துக்ளக் ஆசிரியர் “சோ” ……

cho - young

துக்ளக் ஆசிரியர் “சோ” ராமசுவாமி அவர்கள் உடல்நலக்குறைவு
காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை
பெற்று வருகிறார்.

உலகில் – பிணி, மூப்பு – இவற்றிலிருந்து விதிவிலக்கு பெற்ற
மனிதர் யார் …? அவற்றால் விளையும் துன்பங்களையே
அவரும் அனுபவிக்கிறார். கடந்த ஜனவரி மாதம் துக்ளக்
ஆண்டு விழா நிகழ்வுகளின்போதே சுவாசிப்பதற்கு அவர் பட்ட
அவஸ்தையையும், துன்பத்தையும் நேராகவே பார்த்தேன்….

அவரைப்பீடித்துள்ள பிணியின் பிடியிலிருந்து, விரைவில்
அவர் விடுபட்டு, நலமுடன் வீடு சேர்ந்து, தமது முதுமையை
நல்ல மன அமைதி மற்றும் ஓய்வுடன் அனுபவிக்க –
இறைவனை இறைஞ்சுகிறேன்.

சோ அவர்கள் துடிப்பான இளைஞனாக புகழ்பரப்பி வலம் வரத் துவங்கிய அந்த காலகட்டத்திலிருந்தே –
கடந்த சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக –
நான் அவரை அறிவேன்.

இரண்டு முறை நேரிலும் சந்தித்துப் பேசி இருக்கிறேன்.
( ஆனால் முக்கியத்துவம் இல்லாத சந்திப்பு
என்பதால் அவருக்கு நினைவிருக்காது ).

எனக்கு மிகவும் பிடித்த, என் மனதிலிருந்து,
நானே விரும்பினாலும் கூட,
அகற்ற முடியாத அளவிற்கு அழுத்தமாக இடம் பெற்ற
உயர்ந்த மனிதர் அவர்.
இத்தனைக்கும் நான் அவரது
கருத்துக்கள், செயல்பாடுகளை முழுமையாக ஏற்பவன் அல்ல.

பல முறை அவரது கருத்துக்களை,
இந்த விமரிசனம் தளத்திலேயே நான்
மிகக்கடுமையாக விமரிசித்திருக்கிறேன்.
அது முற்றிலும் வேறுபட்ட விஷயம்…
நமக்குப் பிடித்தவர் என்பதற்காக, ஒருவரின் அனைத்து
செயல்பாடுகளையும் ஆதரிக்க வேண்டுமென்று
கட்டாயம் ஒன்றுமில்லையே…

சினிமாவிலும், அரசியலிலும்
இத்தனை ஆண்டுகளாக இருந்தும் கூட
ஒழுக்கமும், நேர்மையும் மிகுந்தவர்.

அதி புத்திசாலி. அசாத்திய துணிச்சல்.
மிகப்பெரிய அரசியல் தலைவர்களுடனான தனது நெருக்கங்களையும்,
செல்வாக்கையும் சுயநலத்திற்கு சற்றும் பயன்படுத்திக் கொள்ளாதவர்.

தனக்கென தனிப்பட்ட எழுத்து நடையை உருவாக்கிக் கொண்டவர். அவரால் மிகக்கடுமையாக விமரிசிக்கப்பட்டவர்கள் கூட – அவரை விரும்புவது, நட்பு பாராட்டுவது – அவரது தனிச்சிறப்பு.

கொஞ்ச நாட்களுக்கு முன்னரே,
சோ அவர்களைப் பற்றிய சில பழைய நினைவுகளை
இந்த வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று நினைத்தேன்.

நடுத்தர மற்றும் முதிய வயதினருக்கு அவரைப்பற்றிய
பின்னணிகள் தெரிந்திருக்கலாம்.
இந்த வலைத்தளத்திற்கு நிறைய இளைஞர்கள் வருகிறார்கள். அவர்கள் சோவின் இன்றைய நிலை, அணுகுமுறை, செயல்பாடு – இவற்றைப்பற்றி மட்டுமே அறிவார்கள். அவரது பின்னணி, இளமைக்கால செயல்பாடு ஆகியவை குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே, ஏற்கெனவே அறிந்தவர்களுக்கு, அந்த நினைவுகளை
புதுப்பித்துக் கொள்ளவும், அறியாத இளைஞர்களுக்கு புதிதாக
தெரிந்து கொள்ளவும் – என் அனுபவத்தில் கண்ட, மற்றும்
பல்வேறு தளங்களிலிருந்தும் நான் சேகரித்த சில விஷயங்களை
இங்கு ஒருங்கிணைத்து தருகிறேன்.

தனது பரபரப்பான அரசியல்-நையாண்டி நாடகங்கள் மூலம்
1968-69 களில் மிகவும் பரபரப்பான இளைஞராக இருந்தார் சோ.

சோ விற்கு என்றே ஒரு நெருங்கிய நண்பர் குழு உண்டு.
அத்தனை பேரும் விவேகானந்தா கல்லூரியில்
அவருடன் படித்த மற்றும் அவரது நாடக அமைப்பினை
சேர்ந்தவர்கள்.

அரசியலிலும், நாடகத்துறையிலும் – பரபரப்பாக இருந்த
சமயத்தில் அந்த குழுவினரிடையே – அதே பின்னணியில்
சோ ஒரு பத்திரிகையை துவக்கி, நடத்தினால் எப்படி இருக்கும்
என்கிற விவாதம் உருவாகி இருக்கிறது.
அதன் விளைவு தான் துக்ளக் வார இதழ்.

துக்ளக் பத்திரிகை துவக்கப்படும் முன்னர், ஆனந்தவிகடன்
வார இதழில் அதைப்பற்றி ஒரு அறிமுக பேட்டி வந்தது…
அது எப்படி இருந்தது ….. ?
நக்கலும், கிண்டலுமாக ….. நீங்களே பாருங்களேன்…

—————————

1969 டிசம்பரில் – துக்ளக் இன்னும் ஆரம்பிக்காதபோது
ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்த
சோ அவர்களின் பேட்டி…..
( இந்த பேட்டியின்போது சோவின் வயது 35 தான்….)

நிருபர்: நீங்கள் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகப் பலர்
சொல்கிறார்களே, உண்மையா?

சோ: யாரெல்லாம் சொன்னார்கள்?

நிருபர்: மன்னிக்கவும்! நான் உங்களைப் பேட்டி காண
வந்திருக்கிறேனா அல்லது நீங்கள் என்னைப் பேட்டி
காணப் போகிறீர்களா?

சோ: நான் உங்களைக் கேள்வி கேட்க ஆரம்பித்ததிலிருந்தே –
நானும் ஒரு பத்திரிகைக்காரனாக மாறிக்கொண்டிருக்கிறேன்
என்று தெரியவில்லையா?

நிருபர்: உங்களுக்கு இந்த ஆசை எப்படி வந்தது?

சோ: அது தமிழ்நாட்டின் தலை விதி!

நிருபர்: உங்கள் பத்திரிகையின் ஆசிரியர் யார்?

சோ: ஒரு சகலகலா வல்லவர்!

நிருபர்: யார் அது?

சோ: நான்தான்.

நிருபர்: பத்திரிகை ஆரம்பிக்கும் நோக்கம், லட்சியம் என்ன?

சோ: மக்களுக்கு நல்வழி காட்டி ஒரு புதிய பாரதத்தை
உண்டாக்க வேண்டும்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக
எல்லா மக்களும் தோள் கொடுத்துச் செயலாற்றவேண்டும்;

ஒவ்வொரு தமிழனும் தன் கடமையை உணர்ந்து
தன்னைப் பெற்ற தாய்க்கும், தான் பிறந்த மண்ணிற்கும்
பெருமை தேடித் தர வேண்டும்; இலக்கியம், பண்பாடு,
இந்தியக் கலாசாரம் இவை ஓங்கி வளரவேண்டும்.

– இந்த லட்சியங்களுக்காகத்தான் நான் பத்திரிகை
ஆரம்பிக்கப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால்,
அது என் தவறல்ல! பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும்
என்று தோன்றியது; ஆரம்பிக்கப் போகிறேன். அவ்வளவுதான்!

நிருபர்: உங்கள் பத்திரிகை எப்போது வெளிவரும்?

சோ: பொங்கல் ரிலீஸ்!

நிருபர்: முதல் இதழில் உங்கள் பத்திரிகையில்
என்னென்ன வரும் என்று
சற்று விளக்கமாகக் கூற முடியுமா?

சோ: ஏன்? துக்ளக்கை யாரும் வாங்கக் கூடாது,
உங்கள் ஆனந்த விகடனையே படித்துத் தெரிந்துகொள்ள
வேண்டும் என்று பார்க்கிறீர்களா?

நிருபர்: சரி! உங்கள் பத்திரிகையின் அமைப்பைப் பற்றி
ஏதாவது கூற முடியுமா?

சோ: எவற்றையெல்லாம் பார்த்து எனக்குச் சிரிப்பு வருகிறதோ அவற்றையெல்லம் பார்த்து மக்களையும் சிரிக்க வைக்க முயலப் போகிறேன்.
I am going to look around me and also make
my readers look around themselves.

( அடுத்த பகுதியிலும் தொடர்கிறது….. )

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to துக்ளக் ஆசிரியர் “சோ” ……

  1. johan paris's avatar johan paris சொல்கிறார்:

    // இத்தனைக்கும் நான் அவரது
    கருத்துக்கள், செயல்பாடுகளை முழுமையாக ஏற்பவன் அல்ல.//என் நிலையும் அதே, ஏற்கவே முடியாத பல கருத்துக்களை துணிச்சலுடன் சொன்னவர், அதனால் அவர் கருத்துக்களை எதிர்பார்ப்பேன். ஆரம்ப காலம் முதல் , துக்ளக் வாசகன் . அதில் பெருமையும் கூட எனக்கு! கூவம் நதிக் கரையினிலே – ஜக்குவாக – சென்னைத் தமிழால் என்னைக் கவர்ந்தவர்.
    ஆனாலும் – இலங்கைத் தமிழர்களில் அவர்காட்டிய அதீத வெறுப்பு, அதற்காக தன் நுட்பமான அறிவைத் தீட்டி அவர் பேனா கக்கியவை, வேதனைக்குரியவை!

  2. வெ.க.சந்திரசேகரன்'s avatar வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

    சமீபத்தில் தான் அவரது ஒசாம அசா நூல்களை படித்தேன். நாடகம்,சினிமா,அரசியல் என்ற பன்முக துறைகளில் அவரது அனுபவங்கள் சம காலத்திய ஜாம்பவான்களுடனான அவரது நட்பு மலைக்கவைக்கக்கூடிய ஒன்றாகும். வேறுபாடுகளை கடந்து சோவின் கருத்து எதிர்பார்க்கப்பட்டது மதிக்கப்பட்டது என்பதிலிருந்தே அவரது வீச்சு விளங்கியது உண்மையிலேயே தன்னை ஒசாம என்று அவர் கருதினாலும் அவர் ஒருஅசம(அசாதாரண மணிதர்) என்பது தான் உண்மை.

  3. தங்க.ராஜேந்திரன்'s avatar தங்க.ராஜேந்திரன் சொல்கிறார்:

    தொடருங்கள் நண்பரே!

  4. பிங்குபாக்: துக்ளக் ஆசிரியர் “சோ” …… | Classic Tamil

  5. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    பல முரட்டு தனமான எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் வெளிவந்த முகமது பின் துக்ளக் படத்தில் —— திரு . சோ. அவர்களின் நையாண்டி மற்றும் துணிச்சலான எண்ணங்களின் பிரதிபலிப்புக்கு ஒரு சாம்பிள் : —
    ” துக்ளக் அறிமுக காட்சி வசனம் [அரசவையில்] ” : —
    இவன் தான் ஆஷன்-ஷா இந்நாட்டின் தலை சிறந்த முட்டாள் , என்னுடைய பிரதம ஆலோசகர் . மற்றவர்களுக்கு எல்லாம் அறிமுகம் தேவை இல்லை இவர்கள் இரண்டாம் தர முட்டாள்கள்.
    ” துக்ளக் & பதுத்தா அறிமுக உரையாடல் ” : —
    பதுத்தா : நான் உங்களை பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கேன் .
    துக்ளக் : அதையெல்லாம் நம்பாதே!!
    பதுத்தா : எல்லாம் நல்ல விதம் தான்
    துக்ளக் : சரி , அப்போது நம்பு !!!
    இப்படம் வெளியாகி 42 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது . இன்னும் பல வருடங்களுக்கு பிறகு வெளியானாலும் சோ அவர்களின் வசனம் பொருந்தும் .
    உதாரணம் :
    துக்ளக்கிடம் ஒரு நிருபர் : —- 600 வருஷ அரசியல் முன்னேற்றத்தை எப்படி ஸார் நாலே நாள்ல தெரிஞ்சுக்கிட்டீங்க .
    துக்ளக் : —- இது என்னுடைய அறிவை காட்டவில்லை உங்களுடைய 600 ஆண்டு கால முன்னேற்றமெல்லாம் 4 நாட்கள் கதையே என்று தான் காட்டுகிறது !!!
    ” ஊழலை ஒழிக்க துக்ளக் சொல்லும் வழி ” : —-
    துக்ளக் : சட்டத்திற்க்கு புறம்பாக நடக்கும் விஷயங்களை சட்ட ரீதீ ஆக்கி விட்டால் லஞ்சம் குறையும் . உதாரணத்திற்க்கு அரசாங்கத்தில் ஒரு வேலை ஆகணும் னா பியூன் க்கு லஞ்சம் 20 ரூபாய் அவரவிட மேல் அதிகாரிக்கு இவ்வளவு ரூபாய் லஞ்சம் என்று சட்டம் அறிவித்தால் போதும் .
    நிருபர் : இது சாத்தியமா ஸார்
    துக்ளக் : Why not ?what was illegal yesterday is legal today and what is illegal today shall be legal tomorrow !!
    இருக்கின்ற கட்சிகளிடம் ஆளுக்கொரு சான்ஸ் என்று ” ஆட்சியை ” கொடுத்துவிட்டால் நம் நாட்டில் எல்லோரும் பணக்காரர்களாகி விடலாம் — என்று அடித்த அடி இருக்கே — அது அவருக்கு மட்டுமே கை வந்த கலை …! அரசியல் என்று இல்லாமல் பல விஷயங்களையும் சாமர்த்தியமாக — நகைச்சுவையோடு கூறும் சோ அவர்கள் — .இப்படத்தில் நினைத்து பார்க்க முடியாத பல திருப்பங்களும் ,வசனங்களும் நம்மை சிரிப்போடு — சிலிர்க்க வைக்கும்….. !! இப்படம் இப்போ உள்ளவர்கள் பார்த்தால் —- அட! அந்த காலத்துலேயே தைரியமாக அரசியலை வாரி இருக்கிறாரே என்று ஆச்சர்ய பட வைக்கும் !!! ” சோ — சோ ” தானே … ?

  6. metro boy's avatar metro boy சொல்கிறார்:

    //..இலங்கைத் தமிழர்களில் அவர்காட்டிய அதீத வெறுப்பு..//

    “எல்.டி டி ஈ மீது காட்டிய அதீத வெறுப்பை ” என்பது இன்னும் சரியாக இருக்கும்.

  7. gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

    Cho was against LTTE. He does not want gun culture in Tamilnadu / India.

  8. Mahesh Thevesh's avatar Mahesh Thevesh சொல்கிறார்:

    Gun culture is already established by Cinema very long time ago. LTTE was providing security
    for Eelam Tamils. It is a fact not known by many Indians. Like Americans Indians also kept ignorance of other countries.

  9. BC's avatar BC சொல்கிறார்:

    இலங்கை தமிழர்களுக்கு சரியானதை எடுத்து சொன்னவர் திரு . சோ. அவர்களே.

  10. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    As you said Mr.R.P.Rajanayagam had mentioned in his blog that only brave person in cinema and politics is Mr.Cho since he expressed his opinion those days daringly without any fear

  11. srinivasanmurugesan's avatar srinivasanmurugesan சொல்கிறார்:

    தனக்கு அரசாங்கம் அளிக்க முன்வந்த பாதுகாப்பை மறுத்த தைரியசாலி திரு.சோ அவர்கள்அவர்கள். .அசாம்பாவிதம் நிகழ்ந்தால் பாதுகாவலர்களும் சேர்ந்து பாதிக்கப்பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தினால் மறுத்தார்.ஆனால் தமிழ் இனத்தின் ஓட்டு மொத்த காவலர்கள் தாங்கள் தான் என்று கூறி கொள்பவர்கள் தங்கள் பெருமைக்காக கருப்பு பூனைப்படை பாதுகாப்பு பெற ஒரு சிறிய கத்தியை வைத்து நாடகமாடியது நிகழ்ந்தும் இதே தமிழகத்தில் தான்.
    தி்முக வின் பல வீழ்ச்சிகளுக்கு இவரும் ஓரு முக்கிய காரணம்.

  12. srinivasanmurugesan's avatar srinivasanmurugesan சொல்கிறார்:

    இவரது சடையர் பாடல்கள் மிகவும் நகைச்சுவையானவை. கா.மை அய்யா முடிந்தால் அவற்றை இங்கு பதிவிட வேண்டுகிறேன்.

  13. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    அருமையான தொடக்கம். நானும் சோவின் வாசகன். குமுதம் இதழில் அவர் ஒசாமஅக வந்த சமயம், அத் தொடர் முடியும் வரை குமுதம் வாங்கி (வெளி மாநில/வட மாநிலத்திலும்) வரவழைத்து படித்தேன். உங்களைப் போலவே, அவர் கருத்துக்கள் சில எனக்கு உடன்பாடு இல்லையாயினும், அவர் துணிச்சல், நேர்மை, ஒழுக்கம் ஆகியவை என்னைக் கவர்ந்தவை. உங்கள் தொடரை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

  14. gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

    நான் சவூதியில் வேலை பார்த்த பொழுது, என்னுடன் நிறைய ஈழ தமிழர்கள் துப்புரவு தொழிலாளிகளாக பணி புரிந்தனர். மிக குறைவான சம்பளம். அவர்கள் வாங்குகிற சம்பளம் வேலைக்காக ஏஜென்ட் இடம் கொடுத்த பணத்தை /கடனை திருப்பவே போதாது. 10 மணி வேலை முடிந்தவுடன் , கார் கழுவி, வீடு வேலை பார்த்து பணம் சம்பாதிப்பர்கள். அவர்கள் கண்டிப்பாக புலிகளுக்கு மதம் தோறும் பணம் அனுப்ப வேண்டும். இல்லையேல் அவர்கள் குடும்பம் நிம்மதியாக இருக்க முடியாது. எனக்கு தெரிந்து, அவர்கள் யாவரும் பயந்துதான் பணம் அனுப்பினர். சவூதியில் இரண்டு வருடம் வேலை பார்த்த பின்பு அவர்கள் திருப்பி அனுப்பி விடுவார்கள், அப்பொழுதுதான் ஏஜென்ட் சம்பாதிக்க முடியும் புது ஆட்களால். ஏழை எளியவர்களிடம் கொள்ளை அடித்தனர் புலிகள் என்பதுதான் நான் சிறிய அனுபவத்தில் பார்த்தது.
    தவிர, நட்டநடு வீதியில் துப்பாக்கி சண்டை போராளிகள் வந்த பின்புதான்.

  15. வணக்கம் ஐயா..
    திரு. சோ அவர்களின் பதில் கேட்பவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணும் ஆழ்ந்து கவனித்தால் அதில் பல பொருள் (புத்திசாலிகளுக்கு மட்டும்) விளங்கும் ஒருமுறை பட்டென கேள்விக்கு பதில் கொடுத்தார் அவை இன்றும் என் மனதில் பசுமையாய் நினைவிருக்கிறது சுமார் 30 வருடத்திற்க்கு முன்பு

    நிருபர் – குடும்ப அரசியலுக்கும், அரசியல் குடும்பத்திற்கும் வித்தியாசம் சொல்லுங்கள்.
    திரு. சோ – நாட்டைக் கெடுப்பது குடும்ப அரசியல், வீட்டைக் கெடுப்பது அரசியல் குடும்பம்

    பட்டென சொன்னார் அன்றிலிருந்து அவரது பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
    தொடர்கிறேன் ஐயா….
    – கில்லர்ஜி

  16. வணக்கம் ஐயா..
    திரு. சோ அவர்கள் வெளியிட்ட // முகம்மது பின் துக்ளக் // என்ற சினிமாவில் வந்த காட்சிகள் அனைத்தும் அடுத்த 25 ஆண்டுகளுக்குப்பிறகு அரசியலில் உண்மையாகவே நிகழ்ந்த்து குறிப்பாக சொன்னால் சக்களத்தி சண்டை புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

    அப்படி முன் கூட்டியே சொல்லும் தீர்க்கதரிசி திரு. சோ அவர்கள் என் வாழ்வில் நான் சந்திக்க விரும்பும் மனிதர் இதுவரை அமையவில்லை.
    – கில்லர்ஜி

  17. Tamil Thiratti's avatar Tamil Thiratti சொல்கிறார்:

    மிக மிக சிறந்த பதிவு நண்பரே. உங்களின் இந்த பதிவை தமிழ் திரட்டியிலும் (http://tamilthiratti.com) இணைத்து இன்னும் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  18. Madhan kumar's avatar Madhan kumar சொல்கிறார்:

    Sir,
    I need Thiru cho Ramasamy in yaarukkum vetkam illai drama in PDF ….plz …

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.