.
.
இன்று ஜூலை 15. பெருந்தலைவர் காமராஜ்
அவர்களின் பிறந்த நாள்.
சிறு வயதிலிருந்தே காமராஜ் அவர்களின்
மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும்,
ஒட்டுதலும் உண்டு. எனக்கு மிகவும் பிடித்த வெகு சில அரசியல் தலைவர்களில் காமராஜ் அவர்கள் மிக முக்கியமானவர்.
அவரது பிறந்த நாளான இன்று,
அவருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் –
நான் வடக்கே ஜபல்பூரில் பணிபுரிந்து வந்த நேரம் அது.
இருபதுகளில்- துடிப்பான இளைஞன்.சூடான இளம் ரத்தம்.
என் பெற்றோர் அப்போது பாண்டிச்சேரியில்
இருந்தனர். அவர்களைப் பார்க்க –ஒரு வார லீவில்
வந்திருந்தேன்.
என் நினைவில் இருப்பதை
வைத்துச் சொல்கிறேன் –
மாலையில் கடற்கரையில், டூப்ளே சிலையருகேமீட்டிங். தலைவர் காமராஜ் பேசுகிறார் என்று தெரிந்தது.
ஆவலுடன் சென்றேன். என் அண்ணனும்
என்னுடன் வந்திருந்தார். அப்போதெல்லாம் கூட்டத்திற்கு
சேர் போடும் வழக்கம் கிடையாது. மணலில் தான் கடலை நோக்கி, மேடையை நோக்கி –
அமர்ந்திருந்தோம்.
அப்போது பிரதமர் இந்திரா காந்திக்கும்,
காமராஜ் -நிஜலிங்கப்பா போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய குழுவிற்கும் இடையே பிணக்கு ஏற்பட்டிருந்தது.
இந்திரா இவர்கள் யார் ஆலோசனையையும் ஏற்பதாக இல்லை.
அதற்கு சில மாதங்கள் முன்னதாக, (லால் பகதூர் சாஸ்திரியின் மறைவிற்குப் பின் ) புதிய
பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை
வந்தபோது, காமராஜ் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக
இருந்தார். காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற
கூட்டத்தில் தலைவர்(பிரதமர்) பதவிக்கு மொரார்ஜி
தேசாய்க்கும் இந்திராவிற்கும் இடையே கடும் போட்டி இருந்தது.
காமராஜ் அவர்கள் தன் ஆதரவை இந்திராவிற்கு தெரிவித்ததால் தான் இந்திரா அம்மையார் சுலபமாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட
முடிந்தது.
எனவே இந்திரா – குறைந்த பட்சம் காமராஜ் அவர்களுக்காவது விசுவாசமாக
இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,
தான் பிரதமர் ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்த
காமராஜரைக்கூட திருமதி இந்திரா மதிக்கவில்லை.
காமராஜ் அவர்கள் கூட்டத்தில் பேசும்போது,
இந்திரா காந்தி மூத்த தலைவர்களை எல்லாம்
புறக்கணித்து, அவமானப்படுத்துவதைப் பற்றி வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்.
நான் உட்கார்ந்த இடத்திலிருந்தே, ஒரு ஆதங்கத்துடன் பலமாகக் கூறினேன்.
“நீங்க தானே அவரைக் கொண்டு வந்தீங்க ?”
காமராஜ் ஒரு கணம் பேசுவதை நிறுத்தினார்.
கூட்டத்தைப் பார்த்து – “யாரு -யாரு கூச்சல் போட்டது ? என்ன சொல்றீங்க?
புரியும்படியா சொல்லுங்க “ என்றார்.
கூட்டத்தின் நடுவே உட்கார்ந்திருந்த நான் எழுந்திருக்க
முயன்றேன். என் அண்ணன் என் கையைப் பிடித்து அழுத்தினார் – எழுந்திருக்காதே என்கிற விதமாக.
அவரிடமிருந்து விடுவித்துக் கொண்டு எழுந்து நின்றேன் நான்.
“சார் – நீங்க தானே அவங்களை ப்ரைம்
மினிஸ்டரா ரெகமண்ட் பண்ணினீங்க ?” என்று சத்தமாக இருந்த
இடத்திலிருந்தே சொன்னேன் நான்.
ஒரு கணம் கூட்டம் முழுவதும் அமைதி.
அடுத்த கணம், தயக்கமே இல்லாமல் தொடர்ந்தார் –
“ஆமாம் – யாரு இல்லேன்னாங்க ?
நேருஜியோட மகளாச்சே – நல்லது செய்வாங்கன்னு
நெனைச்சேன். தப்பாப் போச்சுங்கறேன். இப்படிப் பண்ணுவாங்கன்னு யாருக்கு தெரியுங்கறேன்”
-என்றார்.
அவ்வளவு பெரிய கூட்டத்தில்,
அவ்வளவு பெரிய தலைவர் –
இடைமறித்து கேள்வி கேட்டவர் மீது கோபப்படாமல்,
கேட்டவரின் உணர்வுகளை மதித்து,
கொஞ்சம் கூட தயக்கமின்றி,
அடுத்த பிரதமரை அடையாளும் காணுவதில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டது எனக்கு பிரமிப்பை
ஏற்படுத்தியது.
இன்றைய தினத்தில் எந்த அரசியல்வாதியிடமாவது இத்தகைய வெளிப்படையான அணுகுமுறையை
எதிர்பார்க்க முடியுமா ?
இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு –
இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களை எல்லாம்
பார்க்கும்போது அவர் மீது உள்ள மதிப்பு –
பலநூறு மடங்கு அதிகம் ஆகிறது.
இனி எங்கே, எப்போது – பார்க்கப்போகிறோம்
இத்தகைய தலைவர்களை ?
—————————————————————
வரலாற்றைச் சொல்லும் புகைப்படங்கள் –
1) இந்திரா காந்தி காங்கிரஸ் பாராளுமன்ற
உறுப்பினர் கூட்டத்தில்
தலைவராக/பிரதமராக
தேர்ந்தெடுக்கப்படுவதை, அதற்கு காரணமாக
இருந்த, அருகில் அமர்ந்திருக்கும் தலைவர் காமராஜர் கைகுலுக்கி பாராட்டுகிறார்.
2) பிரதமராக ஒரு நிகழ்ச்சியில் இந்திராவும்,
காமராஜரும். இங்கு body language பேசுகிறது.
பிரதமர் ஆகி விட்டதால் அலட்சியமாக இந்திரா ! பிரதமருக்கு அருகிலேயே கம்பீரமாக கால் மீது கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் காமராஜர் !
3) இந்திராவுடன் பிணக்கு ஏற்பட்ட பிறகு –
கன்னியாகுமரியில் பிரதமரின் தலைமையில் ஒரு விழா.
தொகுதி M.P.யாக விழாவில் கலந்து கொண்ட காமராஜர்.
இருவருக்குமிடையே symbolic ஆக – இருக்கும் இடைவெளியைப் பாருங்கள்.
பின் குறிப்பு –
15/07/2012 அன்று இந்த வலைத்தளத்தில்
வெளிவந்திருந்த இடுகையின் மறுபதிவு இது….







// திரு காமராஜர் ஆற்றிய பணிகளைப் பற்றி தந்தைப் பெரியார் குறிப்பிடும் போது —– ,”கல்வி நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்குப் பதில் காமராஜர் வாழ்த்துப் பாட வேண்டும். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான்….. ஊர் தோறும் தொழில் வளம் ஏற்பட்டுள்ளது. மூவேந்தர்கள் காலத்தில்கூட நிகழாத இந்த ” அதிசயத்தை ” சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை எவரேனும் மறுக்க முடியுமா?” என்று வினா எழுப்பியிருந்தார்…… தந்தை பெரியாரின் வினா அர்த்தமுள்ளது // தானே … ?
Long back I read a tit bit about Gorbachev ( the premier of earstwhile USSR), That is in one public meeting he was speaking about the ill deeds of his predecessors. One person asked
why he was keeping quite at that time. Gorbachev asked who was the person asked that question. There was pin drop silence. Gorbachev replied, “that was why I also kept quite”.
(In those days if any body revolted against the rulers next day they will be thrown into the sea or
buried underneath the earth).
Dear Mr Krishnan
Gorbachev story is little here and there
He was not prime minister
The incident related to Nikita Krushov
Have a nice day friends
திரு காமராஜர் பற்றி அய்யா …. அவர்கள் கூறிய கடைசி வார்த்தைகள் :– // இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு –
இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களை எல்லாம்
பார்க்கும்போது அவர் மீது உள்ள மதிப்பு –
பலநூறு மடங்கு அதிகம் ஆகிறது.
இனி எங்கே, எப்போது – பார்க்கப்போகிறோம்
இத்தகைய தலைவர்களை ? என்று முடித்து இருப்பார்….
இப்போது உள்ள ஒரு ” பாசக்கார தலைவர் ” – தனது கட்சியின் யோக்கியமான ..? ஒருவருக்கு வக்காலத்து வாங்கி ஒரு அறிக்கை விட்டுள்ளார் … ! இவரும் — தலைவர் தான் …. // ஜெகத்ரட்சகனை வீட்டில் சிறைக் கைதி போல அடைத்து வைத்தது முறைதானா? கருணாநிதி
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-statement-about-on-jagathrakshakan-residence-it-258143.html // அறிக்கையைப் படித்தால் என்ன தோன்றுகிறது … ?
செல்வராஜன்,
அறிக்கையை பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது –
” ஜெகத்’தில் தேள் கொட்டினால்,
கோபாலபுரத்தில் நெறி கட்டுவதேன்…? ”
என்கிற கேள்வி தான் ….!!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்