துக்ளக் ஆசிரியர் “சோ” சார் எப்படி இருக்கிறார்….?

cho

துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு – சிகிச்சை பெற்று வருவது நண்பர்களுக்கு தெரியும். இடையில் அடிக்கடி அவர் உடல்நிலை கவலைக்கிடமாவதும், பிறகு மீண்டு வருவதுமாக – அவரைப்பற்றிய செய்திகள் மனதில் அனைவருக்குமே ஒரு சஞ்சலத்தை தந்து வந்தன…..

இந்நிலையில், துக்ளக் இதழில் மிக நீண்ட காலமாக ஆசிரியர் சோ
அவர்களுடன் நெருங்கி பணிபுரிந்து வரும் நண்பர் – எழுத்தாளர்
எஸ்.ஜே.இதயா அவர்கள் சோ சார் குறித்த ஒரு அண்மைய சந்திப்பை நெகிழ்ச்சியுடன் விவரித்திருகிறார்.
நண்பர்களின் பார்வைக்காக – அதை கீழே வடித்திருகிறேன்.

—————————————-

கடந்த சில மாதங்களாக நான் தினமும் சந்திக்கும் ஒரே கேள்வி பல நூறு பேரிடமிருந்து.

இன்று கொஞ்சம் விரிவாக பேச ஆசைப்படுகிறேன்.
நான் இதுவரை மறைக்கவும் இல்லை; பொய் சொல்லவும் இல்லை. ஆனாலும் பகிரங்கமாக சொல்லாததால் இப்போது சொல்லி விடுகிறேன். என் நண்பர் ஏ.ஏ.சாமி புதிதாக ஒரு வார இதழ் (ஜனனம்) துவங்கி விட்டார். அதில் என் பால்ய நண்பர் முத்துராமலிங்கன் ஆசிரியராக இருக்கிறார். அந்த ஜனனம் இதழ் துவங்கப்பட ஆலோசிக்கப்பட்ட நாளிலிருந்து அந்த டிஸ்கஷனில் நானும் பங்கு பெற்றே வந்துள்ளேன். எனது ஆசான் சோ ஸாருக்கு ஏ.ஏ.சாமி நன்கு நெருக்கமானவர்தான். நான் இரண்டு முறை `துக்ளக்` பயணமாக குஜராத் சென்ற போதும், ஒரு வாரம் இலங்கை சென்ற போதும் எனக்கு உறுதுணையாக சோ ஸாரால் அங்கீகரித்து, அனுமதித்து அனுப்பி வைக்கப்பட்டவர்தான் ஏ.ஏ.சாமி. அவர் ஒரு புது பத்திரிகை ஆரம்பிக்க முடிவு செய்த போது. அதற்கு என் உதவியை நாடிய போது, நான் சோ ஸாரிடம் சென்று அனுமதி கேட்டேன்.

“தாராளமாய் உதவுங்கள். நீங்கள் அதில் எழுதினால் கூட
எனக்கு ஆட்சேபணை இல்லை”
என்றார். ஆனால் அதேநேரம் “இனிமேல் ஒரு புது இதழ் ஆரம்பித்து வெற்றி பெற முடியுமா? ஏன் இந்த வீண் வேலை?” என்று ஏ.ஏ.சாமிக்கும் ஒரு
கேள்வியை வைத்தார்.

இன்று ஜனனம் 11வது இதழ் அச்சடிக்கப்பட்டு கொண்டிருக்கிற
வேளையில் இந்தக் கதையை நான் ஏன் சொல்ல வேண்டும்?
இன்று மாலை 5 மணியளவில் மருத்துவமனையில் சோ ஸாரை சந்தித்தேன். ஒரு அறுவை சிகிச்சை காரணமாக இன்னும்
அவரால் பேச முடிவதில்லை. எனினும் ஒரு மாடர்ன் சிலேட்டில்
எழுதிக் காட்டி பேசுகிறார்.

நான் போனதும் அந்த சிலேட்டை வாங்கி “உங்கள் புதிய பத்திரிகை எப்படி போகிறது?” என்றார். எனக்கு அதிர்ச்சி.
எனக்கு எங்கே புதிய பத்திரிகை? நண்பர் ஏ.ஏ.சாமி நடத்தும்
`ஜனனம்` பற்றிதான் கேட்கிறார் போலும் என்று எண்ணி,
“சார் அது சாமியின் பத்திரிகை; என் பத்திரிகை அல்ல.
அது நல்ல முன்னேற்றத்துடன் போய் கொண்டிருக்கிறது”
என்றேன். ஓஹோ என்கிற மாதிரி அதை தலையாட்டி கேட்டுக் கொண்ட அவர், பின் என் கேள்வி அதுவல்ல என்கிற மாதிரி மறுத்து,

“நீங்களாக நடத்தும் புதிய `துக்ளக்` பத்திரிகை எப்படி போகிறது?” என்று எழுதி காட்டினார். அந்த மருத்துவமனை சூழ்நிலையிலும் என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. மருத்துவப் படுக்கையில் இருந்தாலும் என்னே அவர் குறும்பு; என்னே ஒரு நகைச்சுவை உணர்வு? அடுத்து `துக்ளக்` அலுவலகத்தில் பணிபுரியும் ஐந்து பேர்களின் பெயரை எழுதி(என் பெயர் உட்பட!) ’பாராட்டுக்கள்’ என்று முடித்தார்.
அடுத்து “என்னை பார்க்க வந்தவர்கள் எல்லாம் கேள்வி-பதில் இல்லாத குறை தவிர `துக்ளக்` தரத்தில் குறைவே இல்லை என்று சொல்கிறார்கள்” என்று எழுதினார்.
நகைச்சுவை உணர்விலும், உண்மையை பகிர்வதிலும்,
மனதார பாராட்டுவதிலும் என் குருவுக்கு நிகர் என் குருவே அன்றி
வேறு யாரையும் நான் பார்த்ததில்லை.

ஒரு தீவிரமான பக்திமான்; நான் ஒரு நாத்திகன் என்று தெரிந்தும் 18 வருடமாய் என்னை வேலைக்கு வைத்துள்ளார். பக்தி பற்றி எனக்கு அவர் சொன்ன புத்திமதிகள் ஏராளம். கேட்கவே கேட்காத இந்த நாதாரியை இன்று வரை ஒதுக்கி வைக்காத தெய்வம் அவர்.

சோ ஸார்.. நீங்கள்தான் தெய்வம் என்றால்
இன்றே நான் ஆத்திகன் ஆக ரெடி!

ஏ தெய்வமே.. நீ தான் நிஜம் என்றால்,
என் ஆயுளை எடுத்து என் குருவுக்கு அளி!

—————————————————

பின் குறிப்பு – கீழே இருப்பது, திரு.எஸ்.ஜே.இதயா
அவர்கள் எழுதி இருப்பதை படித்தவுடன் நான் அவருக்கு
அனுப்பிய மடல்….
( எஸ்.ஜே.இதயாவை நான் துக்ளக் மேடையில் பார்த்ததுடன் சரி – நேரில் பழக்கமில்லை…)
——————————————————————-

நண்பர் எஸ்.ஜே. இதயா,

ஆசிரியர் சோ அவர்களின் மீது நீங்கள் வைத்திருக்கும் பாசம்
நெகிழ்வூட்டுகிறது. நம் எல்லாரின் பிரார்த்தனைகளையும் ஏற்று,
உண்மையாகிய அந்த தெய்வம், சோ சார் ஓரளவிற்காவது
உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப கருணை காட்டும்
என்றே நம்புகிறேன். வருகிற ஜனவரி 14 அன்று, துக்ளக் ஆண்டுவிழா மேடையில் சோ சார் அவர்களை ( வழக்கம்போல் உங்களையும் சேர்த்து தான்… ) நேரில் பார்ப்போம் என்று உறுதியாக நம்புகிறேன்.

உங்களின் புதிய பத்திரிகை…( !!! ) அதான் சார் “ஜனனம்” —
முதல் இதழ் முதற்கொண்டே வாங்கி வாசித்து வருகிறேன்.
துவக்கமே, எதிர்காலத்தில் தமிழ் கூறும் நல்லுலகில் அது ஒரு
நல்ல இடத்தை நிச்சயம் பிடிக்கும் என்கிற நம்பிக்கையை ஊட்டுகிறது. இப்போதைய காலகட்டத்தில் அரசியல் இதழ்களில்
ஜூ.வி.க்கு ஒரு நல்ல மாற்று அவசியம் தேவைப்படுகிறது.
அந்த தேவையை ஜனனம் பூர்த்தி செய்யட்டும்.

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to துக்ளக் ஆசிரியர் “சோ” சார் எப்படி இருக்கிறார்….?

  1. திரு. சோ அவர்கள் நலம் பெற வேண்டுகிறேன்.

  2. today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

    விரைவில் சோ ‘மீண்டு(ம்)’ துக்ளக்கிற்கு வர விமரிசனம் சார்பில் பிரார்த்தனைகள்.

  3. B.V.Venkatasubramanian's avatar B.V.Venkatasubramanian சொல்கிறார்:

    I also join the prayer.

  4. இராமாநுசம்'s avatar இராமாநுசம் சொல்கிறார்:

    சோ அவர்கள் விரைவில் குணமடந்து நீண்ட காலம் வாழ ஏழுமலையானை வேண்டுகிறேன்!

  5. chandramouly venkatasubramanian's avatar chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    wishing CHO sir a speedy recovery

  6. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    // துக்ளக் பத்திரிகையில் நான் மனம் போன போக்கில் எழுதுகிறேன் என்று சிலர் சொல்வதை, நான் ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். மற்றவர்கள் மனம் போகும் போக்கில் எல்லாம் எழுதி, அவரவர் மனமாற்றங்களுக்குத் தக்கவாறு மாறும் தர்மம் அல்ல துக்ளக்கின் பத்திரிகை தர்மம். காற்றடிக்கும் திசையில் எல்லாம் பறக்கும் தூசியாகத் திகழுவது அல்ல துக்ளக்கின் பத்திரிகை தர்மம்.
    என் மனம் போன போக்கில் நான் எழுதுகிறேன் என்றால், ஏனோ தானோ என்ற போக்கில் அல்ல. மனம் என்பதற்கு, ‘மைன்ட்’ என்ற அர்த்தமும் உண்டு என்பதை வைத்துக் கொண்டு பார்த்தால், அதில் அறிவுபூர்வமான அணுகுமுறையும் அடக்கமாகிறது. பல பிரச்னைகளைப் பற்றி என் மனம், என் அறிவு என்ன நினைக்கிறதோ அந்த நோக்கில் எழுதுவதைத்தான் ‘மனம்போன போக்கில் எழுதுகிறான்’ என்று மற்றவர்கள் குறிப்பிடுவதாக எடுத்துக் கொண்டு மகிழ்கிறேன்…. ! // திரும்பி பார்க்கிறோம் என்பதில் ” ‘ ‘துக்ளக் ‘ க்கின் தர்மம் ” என்பதில் திரு .சோ அவர்கள் குறிப்பிட்ட ஒரு செய்தி தான் மேலே உள்ளது … அதை தற்போதும் அவர் பணியாற்ற முடியாத நிலையிலும் — { கேள்வி — பதில் பகுதி இல்லாத குறையை தவிர } மற்றவர்கள் கடைபிடித்து துக்ளக்கை நடத்த வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம் …..!! { ஒரு சிலர் தனக்கு தானே கேள்வி — பதில் எழுதி கொள்வது வேறு விஷயம் } விரைவில் திரு .சோ குணமடைந்து வந்து ” ஒரிஜினல் கேள்வி -பதில் ” களை படிக்க ஆவல் தோன்றுவது இயல்பு தானே ….. ?

  7. srinivasanmurugesan's avatar srinivasanmurugesan சொல்கிறார்:

    I also join the prayer.

  8. p.v.sundaresan iyer's avatar p.v.sundaresan iyer சொல்கிறார்:

    as thuglak was an unique man in moghal samrajya so also CHO RAMASWAMI SIR is UNIQUE IN SATARICAL J AURNALISM LONG LIVE N LEAD OTHERS TO LIVE IN SATTIYA NERI

  9. கொச்சின் தேவதாஸ்'s avatar கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    திரு.சோ அவர்கள் மீண்டு வந்து நம்முடன் செயல்பட வேண்டும் என்பதே வேண்டுதலாகவும் விருப்பமாகவும் உள்ளது.
    வாழ்க வளமுடன்

  10. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    நலம் பெற வேண்டும்…

  11. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    I have no words to say but to pray for his good health,

  12. buruhani's avatar buruhani சொல்கிறார்:

    அந்த நிஜ சகலகலா வல்லவர் இன்னும் ஆயிரம் காலங்கள் வாழ்ந்து காட்டுவார் .

  13. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    உங்கள் கடிதத்தில் “சனவரி 16” என்றிருக்க வேண்டும்.

    ஒரு மனிதன் எல்லோரிடமும் நியாயமாக நடந்தால்தான் அனைவரது அன்பைப் பெற முடியும். எல்லோரது கொள்கைகளையும் மதிக்கும் குணம் சோவின் (அவர்களின்) நற்குணங்களில் ஒன்று. அதனால்தான் கடும் கருத்து வேறுபாடு உடையவர்களும் அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்பதற்கோ அல்லது அவரிடம் மதிப்போ வைத்துள்ளார்கள். அவர் விரைவில் குணமடையட்டும்

  14. gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

    Madhan’s cartoon and question and answer, jayamohan’s article add attractions in Jananam.

  15. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    May God grant Cho a healthy life. I pray for his full recovery.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.