சாராய சாம்ராஜ்யம் – துவக்கமும், வளர்ச்சியும் -வித்திட்ட கலைஞரின் மாட்சியும்…..!!!

…………………………………………………

……………………………………………………..

ஜூலை, 2015-ல் விமரிசனம் தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது.
அதன் தலைப்பு –

” 92 வயது சாணக்கியர் – மதுவிலக்கு காய் நகர்த்தலில்
ஏமாந்து விட்டாரா என்ன …? “

அப்போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா அவர்கள்….!!!


அடுத்த 8 மாதங்களில், ஏப்ரல் 2016-ல் சட்டமன்றத் தேர்தல்
நடைபெறவிருந்தது…..

இப்போது சிலர் அந்த கட்டுரையை ஆர்வமாக, மீண்டும் தேடியெடுத்து
படித்திருக்கின்றனர் என்பது எடிட்டர் தளத்திலிருந்து தெரிய
வந்தது…. கட்டுரையின் விவரங்கள் எனக்கு மறந்து விட்டன…
எனவே, மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன் ….


இப்போது, அதை அவசியம் மறுபதிவு செய்யவேண்டும் என்று
தோன்றியது…. எனவே, கீழே –

…………………………………………………………………………………………………….


” 92 வயது சாணக்கியர் – மதுவிலக்கு காய் நகர்த்தலில்
ஏமாந்து விட்டாரா என்ன …? ” -விமரிசனம் – காவிரிமைந்தன்

………..

எதையும் நன்கு யோசித்து, திட்டமிட்டு காய் நகர்த்தும் கலைஞர் கடைசியில் மதுவிலக்கு காய் நகர்த்தலில் – கோட்டையை பிடிப்பதில்,கோட்டை விட்டு விட்டாரா …?

சில பின்னணிகளை முதலில் பார்ப்போமே –

தேர்தலுக்கு முன்னதாக – மதுவிலக்கு கொள்கையில் மாறுதல்களை கொண்டு வர ஜெ.அவர்கள் தீர்மானித்து விட்டார் என்பது கிட்டத்தட்ட
அனைவரும் அறிந்த விஷயம். இந்த மாற்றங்கள் எத்தகையதாக இருக்கும்… எப்போது அமலுக்கு வரும் போன்ற விஷயங்களை அவர் மனம் மட்டுமே அறியும். அவராக அறிவிக்கும் வரையில் வேறு எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

கடந்த திங்களன்று மதியம் ஜெ. அவர்கள் அமைச்சரவை
கூட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து விவாதித்தாகவும்,
ஒரு முடிவிற்கும் வந்து விட்டதாகவும் கலைஞருக்கு மாலையில்
கோட்டையில், அவருக்கு வேண்டப்பட்டவர்களிடமிருந்து
செய்தி கிடைக்கிறது. உடனடியாக மூத்த சகாக்களை தன்
இல்லத்திற்கு வரவழைத்து ஆலோசித்திருக்கிறார்.

மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்தியதற்கான பெருமை ஜெ.வுக்கு போகாமலிருக்க, இந்த விஷயத்தில் திமுக முந்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

எப்படியும் ஜெ. செயல்படுத்த முடிவெடுத்து விட்டாரென்றால் – அதற்கு முன்னதாக திமுகவே அறிவித்து நல்ல பெயரை தட்டிக் கொண்டு போகலாம் என்று முடிவெடுக்கப்பட்டு –
இரவோடு இரவாகவே – அறிக்கை தயாரிக்கப்பட்டு,

//தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும்,
ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை
அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.//

– திரு ஸ்டாலின் அவர்களாலேயே செய்தியாளர்கள்
முன்னிலையில் படிக்கப்பட்டும் விட்டது.

இதன் விளைவுகள் ……?

– பொது மக்களைப் பொருத்த வரையில் பெரும்பாலானோர் –
தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிராக குரல்கள் வலுப்பெற்று
விட்டதால் – அதனைப் பயன்படுத்திக் கொள்ள
கலைஞர் தேர்தலுக்காக கொடுக்கும் வாக்குறுதி இது
என்றே நினைத்தனர். மக்களின் ரீ-ஆக்ஷன் எப்படி இருந்தது என்பதை வலைத்தள பின்னூட்டங்களில் பார்த்தோம்.

இன்னொரு பக்கம் – அரசியல்வாதிகளின் ‘ரெஸ்பான்ஸ்”
எப்படி …? திரு விஜய்காந்த் சுத்தமாக கண்டுகொள்ளவே இல்லை…

கலைஞருக்கும் – டாக்டர் ராமதாசுக்கும் –
ஸ்டாலினுக்கும் – அன்புமணிக்கும் தானே இப்போது போட்டி…?!!!

மதுவிலக்கை முன்வைத்து தீவிரமாக அரசியல் செய்து
கொண்டிருக்கும் டாக்டர் அய்யா சும்மா விடுவாரா ….?

அவரது உடனடியான ஆவேச அறிக்கையிலிருந்து கொஞ்சம் கீழே –

———-

கருணாநிதி தமது அறிக்கையின் முதல் பகுதியில் அனைத்துத்
தரப்பினரும் மனம் போன போக்கில் மது அருந்தி நூற்றுக்கணக்கில்
உயிர்ப்பலி ஆவதாகவும், பெண்களும் பச்சிளம் குழந்தைகளும்
மதுவுக்கு பலி ஆவதாகவும் கூறியிருக்கிறார்.

கருணாநிதியின் அறிக்கையை படிக்கும்போது, அதன் ஒவ்வொரு வரியும் பாவ மன்னிப்பு கோருபவரின் மனதிலிருந்து எழும் வார்த்தைகளாகவே என காதில் விழுந்தன. காரணம் 1948 ஆம் ஆண்டிலிருந்து 23 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைமுறையிலிருந்த முழு மதுவிலக்கை 1971 ஆம் ஆண்டு கருணாநிதி ரத்து செய்தது தான்
தமிழகத்தின் இன்றைய அவல நிலைக்கு
காரணமாகும்.

மதுவிலக்கின் தேவை குறித்து கருணாநிதி இப்போது பேசும்போது,
1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்ய கருணாநிதி முடிவு
செய்தது, அதையறிந்து துடித்து போன ராஜாஜி கொட்டும் மழையில் குடைபிடித்து வந்து கருணாநிதியை சந்தித்து மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியது,

ஆனால், அதை ஏற்காத கருணாநிதி, “ராஜாஜி ஒரு பரிந்துரைக்காகத் தான் என்னை சந்தித்தார்” என்று கூறி
அவரை எள்ளி நகையாடிவிட்டு
மதுவிலக்கை ரத்து செய்தது உள்ளிட்டவை என் நினைவுக்கு
வந்து செல்கின்றன.

மது என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு தலைமுறை
வளர்ந்த நிலையில், அவர்களை மதுவலையில் வீழ்த்தி சிதைத்த
பாவம் கருணாநிதியையே சாரும் என்பதை எவராலும்
மறுக்க முடியாது.

மதுவின் தீமைகள் குறித்தும், மது விலக்கின் அவசியம் குறித்தும்
35 ஆண்டுகளாக பரப்புரை செய்து வருகிறேன். பாட்டாளி மக்கள்
கட்சி தொடங்கி 26 ஆண்டுகளாகி விட்ட நிலையில் அதன் முதன்மைக் கொள்கையாக இருப்பது மது விலக்கு தான்.
அதனால் தான் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வர் அன்புமணி ராமதாஸ் போடும் முதல் கையெழுத்து முழுமையான மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவதற்காகத் தான் இருக்கும் என்று அறிவித்திருக்கிறோம்.

பா.ம.க. சார்பில் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வரும் மது ஒழிப்பு மாநாடுகளுக்கு ஆயிரக்கணக்கில் மகளிர் திரண்டு வருகின்றனர்.

இவற்றையெல்லாம் பார்த்த பின்னர் மதுவிலக்கு பற்றி பேசுவது பலருக்கும் பொழுதுபோக்காக மாறி விட்டது. அந்த வரிசையில் கருணாநிதியும் சேர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது.

அதுமட்டுமின்றி, முழு மதுவிலக்கை உடனடியாக கொண்டுவருவாரா?
அல்லது படிப்படியாக மதுவிலக்கு என்று கூறி கடந்த காலத்தில்
ஏமாற்றியதைப் போல இப்போதும் ஏமாற்றுவாரா? என்பது
பற்றியெல்லாம் எதையும் கூறாமல், பின்னாளில் மாற்றிக்கொள்ள
வசதியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்டும் படாமலும் மேலோட்டமாக ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி.

1971-ஆம் ஆண்டில் மதுக்கடைகளை திறந்து தமிழகத்தின் சீரழிவுக்கு வழிவகுத்த கருணாநிதிக்கு 44 ஆண்டுகள் கழித்து இப்போது தான் மதுவின் தீமைகள் குறித்து ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது.

அதுவும் எதனால் ஏற்பட்டிருக்கிறது?

அடுத்த 8 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் மக்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக இந்த ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது.

இடைப்பட்ட காலத்தில், கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக
இருந்தபோது மதுவிலக்கை நடைமுறைப் படுத்தும்படி வலியுறுத்தினேன்.

அப்போதெல்லாம் பதிலாக கிடைத்தது கிண்டலும், கேலியும் தான்.
22.12.2008 அன்று 44 சமுதாயத் தலைவர்கள் மற்றும் மத குருமார்களுடன் கருணாநிதியைக் கோட்டையில் சந்தித்து தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என மன்றாடினேன்.

ஆனால், எனது கோரிக்கையை முழுமையாக ஏற்காத கருணாநிதி, மது விற்பனை ஒரு மணி நேரம் குறைக்கப்படும்; இனி புதிதாக
மதுக்கடைகள் எதுவும் திறக்கப்படாது; படிப்படியாக மதுவிலக்கு
நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

கருணாநிதி நினைத்திருந்தால் அதற்கு பிந்தைய இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி இருக்கலாம்.
ஆனால், தமிழகத்தில் மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழிவகுக்கும்
வகையில் மதுவிலக்கை கொண்டுவர கருணாநிதி துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

24.08.10 அன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதியிடம் மதுவிலக்கு பற்றி கேட்ட போது, “மதுவிலக்கு குறித்து பரிசீலித்து வருவதாகத்தானே சொன்னேன், இத்தனை நாள்களில் கொண்டு வருகிறேன் என்றா கூறினேன்?” என எதிர்கேள்வி எழுப்பி நழுவி விட்டார்.

மதுவுக்கு ஆதரவாக இப்படிப்பட்ட நீண்ட நெடிய வரலாற்றைக்
கொண்ட கருணாநிதிதான், ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை
நடைமுறைப்படுத்தப் போவதாக கூறுகிறார். நம்ப முடியாத
வாக்குறுதிகளை தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்து என்பார்கள்.
ஆனால், கருணாநிதியின் வாக்குறுதிகள் காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள். 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளிடம் ஏமாந்த மக்கள் இனியும் கருணாநிதியை நம்பி ஏமாற மாட்டார்கள்.

ஒருவேளை உண்மையாகவே தாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம்
செய்ய கருணாநிதி விரும்பினாலும் கூட அதை மக்கள் அனுமதிக்க
மாட்டார்கள். ஏனெனில் அவர் செய்த பாவம் அவ்வளவு கொடியது” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

————-

டாக்டர் ராமதாசின் கடுமையான தாக்குதலுக்கு தானே
பதில் கூறுவது பொருத்தமாக இருக்காதென்று நினைத்த
கலைஞர், திருவாளர் துரைமுருகன் மூலம் அளித்த பதில் இது –

// மகாத்மா காந்திக்குப் பிறகு மதுவிலக்கை கொள்கை தனக்கே
சொந்தம் என ராமதாஸ் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

இதை பிடித்துக்கொண்டே எப்படியாவது ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற நப்பாசையில் இருக்கிறார். அவரது மகன் முதல்வராகி
மதுவிலக்குக்காக முதல் கையெழுத்திடுவார் என கற்பனை உலகில் வாழ்ந்து வருகிறார்.

இந்தக் கனவுகளை எல்லாம் ஒரே நொடியில் தவிடுபொடியாக்கி விட்டாரே என்ற கோபத்தில் கருணாநிதி மீது
வீண்பழி சுமத்துகிறார்.//

——————–

சீனியர்கள் இப்படி இருக்க வருங்கால முதல்வர் போட்டியிலிருக்கும்
ஜூனியர் ஸ்டாலின் அவர்களுக்கு அந்த பக்கத்து ஜூனியர்
டாக்டர் அன்புமணி விட்ட கேள்விக்கணை நோட்டீஸ் இது –

// 1. தமிழ்நாட்டில் 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவல நிலை ஏற்பட்டதற்கு காரணம் யார்?

  1. 1971 ஆம் ஆண்டில் ராஜாஜி கொட்டும் மழையில் கோபாலபுரம்
    இல்லத்திற்குச் சென்று, மதுவிலக்கை ரத்து செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போதிலும், அதை பொருட்படுத்தாமல் 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தவர் யார்?
  2. மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன
    தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என்று அண்ணா கூறினார். மது கூடவே கூடாது என்று பெரியார் கூறினார்.

ஆனால், பெரியார், அண்ணாவின் கொள்கைகள் தேவையில்லை… வருமானம் தான் முக்கியம் எனக் கருதி மதுக்கடைகளை திறந்தவர் யார்?

  1. புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என
    30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி தங்கள்
    கட்சியைச் சேர்ந்த இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள்,
    வேண்டிய இருவர் உட்பட 5 பேருக்கு புதிய மது ஆலைகளை நடத்த அனுமதி வழங்கியது யார்?
  2. மது விலக்கை ஏற்படுத்தும் சிந்தனை கருணாநிதிக்கு ஏற்கெனவே ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறீர்கள். அப்படியானால், தமிழகத்தில்
    படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று 22.12.2008 அன்று ராமதாஸூக்கு வாக்குறுதி அளித்த கருணாநிதி,

அதன்பிறகு 30 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் மதுவிலக்கை
நடைமுறைப்படுத்தாதது ஏன்? அப்போது கொடுத்த
வாக்குறுதியை நிறைவேற்றாத கருணாநிதி இப்போது மட்டும்
நிறைவேற்றுவார் என எப்படி நம்புவது?

  1. 1996 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு
    வந்தால் முழுமதுவிலக்கு மிகத் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த கருணாநிதி அதன் பின்னர் 10 ஆண்டுகள்
    முதலமைச்சராக இருந்தும் அதை நிறைவேற்றாதது ஏன்?

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 27.12.2008 அன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருந்த உங்கள் அரசு அதை
செயல்படுத்தாதது ஏன்? இப்படிப்பட்ட உங்களை எப்படி மக்கள் நம்புவார்கள்?

  1. தமிழகத்தில் நடைமுறையில் இருந்த மதுவிலக்கை நீக்கி கடந்த
    44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து இரு தலைமுறைகளை
    சீரழித்தது யார்?
  2. காமராஜர் முதலமைச்சராக இருந்த போது 12,000 புதிய பள்ளிகளை திறந்து அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தார். ஆனால், அவருக்குப் பின் 7,000 மதுக்கடைகளை திறந்து மக்களை
    குடிக்க வைத்தது யார்?
  3. அதிமுக தான் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததாகவும்,
    அதனால் தான் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மதுக்கடை என்ற நிலை
    ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டும் நீங்கள், உங்கள் ஆட்சியில்
    அந்த கடைகளை மூடாதது ஏன்?
  4. மதுவின் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியமல்ல,
    மக்கள் நலனே முக்கியம் என்று திடீரென அக்கறை காட்டுகிறீர்கள்.
    2006 ஆம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற போது ஆண்டுக்கு
    ரூ.6086 கோடியாக இருந்த மது வருவாயை 2011 ஆம் ஆண்டில்
    150% அதிகரித்து ரூ.14,965 கோடியாக இலக்கு நிர்ணயித்து உயர்த்தினீர்களே….

இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படவில்லையா?

——————

” சும்மா கெடந்த சங்கை ஊதிக் கெடுத்தாராம் ஆண்டி “ என்பதைப் போல், கலைஞர் நேரங்கெட்ட நேரத்தில் மதுவிலக்கு பற்றி பேசி – தேன் கூட்டைக் கலைத்து விட்டாரோ …?

ஒருவேளை கலைஞர் இந்த அறிவிப்பை இப்போது
வெளியிடாமல் இருந்திருந்தால் –
ஜெ. அவர்கள் மதுவிலக்கைப் பற்றிய அறிவிப்பை வெளியிடும்
சமயத்தில், பெரிய டாக்டர் அய்யாவும், சின்ன டாக்டர் அய்யாவும் – தங்கள் வாய்ப்பை தட்டிப்பறித்ததற்காக –
அவர் மேல் பாய்ந்திருப்பார்கள்….!

தப்பாக காயை நகர்த்தி –
கலைஞர் தானாக வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டாரோ …?

தமிழகத்தில் – பூரண மதுவிலக்கு அமலுக்கு கொண்டு
வரப்பட வேண்டும் என்பதில் – இந்த வலைத்தள நண்பர்கள்
யாருக்கும் எந்தவித மாறுபட்ட கருத்தும் இருக்க வாய்ப்பில்லை…

ஆனால் – கலைஞரின் இந்த காய் நகர்த்தல் மற்றும்
அதன் விளைவுகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே …?

…………………………………………………………………………..

மேலே இருப்பது – 2015-ல் எழுதப்பட்ட இடுகை…. இப்போது என்ன தோன்றுகிறது…..?

பரம்பரை பரம்பரையாக ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறாகள்….

ஏமாறுபவர்கள் ஏமாறிக்கொண்டே இருக்கிறார்கள்…

தமிழகத்தில் ஏழைகளை ஒழித்துக்கட்ட இன்னும் தீவிரமாக இந்த திட்டத்தையே நவீனப்படுத்துகிறார்கள்….!!!

..

…………………………………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to சாராய சாம்ராஜ்யம் – துவக்கமும், வளர்ச்சியும் -வித்திட்ட கலைஞரின் மாட்சியும்…..!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    //புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் // – அந்த வெண்ணெய் ஊழல் தொழுநோயாளிகளின் கையினால் பிசியப்பட்டு, சிறிது சிறிதாக மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு, மக்கள் ஆவலாகத்தானே வாங்கிக்கொள்கிறார்கள். இதில் அண்ணா கருத்துக்கு என்ன மதிப்பு இருக்கிறது?

    //பூரண மதுவிலக்கு அமலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் – இந்த வலைத்தள நண்பர்கள் யாருக்கும் // – வச்சாக் குடுமி, சரச்சால் மொட்டை என்பதுபோல தேவையென்றால் மதுவை ஆறாக ஓடவிடுவோம், நினைத்தான் மதுவைத் தடை செய்வோம் என்று செய்வது யாராலும் முடியாது. கெடுதலை நுழையவிடாமல் பார்த்துக்கொள்வதுதான் புத்திசாலிகளின் செயல். கெடுதல் பரவியபிறகு எப்படி அதனை நிறுத்த முடியும்? செல்ஃபோனினான் குடும்ப உறவு சிதறுகின்றது. ஆனால் செல்ஃபோன் நம் வாழ்வில் தவிர்க்கமுடியாததாக ஆகிவிட்ட பிறகு, அதன் உபயோகத்தை நெறிப்படுத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கமுடியும். Social Drinking என்பது சாதாரண விஷயமாகப் போய்விட்ட இந்த நாளில் பூரண மதுவிலக்கு என்பது எப்படி சாத்தியம்? கருணாநிதி மதுவை நுழைத்தார், பிறகு தங்கள் கட்சிக்காரர்களுக்கு சாராய ஆலை அமைக்க அனுமதி தந்து அதனால் மிகவும் பயன் பெற்றார். அவர் பையன், இன்னும் ஒரு படி மேலே போய், கள்ளச்சாராயம் சாப்பிட்டுச் செத்தால் பத்து லட்சம் என்று அள்ளிக்கொடுக்கிறார். இதுல மது விலக்காவது மண்ணாங்கட்டியாவது..

    மது விற்பனையை நெறிப்படுத்தவேண்டும். வாங்கும் விலை, அதற்கான வரி, வாங்கும் பிராண்டுகள் மக்கள் விருப்பத்துக்கேற்றவாறு, வாங்கும் பொருளுக்கு பில் என்று வெளிப்படையாக நடக்கவேண்டும். அதைச் செய்யவே இங்கு ஆட்களில்லை. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய், ஒரு க்ரேட்டுக்கு 100 ரூபாய் என்று அதிகப் பணம் வசூலித்து அரசின் தலைமைக்கு லஞ்சமாகச் செல்கிறதாம், 10 ரூபாய் பெறுமானமுள்ள மதுவிற்கு 250 ரூபாய் வரி என்று பலப் பலச் செய்திகளை நாம் காண்கிறோம்/கேட்கிறோம். இதில் க்ளப் நடத்துவது என்றெல்லாம் ஊழல் செய்ய ஏகப்பட்ட தில்லுமுல்லு. இதில் கோர்ட் தலையிட்டு, வளர்ச்சித் திட்டங்கள் போலவே, மது விற்பனையும் சீராக்கப்பட்டால் அதுவே போதுமானது. கர்நாடகாவில் மது விற்பனை சீராக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    நீங்கள் சில சமயங்களில் தவறான கருத்துகளை
    சர்வ சகஜமாக நியாயம் போல் எழுதுகிறீர்கள்…

    செல்போனை – சாராயத்துடன் ஒப்பிட்டு எழுதுவது
    அறிவுடைமையா ….?

    உங்கள் குடும்பத்தில் யாரிடமாவது செல்போன்
    இருந்தால் அதை தவறாக கருதுவீர்களா….?

    ஆனால், யாரிடமாவது சாராய புட்டி இருந்தால்….?

    செல்போன் விஞ்ஞான வளர்ச்சி…

    சாராயம் – அழிவின் பிரதிபலிப்பு …

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      It is with a concern that I wrote like that. “Social Drinking’ has become an accepted norm now a days (கேட்க எனக்கு அருவருப்பாக இருந்தாலும்).

      பலப் பல வருடங்களுக்கு முன்பு, IT professional persons டாஸ்மாக் கடை முன்பு Tie உடன் மற்ற குடிமக்களோடு நின்று சர்வ சாதாரணமாக பாட்டில் வாங்கிச் செல்வதைப் பார்த்து வியந்தேன். ‘சிகரெட் குடிப்பான்” என்பதற்காக நண்பனுடன் சேர்ந்து செல்லாமல் (அப்படிச் சென்றால் கெட்ட பெயர் வருமே என்று) நான் தனியாகச் சென்ற என் கல்லூரிக் காலத்தை நினைத்துக்கொள்கிறேன். குடிகாரன் என்பதே ஒருவனை சமூகம் கேவலமாகத் திட்டும் சொல்லாகப் பார்த்த காலத்தை நினைக்கிறேன். சாராய consumption என்பது ஒரு industryயாகவும், தமிழக வளர்ச்சிக்கான அளவுகோலாகவும், 5000 கடைகள், ஒரு பார் வைத்துக்கொள்ள 2 கோடி ரூபாய் லஞ்சம், பட்டனைத் தட்டி சாராயபுட்டியை எடுத்துக்கொள்ளும் வளர்ச்சி, தீபாவளிக்கு இத்தனை கோடி விற்பனை இலக்கு, வருடத்திற்கு 50,55000 கோடி என்று இலக்கு வைத்து அரசு சாராய விற்பனை செய்வது, அதை ஒரு பெரிய பிரச்சனையாக எண்ணாத தமிழக ஊடகங்கள் ஊடகவியலாளர்கள், so called அறிவுடையோர் சமூகம், தமிழகத்தைப் புதைகுழியில் தள்ளவே முயல்கின்றனர். பள்ளிச் சிறார்கள் குடிப்பது, பெண்கள் குடிக்கும் காணொளி, யூனிஃபார் போட்டுக்கொண்டு குடிக்கும் சிறுமிகளின் காணொளி என்று பலப்பலவற்றைப் பார்த்த பிறகு, அதைப்பற்றிக் கவலையில்லாமல் இருக்கும் ஊடகங்கள், ஊடகங்களில் பணிபுரிந்த பல திறமைசாலிகள் குடிக்கு அடிமையாகி அதனால் வாழ்வையும் உயிரையும் தொலைத்தது – தமிழகம் ரொம்பவே முன்னேறிவிட்டது. சமூகமே முனைந்து மது விற்பனை, கள்ளச்சாராயம், செத்தவர்களுக்கு அரசு கொடை – இன்னும் அரசு வேலை தரவில்லை. இதைப்பற்றி ஒரு ஊடகமாவது பேசியிருக்கிறதா, விவாதித்திருக்கிறதா? திமுக கூட்டணிக் கட்சிகளும் இதற்கு உடந்தை அல்லவா? இதில் இனி, மதுவிலக்கு எப்படி நடைமுறை சாத்தியம்?

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    // கர்நாடகாவில் மது விற்பனை
    சீராக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. //

    எப்படி….? விளக்குங்களேன்…
    கொஞ்சம் கொஞ்சமாக
    அழிக்கிறார்களா….?

    ….

    • புதியவன் சொல்கிறார்:

      கர்நாடகாவில் ஏகப்பட்ட மதுக்கடைகள் உள்ளன. MRP Stall என்று பலவற்றை நான் பார்த்திருக்கிறேன் (பெரிய தெருவில் ஒன்றாவது உண்டு). கோவிட் சமயத்தில் 1 1/2 தெரு நீளத்துக்கு social distance உடன் மக்கள் வரிசையில் நின்றனர். எல்லா இடங்களிலும் billing உண்டு. அரசு இதில் நுழைந்து டார்கெட் வைத்து, அதற்கான பட்ஜெட் போட்டு, இன்னும் இன்னும் எப்படி மக்களைக் குடிகாரர்களாக ஆக்கி, தங்களின் கட்சி முதலாளிகளுக்கு லாபம் சம்பாதித்துத் தருவது என்றெல்லாம் யோசிப்பதில்லை.

      It is like another consumer product. என்ன தேவையோ போய் வாங்கிக் குடிக்கிறார்கள். பெரும்பாலும் நான் தமிழகத்தைப் போல், குடிகாரர்களைப் பார்த்ததில்லை. ஒருவேளை நான் பெங்களூர் நகரத்தில் இருப்பதனால் என்று நினைத்தாலும், சென்னையில் குடிகாரர்களையும் அவர்களின் நிலைமையையும் பார்த்த பிறகு, பெங்களூர் எவ்வளவோ தேவலாம் என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    எது எதற்கோ குஜராத்தை முன்னுதாரணமாக
    ஏற்பவரான நீங்கள் மதுவிலக்குக்கு மட்டும்
    ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்…?

    இந்தியாவில் –
    குஜராத்,
    பீகார்,
    மிஜோரம், மற்றும் நாகாலாந்த் ஆகிய
    மாநிலங்களில் இப்போதும் மதுவிலக்கு
    அமலில் இருப்பது உங்கள் நினைவில்
    இல்லையா…..?

    • புதியவன் சொல்கிறார்:

      குஜராத்தை நான் எதற்குமே முன்னுதாரணமாக ஏற்பதில்லை. தமிழக அரசு பீகார், குஜராத்தை முன்னுதாரணமாக ஏற்று, அதன்படி ஆட்சி செய்தால் தமிழகத்திற்கு நல்லது. அதற்கு, அரசு வருவாயை மக்களுக்காகச் செலவழிக்கணும். ஓசிக்குத் தருகிறேன் என்று மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கி, அரசு வருவாயை தங்களுக்கு ஒதுக்கிக்கொள்ளக்கூடாது (இதை நான் சொல்லலை. முன்னாள் நிதியமைச்சர் தியாகராஜன் சொன்னார். அவர்தான் வருடத்துக்கு 30,000 கோடி ஸ்டாலின் வீடு சம்பாதித்தது என்று சொன்னார்)

      கள்ளச்சாராயத்தால் செத்தவனுக்கு அரசு எந்த உதவியும் செய்யாது என்று சில நாட்கள் முன்பு அறிவித்த நிதிஷ் குமார் எப்படிப்பட்ட முதல்வர். கள்ளச்சாராயம் காய்ச்சியவனுக்கு நிதியுதவி அறிவித்த, குடித்தவர்களுக்கு 10 லட்சம் அறிவித்த ஸ்டாலின் எந்த மாதிரியான முதல்வர் என்பதை நீங்களே யோசித்து முடிவுக்கு வாருங்கள்.

  5. புதியவன் சொல்கிறார்:

    உங்களிடமிருந்து பதிவுகள் குறைவதைப் பார்த்து, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்று எண்ணினேன். மூன்று பதில் கேள்விகள் வந்தது எனக்கு மகிழ்ச்சிதான் கா.மை. சார்.

    நாட்டில் 2000 ரூ பணம் எப்படி ரியல் எஸ்டேட் மற்றும் கள்ளப்பணமாகப் பதுக்கப்படுகிறது, டாஸ்மாக் தரம் குறைந்த மது, நேரடியாக கடைகளுக்குச் செல்லும் மது (அரசு வாங்காமல்) என்று ஏகப்பட்ட ஊழல்களினால் அமைச்சரும் முதல்வரும் பயன் பெறுவது பற்றி நிறைய காணொளிகள்லாம் வந்துவிட்டதே.. பார்த்தீர்களா?

  6. Tamil சொல்கிறார்:

    2016 இல் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொன்னதால்தான் ஆட்சிக்கு வர முடியாமல் போய்விட்டது என்று திருவாளர் ஸ்டாலினும் அவரது சகோதரி கனிமொழி அவர்களும் திருவாய் மலர்ந்து இருப்பது அவர்களுடைய நோக்கம் ஆட்சியைப் பிடிப்பது மக்கள் எவ்வாறு கெட்டுப் போனால் எங்களுக்கு அது எந்த வகையிலும் பாதிப்பை தராது என்று தான் இருக்கிறது.

    காலம் சென்று அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 2016 இல் நான் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவேன் என்று சொல்லி முதல் படியில் இருக்கும் பொழுதே
    மரணம் அடைந்து விட்டார் இல்லையென்றால் அவரும் பல பல பொய்களை பேசியிருப்பார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s