ஹாங்காங்க் – உயிர்ப்புள்ளதொரு மக்கள் போராட்டம்….!!!


ஹாங்காங்க் மக்களின் வித்தியாசமான போராட்டம்,
உலகையே அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

1841 முதல் 1997 வரை பிரிட்டனின் காலனி நாடாக இருந்த
ஹாங்காங்க், ஒப்பந்த கால முடிவில், 1997ம் ஆண்டு
சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு,அதன் பின் ஒரு தேசம்,
இரண்டு அமைப்பு என்று சீனாவின் ஒரு பகுதியாக இயங்கி
வருகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியில் சுதந்திரமாக வாழ்ந்த ஹாங்காங்க் மக்கள்,
சீன அதிகாரத்திற்குள் வந்த பிறகு, தாங்கள் அனுபவித்து வந்த
முழு சுதந்திரத்தை இழந்து, புழுக்கத்தில் இருக்கிறார்கள்.

ஹாங்காங்கிற்கு என்று தனிச்சட்டம் உள்ளது.
சீன மக்களுக்கு கிடைக்காத ஜனநாயக சுதந்திரம் ஹாங்காங்
மக்களுக்கு உள்ளது.

இருந்தாலும், எப்படியாவது தங்களின் முழு கட்டுப்பாட்டில்,
சீனாவின் மற்ற பிரதேசங்களைப்போல், ஹாங்காங்கையும்
கொண்டு வர தன்னாலியன்ற விதங்களில் எல்லாம்
சீனா முயற்சித்து வருகிறது.

அதில் லேடஸ்ட் முயற்சி –

ஹாங்காங்கில், கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு,
வழக்கைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள கைதிகளை,
சீனாவிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கும் ஒரு
சட்ட மசோதா ஹாங்காங்க் சட்டமன்றத்தில்
முன் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது நிறைவேறினால், ஹாங்காங்கில், சீன அரசுக்கு
விரோதமாக பேசுபவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, அவர்கள்
சீனாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அரசியல் ரீதியாக
தண்டிக்கப்படுவார்கள் என்று ஹாங்காங்க் மக்கள்
அஞ்சுகிறார்கள்.

அதன் விளைவே, இந்த சட்ட மசோதாவை
கைவிட வேண்டுமென்று வற்புறுத்தி, லட்சக்காணக்கான மக்கள்
வீதியில் இறங்கி போராடுகிறார்கள். சுமார் 10 லட்சம்
பேர் கூடி – மிக பிரம்மாண்டமான அளவில் போராட்டங்கள் நடந்து
கொண்டிருக்கின்றன … அவர்களின் போராட்ட வழிகள்
வித்தியாசமாக இருக்கின்றன…. நவீன உலகில்,
ஜனநாயக வழியில் எப்படி போராடுவது என்று புதிய பாடங்களை
கற்றுக் கொடுக்கின்றன.

10 லட்சம் பேர் திரண்டாலும், சொல்லிக்கொள்கிற மாதிரி
பெரிய அளவிலான வன்முறைகள் எதுவுமில்லை.

பேரணிகளை கலைக்க, முதல் நாள் கண்ணீர் புகை
குண்டுகளையும், அதிவேகத்தில் தண்ணீர் பாய்ச்சியும்
போலீஸ் முயன்றது. விளைவு – மறு நாள் போராட்டத்திற்கு
வந்த மக்கள், வாய்,மூக்கை மூடும் கவசமும், பீய்ச்சி
அடிக்கப்படும் தண்ணீரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள
குடைகளையும் எடுத்து வந்தார்கள். லட்சக்கணக்கான மக்கள்,
கையில் கலர்கலராக குடைகளை பிடித்துக்கொண்டு
ஊர்வலம் வருவதே வித்தியாசமாக இருக்கிறது….

தற்போதைக்கு, சட்டமன்றத்தில், இந்த மசோதா குறித்த
விவாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,
இதை நிறைவேற்றுவதில் சீன ஆதரவு
ஹாங்காங்க் அரசு உறுதியாக இருக்கிறது…
அதே அளவிற்கு இந்த சட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம்
என்று மக்களும் உறுதியாக இருக்கிறார்கள்….

தங்களிடமுள்ள மிச்ச மீதி சுதந்திரத்தையும் பறிகொடுக்க
அந்த மக்கள் தயாராக இல்லை. அதற்காகத்தான்
லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.

இடைவெளி விட்டு, போராட்டங்கள் தொடர்கின்றன….
ஹாங்காங்க் மக்களின் ஜனநாயக வழியிலான போராட்டம்
வெற்றி பெற வாழ்த்துவோம்.

கீழே – போராட்டம் குறித்த சில காணொளி காட்சிகள் –

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ஹாங்காங்க் – உயிர்ப்புள்ளதொரு மக்கள் போராட்டம்….!!!

  1. Ramnath's avatar Ramnath சொல்கிறார்:

    10 லட்சம் பேர் தெருக்களில் இறங்கி போராடும்
    காட்சிகள் வியப்பு தருகின்றன. வன்முறை இல்லாமல்
    போராட நம் மக்கள் கூட தெரிந்து கொள்ள இதில் நிறைய
    இருக்கின்றது.
    வீண் அலம்பல் செய்யும் தலைவர்கள் யாரையும்
    இந்த கூட்டத்தில் காணவில்லை என்பது இன்னும் சிறப்பு.

    .

  2. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    China will easily crush this with the help of Hong Kong. It comes to my mind How China crushed
    and killed his own protesting students some years back in TIANNEN squarw.

  3. Prabhu Ram's avatar Prabhu Ram சொல்கிறார்:

    நான் அப்படி நினைக்கவில்லை சார்.
    ஹாங்காங் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்
    சுதந்திரமாக இருந்து பழகியவர்கள். தங்கள்
    சுதந்திரத்தை, உரிமையை தக்கவைத்துக்கொள்ள
    ஒருங்கிணைந்து போராடுவார்கள். 50 லட்சம் மக்களை
    சீன ஆதரவு உள்ளூர் அரசால் அடக்க முடியாது.
    போராட்டம் தொடர்ந்தால், அரசு சட்டத்தை நிச்சயமாக
    திரும்பப்பெற வேண்டியிருக்கும்.

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஹாங்காங்க் மக்களின் போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது…

    லேடஸ்ட் தகவல் –
    https://www.bbc.com/tamil/global-48647188

    ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை ஹாங்காங் அரசாங்கம் கைவிடுவதாக அதன் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.

    முன்னதாக, ஹாங்காங்கில் தீவிர போராட்டங்கள் நடந்தும்கூட மசோதாவை ரத்து செய்ய முடியாது என்று அவர் தெரிவித்திருந்தார்.

    “எங்கள் நடவடிக்கையில் இருந்த குறைபாடுகள் மற்றும் வேறு பல காரணிகள் சர்ச்சைகளை தூண்டிவிட்டதற்கு நான் ஆழ்ந்த துக்கத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறேன்.” என்று ஹாங்காங்க் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.

    ———————————

    மகிழ்ச்சி…!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.