
இதுவும் ஸ்ரீரங்கம் தொடர்புள்ளது தான் …
அதிகம் ஆள் நடமாட்டமில்லாத இந்த வீதியில்,
பலமுறை நான் இந்த மடத்தின் வாசலை – வெளியிலிருந்து
பார்த்துக் கொண்டே நடந்து சென்றதுண்டு…
( உள்ளே செல்வதற்கான தகுதி
எனக்கில்லையோ என்கிற சந்தேகம்… ???….!!!)
புனையப்பட்ட ஒரு சம்பவம் தான்
என்றாலும் கூட …அற்புதமானது…
இதில் வரும் முக்கிய கதாபாத்திரம் நிஜம்… நான் அறிந்தவர்…!!!
முதலில் படியுங்களேன் –
………………………………………………………………………………………………………………………………..
வெயிலின் கடுமையால் காகங்கள் கூட காணாமல்
போயிருந்தன.மரங்கள் மூச்சு விடுவதை மறந்து தலை தாழ்ந்து நின்றிருந்தன.
சூரியன் மறந்து போய் ஊருக்குள் வந்துவிட்டானோ என்று
எண்ணத் தோன்றும் வெப்பம். அக்ரஹார வீதியில் வெண்மணல்
தகித்தது. மனித நடமாட்டம் இல்லாத ஒரு பாலைவனம் போல்
தெரிந்தது வீதி.
‘யாரோ சாமி வந்திருக்குன்னு சொன்னாங்க. ஊர்ல யாருமே
இல்லியே’ என்று எண்ணியவாறு சைக்கிளை மிதித்தேன்.
பெயர் தான் நவாபு. ஆனால் அலுமினிய பாத்திரங்கள் விற்றுத்தான்
சோறு.
வாப்பா சொன்னபோதே படித்திருக்கலாம். தொழில் கற்றுக்கொள்ள
வேண்டி பாத்திரக்கடை காதரிடம் வேலைக்குப் போனது எவ்வளவு
பெரிய தவறு?
இப்போது நினைத்துப் பயனில்லை. ‘அம்பது வயசில வந்துச்சாம்
அறிவு’ என்று அம்மா சொல்லும். வயிறு என்று ஒன்று இருக்கிறது. அதற்குத் தன்மானம் எல்லாம் கிடையாது.
இந்த வயதில் அரேபியாவுக்கெல்லாம் போய் ஒட்டகம் மேய்க்க
முடியாது. போகிற போக்கைப் பார்த்தால் இந்த ஊரே அரேபியா
போல் கொதிக்கும் போல் தெரிகிறது. அவ்வளவு வெயில்.
சைக்கிளை விட்டு இறங்கி ஒரு மர நிழலில் நின்றேன்.
ஒரு வாய் தண்ணீர் குடித்தால் தேவலாம் போல் இருந்தது.
அக்கிரஹாரத்தில் யார் தண்ணீர் தரப் போகிறார்கள் ?
வாப்பா காலத்தில் தெருவில் நடக்கவே விட மாட்டார்கள். இப்போது
எவ்வளவோ மேல். வியாபாரம் செய்யும் அளவு
முன்னேறி உள்ளது.
அப்போது தான் கவனித்தேன். எதிர் வீட்டில் வாசல்
திண்ணையில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். 4, 5 சின்னப்
பையன்கள் கீழே உட்கார்ந்திருந்தர்கள். ஏதோ பாடம் படிப்பது
போல் தெரிந்தது.
பெரியவருக்கு உடம்பு ரொம்பவும் தள்ளாமையாக இருந்தது.
உடம்பு முழுவதும் நாமம் போட்டிருந்தார் போல் தெரிந்தது.
எதற்கும் இருக்கட்டும் என்று கைலியை இறக்கிவிட்டேன்.
பெரியவர் ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தார்.
எதற்கு வம்பு என்று சைக்கிளைக் கிளப்பிக்கொண்டு நடந்தேன்.
சொல்ல மறந்துபிட்டேன். வீதியில் நுழைந்ததும் டயர்
பஞ்சரானது. எனவே தள்ளியபடியே தான் நடக்க வேண்டும்.
வீதியின் கிழக்குக் கோடிவரை நடந்தேன். பெரும்பாலும்
எல்லா வீடுகளிலும் கதவு திறந்தே இருந்தது. ஆனால்
வெளியில் யாரும் தென்படவில்லை. ‘பாத்திரம், அலுமினிய
பாத்திரம், இண்டோலியப் பாத்திரம், பாத்திரம்..’ என்று
கூவிப் பார்தேன்.
ஒரே ஒரு வீட்டு உள்ளிருந்து ஒரு 50 வயது மதிக்கத்தக்க
ஆண் எட்டிப் பார்த்தார்.’ நன்னாருக்கு அக்ரஹாரத்துலெ
அலுமினியப் பாத்ரம் விக்கறான் கைலி கட்டிண்டு..
கலி நன்னா வேலை செய்யறது..’ என்று காதுபட பேசிச் சென்றார்.
என்னைப் பார்த்தாலே தீட்டுப் பட்டுவிடும் என்று
நினைத்தாரோ என்னவோ. நாட்டு ஜனாதிபதி துலுக்கனாக
இருக்கலாம் போல, தெருவுலெ மட்டும் வரக்கூடாது என்பது
என்ன நியாயமோ தெரியவில்லை.
அப்போதுதான் அது உறைத்தது. அடச்சீ .. தப்பு செஞ்சுட்டோமே..
அக்ரஹாரத்துலே அலுமினியப் பாத்திரம் யாரும் வாங்க
மாட்டாங்களே !
இதுக்குப் போயா இங்கே வந்தோம் இந்த வெய்யில்லே ..
வந்த வழியே நடந்து சென்றேன். வெயில், தண்ணீர் இல்லை,
பாத்திரம் விற்கவில்லை, சைக்கிள் பஞ்சர், பசி, தாகம்..
பாழாப்போன கிராமத்துலே சோத்துக்குக்கூட ஒரு கடை இல்லை.
காலையில் குடிச்ச கஞ்சி தான்.
மெள்ள தெருமுனைக்கு வந்துவிட்டேன். இன்னும் அரை மணி
நடந்தால் மெயின் ரோடு வந்துவிடும். பிறகு சைக்கிள்
தள்ளுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.
‘யோவ் பாத்திரம், பாத்திரம்..’ என்று கத்திக்கொண்டே ஒரு பிராமணப்பையன் அந்தப் பெரியவர் இருந்த வீட்டில் இருந்து
ஓடி வந்தான்.
‘உடனே வாப்பா.. பெரியவர் கூப்பிடுறார்’, என்றான்.
பெரியவருக்கு அவன் என்னவோ பெயர் சொன்னான். எனக்குப்
புரியவில்லை..என்ன தப்புப் பண்ணினேன் என்று நினைத்துப்
பார்த்தேன். கைலியைக் கூட இறக்கித் தானே விட்டிருந்தேன் ?
ஒரு வேளை அந்த வீட்டுக்கு முன்னால் நிற்கக் கூடாதோ!
அதான் கூப்புடுறாங்களோ ! என்று பலவித சிந்தனைகள்.
வந்தது வரட்டும்னு வண்டியைத் தள்ளீக்கொண்டு பெரியவர்
இருந்த வீட்டு வாசலுக்குப் போனேன். அப்போது தான் பார்த்தேன்.
பெரியவருக்கு 70 வயசுக்கு மேல இருக்கும். ஒரு பீடம் மாதிரி
இருந்தது. அதன் மேல் உட்கார்ந்திருந்தார்.
மார்பு, வயிறு, கை, நெற்றி என்று நாமம் போட்டிருந்தார்.
நெற்றி நாமம் மட்டும் சற்று தடிமனாக இருந்தது.
வீட்டுக்கு உள்ளே இன்னும் பலர் இருந்தாங்க. வேட்டி மட்டும்
கட்டி இருந்தாங்க. நாமம் போட்டிருந்தாங்க. பல பிராமணப்
பையங்க வேதமோ இல்ல வேற ஏதோ ஓதிகிட்டிருந்தார்கள்.
பெரியவர் என்னை உட்காரச்சொன்னார். ஒரு ஓரமா
உட்கார்ந்தேன். அதுக்குள்ளே ஒரு ஐயரு வந்து,’ கொஞ்சம்
தள்ளி உக்காருப்பா..’, என்று அதட்டினார். என்னைப்
பெரியவர் உட்காரச் சொன்னது அந்த ஐயருக்குப் பிடிக்கவில்லை போல.
பெரியவர் அந்த ஐயரை கோவமா ஒரு பார்வை பார்த்தார்.
ஐயரு, ‘அடியேன்..’ , என்னு தொடங்கி என்னமோ
சொல்லிப் போனார். பின்னாடி போய் நின்னுக்கிட்டார்.
அப்பத்தான் கவனிச்சேன். எல்லாரும் வெள்ளை வேட்டி
தார்பாச்சி வடக்கத்திக்காரங்க மாதிரி கட்டி இருந்தாங்க.
பெரியவர் மட்டும் காவி கலர்ல துண்டு கட்டி இருந்தாரு.
கையிலே மூணு கழிங்கள ஒண்ணாக் கட்டி, அது உச்சிலெ
ஒரு துணிலெ கொடி போல இருந்துச்சு. அந்தக் கழிங்களெ
கையிலெ வெச்சிருந்தாரு.
‘தமிழ் தெரியுமா?’,ன்னு ஒரு கம்பீரமான குரல் கேட்டுச்சு.
தலை நிமிர்ந்து பார்தேன். பெரியவர் தான் பேசியிருந்தார்.
தெரியும்னு தலை ஆட்டினேன். என்னமோ அவ்ர்கிட்டே
பேசுறதே கொஞ்சம் பயமா இருந்துச்சு. அவரு முள்ளு மாதிரி
தாடிவெச்சிருந்தார். தலைலேயும் வெள்ளை முடி. அசப்புல
சிங்கம் மாதிரி இருந்துச்சு.
‘எந்த ஊர் உனக்கு?’
‘பக்கத்துலே மேலூர் பக்கம் சாமி’
‘சாப்டாச்சா ?’
‘ஆச்சுங்க சாமி. கருக்கல்ல கஞ்சி குடிச்சேங்க’.
பெரியவருக்குப் புரியவில்லை. அருகில் இருந்த நாமம் போட்ட
இன்னொரு ஐயரு,’ அவன் கார்தாலே கஞ்சி சாப்டானாம்
அடியேன்..’, என்று சொன்னார்.
பெரியவர் உள்ளே பார்த்து,’ததீயாராதனம் ஆயிடுத்தா?’,
என்று கேட்டார். இன்னொரு ஐயர் உள்ளே இருந்து ஓடி வந்து
ஏதோ சொன்னார். பெரியவர் கேட்க அந்த ஐயர் ஏதோ
சொன்னார். பாஷை புரியவில்லை.
இரண்டு நிமிஷம் நிசப்தம். ஏதோ பெரிய தவறு செய்து
விட்டோம் என்று நினைத்தேன். இன்று நேரமே சரியில்லை.
டயர் பஞ்சர், வெயில், பாத்திரம் விற்கவில்லை, இப்போது
இங்கு மாட்டிக்கொண்டிருக்கிறேன்.
மேலே அண்ணாந்து பார்த்தேன். இடி இடிப்பது போல்
பெரியவர் உள்ளே இருந்து வந்த ஐயரிடம் ஏதோ உத்தரவு
போட்டார். அந்த ஐயர் உடனே கீழே விழுந்து வணங்கி
உள்ளே சென்றார்.
‘எத்தனை பிள்ளை குட்டி உனக்கு?’, பெரியவர்
என்னிடம் கேட்டார்.
‘மூன்று பெண்கள் சாமி’, என்றேன். கொஞ்சம்
பயமாகவே இருந்தது.
‘வீடு வாசல் இருக்கா?’
‘அப்பா வைத்த வீடு ஒண்ணு இருக்கு சாமி,
பாத்திரம் வியாபாரம் தான் தொழில்’, என்றேன்.
என்னவோ அந்தப் பெரியவர் பிடித்துப் போய் விட்டார்.
இந்தக் கேள்விகளை யாரும் என்னிடம் கேட்டதில்லை.
ஏதோ ஒரு அக்கறையுடன் கேட்பது போல் தோன்றியது.
‘பொண்கள் படிக்கறாளா?’, என்றார்.
‘ஆமாங்கையா, ஸ்கோலு போவுறாங்க’, என்றேன்.
வாப்பா இருந்திருந்தால் இதே வயது தான் இருக்கும்
அவருக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக என் பயம் குறையத் தொடங்கியது.
என் குரல் சற்று வெளியே வருவது போல் உணர்ந்தேன்.
மற்ற ஐயர்கள் எல்லாரும் பெரியவரிடம் இருந்து கொஞ்சம்
தள்ளியே மரியாதையுடன் இருப்பது போல் பட்டது.
ஓரிடத்தில் தீ எரியும் போது அதிலிருந்து விலகி இருந்து பார்ப்பது போல் நின்றிருந்தார்கள்.
‘இங்கே சாதம் போட்டா சாப்பிடறியா?’
அவர் அது தான் கேட்டாரா அல்லது பசி மயக்கத்தில்
அப்படிக் காதில் விழுந்ததா தெரியவில்லை. குழப்பத்துடன்
அவரையே பார்த்தேன்.
‘சோறு போட்டா சாப்புடுவியான்னு கேக்குறாரு..’, என்றார்
இன்னொரு ஐயர். அவர் குரலில் சற்று எரிச்சல் தெரிந்தது.
‘சாப்புடுறேன் சாமி’; என்றேன் நன்றியுடன். ஏனோ எனக்கு
நெஞ்சை அடைத்தது. காலையில் கஞ்சி குடித்தது.
பக்கத்தில் ஒரு கொட்டகையில் சோறு போட்டார்கள்.
இரண்டு ஆள் சாப்பாடு சாப்பிட்டேன். மறு முறை இவ்வளவு
சோறு எங்கே கிடைக்கும்னு தெரியவில்லை. உப்பு, காரம்
எதுவும் இல்லை.
ஐயமாரெல்லாம் இப்படித்தான் சாப்பிடுவார்கள் போல.
சாப்பிட்டு முடித்ததும் பெரியவர் கூப்பிடுவதாகச் சொன்னார்கள்.
‘சாப்டாச்சா?’ என்றார் புன்முறுவலுடன். தலையை
ஆட்டினேன். இவ்வளவு சாப்பிட்டு எவ்வளவு நாளாகிறது !
‘நன்னா இருந்துதா?’, என்று சிரித்தபடியே கேட்டர்
பெரியவர். பதில் சொல்லாமல் மையமாக நின்றேன்.
‘பாத்திரம் எல்லாம் வித்துடுமா?’, என்று மறுபடியும்
அவரே கட்டார். ‘காலைலேர்ந்து ஒண்ணும் விக்கலீங்கையா.
இங்கே ஐயமாரு இடம்னு தெரியாம வந்துட்டேன்.
அலுமினியம் வாங்க மாட்டாங்க. இனிமே வேற ஊர் தான்
போகணும்’, என்றேன்.
‘மொத்தமா என்ன விலை?’, என்றார்.
புரியாமல் நின்றேன்.
‘எல்லாப் பாத்திரமும் வித்தா என்ன விலை கிடைக்கும்?’
என்று வேறொருவர் கேட்டார்.
‘100 ரூபா பெயரும் சாமி. அதுக்கு 2, 3 நாள் ஆகும்’
என்றேன் புரியாமல்.
பெரியவர் அதிகாரி போல் இருந்த ஒருவரைப் பார்த்தார்.
அவர் உடனே 120 ரூபாய் எடுத்துக் கொடுத்து,
’எல்லாத்தையும் நாங்களே வாங்கிக்கறோம்’, என்றார்.
ஒன்றும் புரியவில்லை. இது ஏதோ மடம் போல் தெரிகிறது.
ஐயமார் மடம். அலுமினியம் வாங்கறாங்களே.
நம்பவும் முடியவில்லை. ஆனால் பணம் கொடுத்து விட்டார்கள்.
அப்போது பெரியவர் பேசினார்.
‘எனக்கு ஒரு உபகாரம் பண்ணணும். இந்த பாத்திரங்களை
எல்லாம் கொண்டு போய் வடக்கு வீதிக்குப் பின்னாடி
குடியானவத் தெரு இருக்கு…
அங்க ஆத்துக்கு (வீட்டுக்கு) ஒரு பாத்திரம்னு குடுக்கணும்.
குடுக்கறயா ?’, என்று சொல்லி என்னை ஏறிட்டுப் பார்த்தார்.
” இறைவன் கருணை வடிவானவன்”
—-என்று வாப்பா அடிக்கடி சொல்வார்.
…………………………………………………………………………………………………………………………………………………………….
சாஸ்திர, சம்பிரதாயங்களை கடைபிடிப்பதும் –
ஆச்சார அனுஷ்டாங்களை வலியுறுத்துவதும் மட்டுமே –
ஒரு மடாதிபதின் / சந்நியாசியின் முழுமையான
பொறுப்பாகி விடுமா …?
ஏழைகளுக்கு இரக்கம் காட்டுவதும், உதவி செய்வதும்,
சமூகத்தில் தாழ்ந்திருப்பவர்களை தூக்கி விடவேண்டியதும்
அவர்களின் இயல்பாக இருக்க வேண்டாமா….?
அன்பு, கருணை, இரக்கம், சகல ஜீவராசிகளையும் நேசித்தல் –
ஆகியவை ஒரு மடாதிபதியின் / சந்நியாசியின் –
அடிப்படை குணங்களாக அமையப்பெற்றால் –
அவரை விட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்….?
நான் இத்தகைய சந்நியாசிகளை பார்த்திருக்கிறேன்…
அவர்களின் அருமையை, அருகாமையை –
அனுபவித்திருக்கிறேன்…
நமது இன்றையத் தேவை இத்தகைய ஆன்றோர் அல்லவோ….?
போலிகளைக் கண்டு மனம் வெறுத்து, நொந்துபோய் –
மீண்டும் இத்தகையோரை காண்பதெப்போது என்று
ஏங்குகிறேன்…..
.
…………………………………………..
// சாஸ்திர, சம்பிரதாயங்களை கடைபிடிப்பதும் –
ஆச்சார அனுஷ்டாங்களை வலியுறுத்துவதும் மட்டுமே –
ஒரு மடாதிபதின் / சந்நியாசியின் முழுமையான
பொறுப்பாகி விடுமா …?
ஏழைகளுக்கு இரக்கம் காட்டுவதும், உதவி செய்வதும்,
சமூகத்தில் தாழ்ந்திருப்பவர்களை தூக்கி விடவேண்டியதும்
அவர்களின் இயல்பாக இருக்க வேண்டாமா….?
அன்பு, கருணை, இரக்கம், சகல ஜீவராசிகளையும் நேசித்தல் –
ஆகியவை ஒரு மடாதிபதியின் / சந்நியாசியின் –
அடிப்படை குணங்களாக அமையப்பெற்றால் –
அவரை விட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்….? //
Pramatham sir.
அந்த ஜீயர், வேறு ஒரு கிராமத்தில் இருந்தபோது நடந்த சம்பவம் இது என நான் படித்திருக்கிறேன். வேதம் மற்ற சாஸ்திரங்களைக் கற்றவர்கள், மத மாச்சர்யங்கள் கொண்டிருப்பது பொதுவாக இருக்காது.
இந்தக் காலகட்டத்தில் புதியவன் சொல்வது போல மதமாச்சர்யங்களுடன் மாந்தர்கள் நடந்து கொள்வார்களென்று நம்ப இயலவில்லை
சொல்லவந்த கருத்தை தவறாகச் சொல்லியிருக்கீங்க என்று தோன்றுகிறது. மதமாச்சர்யங்கள் – என் மதம்தான் உயர்ந்தது, மற்ற மதத்தில் உள்ளவர்கள் மோசம் என்ற எண்ணம்.