

ஏறக்குறைய – 26 ஆண்டுகளுக்கு முன்னர்,
என் சின்ன மகளை, அவளது 16-வது வயதில்,
திடீரென்று தாக்கியது – cerebral hemorrhage – மூளைக்குச் செல்லும் நுண்ணிய ரத்த நாளத்தில் வெடிப்பு –
( A brain hemorrhage is a type of stroke.
It’s caused by an artery in the brain
bursting and causing localized bleeding
in the surrounding tissues. This
bleeding kills brain cells.)
பள்ளிக்குச் சென்று மாலை 4 மணியளவில் சைக்கிளில்
வீடு திரும்பி, டைனிங் டேபிளில் அமர்ந்து
டீயும், பிஸ்கட்டும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள்
எந்தவித வேறு முன் அறிகுறியும் இன்றி –
திடீரென்று தலை ரொம்ப வலிக்கிறது –
என்று சொல்லிக்கொண்டே, உணர்வின்றி மயங்கி விழுந்தாள்….
இதற்கு மேல் இதைப்பற்றி பேச வேண்டாம்.
இதை இதோடு விட்டு விடுவோம்.
அந்த தாக்குதலின் விளைவு – அடுத்த 24 மணி நேரங்களுக்குள்
நாங்கள் அவளை இழந்தோம்… அத்தனை கொடிய – தீர்வு
காண முடியாத – தாக்குதலாக இந்த நோய் இருந்தது – அன்று….
இன்றிருக்கும் மருத்துவ வசதிகள், முன்னேற்றங்கள்
அன்று இல்லை; இன்று, மண்டை ஓட்டை திறக்காமலே,
நுண்கருவிகளின் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தை அணுகி,
பாதிப்பை சரி செய்ய முடிவது –
மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள ஒரு மாபெரும்
முன்னேற்றம், வளர்ச்சி.
சில நாட்களுக்கு முன் நம் அனைவருக்கும் பழக்கமான
புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர்
அவர்களுக்கு cerebral hemorrhage பாதிப்பு
ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
என்கிற செய்தியைப் பார்த்ததும், எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி…
என் முந்தைய அனுபவம் காரணமாக மனதளவில்
பெரிதும் பாதிக்கப்பட்டேன்.. நானும் என் மனைவியும்
கடந்த சில நாட்களாக இதைப்பற்றி சொல்லிச்சொல்லி
வருத்தப்பட்டுக்கொண்டே இருந்தோம்… எப்படியாவது
பாரதி பாஸ்கர் குணமடைந்து, இந்த பேராபத்திலிருந்து
தப்ப வேண்டுமென்று வேண்டிக்கொண்டே இருந்தோம்.
இன்றைய மருத்துவ உலகில் இதற்கு தீர்வு இருக்கிறது
என்பதை நான் அறிந்திருந்தாலும்,
இதிலுள்ள ஆபத்து என்னை கவலையுறச் செய்தது.
எனக்கு மிகவும் பிடித்த, நான் மதிக்கும்,
ஒரு பண்பான பெண்மணி திருமதி பாரதி.
அவரது நிலையைப்பற்றி முன்னரே நான் எழுத நினைத்தாலும்,
அவர் குணம் அடைகிறார் என்கிற நல்ல செய்தி கிடைத்த பின்
தான் எழுத வேண்டுமென்று – காத்திருந்தேன்…
தற்போது அவர் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைகிறது
என்கிற ஆறுதலான செய்தி வந்திருக்கிறது… கடவுளுக்கு நன்றி…
இனி நான் எழுதலாமென்று நினைத்தபோது
இன்று காலை சுகி சிவம் அவர்கள் வெளியிட்டுள்ள
காணொலி ஒன்றை பார்த்தேன். அதை இங்கே பதிப்பிப்பது
இன்னமும் சிறப்பாக இருக்குமென்று தோன்றியது….
காணொலி கீழே –
திருமதி பாரதி பாஸ்கர் பூரண குணம் அடைந்து,
மீண்டும் தனது பொதுவாழ்வில் உற்சாகத்துடன்
பங்கேற்கும் நாளை
ஆவலுடன் எதிர்பார்ப்போம்….
அண்ணா ,
உலகில் என் வலிதான் பெரியது என்று நினைத்திருந்தேன்.இவ்வளவு பெரிய சோகத்தை சுமந்துதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களா?
உலக மகா கொடுமை புத்திர சோகம்.
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
TEARFULLY,
KALAKARTHIK
kalakarthik ,
சகோதரி -எழுதியதற்கு நன்றி.
முதலில் நானும் கடவுள் மீது மிகுந்த கோபத்தில் தான்
இருந்தேன்…!
பின்னர் இந்த நோய் பற்றி நிறைய ஆராய்ச்சி கட்டுரைகளை
தேடித்தேடி படித்தேன்… நீண்ட நாட்களுக்குப் பிறகு, மனதை
ஆறுதல் படுத்திக்கொள்ள. அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி
ஒருவர் எழுதிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையும், என் பழைய
நண்பரான டாக்டர் ஒருவருடன் பேசியதும் உதவியது…. அது –
“மூளைக்குச் செல்லும் இந்த ரத்த நாளங்கள் மிகவும்
மெல்லியவை.. பலூன் போன்ற மெல்லிய உறைகள்
தான் அவற்றிற்கு…
பலூன் அல்லது சைக்கிள் ட்யூப் போன்றவற்றை
பார்த்தீர்கள் என்றால், உருவாகும்போதே, அதில் எதாவது
ஒரு பகுதியில் மிகவும் பலவீனமாக, மற்ற இடங்களை விட
மெல்லியதாக இருக்கும் ( manufacturing defect )…
பலூன் அல்லது ரப்பர் ட்யூப்’பில்
ப்ரஷர் அதிகமாகும்போது, அந்த இடத்தில் தான்
வெடிப்பு ஏற்படும்.
இதே போல் இந்த மாதிரி மெல்லிய ரத்தநாளங்களிலும்,
எப்போதாவது ரத்த அழுத்தம் அதிகமாகும்போது,
இந்த மாதிரி பலவீனமான பகுதிகள் தான் வெடிக்கும்..
என் சின்னப்பெண்ணின் விஷயத்திலும் இதே போல் தான்
நடந்திருக்கிறது…
இதில் எனக்கு எப்படி ஆறுதல் கிடைக்கிறது என்று
யோசிக்கிறீர்களா…?
அவளது உடலமைப்பைப் பொருத்த வரை, இந்த
சம்பவம் நிகழ்வது தடுக்க முடியாத ஒன்று…
அது எப்போது நடக்கும் என்பது தான்
நமக்குத் தெரியாத கேள்விக்குறி…
ஒருவேளை, இந்த சம்பவம் அப்போது நடக்காமல் இருந்தால்,
பின்னர் – அந்த மகளுக்கு திருமணம் நடந்து,
அவளது முதல் பிரசவத்தின்போது இது நடந்திருக்க வாய்ப்பு
அதிகம் – என்கிற விஷயம் தெரிய வந்தது தான் ஆறுதலைத் தந்தது.
திருமணமாகி, ஒரு குழந்தையையும் பெற்ற பிறகு –
இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் – அது என்னும் எத்தனை
பெரிய கொடுமை…
“காலம்” ஒரு மிகச்சிறந்த மருந்து.
Time is the best medicine for many problems…
காலம் செல்லச் செல்ல இந்த ரணங்கள் ஆறும்…
ஆனாலும் – அந்த வடு,தழும்பு அப்படியே தானிருக்கும்.
அது அவ்வப்போது துன்ப நினைவுகளை உருவாக்கிக்கொண்டே
இருக்கும்.
உலகில் யாருக்குத் தான் சோகமில்லை…யோசித்துப் பாருங்கள்…
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதம்…
நம்மை விட அதிக சோகத்தை, துன்பத்தை அனுபவித்துக்கொண்டு
இருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்…. அவர்களைப்பற்றி
நாம் அறிவதில்லை – –
என்று நினைத்து சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியது தான் வழி.
நினைவு வரும்போதெல்லாம், மற்ற விஷயங்களில்
தீவிரமாக ஈடுபடுவதும் கொஞ்சம் உதவும்.
அடுத்த இடுகை ஒன்றை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
இன்னும் சற்றி நேரத்தில் வெளியாகும்.
படித்துப் பாருங்கள்… அது கூட உங்களுக்கு உதவலாம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
உலகின் மிகப்பெரிய அற்புதமான மருந்து காலமும் ,மறதியும் தான். அது எப்பேர்ப்பட்ட வலியையும், இழப்பையும் குணப்படுத்திவிடும். ஒருகாலத்தில் நம்மை தூங்கவிடாமல் , கொன்ற மன உளைச்சல்களையும் , இழப்புகளையும் , கடவுள் மனித குலத்திற்கு கொடுத்த இந்த நன்கொடையான , இந்த காலமும்,மறதியும் ஒன்றிணைந்து நம்மை விடுவித்து நிச்சயம் முன்னோக்கி எடுத்து செல்லும் .