…
…

…

…
இன்று நண்பர் சைதை அஜீஸ்
ஒரு காணொளியை அனுப்பி வைத்திருந்தார்.
அதைப்பார்த்தவுடன், என் கண் முன் தோன்றியது
சில வருடங்களுக்கு முன் இயக்குநர் பாலாவின்
“நான் கடவுள்” படத்தில் பார்த்த “பிச்சைப் பாத்திரம்”
என்கிற பாடலுடன் கூடிய காட்சிகள் தான்…
பார்த்த அன்றிலிருந்து இன்று வரை ஓயாமல் மனதில்
முள்ளாக உறுத்திக்கொண்டிருக்கின்றன
அந்தக் காட்சிகள்.
இரண்டு வீடியோக்களையும் கீழே பதிந்திருக்கிறேன்.
…
…
…
பார்க்கப் பார்க்க மனதைப் பிசைகிறது…
ஏன் இப்படி…?
இது யார் செய்த பாவம்…?
விதி,
பிராரப்த கர்மா,
தாய்-தந்தையரின் ஜீன் -ல் கோளாறு –
என்று எப்படி வேண்டுமானாலும் காரணங்களைக்
கண்டுபிடித்து சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், இந்த மனிதப் பிறவிகளின்
அவலத்தைப் போக்குவது,
துன்பங்களைக் கொஞ்சமாவது குறைப்பது –
சக மனிதர்களாகிய நமது கடமை அல்லவா…?
அவர்களது அவலங்களை குறைக்கும் முயற்சிகளில்
தொடர்ந்து நாம் ஈடுபட வேண்டாமா…?
பல நண்பர்கள் தங்கள் குடும்பங்களில்
பிறந்த நாள், திருமண நாள், போன்ற முக்கிய
விசேஷ நாட்களில் இத்தகையோர் வாழும் இல்லங்களுக்கு
சென்று உணவளிப்பது, சிறிய அளவில் நன்கொடைகளை
அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது எனக்குத் தெரியும்..
ஆனால், இப்படி ஆண்டுக்கொரு முறை வரும்
விசேட நாட்களோடு மட்டும் நிற்காமல்,
ஒவ்வொருவரும், தமது சக்திக்கேற்ப பணமாகவோ,
உடல் உழைப்பாகவோ இத்தகைய இல்லங்களுக்கு
தொடர்ந்து உதவிக் கொண்டே இருக்க வேண்டும்
என்று நண்பர்கள் முன் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.
இன்றைய காலகட்டத்தில், நடுத்தர வர்க்கத்தைச்
சேர்ந்தவர்கள் பலருக்கு இத்தகைய குணமும் வழக்கமும்
இருப்பதை நான் அறிவேன்…
இது மேன்மேலும்
பரந்த அளவில் தொடர-விரிய வேண்டும். இத்தகைய
இல்லங்களை சிலர் குழுக்களாக ஒன்றிணந்து,
தத்தெடுத்துக் கொண்டு,
அவற்றின் தரத்தை உயர்த்தி,
வசதிகளை பெருக்கிக் கொடுக்க வேண்டும்.
பசித்த வயிற்றுடன் பக்கத்திலேயே ஒருவர் இருக்கும்போது
வயிராற உண்ண நம்மால் முடியுமா…?
இவற்றை எல்லாம் செய்தால் தான் நமது
மனசாட்சியின் உறுத்தல் கொஞ்சமாவது குறையும்.
நண்பர்கள் நிச்சயம் செய்யக்கூடியவர்கள் தான் என்பது
எனக்குத் தெரியும்… நான் இங்கு எழுதுவது
ஒரு நினைவூட்டலுக்காக மட்டுமே.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
—————————————————————————————————————



முதல் வரிகளைப் படித்த்தும் எனக்கு நான் கடவுள் திரைப்படம்தான் நினைவுக்கு வந்தது. பார்ப்பவர்களில் மனசு சொல்பவர்களுக்கு மட்டும்தான் உதவுகிறேன். குழந்தையோடு பிச்சை எடுப்பவர்களுக்கோ, மிகச் சிறுவர்கள் பிச்சை எடுத்தாலோ நிச்சயம் உதவுவதில்லை. அனாதை இல்லங்களுக்கு உதவலாம்.
நீங்கள் சொல்வது போல் வீட்டில் குழந்தைகளின்
பிறந்த நாட்களில் ஏற்கெனவே செய்து வருகிறோம்.
இதற்கு மேலும் செய்ய உங்கள் காணொளி
தூண்டுகிறது. அவசியம் செய்வோம்.
இவர்கள் ஒரிஸ்சாவில் உள்ள Vikas Deepti தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் நிலையத்தில் உள்ளவர்கள் ஆவர். காணொலி ரேடியோ வெரிட்டாஸ் ஆல் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.
உங்கள் தகவலுக்கு நன்றி சக்தி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்