய்து மேற்கண்ட பதிவின் கடைசியில் உள்ள
என் பின்குறிப்பை பார்க்கவும்.
“பின்குறிப்பு – டாக்டர் சுவாமியின் நிலைப்பாடு
குறித்து, பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு
கிடையாது ” என்றாலும் –
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
மரியாதைக்குரிய கா.மை. ஐயா உங்கள் பதிவை முழுவதுமாக படித்து விட்டு தான் கருத்தை எழுதினேன். shandu அவர்கள் கூறியது போல் அன்னா ஹஜாரே அளவுக்கு சுவாமியை ஒப்பிட்டு எழுதியது என் சிறிய அறிவுக்கு ஏற்புடையதாக தெரியவில்லை. மேலும் டி பார்டி வைத்து வாஜ்பாயி அரசை கவிழ்ததுக்கு சோனியா குழாம் தகுந்த கைமாறு செய்யவில்லை என்பதால் தான் இவ்வளவு வழக்குகளோ என்றும் சில வேளைகளில் எண்ண தோன்றுகிறது. அதே வேளை சோனியா அரசை புத்திசாலிதனமாக எதிர்க்க இப்போது இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பதிலும் எனக்கு மாற்று கருத்து கிடையாது. அவரால் விழையும் நன்மைகளுக்கு நன்றி. ஆனால் நிச்சயமாக எனது ஹீரோ அவர் இல்லை. (விஷயம் அவ்வளவு தான்) நிற்க, தரமான பதிவுகளை இட்டு என் போன்றோரின் தொடுவானத்தை விரிவாக்கும் (extending the horizon ) அளப்பரிய பணிக்கு வந்தனைகள் கோடி.