
சென்னை வசூல் ராஜாக்களின் பட்டியல் …..!!!
ஆளும் கட்சியினர் யார்-யார் சென்னையில் எப்படி வியாபாரிகளிடம்
கெடுபிடி வசூல் செய்கின்றனர் என்பதைப்பற்றி, ஜூனியர் விகடன்
இதழ் பட்டியலிட்டுள்ளது….ஜூ.வி. தந்துள்ள தகவல் கீழே –
சென்னையில் வசூல் ராஜாக்களாக மாறிய வட்டங்கள் …
சமீபத்தில் ஆளுங்கட்சியினர் வியாபாரிகளிடம் வசூல் வேட்டை
நடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து தி.நகரில் இரண்டு வட்டச்
செயலாளர்கள் கட்சிப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக
நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதையடுத்து, சென்னையில் பல்வேறு வட்டச் செயலாளர்கள்மீது
புற்றீசல்போல புகார்கள் கிளம்பியிருக்கின்றன. ஆயிரம் விளக்கு
பகுதியைச் சேர்ந்த வட்டச் செயலாளர் ஒருவர், வீடு
காலி செய்து தருவதாகச் சொல்லி, பெண் ஒருவரிடம்
ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டார்.
அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளிக்க… விவகாரம்
பெரிதாகியிருக்கிறது. தி.நகர் பகுதியில் மற்றொரு வட்டச் செயலாளர்
கடைக்காரர்களிடம் மாமூல் வாங்கிவிட்டு,
‘காவல்துறையினர் மாமூல் கேட்டு வந்தால் அவர்களிடம்
பணம் கொடுக்க வேண்டாம்… என் பெயரை மட்டும் சொல்லுங்கள்’
என்று தடாலடி காட்டிவருகிறாராம்.
சமீபத்தில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு நலத்திட்ட
உதவிகளை வழங்க வேண்டும் என்று சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
ஏரியாவின் மூன்று நிர்வாகிகள் மாமூல் வேட்டையில்
ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதேபோல ‘கேரளா’வை அடைமொழியாகக்கொண்ட
இரண்டெழுத்து வட்டச் செயலாளர் ஒருவர் கிருஷ்ணாம்பேட்டை
ஏரியாவில் சுடுகாட்டை ஆக்கிரமித்திருக்கிறார் என்றும்,
அவ்வை நடராஜன் சாலையில் வியாபாரிகளிடம் வசூல்வேட்டை
நடத்துகிறார் என்றும் புகார்கள் வரிசைகட்டுகின்றன. மேலும்,
தனது குடும்பத்திலேயே இருவருக்குத் தற்காலிக அரசு வேலை
வாங்கிய நிலையில், இப்போது கவுன்சிலர் சீட்டுக்கும் கேரளா நபர்குறிவைத்திருக்கிறார் என்று புலம்புகிறார்கள் ஏரியாவாசிகள்.
இதேபோல மயிலாப்பூர் பகுதியில் புல்லாங்குழல் நபர்,
கே.கே.நகரில் ‘மன்னர்’ பெயர்கொண்டவர், எண்ணூரில்
மொழியின் பெயர்கொண்டவர் ஆகியோர்மீது அறிவாலயத்தில்
புகார்கள் குவிந்துவருகின்றன.
ஏற்கெனவே மழை வெள்ளத்தால் மக்கள் அதிருப்தியிலிருக்கும்
நிலையில், இவர்களின் வசூல்வேட்டையால் வியாபாரிகள்
உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்….
……………………………………………………………………..
இத்தகையோரை கட்டுப்படுத்த, கட்சித் தலைமை உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக மிக அவசியம்….
” இல்லை …. நீண்ட நாட்களாக ஆட்சியில் இல்லாததால்,
எல்லாரும் வறட்சியில் இருக்கிறார்கள். கொஞ்சம் சம்பாதித்துக்
கொள்ளட்டும் ” என்று தலைமை நினைத்தால் –
அது வேறு விஷயம்….!!!