….
….
….
….
….
4 வருடங்களுக்கு முன்னர் இதே விமரிசனம் தளத்தில்
கோவையை அடுத்த சிங்காநல்லூரில் முழுக்க முழுக்க
தன் சொந்தப்பணத்தைக் கொண்டு “சாந்தி சமூக நிறுவனம்”
என்கிற தொண்டு நிறுவனம் ஒன்றினை நிறுவி, செயல்பட்டு
வந்த திரு.சுப்ரமணியன் அவர்களைப் பற்றியும், அவர்
செய்துவரும் அற்புதமான மக்கள் தொண்டைப்பற்றியும்
விவரமாக எழுதி இருந்தேன்…( அந்த இடுகையை, இதைத்
தொடர்ந்து கீழேயே மீண்டும் பிரசுரித்திருக்கிறேன்…)
78 வயதாகும் அவர், கொஞ்ச காலமாக உடல்நலம் குன்றி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த
நிலையில் கடந்த 11/12/2020 அன்று காலமானார் என்கிற
துயரமான செய்தி கிடைத்தது.
அவரால் பயன்பெற்ற பல்லாயிரக்கணக்கான மனிதர்களைத்தவிர,
அவரது அற்புதமான தொண்டுகளைப்பற்றி, பார்த்தும், கேட்டும்
அறிந்த மேலும் பல்லாயிரக்கணக்கான உள்ளங்கள் இந்த செய்தி
கேட்டு மிகவும் வருத்தமடைகின்றன.
திரு.சுப்ரமணியன், பணம் உள்ள பெரிய மனிதர்கள் எப்படி
நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக
திகழ்ந்தார்.
“ஊருணி நீர் நிறைந்தற்றே- உலகு அவாம்
பேரறிவாளன் திரு…”
என்பதைப்போல், நல்லவர் ஒருவரிடம் சேரும் செல்வம் எப்படி
பல்லுயிர்களுக்கும் போய்ச்சேருகிறது என்பதற்கு சுப்ரமணியன்
அவர்களின் வாழ்க்கையே ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
திரு.சுப்ரமணியன் அவர்களுக்கு இறைவனடியில், மிகச்சிறந்த இடம்
கிடைத்திருக்கும் … அவர் நினைவை நாம் என்றும் போற்றுவோம்.
எதிர்காலத்தில் மேலும் பல சுப்ரமணியன்’கள் உருவாக
அவர் காரணமாக இருப்பார் என்று நம்புகிறோம்.
.
——————————————————————————
விமரிசனம் தளத்தில் 4 வருடங்களுக்கு முன் வெளிவந்த இடுகை –
—————————————
k.d., p.c., k.c.- ஆகியோர் பிறந்த மண்ணில் தான் இப்படியும் ஒரு அதிசயம்….!!!
Posted on மார்ச் 3, 2016 by vimarisanam – kavirimainthan
.
சில நாட்களாக தொடர்ந்து எதிர்மறையான செய்திகளையே
படித்து நொந்து கொண்டிருந்ததற்கு மாற்றாக இன்று ஒரு
நல்ல தகவலை பரிமாறிக்கொள்ள நினைக்கிறேன்.
( நன்றி – நண்பர் திரு.அப்பண்ணசுவாமி…! )
k.d., p.c., k.c. ஆகியோர் பிறந்த இதே தமிழ் மண்ணில்
பிறந்த ஒரு அதிசய மனிதரைப்பற்றியும், அவரது
பணிகளைப் பற்றியும் இங்கு ஒரு சிறிய அறிமுகம் செய்ய
விரும்புகிறேன்.
இந்த விளம்பரத்தை அந்த வள்ளல் விரும்ப மாட்டார் என்றாலும்,
இதைப்பற்றி எல்லாம் தெரிந்து கொள்வதன் மூலம் –
அவரளவிற்கு முடியாதென்றாலும்,
தங்களால் இயன்ற அளவில் சிறிய உதவிகளையாவது
பிறருக்கு செய்ய வேண்டும், செய்ய முடியும் – என்கிற
எண்ணமும், நம்பிக்கையும், ஆர்வமும் – இதைப் படிக்கும் நண்பர்களுக்கு உருவாகும் என்பதால் தான் இந்த இடுகை –
தன் வாழ்நாள் முழுவதும், உழைத்து உருவாக்கிய ஒரு
தொழில் நிறுவனத்தில் தன் பங்குகளை விற்று, அதன் மூலம்
கிடைத்த தொகையை ( தோராயமாக – இருநூறு கோடி –
ஆமாம் இருநூறு கோடி தான்…! ) கொண்டு ஒரு
தொண்டு நிறுவனத்தை, அறக்கட்டளையை – உருவாக்கி,
கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தன்னாலியன்ற
வகையில் உதவி வருகிறார் அந்த வள்ளல்
அவரது தொண்டு நிறுவனத்தின் மூலம், வசதியற்ற –
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக அவர் உருவாக்கியுள்ள
சில வசதிகள் –
கோவையைச் சுற்றியுள்ள சுமார் 100 அரசு பள்ளிகளின்
infrastructure பணிகளை தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு
செய்து தந்தது – தொடர்ந்து தருவது….
ஒரு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மற்றும் ஒரு ஆண்கள்
உயர்நிலைப்பள்ளியை முற்றிலுமாக தத்து எடுத்துக்கொண்டு,
அவற்றிற்கு தேவையான அனைத்தையும் செய்து தருவது –
மேலும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் –
விசேஷமாக, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா –
விசேஷ மருத்துவ பரிசோதனை வசதிகள் –
மருந்துக்கடை –
ரேடியோலஜி சர்வீஸ் –
டயலிஸிஸ் –
ரத்த வங்கி –
கண் பரிசோதனை – கண் கண்ணாடி –
உணவு விடுதி –
முதியோருக்கும் ஆதரவற்றோருக்கும் இலவச உணவு –
தரமான, லாப நோக்கில்லாத பெட்ரோல் பங்க் –
இறுதியாக –
அமைதியாக போய்ச்சேர – LPG மயான வசதி –
கீழ்க்கண்ட புகைப்படங்கள் அவற்றின் தரத்தை
உங்களுக்கு உறுதி செய்யும் –
இதில் முக்கியமான விசேஷம் என்னவென்றால் –
இத்தனை உதவிகளைச் செய்யும் அவர், எந்த இடத்திலும்
தன் பெயரையோ, புகைப்படத்தையோ போடக்கூடாது
என்றும் – தன் தொண்டு நிறுவனம் வெளியார் யாரிடமும்
எந்தவித பண உதவியையும் (நன்கொடையை) ஏற்காது
என்றும் ( அனைத்து செலவையும் தாமே ஏற்பதாகவும் )
அறிவித்திருப்பது தான்.
இந்த வள்ளல் நீண்ட நெடுங்காலம் நல்ல உடல்நலத்துடனும்,
மனநிறைவோடும் வாழ வேண்டும் என்றும்,
இவரைப் பார்த்து, இவரைப்போல் இன்னும் பல தொண்டு
உள்ளங்கள் உருவாக வேண்டும் என்றும்
இறைவனை வேண்டுவோம்.
—————–
.
——————————————————————————————————–
அந்த இருநூறு கோடி, இவர் (இந்த வள்ளல்) யாருக்கும் எதுவும் தராமல் போயிருந்தால் ஆயிரம் கோடிகளாக ஆயிருக்கும். இவரும் அவற்றை விட்டுவிட்டு மறைந்திருப்பார். அதனால் அவருக்கோ இல்லை யாருக்குமோ பயன் உண்டாகியிருக்குமா?
ஒரு முறை சுற்று வட்டார ஹோட்டல் வியாபாரிகள் 25 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு போட்டால் எங்க வியாபாரம் பாதிக்கப்படுகிறது என்று கூட்டாக இவரிடம் சென்று கம்ப்ளெயின்ட் பண்ணினதற்கு இவர், இன்றிலிருந்து 20 ரூபாய்க்கு உணவு அளிக்கப்போகிறேன். இன்னொருமுறை இந்த விஷயமாக என்னிடம் வந்தால் உணவை இலவசமாக்கிவிடுவேன் என்றாராம்.
ஒரு கவுன்சிலர் பதவிகூட விரும்பாத இந்த வள்ளல். இவரைப் போன்றவர்கள், ஏழைகளுக்கு 5-10ரூபாய் வாங்கிக்கொண்டு மருத்துவம் பார்ப்பவர்கள்… இவங்கள்லாம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் என்று சொன்னால் அதில் தவறுண்டோ?