24 ஆண்டுகள் தனிமைச்சிறை ….

.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு,
முதலில் தூக்கு தண்டனையும், பிறகு தண்டனை மாற்றப்பட்டு,
ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட துரதிருஷ்டசாலிகள் சிலரில் ஒருவரான பேரறிவாளன் –

( அற்புதம் அம்மாளின் பிள்ளை என்று சொன்னால்
இன்னும் சுலபமாகப் புரியும் )

அண்மையில் ஒரு வார இதழுக்கு கொடுத்த பேட்டி கீழே –
முதலில் பேட்டியைப் படியுங்களேன். பிறகு பேசுவோம்….

arivu-foto

arivu-1
arivu-2
arivu-3
arivu-4
arivu-5

உண்மையிலேயே கொலை சம்பந்தப்பட்ட சதியில்
இவர் சம்பந்தப்பட்டிருந்தாரா -இல்லையா
என்பது தனியே ஒருபக்கம் இருக்கட்டும்…….

அதற்கு தூக்கு தண்டனை அளவிற்கு போக வேண்டுமா
என்கிற கேள்வியும் தனியே இன்னொரு பக்கம் இருக்கட்டும்….

ஆயுள் தண்டனை என்றால் 14 வருடங்கள் என்று ஒரு
புரிந்தறிதல் இதுவரை இருந்ததே – அது எதன் அடிப்படையில் ..?
இப்போது ஏன் அது கைவிடப்படுகிறது என்கிற கேள்வி
ஒருபுறம் இருக்கட்டும்…..

ஆயுள் தண்டனை என்கிற பெயரில் 24 ஆண்டுகள் தண்டனை
அனுபவித்தது போதும் – இனி இவரை விடுதலை செய்யலாம்
என்று சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு- இந்த நாட்டின் அரசியல் சட்ட விதிகளின்படி தனக்கு
அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி விடுதலை
செய்ய உத்திரவிடும்போது –

முற்றிலும் அரசியல் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காக –
மத்திய அரசு அதில் குறுக்கிட்டு,
இதை முடிவு செய்ய
மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. முடிவு செய்ய
வேண்டியவர்கள் நாங்கள் தான் என்று உச்சநீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கும்போது –

இது ஏற்கெனவே 24 ஆண்டுகளாக தனிமைச்சிறையில்
வாடுபவர்களின் விமோசனம் பற்றிய விவகாரம்;
இதில் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்கிற
உணர்வு – சம்பந்தப்பட்ட நீதி அமைப்புக்களுக்கோ,
வழக்கு தொடுத்த மத்திய அரசுக்கோ – இல்லாமல் போவதை
எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்….?

ஒரு கோவில் திருவிழாவில் உரிமை கொண்டாடும்
இரண்டு கோஷ்டிகளிடையே தலையிடுவதில் காட்டப்படும்
அவசரம் –

– ஒரு திரைப்படத்தை திரையிடலாமா கூடாதா என்று
உரிமைப்பிரச்சினை வரும்போது தலையிடுவதில்
காட்டப்படும் அவசரம் –

ஒரு நடிகர் சங்கத் தேர்தலை இன்ன தேதியில் நடத்தலாமா
கூடாதா என்கிற பிரச்சினையை தீர்ப்பதில் காட்டப்படும்
அவசரம் –

ஆண்டுக்கணக்கில் தனிமைச்சிறையில் வாடும்
சில மனித உயிர்களின் மீது காட்டப்படாதது ஏன் …?

24 ஆண்டுகளாக தன் மகனின் விடுதலையை வேண்டி
இந்த நாட்டில் உள்ள அத்தனை அமைப்புகளின் கதவுகளையும்
தட்டிக்கொண்டிருக்கும் ஒரு தாயின் குரலைக் கேட்பதில்
காட்டப்படாதது ஏன் …?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to 24 ஆண்டுகள் தனிமைச்சிறை ….

  1. thiruvengadam's avatar thiruvengadam சொல்கிறார்:

    தாங்கள் ஒப்பீட்டுக்கூறியவை சரி. தற்போதைய நிலைக்கு நான் எண் ணுவது: ஈகோ யுத்தத்தில் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விடுதலைக்கு தாங்களே காரணம் என்று காட்டிக்கொள்ள முயன்று மத்திய அரசுக்கு காலநிர்ணயம் செய்தது மதிய அரசை மிரட்டல் அல்லவா?. ( இந்த விடுதலை முலம் காங்கிரஸ் சிறியஅளவிலாவது தமிழகத்தில் உயர வாய்ப்பு my feeling ).But அவர்கள் தங்களால் முடிந்த வழி கண்டார்கள். நல்ல திட்டமாக இருந்தாலும் ஒரு நகராட்சி இது போல் தீர்மானம் மாநில அரசுக்கு அனுப்பமுடியுமா?. பாஜகா இதில் முனைப்பு காட்டினால் தீர்வு கிடைக்கலாம். எத்தனையொ கிரிமினல்கள் பிணையில் வெளியே இருப்பது போல் இவரை( apart from final judgement)பிணையில் தன் தாயாருடன் சேர வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி.Till then Law take its own time..

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் திருவேங்கடம்,

      ஒருவகையில் நீங்கள் கூறுவதும் சரியே.

      எப்படியாவது, விரைவில் இந்த துன்பத்திற்கொரு முடிவு
      கிடைக்க வேண்டும். அது யார் மூலம் கிடைத்தாலும் சரி.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. இராமாநுசம்'s avatar இராமாநுசம் சொல்கிறார்:

    பேரறிவாளர் குறிப்பிட்டுள்ள செங்கொடி மரணத்தின் போது நான் எழுதிய கவிதை

    பெண்ணே எரிந்துப் போனாயே-உயிர்
    பிரிந்து எங்கே போனாயோ
    விண்ணே நீயும் சென்றாயா-ஓடி
    வேலூர் சிறையில் நின்றாயா
    கண்ணீர் வற்ற அழுகின்றார்-மக்கள்
    கதறி துயரில் விழுகின்றார்
    எண்ணீர் மத்தியில் ஆள்வோரே-இனி
    எத்தனை உயிர்கள் மாள்வாரே

    வஞ்சம் மட்டுமே உருவாக-மூவர்
    வாழ்வைப் பறிக்கும் கருவாக
    நெஞ்சம் இரங்கா நிலைநன்றா-உயிர்
    நீங்கின் மீண்டும் வருமொன்றா
    தஞ்சம் அடைந்த பறவைக்கும்-தன்
    தசையைத் தந்தவன் தமிழனடா
    பஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்-தீ
    பற்றி எரியும் திட்டாதீர்

    முடிவை ஆவர்கள் எடுக்கட்டும்-நாம்
    முடங்கியா விடுவோம் ஆகட்டும்
    அடங்கி நடக்கும் தமிழனுக்கு-பிறரை
    அடக்கவும் தெரியும் தமிழனுக்கு
    திடமாய் முடிவு எடுப்பாராம்-அவர்
    தினமும் அறப்போர் தொடுப்பாராம்
    விடவே மாட்டோம் என்பாரா-வீணில்
    விடத்தை அவரே தின்பாரா

    இனிமேல் உயிர்பலி வேணாவே-இன்று
    இழந்தோம் செங்கொடி வீணாவே
    குனியோம் எவர்கும் தலைகுட்ட-என்ன
    கோழையா நாமே தரைமுட்ட
    கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிர்
    காக்க தமிழரே உடன்ஒல்லை
    துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவர்
    தூக்குக் கயிற்றை அறுப்பீரே

    புலவர் சா இராமாநுசம்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் இராமானுசம்,

      கவிதை மேல் உங்களுக்கு உள்ள காதல் புரிகிறது.
      ஆனால் நடைமுறை இங்கு வேறாக இருக்கிறது.
      இதுவரை, இங்கு யாரும் ஒரு துரும்பைக் கூட
      அசைக்கவில்லை என்பது தான் வருத்தம் தரும் உண்மை.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. பிங்குபாக்: 24 ஆண்டுகள் தனிமைச்சிறை …. | Classic Tamil

  4. எஸ்'s avatar எஸ் சொல்கிறார்:

    ஆயுள்தண்டனை என்பது ஆயுட்கால சிறை என்றுதான் பொருள். வழக்கமாக மாநில அரசுகள் ஆயுள்தண்டனை விதிக்கபட்ட நபர் குறைந்தபட்சமாக 14 ஆண்டுகள் சிறையின் இருந்தபின் விடுதலை செய்யலாம் என சட்டத்தின்படி கருணை அடிப்படையில் விடுதலை செய்யும். இதை வைத்து பலர் ஆயுட்கால சிறை 14 வருடம் என நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். 2012-ல் சுப்ரீம் கோர்ட் தெளிவாக “ஆயுட்சிறை என்பது சாகும் வரையிலான தண்டனை” என அறிவித்துள்ளது. மேலும் கண்டமேனிக்கு தண்டனை குறைப்பு வழங்கக்கூடாது, தலைவர்கள் பிறந்த நாள் போன்ற காரணங்களுக்கு விடுதலை வழங்கக்கூடாது எனவும் சிபாரிசு செய்தது.

    மேலும் ராசீவ் கொலை சதியாளர்களின் வழக்கில் பிரசிகீயூசன் தரப்பு மத்திய அரசு என்பதினால் அவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்ய மாநில அரசுக்கு உரிமையில்லை என்கிறது மத்திய அரசு (பொதுவாக சாதாரண குற்றங்களில் மாநில அரசுதான் பிராசீகீயுசன் தரப்பு). ஜெயலலிதா வழக்கு ஏதோ உயிர் போகும் வழக்கு போன்று உடனடியாக ஏற்று நிவாரணம் வழங்கிய சுபரீம் கோர்ட் ராசீவ் கொலையாளிகள் போன்ற பல நிராபராதிகள் என்று கோருபவர் பலரை வருடக்கணக்கில் சிறையில் வாட விடுகிறது.

    மேலும் தியாகராசன் X- ஐபீஎஸ், பேரறிவாளன் நிரபராதி என சொல்லவில்லை, ஆனால் பேரறிவாளன் தான் வாங்கி கொடுத்த பாட்டரி குண்டில் பயன்படுத்தப்படும் என்ற விபரம் தனக்கு தெரியாது என்று கொடுத்த வாக்கு மூலத்தை கோர்டில் தெரிவிக்காமல், அவருக்கு தெரிந்துதான் செய்தார் என பொய் சொன்னதாக இந்த X- ஐபீஎஸ் ஒத்துக்கொண்டார். இந்த பொய்யால் தான் பேரறிவாளனுக்கு தூக்கி தண்டனை வழங்கபட்டது. இந்த அதிகாரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்பதுதான் நமது அரசு-நீதி துறையின் லட்சணம்!!!

  5. Sharron's avatar Sharron சொல்கிறார்:

    Sad to know about his condition.

  6. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    முன்னரே சொன்னது தான்… நாம் இருப்பது மூடர் தேசம்!

  7. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    ஓடினவனுக்கு ஒன்பதில குரு. அகப்பட்டுக் கொண்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.

    இருந்தபோதும், இந்திய முன்னாள் பிரதமரைக் கொன்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், குற்றம் நிரூபிக்கப் பட்டவர்கள் என்பதால்தான் இவர்களுக்குக் கருணை கிடைக்கவில்லை. இப்போது பா.ஜ;கா விடுதலை செய்தாலும் அது அரசியல்ரீதியாகப் பார்க்கப்படும் (ராஜீவ்காந்தி, காங்கிரஸ் போன்று).

    ஆனாலும், நாம் இத்தகைய வழக்குகளில் சென்டிமென்ட் பார்க்கக்கூடாது. எது அரசின் நிலையோ அதுதான் நமது நிலையும் என்ற எண்ணம் வேண்டும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      மன்னிக்கவும் நெல்லைத் தமிழன்,

      அரசு ஒரு இயந்திரம். அதற்கு மனசாட்சி, செண்டிமெண்ட்
      எல்லாம் கிடையாது.

      நாம் மனிதர்கள். முக்கியமாக மனசாட்சியை மதித்து
      வாழும் மனிதர்கள். நம்மைப் பொருத்த வரையில் –
      நம் மனம் என்ன சொல்கிறதோ
      அது தான் சரி.

      என்ன – எதுவும் செய்யத்தான் நமக்கு வக்கில்லை…
      வெளிப்படையாக சொல்லவாவது செய்வோமே…

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  8. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    This is a moving tale. They are our fellow human beings and need to be shown mercy. Hope someone can bring this issue to Madam Jayalalitha’s notice. BJP local leaders must raise their voice and make the Central leaders agree to release such persons languishing in jails.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.