அத்வானி + மோடி + சோ -விழாவில் சில
சுவாரஸ்யங்கள் …!

(புகைப்படத்தில் -சோ பேசும்போது –
பார்வையாளர்களாக – பழைய டிஜிபி
நட்ராஜ், ரஜினிகாந்த், முருகன், இல.கணேசன்,மோடி,
அத்வானி, குருமூர்த்தி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்)
சனிக்கிழமை மாலை துக்ளக் வார இதழின்
ஆண்டு விழாவில் அத்வானியும், நரேந்திர மோடியும்
விசேஷ விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
பொதுவாக – நிகழ்ச்சியில் பேசப்பட்டவை குறித்து
ஓரளவு விவரமாக டிவியிலும், நாளிதழ்களிலும் வரும்.
இருந்தாலும் –
நான் அங்கு கண்ட சில சுவாரஸ்யங்களை,
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.
வழக்கமாக, சுமார் 1500 இருக்கைகளைக் கொண்ட
காமராஜ் அரங்கத்திலும், ஒன்றிரண்டு
தடவை நாரத கான சபா, மியூசிக் அகாடமியிலும்
நடந்த ஆண்டு விழா – இந்த வருடம் 4000 பேர்
கொள்ளக்கூடிய வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.
(ஆளும் கட்சியில் முக்கியத்துவம் பெற்றிருப்பது
காரணமோ ..?)
எக்கச்சக்கமான போலீஸ் கெடுபிடி.
மொட்டை மாடியில் – ஏன் – மரத்தின் மேல் கூட
காவலைப் பார்க்க முடிந்தது.வாசலிலேயே
இரண்டு பக்கமும் வீடியோ காமிரா வைத்து,
கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் ஒவ்வொருவரையும்
படம் பிடித்துக் கொண்டார்கள்.
காரணம் – அத்வானி+மோடி !
அரங்கம் நிரம்பி வழிந்து, வெளியிலும் டிவி திரை
வைத்திருந்தார்கள். அங்கும் கூட்டம் வழிந்தது !
வழக்கமாக ஆசிரியர் “சோ” முன்னதாகவே
வந்து விட்டாலும், அரங்கம் 4 மணிக்கே நிரம்பி
விட்டாலும் கூட, சரியாக 6.29 மணிக்கு தான்
மேடை ஏறுவார் (punctuality ).
ஆனால், இந்த தடவை 6.20 க்கே கூட்டம்
துவங்கி விட்டது. காரணம் – அத்வானியும்,
மோடியும் 10 நிமிடங்கள் முன்னதாகவே
அரங்கத்திற்கு வந்து விட்டனர். அவர்களைக்
காக்க வைக்க விரும்பாமல் உடனே துவக்கி விட்டார் !
கூட்டம் துவங்கி, சோ பேசிக்கொண்டிருந்த போது
ரஜினிகாந்த் உள்ளே வந்தார். கூட்டம் அப்படியே
எழுந்து நின்று கைத்தட்டியது. ஒரு நிமிடம்
பேச்சை நிறுத்தி விட்டு சோ முறைத்துப் பார்த்தார்.
(எனக்கு கருணாநிதி கூட்டத்தில் எம்ஜிஆர் வந்து –
சலசலப்பை ஏற்படுத்தும் அந்த நாள் ஞாபகம் வந்தது !)
ஆனாலும் சோ சமாளித்துக் கொண்டு மறைமுகமாக
ரஜினி வருகையை அறிவித்து ஏற்றுக்கொண்டார் !
அதிமுகவினர் நிறைய பேர் சசிகலா விஷயமாக
சோ என்ன சொல்லப்போகிறார் என்று பார்க்க
வந்திருந்தனர். ஆனால் – துவக்கத்திலேயே
தான் அதைப்பற்றி எதுவும் பேசப்போவதில்லை
என்று சோ வெளிப்படையாக அறிவித்து விட்டார்.
அத்வானி மிக நல்ல மூடில் இருந்தார்.
மிக நீண்ட நேரம் பேசினார் – கிட்டத்தட்ட 50 நிமிடம் !
ஏற்கெனவே ஏற்பட்ட அனுபவம் காரணமாக,
தமிழில் பேச முடியாமைக்கு வருந்தி, தன் ஆங்கிலப்
பேச்சை சோ வே தமிழில் மொழிபெயர்த்துக் கூறினால்
நல்லது என்று கேட்டுக்கொண்டார். மைக்கை
பிடித்த சோ, துக்ளக் வாசகர்களால் அத்வானியின்
ஆங்கிலப் பேச்சை புரிந்து கொள்ள முடியும் என்றும்
எனவே அவர்களுக்கு மொழி பெயர்ப்பு தேவை இல்லை
என்றும் கூறி விட்டார்.
பிரதமர் பதவிக்கு அத்வானிக்கு போட்டியாக
இருக்கக்கூடியவர் என்று கருதப்படும் மோடியும்
வந்திருந்தபடியால், இருவருடைய பாடி லாங்குவேஜும்
கூர்ந்து கவனிக்கப்பட்டது.
அத்வானி மிகப் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.
“மூத்தவர்கள் நிரம்பிய வீட்டில், இளைஞர்கள்
முக்கிய பொறுப்பு ஏற்றுக்கொண்டு, முனைப்புடன்
செயல்படுவது கண்டு, பெரியவர்கள் மகிழ்ச்சியும்
பெருமிதமும் கொள்வது போல், மோடியின் சாதனைகள்
தமக்கு மகிழ்வு அளிப்பதாக” கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மீது அத்வானி
மிகுந்த நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருப்பது –
அவரது வெளிப்படையான பேச்சில் தெரிந்தது.
மோடியின் பேச்சைக் கேட்க நிறைய பேர் ஆவலாக
இருந்தனர். ஆனால், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட
ஆங்கில உரையை அவர் வாசித்தது நிறைய பேருக்கு
ஏமாற்றமாக இருந்தது.
அவரது உரை, கம்பெனியின் வருடாந்திர கூட்டத்தில்
ஆற்றப்படும் உரை போல் இருந்தது.
நான் நிறைய தடவை மோடியின் பேச்சைக்
கேட்டிருக்கிறேன். இந்தியில் அருமையாக பேசுவார்.
ரஜினி படம் போல் “பஞ்ச்” பறக்கும்.
ஆனால் அவரால் ஆங்கிலத்தில் இயலவில்லை.
(அடுத்த பிரதமருக்கு இந்தி மட்டும் போதுமா ?)
ஆசிரியர் சோ வின் பேச்சு – பொதுவாக அடுத்து
வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை
கவர் செய்வதாக இருந்தது.
ஆசிரியர் சோ கூறிய ஒன்றிரண்டு கருத்துக்களைப்
பற்றி ஓரளவு விவரமாக பகிர்ந்து கொள்ள/விவாதிக்க
விரும்புகிறேன். அதை அடுத்த இடுகையில்
வைத்துக் கொள்வோமே !





I think that this meet will be useful to the nation.
nalla arambam
sivaparkavi
//துக்ளக் வாசகர்களால் அத்வானியின்
ஆங்கிலப் பேச்சை புரிந்து கொள்ள முடியும் என்றும்
எனவே அவர்களுக்கு மொழி பெயர்ப்பு தேவை இல்லை//
//ரஜினிகாந்த் உள்ளே வந்தார். கூட்டம் அப்படியே
எழுந்து நின்று கைத்தட்டியது. ஒரு நிமிடம்
பேச்சை நிறுத்தி விட்டு சோ முறைத்துப் பார்த்தார்.//
😉
அது கிடக்கட்டும், ஜெ. பிரதமராக பா.ஜ.க ஆதரவு தர வேண்டும் என சோ பேசியதாக படித்தேன். ஏன் ஜெ வை தமிழக அரசியலில் இருந்து விரட்ட நினைக்கின்றார். நீங்கள் அல்லது திரு. கண்பத் அல்லது திரு. ரமணனோ தங்கள் கருத்தை தெரிவியுங்களேன்.
நித்தில்…
தேவகவுடா, நரசிம்ம ராவ் என தென்னகத்தில் முதல்வராக இருந்தவர்கள் பிரதமராகக் கோலோச்சும் வாய்ப்பு பெற்ற போது ஜெ அவர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவரல்லர் என்பது சோவின் கருத்தாக இருக்கலாம்.
என்னுடைய கருத்து முதலில் தமிழகத்தை முன்னேற்றி இபோதிருக்கும் இளைஞர் சக்தியை முழுகையாகப் பயன்படுத்தி முன்னேறிய மாநிலமாக மாற்றட்டும். அதன் பின்னர் பிரதமர் பதவி பற்றி ஜெ.யோசிக்கலாம் என்பதுதான்.
முதலில் நம் வீட்டுப் பசங்களுக்குச் சாப்பாடு போடட்டும். பின்னர் ஊராரின் பசியை ஆற்றலாம். 😉
அன்பின் நித்தில்,
நம் கா.மை.இரண்டாம் பதிவு போடுவதாக சொல்லியிருப்பதால் அதையும் படித்து என் கருத்தை தெரிவிப்பதாக இருந்தேன்.அதுதான் சரியும் கூட.ஆனால் உங்கள் அன்பு கட்டளையும் மீற முடியாது எனவே இப்பொழுது சுருக்கமாக சொல்கிறேன்:
ஜெ.ஒரு நல்ல பிரதமராக இருப்பார் என சோ சொல்வது ,+2 வகுப்பில் தோல்வி அடைந்த தன் மகன், IIT-JEE இல் All-India Rank வாங்குவான் என ஒரு தாய் நம்புவதற்கு ஒப்பாகும்!
மேலும் அவரை (ஜெ) மோடியுடன் ஒப்பிடுவது,(உள்ளூர்) மளிகை கடையை ,Microsoft நிறுவனத்துடன் ஒப்பிடுவது போலாகும்!
கடவுள் நம்மை காப்பாற்றட்டும்!!
திரு. கண்பத், திரு. ரமணன், தங்களுடைய பதில்களுக்கு நன்றி. என்னுடைய கேள்வி, ஏன் ஜெ வை தமிழக அரசியலி லிருந்து விரட்ட நினைக்கின்றார் என்பதேயாகும். மற்றபடி தமிழகத்திற்கோ அல்லது இந்தியாவிற்கோ இன்றைய தேவை ஒரு நேர்மையான,உண்மையான, ஆளுமை மிக்க (அகங்காரமில்லாத) நாட்டின் மீதும், மக்களின் மீதும் பற்றுதல் கொண்ட, விமரிசனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வாதிகாரியே (உ.ம். சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர்) என்பது எனது கருத்து.
NITHIL,
WELL. I APPRECIATE YOUR COMMENT.