பல்ட்டி…!!!


“பல்ட்டி” அடிப்பது ஒரு கலை…
எல்லாராலும் பல்ட்டி அடித்து விட முடியாது.
சர்க்கஸ்காரர்கள் சகஜமாக செய்வார்கள்.

அரசியல்வாதிகள் அதைவிட பிரமாதமாகச்
செய்வார்கள். ஆனால் அரசியல்வாதிகள் தாங்கள்
பல்ட்டி அடிக்கிறோம் என்பது வெளியில் தெரியாதபடிக்கு
அடித்தால் தான் அது “வெற்றிகரமான பல்ட்டி…”… !!!

———–

இது நேராக நின்று கொண்டிருக்கும்போது சொன்னது –

“இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு.
ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது.
ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பதும்
அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின்
அடையாளமாக இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை
ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும்
இந்தி மொழியால்தான் முடியும்.

இது பல்ட்டி அடித்த பிறகு சொன்னது –

” நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் தங்களது
உள்ளூர் மொழிகள் மக்களால் மறக்கப்பட்டு ஆங்கிலம் தான்
இணைப்பு மொழியாகவும், பொது மொழியாகவும் மாறிவிட்டது.

அதுபோன்ற நிலை இந்தியாவுக்கு வரக்கூடாது
என்பதற்காகத்தான், இரண்டாவது மொழியாக இந்தியையும்
கற்றுக் கொள்ளலாம் என்று நான் தெரிவித்திருந்தேன்.

———————-

பிரச்சினை என்னவென்றால் – பல்ட்டி அடிக்கும்போது,
உதவியாளர்கள் தவறு செய்து விட்டால், பல்ட்டி
பல்லிளித்து விடும்…!!!

ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் – குடியேற்றங்களால்
நிரம்பிய நாடு. மிக சொற்ப அளவில் இருந்த ஆதிவாசிகளை
விரட்டி விட்டு அல்லது ஒதுக்கி விட்டு, குடியேறிய
வெள்ளைக்காரர்கள் முழு நாட்டையும் ஆக்கிரமித்துக்
கொண்டார்கள். ஆதிவாசிகள் மிஞ்சிப்போனால் பத்து சதவீதம்
இருக்கலாம்.

நாட்டை இன்று நிரப்பியவர்களின் தாய்மொழி ஆங்கிலம்.
எனவே அவர்களது மொழியான ஆங்கிலம் தான்
வழக்குமொழி… ஆட்சிமொழி என்பதெல்லாம். இத்தனைக்கும்

– ஆஸ்திரேலியாவில் அதிகாரபூர்வமாக எந்த மொழியும்
ஆட்சிமொழி என்று அறிவிக்கப்படவே இல்லை.
Australia has no official language, English is regarded
as the de facto national language of Australia and is spoken by all –
with more than 160 – ( spoken -only – ) languages…

நியூசிலாந்திலும் இதே கதை தான்… English is the predominant
language and a de facto official language of New Zealand.
Almost the entire population speak it either as native speakers
or proficiently as a second language.

——————

இந்த கதைகளை இந்தியாவுடன் எப்படி ஒப்பிட முடியும்…?
முட்டாள் உதவியாளர்கள் தரும் புள்ளி விவரங்களை
வைத்துக் கொண்டு இந்த மாதிரி சென்சிடிவ் விஷயங்களை
பேசக்கூடாது என்பது இப்போது புரிந்திருக்கும்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும், மொழிவாரியாகத்தான்
அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களிலும்
தாய் மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. எனவே,
மாநிலங்களில் புழங்கும் மொழி தான் ஆட்சிமொழியாகவும்
இருக்கிறது…

இங்கே தாய்மொழியை மறக்கும் விஷயம் எப்படி வரும் …?
( முட்டாள் உதவியாளர்கள்………..!!! )

இங்கு ஒரே ஒரு கேள்வி மட்டும்….

இவர்கள் மண்டையில் ஆங்கிலம் ஏறவில்லையென்றால் –
இவர்களால் ஆங்கிலத்தில் சிறப்பாக பேசவோ, எழுதவோ
முடியவில்லை என்றால் – பாதகம் ஒன்றுமில்லை….
இவர்கள் ஹிந்தியை மட்டும் படித்துக் கொள்ளட்டும்…
குண்டுச் சட்டியான ஹிந்தி மாநிலங்களிலேயே
தமது வாழ்நாள் முழுவதையும் கழித்துக் கொள்ளட்டும்.
அதில் நமக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை.

ஆனால், 200 ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சிமொழியாக
புழங்கி, பெரும்பாலான மக்களால் – பேசினால்,
(சுமாராகவாவது) புரிந்துக்கொள்ளக்கூடிய அளவில் இருக்கும்
ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டுமென்று இவர்கள்
கங்கணம் கட்டிக்கொண்டு அலைவது ஏன்…?

( அரசியல் சட்டம், இந்திய மக்கள் அனைவரும் சமம் என்று உறுதி தருகிறது…
ஹிந்தி பேசுபவர்கள் மட்டும் முன்னுரிமை பெற வேண்டும் என்றல்ல…)

நாம் ஆங்கிலம் கற்பதை, உலக அளவில் ஏற்றம் பெறுவதை
இவர்கள் ஏன் தடுக்க வேண்டும்….?
நாமும் இந்த நாட்டின் சக குடிமக்கள் தானே…?
நாம் முன்னேறி விடக்கூடாது என்று இவர்களுக்கு ஏன்
அத்தனை கெட்ட எண்ணம்….?

இவ்வளவு பேசுபவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்…

ஹிந்தியில் கல்லூரி அளவில் –
கெமிஸ்ட்ரி படிக்க முடியுமா…?
கணிதம் படிக்க முடியுமா…?
மருத்துவம் படிக்க முடியுமா…?
சி.டி.ஸ்கேன் ரிப்போர்ட் தயார் செய்ய முடியுமா…?
ரத்த அழுத்த பரிசோதனை ரிப்போர்ட்டாவது கிடைக்குமா…?
குறைந்த பட்சம் 10 வியாதிகளுக்கான
ப்ரிஸ்கிரிப்ஷனை எழுத முடியுமா…?
கம்ப்யூட்டர், மானிடரை பார்த்து –
பயணிகள் விமானத்தை, போர் விமானத்தை ஓட்ட முடியுமா…?

பின் ஏன் இப்படி வெறிபிடித்து அலைகிறார்கள்…?

.
———————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to பல்ட்டி…!!!

  1. புவியரசு's avatar புவியரசு சொல்கிறார்:

    நீங்கள் சொல்லும் பல விஷயங்கள்
    இந்த தொலைக்காட்சி விவாதங்களிலேயே
    இடம் பெறுவதில்லையே ஏன் ?

    இப்போது தான் நான் கூட யோசிக்கீறேன்:

    ஹிந்தியில் B.Sc.Chemistry, M.Sc.Chemistry,
    M.Sc. Maths எல்லாம் எப்படி படிப்பார்கள் ?
    அவற்றிற்கான ஹிந்தி சொற்களே இன்னும்
    உருவாகவில்லையே ?

    குறைந்த பட்சம் மருத்துவமனை ரிப்போர்ட்டுகள் கூட
    ஹிந்தியில் பெற முடியாதே. ஹிந்தி மட்டும் தெரிந்த
    நர்சுகள், கம்பவுண்டர்கள் உண்டா ?

    MBBS ஹிந்தியில் படிக்க முடியுமா ?
    ஹிந்தியில் மட்டும் படித்தால், ISRO – விக்னானிகளால்
    சந்திராயன், மங்கள்யான் எல்லாம் அனுப்ப முடியுமா ?

    இந்த ஹிந்தி வெறிய பாஜக மந்திரிகள் யாரையாவது
    அக்னி பரீட்சை’க்கு கூப்பிட்டு, இந்த கேள்விகளை
    எல்லாம் கேட்பார்களா ?

  2. புவியரசு's avatar புவியரசு சொல்கிறார்:

    புதிய தலைமுறை கார்த்திகைச் செல்வன்
    உடனடியாக முயற்சிக்க வேண்டும்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      கண்டிப்பாக புதிய தலைமுறை இத்தகைய விவாதத்தைத் துவக்கும். பாஜக எதிர்ப்பு நிலையில்தானே இப்போது பச்சமுத்து இருக்கிறார். அதனால் கார்த்திகைச் செல்வன் தாராளமாக இதனைச் செய்வார். மற்றபடி திமுக சம்பந்தப்பட்ட எந்த விவாதத்தையாவது கார்த்திகைச் செல்வன் செய்தால் ரங்கராஜ் பாண்டே கதிதான் அவருக்கும்.

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நான் படித்தது, ஒவ்வொருவரும் தாய்மொழி தவிர்த்து, இந்தியாவுக்கான பொது மொழியாக ஹிந்தியை உபயோகிக்கவேண்டும், ஆங்கிலத்தை அல்ல என்று அமித் ஷா சொன்னார் என்பது. இது தவறுதான். இந்தியாவுக்கான பொதுமொழி (குறைந்தபட்சம் தென்னிந்தியர்களுக்கு) ஆங்கிலம்தான். தமிழர்களும் ஹிந்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்தால், ஒருவேளை அனைவராலும் பேசமுடிந்த மொழியாக ஹிந்தி இருக்கும். அந்த நிலையிலும் ‘ஹிந்தி’தான் இந்தியாவின் மொழி என்றால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஒவ்வொருவரும் அவரது மாநில மொழியைத்தான் தூக்கிப்பிடிக்க நினைப்பார்கள். அரசியலில் பாஜகவுக்கு சறுக்கல் ஏற்படும். அதனால்தான் உடனடியாக அமித்ஷா பல்டியடித்திருக்கிறார். நேரு காலத்திலிருந்தே, காங்கிரசின் இத்தகைய முயற்சிகள் படுதோல்வியடைந்திருக்கின்றன என்பதை அமித்ஷா எப்படி அறியாமல் போனார்?

    ஆங்கிலத்தைத் தவிர்த்து பட்டப்படிப்பை எந்த மொழியிலும் படிக்க முடியாது, தமிழ் உட்பட. ஆங்கிலத்தை விலக்கி முழுமையான மொழி என்று ஒன்று இந்தியாவில் கிடையாது, தமிழ் உட்பட, ஆங்கிலம் கலக்காமல் எதையும் பேச முடியாது. அப்படிப் பேசுபவர்களும் எனக்குத் தெரிந்து கிடையாது.

    ஆங்கிலம் கற்பதால்தான் நமக்கு (இந்தியர்களுக்கு) வெளிநாட்டில் வாய்ப்புகள் பெருகுகின்றன. எந்த தேசத்திற்கும் போய் நாம் பிழைத்துக்கொள்ளலாம் என்ற நிலையை ஆங்கிலம் மட்டும்தான் நமக்கு உருவாக்கியிருக்கிறது. உலகப் பொதுமொழி ஆங்கிலம்தான் என்று தாராளமாகச் சொல்லலாம். வேறு எந்த மொழிக்கும் அதற்கான தகுதி இல்லை.

  4. புவியரசு's avatar புவியரசு சொல்கிறார்:

    // நேரு காலத்திலிருந்தே, காங்கிரசின் இத்தகைய முயற்சிகள் படுதோல்வியடைந்திருக்கின்றன என்பதை அமித்ஷா
    எப்படி அறியாமல் போனார்? //

    அறியாமலா செய்கிறார். அறிந்து தான்,
    வேண்டுமென்று தான் செய்கிறார்.
    ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிப்படைக் கொள்கையை
    எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பது தானே
    அவர்களது முடிவு. வெறி கொண்டவர்கள்
    வெற்றி தோல்வியைப்பற்றி கவலைப்படுவதுண்டா ?
    இப்போது பதுங்கினாலும் 6 மாதங்களில் இது வேறூ
    வடிவத்தில் வரும்.

  5. Jksmraja's avatar Jksmraja சொல்கிறார்:

    KM சார்,

    உங்கள் இடுக்கையின் தொனி, அமித்ஷா, எதிர்ப்பைக்கண்டு பல்ட்டி அடித்துவிட்டார் என்பது போல உள்ளது . அதேபோல ஊடகங்களும், அவர் பின்வாங்கிவிட்டார் என்பது போல விவாதிக்கிறார்கள். இது உண்மை அல்ல. ஆட்சியாளர்கள்- எதை, எப்படி யாருக்கு கடத்தவேண்டும் என்று நினைத்தார்களோ, அதை நூறு சதவிகிதம் வெற்றியுடன் கடத்தி விட்டார்கள். இதைத்தான் அவர்கள் எதிர்பார்த்தது. மற்றப்படி இது ஆர் எஸ் எஸ் இன் சித்தாந்தம் என்பது எல்லாம் பம்மாத்து வேலை.

    இந்தி வெறியர்களின் மனதில் இந்தி வெறியை விதைத்தாகிவிட்டது. இந்தி நேஷனல் மொழியாக இல்லாதிதனனால் இந்தியா இதுவரை முன்னேறாதது போலவும் , இந்தி நேஷனல் மொழியாகிவிட்டால் அமெரிக்காவை மிஞ்சிவிடும் என்பது போலவும், மேலும் இந்தி தெரிந்தால் எங்குவேண்டுமானாலும் சென்று நன்கு சம்பாதிக்கலாம் என்பது போலவும் வட இந்தியாவில் ஆரம்பித்துவிட்டார்கள். ஆக அவர்களின் நோக்கம், எல்லா வட இந்தியர்களையும் தன் பக்கம் ஈர்ப்பது.

    பாகிஸ்தான், முஸ்லீம், மாடு என்று சொல்லி இந்துக்களை தன் பக்கம் ஈர்த்தாகி விட்டது. மேல் சாதியினருக்கு பத்து சதவிகிதம் என்று சொல்லி அவர்களையும் ஈர்த்தாகிவிட்டது. இப்பொழுது எல்லா இந்தி பேசும் மக்களையும் தன் பக்கம் ஈர்க்க விதைத்தாகிவிட்டது. காசுக்காக மாரடிக்கும் பெரிய குள்ளநரி கூட்டமே இந்தமாதிரியான ஐடியா கொடுக்க வேலை செய்கிறது. அவர்களின் வஞ்சக வலையில் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம். அவர்கள் டார்கெட் பண்ணுவது, எல்லா வட இந்தியர்களையும் மொத்தமாக அவர்கள் என்னதான் முயற்சி பண்ணினாலும் தென் இந்தியாவில் கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் வெற்றி பெறுவது கடினம் என்பதை நன்றாக புரிந்து கொண்டார்கள்.

    நீங்கள் ஒரு இருக்கையில் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு மோடிதான் என்பது போல எழுதி இருந்தீர்கள். எனது எண்ணம் என்னவென்றால் இப்பொழுது இந்தியாவிற்கு கிரகணம் பிடித்திருக்கிறது. இது விலக, மக்கள் தெளிவு பெற, இன்னும் குறைந்தது பதினைந்து முதல் இருபது ஆண்டுகள் வரை ஆகலாம். அமித்ஷா பின்வாங்கிவிட்டார் என்பது போன்ற தொடர்ந்து நடக்கும் விவாதங்கள் எல்லாம் அவர்களின் ஆணைப்படி நடப்பதுதான். இதன் மூலம் இந்தி பேசும் மக்களை இந்தி வெறியர்களாக்கி, நாம் இவர்களை ஆதரித்தால்தான் இந்தி தேசிய மொழியாகி, இந்தியா சொர்க்கமாக மாறும் என்று நம்ப வைப்பதாதற்காகவே. இவர்கள் விரிக்கும் வஞ்சக வலையை வீழ்த்த தற்போது இந்தியாவில் எந்த ஒரு தலைவரும் இல்லை என்பதே எதார்த்தம்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Jksmraja,

      நீங்கள் சொல்வதிலும் நிறைய உண்மைகள்
      இருக்கின்றன..

      விதியில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா…?
      எனக்கு இருக்கிறது… 🙂 🙂

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.