இரண்டாம் உலகப்போரின்போது –
ஜப்பானியரின் இந்த கொடுமையான ரயில்பாதை திட்டத்தில்
சிக்கியவர்களில் மேற்கத்திய நாடுகளின் ராணுவத்தைச்
சேர்ந்த “போர்க் கைதிகள்” ( prisoners of war ) தான்
ஓரளவு படித்தவர்கள், சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடிய
மனோதைரியம் உள்ளவர்கள். கொஞ்சம் தந்திரம்
தெரிந்தவர்கள்…. பிரிட்டிஷார், ஆஸ்திரேலியர்கள், அமெரிக்கர்கள், டச்சுக்காரர்கள் அடங்கிய இவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும்.
மற்ற ஆசிய இனத்தவர் அத்தனை பேரும் அப்பாவிகள்.
(கிட்டத்தட்ட 3 லட்சம் பேர்). ஏமாற்றியும், மிரட்டியும்
ரயில்பாதை திட்டத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள்.
இவர்களை உருட்டி, மிரட்டி, துப்பாக்கி முனையில்
சித்திரவதை செய்து வேலை வாங்கினர் ஜப்பானியர்.
அதிகாலையிலிருந்து, இரவு வரை – வெளிச்சம் இருக்கும்
நேரங்கள் முழுவதும் கடுமையான உடல் உழைப்பு.
இவர்கள் தங்கும் இடங்கள் மகாமோசம். காடுகளின் ஊடே,
விஷ ஜந்துக்களின் நடமாட்டத்துக்கு இடையே, போதிய
வெளிச்சமும் இன்றி, குளிக்கவோ, மலம் கழிக்கவோ கூட
தனி இடமின்றி – நரக அவஸ்தைக்கு உள்ளாயினர்.
3 லட்சம் பேர் திறந்தவெளியில் தான் மலம் போக
வேண்டுமென்றால் …?
இதில் நோய்வாய்ப்பட்டவர்களை கவனிக்க எந்தவித
மருத்துவ மனைகளும் இல்லை.காய்ச்சலுடன் வேலை
செய்ய பணிக்கப்பட்டனர்.
மிகக் கடுமையான நோய் வசப்பட்டவர்களை,
மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி,
தனியே அழைத்துக் கொண்டு போய் தொலைவில்
ஒரு கொட்டகையில் விட்டு விட்டு வந்து விடுவர்
ஜப்பானிய ராணுவத்தினர்.
நோய் முற்றி, கவனிக்க ஆளின்றி, உணவின்றி,
மருந்தின்றி, அவர்கள் அங்கேயே அநாதைகளாக
மரணத்தை சந்தித்தனர்.
சில நாட்களுக்கு பின் ஜப்பானிய ராணுவத்தினர் அத்தகைய
இடங்களுக்குச் சென்று, மொத்தமாக பெரிய பெரிய
குழிகளைத் தோண்டி இறந்தவர்களையும், குற்றுயிராகக்
கிடப்பவர்களையும் சேர்த்தே புதைத்து விட்டு வந்து விடுவர்.
சில சமயங்களில் மொத்தமாக குவித்து, டீசலை கொட்டி
எரித்தும் விடுவர்.
உணவுக்கோ கடும் பஞ்சம். அவர்களுக்கு வரவேண்டிய
சப்ளை முழுவதும் க்வாய் நதியில், படகுகளின் மூலமே
வர வேண்டியிருந்தது.
லட்சக்கணக்கான கூலியாட்களுக்கு
அது பத்து சதவீதம் கூட பத்தவில்லை. விளைவு –
அத்தனை பேரும் எலும்புகூடுகளாயினர்… கால்வயிற்றுக்கு போதுமான சுண்ணாம்பு போட்ட அரிசி
மட்டும் ஒவ்வொருவருக்கும் ரேஷனாக கிடைத்தது.
அபூர்வமாக அவர்களுக்கு கிடைத்தவை – மரவள்ளிக்
கிழங்கும் கருவாடும்.
இந்த கொடூரங்கள் எல்லாம் முழுவதுமாக வெளியுலகிற்கு
தெரியாமலே போயிருக்கும் – சில புத்திசாலிகளான
மேற்கத்திய யுத்தக் கைதிகள் மட்டும் அவற்றை திருட்டுத்
தனமாக, ஆவணப்படுத்தா விட்டால்…..!
அவற்றில் ஒன்று தான் –
அங்கு அடைபட்டுக் கிடந்த பிரிட்டிஷ் யுத்தக்கைதிகளில்
ஒருவரான Reuben Kandler மிக மிக ரகசியமாக எழுதி
வைத்திருந்த டைரி, மற்றும் அவர் சொல்லிய
மரணக்கதைகளின் அடிப்படையில் அவரது மகன்
Richard Kandler எழுதிய The Prisoner List
என்கிற புத்தகமும் ஒரு குறும்படமும்.
3.5 mts -silent movie
2.43 minutes – news reel
ஒரு டைரியில், அங்கு அடைபட்டுக் கிடந்த, யுத்தக்கைதிகள்
பற்றிய விவரங்களை இயன்ற வரை சேகரித்து
எழுதி இருந்தார் கண்ட்லர்.
சிவப்பு மையில் எழுதி இருந்தால், அந்தக்கைதி
அங்கேயே இறந்து விட்டார் என்று பொருள்.
இதன் கூடவே அவர் சேர்த்து வைத்த பொக்கிஷங்கள் –
ஜப்பானியரிடமிருந்து திருடப்பட்ட ஒரு நியூஸ் ரீல்,
மற்றும் ஒரு சிறு பெட்டியில் சில ஜப்பானிய கரன்சிக்கள்.
காவலில் இருந்த ஜப்பானிய ராணுவத்தினரிடமிருந்து
அவ்வப்போது ஒளித்து வைத்து, புதைத்து வைத்து –
கடைசி வரை படு ஜாக்கிரதையாக காப்பாற்றி இருக்கிறார்.
இவர்கள் கட்டிக் கொண்டிருந்த ஆற்றுப் பாலத்தின் மீது
அவ்வப்போது, நேச நாடுகளின் விமானங்கள் வந்து
குண்டுமழை பொழிந்து, பாதையை செயலற்றதாக்கி விட்டுப்போகும். மீண்டும் மீண்டும், இந்த கைதிகள்,
கூலிகள் அவற்றைச் செப்பனிட்டு எழுப்ப வேண்டும்.
சில சமயங்களில் குண்டு வீச்சுக்கு பலியாகி கொத்து
கொத்தாக இறந்தவர்களும் உண்டு.
ரயில் பால வேலைகள் முடிவடைந்த பிறகு, அதன்
ரெகுலர் மெயின்டெனன்ஸ் வேலைகளுக்காக மட்டும்
சில கைதிகளை வைத்துக் கொண்டு –
சிக்கன நடவடிக்கையாக, மற்ற யுத்தக்கைதிகள்
அனைவரையும் ஆகஸ்ட் இறுதியில் தீர்த்து விடத்தீர்மானித்திருந்தது ஜப்பானிய ராணுவம்.
அதிருஷ்டவசமாக, கடைசி கடத்தில் –
1945, ஆகஸ்ட் 15-ந்தேதி, ஜப்பான் யுத்தத்தில் தோல்வியை
ஒப்புக்கொண்டு சரண் அடைவதாக அறிவித்தது.
கைதிகளின் உயிர் தப்பியது.
கூலிகளாக வந்திருந்த மலேசியத் தமிழர்கள் மற்றும்
பிற இனத்தவரில், உயிர் பிழைத்திருந்தவர்கள் மட்டும்,
அவரவர் ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். தாங்கள்
பத்திரமாகச் சேர்த்து வைத்து, உடன் கொண்டு வந்திருந்த நோட்டுக்கள் அனைத்தும் செல்லாத நோட்டுக்கள்
என்று ஊர் திரும்பிய பிறகு தான் தெரிந்தது அந்த அப்பாவிகளுக்கு.
ஆஸ்திரேலியாவும், பிரிட்டனும், தங்கள் ராணுவத்தைச்
சேர்ந்த யுத்தக் கைதிகள், ஊர் திரும்பியதும், அவர்களுக்கு
ஓரளவு நஷ்டஈடு கொடுத்து, அத்தனையையும் ஆவணப்
படுத்தினார்கள். இன்றும் ஆஸ்திரேலியா மற்றும்
பிரிட்டனில் இது சம்பந்தமாக பல ஆவணங்கள் பத்திரமாக
பாதுகாப்பில் இருக்கின்றன.
BBC, London இது குறித்து 55 நிமிடங்கள் ஓடக்கூடிய
ஆவணப்படம் ஒன்றினைத் தயாரித்தது. இந்த இடுகையின்
கடைசியில் அதற்கான லிங்க் கொடுத்திருக்கிறேன்.
நேரமும், ஆர்வமும் இருப்பவர்கள் பார்க்கலாம்….
இதில் பெரும் உயிரிழப்புக்கும், பாதிப்புக்கும் உள்ளான
இந்திய வம்சாவளியினரான மலேசியத் தமிழர்கள் தான்
எந்தவித நஷ்ட ஈடோ, அங்கீகாரமோ இல்லாமலே
காணாமல் போனார்கள்.
இவர்கள் பட்ட கொடுமைகள் வெளியில் தெரியாமல்
போனதற்கு காரணமாக யாரைச் சொல்வது….?
இந்திய அரசைச் சொல்ல முடியாது – ஏனெனில்
இந்தியா அப்போது சுதந்திரம் பெற்றிருக்கவில்லை.
பிரிட்டிஷ் அரசு தான் இந்தியாவிற்கு பொறுப்பேற்றிருந்தது.
பொதுவாக யுத்தக்கைதிகள் பற்றிய விவரங்கள்,
ஆவணங்கள் அந்தந்த நாட்டில் இருந்தன…
கூலிக்கு இழுத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் பற்றிய
விவரங்கள் யாரிடமும் இல்லை… யார் யார் சென்றார்கள்..
அதில் யார் யார் அங்கேயே செத்துப்போனார்கள்..
எத்தனை பேர் முழுசாகத் திரும்பினார்கள்…
கிட்டத்தட்ட இதில் எந்த கேள்விக்கும் முழுவதுமான
பதில் இல்லை.
இறுதியாக –
தமிழர்களின் இந்த கொடுமையான சரித்திரத்தை
வெளியுலகிற்கு தெரியப்படுத்த –
” சயாம்-பர்மா மரண ரயில் பாதை ” என்கிற
ஒரு ஆவணப்படத்தை தாங்கள் பத்து ஆண்டுகள்
கடுமையாக உழைத்து தயார் செய்ததாகக் கூறும்
குழுவினர் – உண்மையில் இந்த ஆவணப்படத்தை
தயாரித்ததன் நோக்கம் என்ன…?
இந்த தமிழர்கள் பட்ட கொடுமையை வெளியுலகிற்கு,
குறைந்த பட்சம் இந்தியா முழுமைக்குமாவது,
தெரியப்படுத்துவதா அல்லது
வரிசையாக film festival நடைபெறும் நாடுகளுக்கு மட்டும்
எடுத்துச் சென்று அங்கு திரையிட்டு, தங்களுக்கு
பெயரும், புகழும், பணமும் – தேடிக்கொள்வதா…?
இந்த ஆவணப்படத்தை முதன் முதலில் அவர்கள்
பாரீஸில் -ஒரு film festival -ல் திரையிட்டு,
இரண்டு ஆண்டுகள் கடந்து சென்று விட்டன…
ஆனால் இன்று வரை தமிழ்நாட்டு
மக்களுக்குகூட இவற்றைப் பற்றிய விவரம் தெரியாது.
selected audience-ஐ அழைத்து, தங்களுக்கு விளம்பரம்
தேடிக்கொண்டால் போதுமா..?
அவர்களது நோக்கம் உண்மையானது என்றால்
அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்…?
இந்த ஆவணப்படத்தை நமது தமிழ் /ஆங்கில தொலைக்காட்சி
சேனல்களில் திரையிட ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் ஆவணங்கள் சானல்-4 -ஆல்
இந்திய தொலக்காட்சிகளில் திரையிடப்பட்டது போல….
இல்லா விட்டால், குறைந்த பட்சம் அதனை பொதுமேடையில்
youtube-ல் பதிவிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால்
இதற்குள்ளாக லட்சக்கணக்கான மக்கள் இதை கண்டிருப்பார்கள்.
இவற்றைப் பற்றி எல்லாம் அறிந்திருப்பார்கள்…
முக்கியமாக, இந்திய அரசுக்கு இந்த ஆவணப்படத்தை
அவர்கள் அனுப்பி வைத்தார்களா…? பலியான இந்திய
வம்சாவளி மலேசியத் தமிழர்கள் குறித்த ஆவணங்கள்
சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும், இந்த
தேசத்தில் அவர்களது இழப்புகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்
அதற்கான நினைவுச் சின்னம் ஒன்று ஏற்படுத்தப்பட
வேண்டும் என்று வேண்டுகோள் எதாவது விடுத்தார்களா..?
குறைந்த பட்சம் –
அனைத்து நாடுகளிலும் நடந்த,
இனி நடைபெறவுள்ள film festival நிகழ்வுகளில்
திரையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள்
பெற வேண்டியதை எல்லாம்
பெற்ற பிறகாவது
இந்த” ஆவணப்படம் “| “பொதுமேடை” யில், ஊடகங்களில்
வெளியிடப்படும் என்று நம்புவோமாக.
(தொடரும் -பகுதி-3 )
.
—————————————————————————-