எப்படி…. இப்படி….ஒரு ரசனை….??? !!!

எங்க ஊர் சாப்பாட்டு ராமர் ஒருவர் எழுதி இருக்கும்
ஒரு சுயசரிதம் ….!!!

இங்கே இவர் சொல்லியிருக்கும் அத்தனை ஓட்டல்களும்,
கடைகளும் எனக்குத் தெரியும்….ஒரே ஒரு கடையைத்தவிர
மற்ற அத்தனை கடை /ஓட்டல்களுக்கும் நான் போயிருக்கிறேன்…

  • இந்த வயதில் என்னால் – நினைத்தே பார்க்க முடியாது…சரி

  • -ஆனால், சின்ன வயதில் கூட நான் இப்படி சாப்பிட்டதே
    இல்லையே…!!!
  • இவர் மட்டும் எப்படி – இப்படி…..???? !!!

…………………………………………………………………………………………………………………………………………


சனிக்கிழமை காலை பிறந்தது …. ஊருக்குப் போகும் முன்,
மனைவி சொன்னதை காத்திலே பறக்க விட்டேன்.

ஸ்ரீரங்கம் முரளி கபேல காபி சாப்பிட்டு, பஸ் ஏறி தேவர் ஹால்,
கெயிட்டி தியேட்டர் பஸ் ஸ்டாப்ல இறங்கி, இடது பக்கம்
பார்த்தா ஆதிக்குடி கிளப். சுமாராத்தான் தெரியும்.
நாலைஞ்சி டேபிள், பழைய சாமிப் படம். பழங்கால
ஹோட்டல்.

உங்களுக்கு அறுசுவை அரசு நடராஜரைத்
தெரியும். அவர் கொஞ்ச காலம் வேலை பார்த்த இடம்.

சுடச்சுட ரவா பொங்கல், சின்ன வெங்காய சாம்பார்.
அடுத்து அடை அவியல். இரண்டும் தான் இங்க ஸ்பெஷல்.
சாயங்காலம் வந்தா பட்டணம் பக்கோடா.

மாந்தல் (மட மடவென்று சாப்பிடுவது), துய்த்தல் (சுவைத்து உண்பது),
நுங்கல் (அப்படியே சாப்பிடுவது), ஆகிய மூன்று
விஷயங்களும் உறுதி.

மதியம் வீட்ல சமைக்கலாம்னா சோம்பல். சரி இருக்கவே
இருக்கு. ராகவேந்திர மடம் கிட்ட இருக்குற கோபால
அய்யங்கார் மெஸ்(ஸ்ரீரங்கம்).

சாத்வீகமான சாப்பாடு.
சாப்பிட்டு வீட்டுக்கு போய் தூக்கம்.

நீங்க இப்போ ஆவலா
அடுத்து ராத்திரி எங்கனு கேப்பீங்க. இல்லையா.

இருங்க யோசிப்போம்.

சாயங்காலம் 4 மணிக்கு பெருமாள
சேவிக்கலாம்னு வந்தேன். ராஜ கோபுரம் தரிசனம்.
அடுத்து ரங்கா, ரங்கா கோபுரம் கிட்ட போகும் போது,
லைட்டா ரைட் சைடு பார்த்தேன். அதான் தப்பு.
வெங்கடேச பவன் மாமா வாசல்ல நின்னுகிட்டு இருக்கவே,
என்ன அண்ணா செளக்கியமானு கேட்டுகிட்டே உள்ளே
போய்ட்டேன்.

வாங்கோ.. சூடா ரவா கேசரி இருக்கு. அப்படியே கீரை வடை,
சாம்பார் வடை. தோசை. காபி (பத்து ரூபாய்க்கு).

2, 3 தலை முறை கடந்த பாலக்காடு பிராமணர்கள் கடை.
மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தான். பெரும்பாலும்
உள்ளூர் வாசிகள், சீனியர் சிட்டிசன்ஸ், குசலம் விசாரித்துக்
கொண்டே, சந்தோஷமான உலகம்.

ஞாயிறு போனா Bun Halwa. ஒவாவொரு நாளும்
ஒவ்வொரு இனிப்பு வகை.

அப்படியே கோவில் உள்ள போய்,
தாயார், தன்வந்திரி, ஆண்டாள் சன்னதி பார்த்துட்டு,
மணல் வெளில உக்காந்துட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

நாளைக்காவது மனைவி சொன்ன பேச்சைக் கேட்டு
சமைக்கனும்னு நெனச்சிட்டு தூங்கிட்டேன்.

மறுநாள்
விடியற் காலை. 5.30 மணிக்கு திருவானைக் காவல்
ஜம்புகேஷ்வரர், அகிலாண்டேஸ்வரி தரிசனம்.

காலை 6.30 மணிக்கு , கோவில் விட்டு வந்ததும்
இடது பக்கம் இருக்குற, மேல விபூதி பிரகாரத் தெருவில்
உள்ள பார்த்த சாரதி விலாஸ். ஆம்.

உங்கள் ஊகம் சரியே.

நெய் ரோஸ்ட் தான் ஸ்பெஷல். இரண்டு உள்ளே தள்ளினேன்
சாம்பாருடன்.

பக்கத்து டேபிள் மாமி மருமகள் கிட்ட முத்திய
பரங்கிக்காய பொடியா நறுக்கி, பருப்போட சேர்த்து
வேக வைச்சி, கடைசியா கொஞ்சம் வெல்லம் சேர்த்து
செய்யனும்னு சொல்லிக் கொண்டு இருந்ததைக் கேட்க
முடிஞ்சது.

ஓட்டல் போர்டுல ஹிந்து, விகடன், தினமணி பத்திரிக்கைப்
புகழ் என்று இருந்தது. இங்கே ரவா பொங்கலும் ஸ்பெஷல்.
பழைமை மாறாக் கட்டிடம். 80 வருட ஹோட்டல்.

எட்டு மணியில் இருந்து கொஞ்சம் ரெஸ்ட். அப்புறம் கிளம்பி
மெயின் கார்ட் கேட்ல இறங்கி மைக்கேல்ஸ் ஐஸ் கிரீம்
சாப்பிட்டு, மாணிக்க விநாயகர், தாயுமானவர், மட்டுவார்குழலி,
மலைக் கோட்டை பிள்ளயார், நந்தி கோவில்தரிசனம்,
தெப்பக்குளம், ஜோஸப் கல்லூரி, சர்ச் அழகை ரசித்துக்
கொண்டே ஆண்டார் தெரு.

கொடுக்காப்புளியில் இருந்து
பஜ்ஜிக் கடை வரை, மாவடுவிலிருந்து, மாகாளி வரை வாங்கலாம்.

அருகிலே கறி காய் மார்க்கெட்.

எனக்கு ஏனோ படிக்கும் காலத்தில் பிளாசா தியேட்டரில் இடைவேளையில்
சாப்பிட்ட முட்டைக்கோஸ் வடை நினைவுக்கு வந்து
போனது.

1 மணி சுமாருக்கு பழங்கால ஹோட்டல் விஜயம்.
காலை 9.30 முதல் 4 மணி வரை சாப்பாடு மட்டும்.

உங்கள் ஊகம் சரி. மதுரா விலாஸ் தான்.

எளிமையான வீட்டு சாப்பாடு போன்று இருக்கும். சாப்பிட்டேன்.
அப்படியே, கீழ ஆண்டார் தெருவில சங்கர விலாஸ்ல
பூரி-கடப்பா பேமஸ்னு சொல்றதும் கேக்குது.

வீட்டுக்கு போய்
நல்லா ரெஸ்ட். ராத்திரி ஏழு மணிக்கு ரங்கா ரங்கா கோபுர விசிட்.

இந்த தடவை இடது பக்கம் இருக்கிற பழைய ஹோட்டல்
மணீஸ் கபே.

இங்கேயும் முருங்கை இலை அடை நல்லா
இருக்கும். முடக்கத்தான் தோசை, தூதுவளை தோசை,
கரிசலாங்கண்ணி தோசை கிடைக்கும். படிச்சதும் நாட்டு மருந்து
கடை பீல் வரும்.

பொறுமை உள்ளவர்கள் மட்டும் அனுமதி என்ற போர்டு பார்க்க…

நான் 1978 முதல் 1983 வரை திருச்சியில் பிரம்மச்சாரியாய்
இருந்தேன். திருவரங்கம் முரளிகாபி இன்னும் காபி அந்த
பழைய சுவையுடன் இருக்கிறது, நான் பிப்ரவரி 2020ல்
சாப்பிட்டேன் . ஆண்டார் வீதி மதுரா லாட்ஜ் கொஞ்சம்
சுவை தற்சமயம் மாறிஉள்ளது. ஆதிக்குடி ஹோட்டல் அனைத்தும்
சுவையோ சுவை அதை சாப்பிட்டவர்களுக்கு தான்
அருமை தெரியும்.

விடுபட்ட சில: சாரதாஸ் துணிக்கடைக்கு
பின்னால் கடைபோடும் மாட்டு வண்டியில் வரும் திருவரங்கத்து
அய்யங்கார் மாமா 3 வகை சேவை, புளியோதரை,
நெய்மணக்கும் வெண்பொங்கல் சுவையோ சுவை.

அனைத்தும் 5வருடம் சாப்பிட்டு அனுபவித்த பாக்யசாலி.

சின்னகடை வீதியில் பெரிய செட்டி தெருவுக்கு அருகில்
செட்டியார் இரவு கடையில் நெய் ரோஸ்ட்டு வடகறி
சுவையோ சுவை . செட்டியார் தான் கணக்கு வைத்துக்
கொள்வார், சாபாபிட்டவுடன் தான் தெரியும் கணக்கு…

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to எப்படி…. இப்படி….ஒரு ரசனை….??? !!!

  1. புதியவன் சொல்கிறார்:

    ரசனையைப் பாராட்டுகிறேன்.

    ஆனால் இவங்கள்லாம் சொல்றாங்க என்பதால் அந்த உணவு வகைகள் ருசியாக இருக்கும் என்று சொல்லமுடியாது. நான் பல்வேறு ஊர்கள், நாடுகளில் உணவுவகைகளை ருசித்திருக்கிறேன் (சைவ). புத்தகத்தில் படித்தபடி இந்த உணவுவகைகள் நமக்கு ருசிபதில்லை. நான் இதுபோல ஏமாந்த கடைகளும் அதிகம் (திருவானைக்கா பார்த்தசாரதி விலாஸ், சென்னை ராயர் மெஸ் போன்று)

  2. tamilmani சொல்கிறார்:

    Most of the youtubers have made it as a business to upload videos about hotels which some of them are good especially srirangam tiruchi hotels. But rest of the hotels are ordinary but so much hype has been created that when we visited them we are disapoointed with the dishes. In the early 2000
    Saravana Bhavan was the best hotel for its tiffin and coffee. But over the years most of its branches
    were closed due to lack of patronage and only its Mylapore branch is doing some business. But in
    Coimbatore Sree Annapoorna is doing a very good business due to a good management principles.

    • புதியவன் சொல்கிறார்:

      Youtube bloggers சொல்வதெல்லாம் நிறைய விஷயங்களில் உண்மை கிடையாது. சும்மா ஆஹா ஓஹோன்னு எந்த ஹோட்டலைப் பார்க்கிறாங்களோ அதுல நுழைந்து சாப்பிட்டுவிட்டுச் சொல்லிடறாங்க. அதை நான் நம்புவதே இல்லை. மாயவரம் காளியாகுடி, திருவானைக்கா பார்த்தசாரதி ஹோட்டல், திருவையாறு ஆண்டவர் ஸ்வீட்ஸ் லாம் பத்திரிகைகள்ல வந்தது. அதனால்தான் நான் இவைகளைச் சாப்பிட்டுப் பார்த்து … பார்த்து….

      சரவணபவன் உணவின் (சாப்பாடு) மிகப் பெரும் ரசிகன் நான் 96 வரை. அதிலும் மதிய உணவுக்கு 10:45க்குள் போயிடுவேன். சாப்பாடு சொல்லி மாளாது. மிக மிக அருமையா இருக்கும். இதுல இன்னொரு பியூட்டி, எந்த ஊருக்குச் சென்றாலும் குவாலிட்டி மாறாது, சுவை மாறாது பஹ்ரைன்ல அவங்க ஹோட்டல் ஓபன் பண்ணினா, வாரம் ஒரு தடவையாவது மதிய உணவுக்கு அங்க போயிடுவேன் என்று மனைவியிடம்வேறு சொல்லியிருந்தேன்.

      துபாயில் ஆரம்பித்து சில மாதங்களில் உணவின் சுவை, மலையாளிகளுக்காக மாற்றினார்கள். அவங்க தனித்தன்மை போனது. ஷார்ஜா… எனக்குப் பிடிக்கலை. ஓமன் மற்ற இடங்களிலும் சுவை இல்லை. லண்டன் சுமார். பாரிஸ்-நல்லா இல்லை. பஹ்ரைன் – சுத்தமா சரியில்லை. கேட்டோம்னா தண்ணினாலன்னு சொல்லிடுவாங்க.

      தமிழகத்திலும் அவங்க உணவின் தரம் ருசி எல்லாமே ‘ராஜகோபால்’ அவர்களின் பிரச்சனைக்கு அப்புறம் இறங்கிக்கொண்டே போய்விட்டது.

      அவங்க சரிவு 2000க்குப் பிறகானது. 2010க்குப் பிறகு படுமோசம். இப்போ சரவணபவன் பக்கமே போவதில்லை.

  3. Pugal trichy சொல்கிறார்:

    திருவானைக்கா பார்த்தசாரதி படு மோசம் ..ரோஸ்ட் படு கேவலம் கடுமையான புளிப்பு..அங்கு சப்ளையர்கள் நம்மை நடத்தும் விதம் இன்னம் கோபம் வரும்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.