இங்கிருந்து just 3200 கி.மீ. தாண்டினால் – ஒரு தமிழ் ஊர் ….!!!

moreh-8

சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியமாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்
இருந்தபோது, பாஸ்போர்ட் வேண்டாம், விசா வேண்டாம் –
கஸ்டம்ஸ் கிடையாது – இமிக்ரேஷன் தொல்லை இல்லை….

தென் ஆப்பிரிக்காவிலிருந்து, சிலோனிலிருந்து
(இன்றைய ஸ்ரீலங்கா ) மலேயா, சிங்கப்பூரிலிருந்து,
பிஜி, மொரிஷியஸ்,ரீ-யூனியனிலிருந்து, பர்மா (இன்றைய
மியான்மர் ) வரை எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

எப்போது வேண்டுமானாலும் போகலாம் – எப்போது
வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலை இருந்தபோது –

சிறு சிறு குழுக்களாக, குடும்பம் குடும்பமாக தமிழர்கள்
இந்த நாடுகளுக்கு கரும்புத் தோட்டங்களிலும், தேயிலை
தோட்டங்களிலும் வேலை செய்யவும், வியாபாரம் செய்யவும்
சென்றார்கள். பல ஆண்டுகள் அங்கேயே தங்கினார்கள்…
சொத்துக்கள் வாங்கினார்கள்.

ஆனால், இந்த நாடுகள் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு,
சுதந்திரம் பெற்றபோது, பல நாடுகள் – அங்கேயே இரண்டு
மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த தமிழர்களை
தங்களுடன் இணைத்துக் கொண்டு, குடியுரிமை கொடுத்து
கௌரவப்படுத்தின….

ஆனால், சில வக்கிர நாடுகள் – ஸ்ரீலங்கா, பர்மா போன்றவை-
தமிழர்களை அந்நியராகவும், தங்கள் வாய்ப்புகளை
பறிக்க வந்தவர்களாகவும் கருதி துன்புறுத்தி, வெளியேற்ற
முனைந்தன.

பர்மாவில் 1962-ல் ராணுவப்புரட்சி ஏற்பட்டபோது,
அதிகாரத்திற்கு வந்தவர்கள், தமிழர்களை நசுக்கி விரட்டத்
துவங்கினர். தமிழர்களின் சொத்துக்கள் பறிமுதல்
செய்யப்பட்டன. வலுக்கட்டாயமாக அவர்கள் கப்பலில்
ஏற்றப்பட்டு ( s.s.ரஜூலா நினைவிருக்கிறதா…? ) இந்தியாவிற்கு
“மறு ஏற்றுமதி” செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் நிறைய “பர்மா தமிழர் காலனி”கள் ஏற்பட்டது
அப்போது தான். மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள்
இவ்வாறு விரட்டப்பட்டனர். தாய்நாட்டிற்கு திரும்பி
வந்தவர்களில் சிலர் இன்னமும் தங்கள் பழைய வாழ்விடம்,
சொத்துக்களை மறக்க இயலாமல் மீண்டும் பர்மா செல்லும்
முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் வடகிழக்கே மணிப்பூர் மாநிலத்தின்
எல்லையை அடைந்து, அங்கிருந்து பர்மாவின் தலைநகரம்

ரங்கூனுடன் இணைக்கும் பாலத்தின் வழியே பர்மாவுக்குள்
செல்ல முயற்சித்தனர். ஆனால், பர்மிய ராணுவம் அவர்களின்
முயற்சியை முறியடித்து, அவர்களை எல்லைக்கு வெளியே
விரட்டியது.

tamils-in-moreh

அங்கிருந்து திரும்ப தமிழ்நாட்டிற்கு வர விருப்பமில்லாத
சிலர் அந்த நுழைவு பாலத்தை ஒட்டிய “மோரே” என்கிற
பழங்குடியினரின் கிராமத்திலேயே தங்கி தங்கள் பிழைப்பை
கவனிக்கத் துவங்கினர். இரண்டாம் உலகப்போரின்போது,
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் தங்கியிருந்த
பெருமை இந்த “மோரே”வுக்கு உண்டு. இந்த மோரே
கிராமத்தின் மொத்த பரப்பே 7.38 சதுர கிலோமீட்டர் தான்.

இங்கே தங்க ஆரம்பித்த தமிழர்கள், கொஞ்சம் கொஞ்சமாக
தங்களது உறவினர்களையும், பழைய நண்பர்களையும்
அழைத்து சேர்த்துக் கொண்டனர். அந்த காலத்தில் அங்கே
இருந்தவர்கள் “குக்கீஸ்”என்கிற பழங்குடி இனத்தவர்.

துவக்கத்தில் இவர்களுக்குள் பிரச்சினைகள் மூண்டாலும்,
காலப்போக்கில் அனவரும் இணைந்து வாழத்துவங்கி
விட்டனர்.இவர்களுடன் சேர்ந்து கொண்டவர்களில் சில
நூறு நேபாளிகளும், பஞ்சாபிகளும் கூட உண்டு.

இன்றைய “மோரே” யின் மக்கள் தொகை சுமார் 30,000.
இதில் தமிழர் மட்டும் 17,000 பேர். எல்லாரும் சகஜமாக
தமிழிலும், பர்மிய மொழியிலும் பேசிக்கொள்கின்றனர்.

moreh-way-to-burma-and-thailand

நாள்தோறும் மணிப்பூர் வழியாக பர்மா செல்லும்
நூற்றுக்கணக்கான வாகனங்கள், சரக்கு லாரிகள்,
அதில் பயணிப்பவர்கள், அதே போல் பர்மாவிலிருந்து

தரைமார்க்கமாக இந்தியா வருவோர் -அவர்களின் தேவைகளை
இவர்கள் கவனித்துக் கொள்கின்றனர். நிறைய உணவகங்கள்,
கடைகள் இருக்கின்றன.

தமிழர்கள் இங்கு குடியேறிய காலகட்டத்தில், அருகில் உள்ள,
நாம்ப்லாங் சந்தையில் சிறிய அளவில் பண்டமாற்று
வியாபாரம் நடந்து வந்தது. அங்கு தொழிலாளர்களாகப்
பணிபுரியத் தொடங்கிய தமிழர்களுக்கு அவர்களது
புத்திசாலித்தனமும், உழைப்பும் புதிய கதவுகளைத் திறந்தன.

கூப்பிடு தொலைவில் உள்ள மியான்மரில், ஆடைகள் முதல்
மளிகைப் பொருட்கள் வரை இந்திய உற்பத்திகளுக்கு ஏக
கிராக்கி இருந்தது. எனவே தமிழர்கள் அதைப் பயன்படுத்திக்
கொள்ளத் தொடங்கினார்கள். துணிவகைகள், பாத்திர
பண்டங்கள், மளிகைப் பொருட்கள் எனத் தொடங்கி
மின்சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களும் வணிகம்
செய்யப்படுகிறது.

moreh-7

சில வருடங்கள் முன்பாக, இந்திய-பர்மிய அரசுகளின்
ஒத்துழைப்போடு – மோரே -மியான்மர் எல்லையில்
தடையற்ற வர்த்தக மையம் ஒன்று அமைக்கப்பட்டது.
காலை 7மணிமுதல் மாலை 5 மணி வரை இங்கு
இருநாட்டினரும் வணிகம் செய்ய அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மியான்மரின் டம்மு
பகுதிக்குள்ளும் வணிகத்துக்காக சென்று வர அனுமதி
தரப்பட்டுள்ளது.

மோராவில் மலைவாழ் மக்கள் சிறிய அளவிலான சில
கிறிஸ்தவ கோவில்களை கட்டியுள்ளனர்.
20அல்லது 30 குடும்பத்தினருக்கு ஒரு கோவில்
என்ற அளவில் இருக்கிறது.

moreh-6

அதே போன்று இங்குள்ள தமிழர்கள் தங்களுக்கென்று
“மோரே தமிழ்ச்சங்கம் ” என்கிற ஒரு அமைப்பை நிறுவி,
அதன் மூலம் தங்களது பண்பாடு, கலாச்சாரம், கல்வி
தொடர்பான விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

தமிழ்ப் பிள்ளைகள் படிக்க “நேதாஜி மெமோரியல் ஹை
ஸ்கூல் “ஒன்று செயல்படுகிறது.

moreh-1

தமிழ்நாட்டை பிரதிபலிக்கும் வகையில் இங்கு 4 இந்து
கோவில்கள் இருக்கின்றன. லுங்கியுடன் தமிழர்களையும்,
சேலை கட்டிய தமிழ்ப்பெண்களையும், தமிழர் உணவு
விடுதிகளையும் இங்கு காணலாம். கடைகளில்
தமிழ் திரைப்படப்பாடல்களையும் கேட்கலாம்.
தமிழ்நாட்டில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும்
“மோரே”யில் காணக் கிடைக்கின்றன – சி.டி. மூலமாக….!!!

வேறென்ன வேண்டும்….?
நல்ல வேளை நமது தமிழக அரசியல்வாதிகள் இன்னமும்
“மோரே” வுக்குள் நுழையவில்லை…!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to இங்கிருந்து just 3200 கி.மீ. தாண்டினால் – ஒரு தமிழ் ஊர் ….!!!

  1. Srini's avatar Srini சொல்கிறார்:

    நல்ல வேளை நமது தமிழக அரசியல்வாதிகள் இன்னமும்
    “மோரே” வுக்குள் நுழையவில்லை…!!!

    Sir,
    Since you have come to know, you have written a nice post on the same and spread the message.
    If “Captain” would have come to know, he would have gone there for campaign, like how we went to Delhi.
    If “Thatha” would have come to know, he would have built a Samathuvapuram Scheme
    If “amma” would have come to know, she would have opened Amma Unavagam and TASMAC
    if “Seeman” would have come to know, he would have said, his “paatan and muppataan” are there in morai.
    If “vaiko” would have come to know, he would have already started walking – nadai payanam
    If “veeramani” would have come to know, he would have already kept a periyar selai there.
    If “Ramdoss” would have come to know, he would have already cut some trees there and abumani would have started a pasumai thayagam branch.

    Pazahai pona, indha communist -kku thaan onnume thona maatingudhu..

  2. ramanan's avatar ramanan சொல்கிறார்:

    நன்றி. புதிய தகவல்கள். இரண்டுவாரங்களில் மணிப்பூர் பயணம் செய்யவிருக்கிறேன். இந்த இடத்தைப் பார்க்க முடியுமா? நண்பர்கள் யாரேனும் அறிமுகப்படுத்த முடியுமா?
    ramananvsv@gmail.com

    • ssk's avatar ssk சொல்கிறார்:

      தமிழர் மோரேவில் இருப்பது மிக நல்ல தகவல். இன்றும் பல்லாயிர தமிழ் மக்கள் மியன்மாரில் (பர்மா) உண்டு. பல தமிழ் கோவில்களும் உண்டு. அந்நாட்டின் தேன் பகுதி முதல் வட பகுதி வரை பரவி வாழ்கின்றனர். தமிழ் நாட்டின் அனைத்து சேனல்களும் அங்கு உள்ளது.

  3. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    ஆச்சரியமான தகவல். இந்தியாவின் தென்பகுதியில் தான் என்றில்லாமல் வடகிழக்கிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதறிந்து மகிழ்ச்சி. நல்லவேளை அவர்களிடம் இன்னமும் நம்மூர் அரசியலும் மதவாதமும் செல்லாததால் நிம்மதியாக இருக்கிறார்கள் போலும். இந்த நிம்மதி என்றென்றும் தொடர எல்லாம் வல்ல பரம்பொருள் அருளட்டும்.

    இந்த மாதிரி கட்டுரைகள் எந்த பத்திரிகயிலும் (நான் அறிந்த வரையில்) வருவதில்லை. அந்த வகையிலும் தங்களுக்கு நன்றி. இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து எழுதுமாறு வேண்டுகிறேன் ஐயா!

    வணக்கம்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி திரு.ரமணன்.
      முயற்சிக்கிறேன்….!!!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.