
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் ஜபல்பூரில்
(மத்தியப் பிரதேசம் ) “ஜன சங்” மேடை ஒன்றில்
முதல் முதலாக அடல் பிஹாரி வாஜ்பாய்
அவர்களையும், லால் கிருஷ்ண அத்வானி அவர்களையும்
ஒரு சேரப் பார்த்தேன்.
வாஜ்பாய் ஒரு அற்புதமான,இயற்கையான பேச்சாளர்.
இந்தி பிடிக்காதவர்களுக்கும்,
அவரது பேச்சு பிடிக்கும் !! குளிர்ச்சியாக-
மிதமாகக் கொட்டும்
அருவி நீரில் குளிப்பது போல்
இருக்கும் அவரது பேச்சைக் கேட்கும்போது.
வாஜ்பாயை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது.
அத்வானியும் இந்தி, ஆங்கிலம் இரண்டிலும் பேசுவார்.
சாதாரண அரசியல்வாதிகள் போல் இல்லாமல் –
அவரது உரை நேர்மையாகவும்,
ஓரளவு வெளிப்படையாகவும் இருக்கும்.
இருந்தாலும் – அவரது பேச்சு கவர்ச்சிகரமாக இருக்காது.
மக்களை கவர்ந்து ஈர்க்கக்கூடிய வீச்சு, ஆற்றல் –
அத்வானியின் பேச்சில் இருக்காது.
அதற்குப் பிறகும் பலமுறை இருவரின் உரைகளையும்
நேரில் கேட்டிருக்கிறேன்.
அண்மையில், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில்
துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்கள் அத்வானி பற்றி
திறந்த மனதுடன் பல கருத்துக்களைக் கூறி இருக்கிறார்.
அதைப்பற்றி எனக்கு சில கருத்துக்கள் இருக்கின்றன.
முதலில் “சோ” – அத்வானி குறித்து சொன்னவை –
அதற்குப் பிறகு -நான் சொல்ல விரும்புவது…!
(சோ அவர்களின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்.. )
———————-
வாஜ்பாய் பிரதமராக வந்ததுக்கு மிக முக்கியமான
காரணமே அத்வானி தான். எப்படி என்றால், அப்போது
பாரதீய ஜனதாவின் தலைவராக இருந்தவர் அவர் தான்.
அவரைத்தான் பிரதமர் வேட்பாளராகப் பலரும்
நினைத்திருந்தார்கள். இருந்தபோதும், அத்வானி
தனக்கு சீனியரான வாஜ்பாயைப் பல காரணங்களுக்காக
முன்னிருத்துவதாகச் சொல்லி பிரதமர் வேட்பாளராக்கி,
பிரதமராகவும் ஆக்கினார்.
அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கையா நாயுடு
என்று பலர் முன்னுக்கு வரக்காரணமாக இருந்தவரும்
அத்வானி தான்.
அப்போது குஜராத்தில் பாஜக வின் நிலைமை
சரியில்லாமல் இருந்தபோது, “நரேந்திர மோடியை
அங்கு நியமித்தால் நன்றாக இருக்கும்” என்று
அவரை முன்னிறுத்தியவரும் அவர்தான்.
அரசியலைப் பற்றி தெளிவான சிந்தனை உடையவர்.
டெல்லியில் பல கூட்டங்களில் அவரும், நானும்
கலந்து கொண்டிருக்கிறோம். என் பேச்சில் இருக்கும்
நகைச்சுவை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.
பேச்சை ரசித்துக் கேட்பார்.
அத்வானிக்கும் நரேந்திர மோடிக்கும் இடையில்
சுமுகமான உறவு இல்லை என்கிற பேச்சு எழுந்த
நேரத்தில் அவர்கள் இருவரையும் சென்னையில் நடந்த
“துக்ளக்” ஆண்டுவிழாவுக்கு அழைத்தேன்.
இருவரும் வந்தார்கள்.
அந்த விழாவில் இருவரும் மேடையில் இருக்கும்போதே,
“நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும். நாட்டின்
முக்கியத் தலைவராக இருக்கிற அத்வானி அதை
முடிவு பண்ண வேண்டும்” என்று நான் நேரடியாகப்
பேசினேன்.
“இங்கு சோ சொல்கிறபோது கொஞ்சம் தயக்கத்தோடு
சொல்ற மாதிரி இருந்தது. இதில் என்ன தயக்கம்
வேண்டியிருக்கிறது. இளைஞர்களை ‘என்கரேஜ்’
பண்றது தான் என்னுடைய பொறுப்பு.
நான் அதை பண்ணுவேன்” என்று பேசினார்.
———————–
சோ, அத்வானி, நரேந்திர மோடி ஆகிய மூவரும்
கலந்து கொண்ட அந்த துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு
நானும் ஒரு பார்வையாளனாகப் போயிருந்தேன்.
உங்களில் சிலர் கூடப் போயிருப்பீர்கள்..!!
ஆசிரியர் சோ சொல்வது எந்த அளவிற்கு சரி… ?
(நாளை பார்ப்போமா …!)




அத்வானி சிறந்த தலைவர் என்பது முற்றிலும் உண்மை தான். நல்ல பதிவு…
90களின் தொடக்கத்தில், ஆந்திர மாநில செயலர் என்கிற
அளவில் தான் திரு.வெங்கைய நாயுடு கட்சி பணி ஆற்றிக்
கொண்டிருந்தார். கட்சி ஆந்திர சட்ட சபையில் ஓரிடம் கூட
வகிக்கவில்லை எனினும் மாநிலம் முழுவதும் தீவிரமாக
அறியப்பட்டு இருந்தது. காங்கிரஸ் எதிர்ப்பாளரான திரு.
சந்திரபாபு நாயுடு “தயக்கமின்றி” திரு.வாஜ்பாய் தலைமையிலான
மத்திய அரசை ஆதரிக்க இந்த நாயுடு வழி வகை செய்தார். யாருமே
எதிர்பாரா ஒரு நாளில் கட்சியின் அகில இந்திய தலைவரானர்.
குஜராத்தில் வகேலாவினாலும், கேசுபாயினாலும் கட்சியும்
ஆட்சியும் பின்னடவை சந்திக்க துவங்கிய நேரத்தில், திரு.மோடியை
வெகு சிலரே அறிவர். ஆனால், அவரால் நிலைமையை சீர் செய்ய
முடியும் என்பதை அறிந்து, தலைமை பணியை அளித்த வேளையில்
வகேலா காங்கிரஸுக்குத் தாவினார். கேசுபாய் தனது “ஆசியை”
வழங்கினாரே தவிர முழு ஆதரவைத் தரவில்லை. கடந்த தேர்தலில்
கூட தனிக்கட்சி ஆரம்பித்து மோடியை எதிர்த்தார். இந்த நிலையில்
தான், திரு.மோடி முதன்முறை முதல்வராகி, “தனது” நிர்வாகத் திறன்
ஒன்றின் காரணமாகவே அடுத்தடுத்து மூன்று முறை தேர்லில்
வென்று முதல்வராக தொடர்கிறார். இப்போது, பிரதமர் வேட்பாளர்
என்கிற அளவில் பேசப்படுகிறார்.
அதுபோலவே, சுஷ்மா மற்றும் ஜெட்லி போன்றவர்களின் அரசியல்
ரீதியிலான உயர்விற்கு காரணம் திரு.அத்வானி தான் என்பதில்
யாருக்கு ஐயம் இருக்க முடியும்?