…
…

…
இன்றைய தினம் மிகத்தீவிரமாக இந்தியா பிடிக்க விழையும் பயங்கரமான தீவிரவாதி மசூத் அசாரின் முன் கதை இன்றைய தலைமுறையில் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்காது.
– 1999, டிசம்பரில் – இந்தியாவில், காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த
இந்த கொடிய தீவிரவாதி, இந்திய அரசாலேயே விடுவிக்கப்பட்டு –
( அப்போது மத்தியில் வாஜ்பாய் அவர்களின் தலைமையில் பாஜக
ஆண்டுகொண்டிருந்தது …)
– இந்திய அரசின் மூத்த அமைச்சர் திரு.ஜெஸ்வந்த் சிங் அவர்களால் பத்திரமாக ஆப்கானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டு, சுதந்திரமாகச் செல்ல விடுவிக்கப்பட்டான் என்கிற அவலமான செய்தியை இன்று ஜீரணிப்பது மிகக்கஷ்டமாகத்தான் இருக்கும்… ஆனால் அது தான் உண்மை…
இந்த கதையை/சரித்திரத்தை – அறியாதவர்களுக்காகவும், சரியாக நினைவில் கொள்ளாதவர்களுக்காகவும் சுருக்கமாக கீழே –
———————————————————————————
மசூத் அசார் முதல் முறையாக இந்தியாவுக்குள் நுழைந்தது 1994-ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி. விமானம் மூலம், டாக்காவிலிருந்து போர்த்துக்கீசிய கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) பயன்படுத்தி டெல்லிக்கு வந்தான்.
பிறகு, நாடு முழுவதும் தீவிரவாத செயல்பாடுகளில் காஷ்மீரின் இளைஞர்களை ஈடுபட வைப்பதற்குரிய பல்வேறு நடவடிக்கைகளில் அவன் ஈடுபட்டான். காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர்களில் முக்கியமானவரான சஜ்ஜத் ஆப்கானியுடன், அவன் ஆட்டோ ஒன்றில் பயணித்து கொண்டிருந்தபோது காவல்துறையினரால் அனந்தநாக் பகுதியில் கைது செய்யப்பட்டான்.
மசூத் அசார் சிறையில் அடைக்கப்பட்ட பத்தாவது மாதம்,
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலரை கடத்திய தீவிரவாதிகள் மசூத் அசாரை விடுதலை செய்தால்தான் அந்த வெளிநாட்டவர்களை விடுவிக்க முடியுமென்று மிரட்டல் விடுத்தனர்.
ஆனால், டெல்லி மற்றும் காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து
செயல்பட்டதில் கடத்தப்பட்ட வெளிநாட்டவர்களில் இருவரை மட்டும் மீட்க முடிந்தது.. மற்றவர்களை பின்னர் கண்டுபிடிக்கவே முடியவில்லை…. (தீவிரவாதிகளால் தீர்த்துக் கட்டப்பட்டிருக்க வேண்டும்….) மசூத் அசாரும் விடுதலை செய்யப்படவில்லை.
இனி மிரட்டல் விடுக்கும் செயல்பாடு பலனளிக்காது என்ற முடிவுசெய்து, மசூத் அசார் அடைக்கப்பட்டிருந்த ஜம்முவின் கோட் பல்வாள் சிறைச்சாலையில்
1999-ஆம் ஆண்டு ரகசியமாக சுரங்கம் அமைத்தார்கள் தீவிரவாதிகள். பருமனான உடலமைப்பை கொண்ட மசூத் சுரங்கப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது சிக்கிக்கொண்டதால், சிறை அதிகாரிகளிடம் பிடிபட்டான்.
அடுத்த சில மாதங்களிலேயே, அதாவது 1999 டிசம்பர் மாதம், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்திய பயணிகள் விமானத்தை நடுவானில் கடத்திய தீவிரவாதிகள், மசூத் அசார் உள்ளிட்ட இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மூன்று தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுமென்று நிபந்தனை விதித்தனர்.
இந்தியாவின் அமிர்தசரஸ், பாகிஸ்தானின் லாகூர், மத்திய கிழக்கில் துபாய் என பல இடங்களுக்கு விமானத்தை அலைக்கழித்த கடத்தல்காரர்கள், அச்சமயத்தில் ஆப்கானிஸ்தான் தங்கள் முழுக் கட்டுப்பாட்டிலிருந்ததால், கடைசியாக விமானத்தை ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகருக்கு கொண்டு சென்றனர். பிறகு, தீவிரவாதிகள் சொன்னபடி, இந்திய அரசாங்கம் 3 சிறைக்கைதிகளையும் விடுதலை செய்தது.
ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஸ்தாக் அஹ்மத் சர்க்காரும், ஜம்முவிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த மசூத் அசாரும் ஸ்ரீநகருக்கு அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து இந்திய புலனாய்வு அமைப்பின் சிறிய ரக விமானத்தில் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.
இந்திய புலனாய்வு அமைப்பின் அன்றைய தலைவரான அமர்ஜீத் சிங் டுலாட் சிங் கூறுகிறார்….
“இரண்டு தீவிரவாதிகளின் கண்களும் கட்டப்பட்டிருந்தன. நான் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர், அவர்கள் இருவரும் விமானத்தின் பின்பகுதியில் இருந்த இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.
அதாவது, விமானத்தின் இடையே திரைச்சீலை ஒன்று போடப்பட்டிருந்தது. அதன் ஒரு முனையில் அவர்கள் இருவரும், மறுமுனையில் நானும்
அமர்ந்திருந்தோம்” .
தாங்கள் ஸ்ரீநகரிலிருந்து டெல்லியை நோக்கி புறப்படுவதற்கு ஒரு சில
நொடிகளுக்கு முன்னதாக, நாங்கள் விரைந்து டெல்லிக்கு வர வேண்டுமென்றும், அங்கு ஏற்கனவே காத்திருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், விமான நிலையத்திலிருந்து நேரடியாக கந்தஹாருக்கு புறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.
“டெல்லி சென்றடைந்த பிறகு – மசூத் அசாரும், சர்க்காரும் காந்தஹாருக்கு அழைத்து செல்லப்படவிருந்த விமானத்தில் ஏற்றப்பட்டனர்…ஏற்கனவே அந்த விமானத்தில் மற்றொரு தீவிரவாதியான உமர் ஷேக்கும் இருந்தார்,” என்கிறார் அமர்ஜீத் சிங்…
மூன்று தீவிரவாதிகளை காந்தஹாருக்கு அழைத்துச்சென்று ஒப்படைத்தவுடன், தீவிரவாதிகள் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துள்ள விமானப் பயணிகளை அங்கிருந்து அழைத்து வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தபோது, இந்திய வெளியுறவுத்துறை, புலனாய்வுத்துறை உள்ளிட்டவற்றை சேர்ந்த உயரதிகாரிகள்,
-ஒவ்வொரு முடிவையும் எடுப்பதற்கும் டெல்லியை அணுகுவதை விடுத்து, மிகப் பெரிய முடிவையும் எடுக்கும் வகையிலான ஒருவரை மட்டும் அனுப்பி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
…

…
அதையடுத்து, அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜஸ்வந்த் சிங், தீவிரவாதிகளுடன்
காந்தஹாருக்கு சென்றார். எனினும், நீண்ட நேரம் காத்திருந்தபோதும் –
தீவிரவாதிகள் பேச்சுவார்த்தைக்காக ஜஸ்வந்த் சிங் வந்த விமானத்தை
அணுகவில்லை.
…

…

…
தனது சுயசரிதையான –
‘ஏ கால் டூ ஹானர் – இன் சர்விஸ் ஆஃப் எமெர்ஜென்ட் இந்தியா’வில் (A Call to Honor – In Service of Emergent India) அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் –
“வெகு நேரத்திற்கு பிறகு, எங்களது விமானத்திலிருந்த வாக்கி-டாக்கியில்
ஒலி கேட்டது. அப்போது, என்னிடம் வந்த வெளியுறவுத்துறையின்
இணை செயலரான விவேக் கட்ஜு, ‘ஐயா, அவர்கள் பணயக்கைதிகளை
விடுவிப்பதற்கு முன்னர், நாம் முதலில் தீவிரவாதிகளை விடுவித்தாக
வேண்டுமா?’ என்று கேட்டார். எனக்கு எந்தவொரு வழியுமில்லாததால்,
தாலிபன்களின் சொல்லை ஏற்றுக்கொண்டேன்”.
முன்னதாக, ஜம்மு & காஷ்மீரின் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மசூத் அசார் மற்றும் முஸ்தாக் அஹ்மத் சர்கார் ஆகியோரை விடுவிப்பதற்கு –
-அன்றைய அம்மாநில முதலமைச்சர் பரூக் அப்துல்லா சம்மதிக்கவில்லை….
சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக மத்திய அரசு சார்பில் இந்திய புலனாய்வு அமைப்பின் அப்போதைய தலைவரான அமர்ஜீத் சிங் டுலாட் ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் கருத்துத் தெரிவித்துள்ள –
பரூக் அப்துல்லா-
“தற்போது எங்களை தேசத்துரோகிகள் என்று அழைப்பவர்களிடம்,
மசூத் அசாரை விடுவிக்க வேண்டாம் என்று நாங்கள் 1999-ஆம் ஆண்டே
கூறியிருந்தோம். பாஜக அரசின் அன்றைய முடிவுக்கு அன்று மட்டுமல்ல,
இன்றும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே செய்கிறோம்” என்று
கூறியுள்ளார்…
( இதில் சில விவரங்கள் பிபிசி செய்தித் தளத்திலிருந்து எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ளன… அதற்காக பிபிசி செய்தி தளத்திற்கு நன்றி…)
———————————————————————————
இந்த சம்பவம் நடந்த காலத்தில், நான் டெல்லி அருகே தான்
பணிபுரிந்து கொண்டிருந்தேன்… நடந்த சம்பவங்கள் இப்போதும் ஓரளவு நினைவில் இருக்கின்றன…அப்போது நடந்து கொண்டிருந்தவற்றை
நாங்கள் எல்லாம் மிகவும் பதட்டத்துடனும், கவலையுடனும் கவனித்துக்
கொண்டிருந்தோம்….
ஏனெனில், அன்றைய தினம், கடத்தப்பட்ட விமானம் கொண்டுபோய்
நிறுத்தப்பட்டிருந்த இடமான ஆப்கானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையமும், அதனையொட்டியிருந்த ஆப்கனின் பெரும்பாலான இடங்களும், தீவிரவாதிகளான தாலிபான்கள் வசம் தான் இருந்தன. காந்தஹார் விமான நிலையம் முழுக்க முழுக்க – தாலிபான் கண்ட்ரோலில் தான் இருந்தது.
நான் அன்றைய இந்திய அரசின் இந்த செயலில்
எந்தவித தவறையும் காணவில்லை…
அன்றைய காலகட்டத்தில் ஆட்சியில்
யார் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருக்க முடியும்…
கடத்தப்பட்ட விமானத்தில் இருந்த இந்தியப் பயணிகள்
பத்திரமாக உயிருடன் மீட்கப்படவேண்டியதாக இருந்தது… எனவே, அன்றைக்கு யாரும் வாஜ்பாய் அரசை குறை சொல்லவில்லை…
– இன்றைக்கும் –
நான் நிச்சயம் அதை குறை கூற மாட்டேன்.
ஆனால் – இன்று அந்த விவகாரம் சிலரால் எழுப்பப்படுகிறது என்றால் –
அதற்கான முழு காரணமும், தங்களின் அஜாக்கிரதை காரணமாக 41 ராணுவ வீரர்களை பலி கொடுத்த பாவத்தையும் செய்து விட்டு –
– நாங்கள் சூராதி சூரர்களாக்கும் -வீராதி வீரர்களாக்கும் என்று
வீண் பெருமை பேசி, மற்றவர்களின் எரிச்சலைக் கிளப்பும் விதத்தில் – மார்தட்டிக் கொள்ளும் ஆட்சியில் இருக்கும் சிலர் தான்…
.
———————————————————————————



அய்யா …! // ஸ்ரீநகருக்கு அழைவரப்பட்டு, அங்கிருந்து இந்திய புலனாய்வு // என்ற வரியில் ” அழைவரப்பட்டு ” என்பதை சரி செய்யவும் ..
நன்றி செல்வராஜன்.
பிழை சரி செய்யப்பட்டு விட்டது.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா .. ! மசூத் அசார் தொடர்புள்ள 2001 டிசம்பரில் பாராளுமன்ற தாக்குதல் பற்றியும் பதிவில் குறிப்பிட்டு இருக்கலாம் …..
// மசூத் அஸாருக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு? // https://www.bbc.com/tamil/india-47595622 தொடர்ந்து மசூத் அஸாருக்கு ஆதரவாக செயல்படும்
சீனாவுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுக்க போகிறது ….. வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று இனியாவது தோன்றுமோ இந்த // – நாங்கள் சூராதி சூரர்களாக்கும் -வீராதி வீரர்களாக்கும் என்று
வீண் பெருமை பேசி, மற்றவர்களின் எரிச்சலைக் கிளப்பும் விதத்தில் – மார்தட்டிக் கொள்ளும் ஆட்சியில் இருக்கும் // இவர்களுக்கு …?…
/// ஆனால் – இன்று அந்த விவகாரம் சிலரால் எழுப்பப்படுகிறது என்றால் –
அதற்கான முழு காரணமும், தங்களின் அஜாக்கிரதை காரணமாக 41 ராணுவ வீரர்களை பலி கொடுத்த பாவத்தையும் செய்து விட்டு – ///
பலி தான் கொடுக்க பட்டுள்ளனர்.
அது அஜாக்கிரதையினாலா அல்லது தேர்தல் வெ(ற்)றியினாலா என்று மக்களிடம் சந்தேகம் இருக்கிறது.
அந்த சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக கேட்கப்பட்டால் உண்மை ஒருக்கால் வெளிவருமா…?
இது சம்பந்தமான தொடர் கேள்விகளை சீமான் கேட்டுள்ளார்.
பதில் சொல்ல தான் ஆளில்லை.