….
….
ஆப்பிரிக்கா கண்டத்தின் அருகே, கிழக்கே, தமிழர்கள் அதிக
அளவில் வாழும் “ரீ யூனியன்” என்கிற குட்டித்தீவைப்பற்றி
2014-லிலேயே இந்த விமரிசனம் வலைத்தளத்தில் விவரமாக
ஒரு இடுகை வெளிவந்திருந்தது.
தற்போது அந்த அழகிய தீவு பற்றிய “வீடியோ” ஒன்று தமிழில்
வெளியாகி இருக்கிறது.
முதலில், விமரிசனம் தளத்தில் முன்பு வெளிவந்த இடுகை;
பிறகு இடுகையின் கீழே, கடைசியில் – தற்போது
வெளிவந்திருக்கும் அந்த காணொலி –
———————————————-
ரீயூனியன் என்று ஒரு அதிசயமான தமிழர் பூமி …!!
(கடல்களைக் கடந்து ..பகுதி – 5 )
Posted on மே 12, 2014 by vimarisanam – kavirimainthan
———————————————-
தமிழ்நாட்டுக்கு பரிச்சயம் இல்லாத இடம்…..
தமிழ்நாட்டில் பலர் கேள்விப்படாத இடம் …
ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப் பகுதி ஒன்று –
சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன் ….!!!
சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும்,
இந்த ரீ யூனியன் என்கிற தீவு,
ஆப்பிரிக்க கண்டத்திற்கு கிழக்கே –
இந்து மகா கடலில், மொரீசியஸ் அருகே உள்ள,
உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு.
(வரைபடம் கீழே தந்திருக்கிறேன் )
பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத்தொலைவில் இருந்தாலும் கூட
இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப் பகுதி.
உலகில் தமிழர் மகிழ்ச்சியாக வாழும் இடங்களில்ஒன்று – இந்த ரீயூனியன் தீவு…!!!
சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 45 கிலோமீட்டர் அகலமும் உள்ள –
மொத்தமாக 2500 சதுர கிலோமீட்டர் பரப்பளவே உள்ள –
இந்த தீவின் மொத்த மக்கள் தொகை – சுமார் எட்டரை லட்சம்.
அதில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே –
ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு – சுமார் ஒன்றரை லட்சம்….!!!
இன்றைக்கு 170-180 ஆண்டுகளுக்கு முன்னால் –
பிழைப்பு தேடி தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்ற
தமிழர்களின் சந்ததியினர் இவர்கள்.
உலகில் – தமிழகத்திற்கு வெளியே சென்ற தமிழர்களில் மிகவும்
மதிப்புடனும், மகிழ்ச்சியாகவும், சம உரிமை பெற்றும்
வாழ்கின்றவர்களில் இவர்களே முதன்மையானவர்கள்…!!!
பாண்டிசேரி பிரெஞ்சுப் பிரதேசமாக இருந்தபோது –
1827 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 25 வருடங்கள் தொடர்ச்சியாக,
பாண்டிச்சேரி, காரைக்கால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,
போன்ற பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் –
அப்போதைய நாட்களில் ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்த
ரீ யூனியன் தீவில் – கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக
ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச்செல்லப்பட்டார்கள்.
இரண்டும் பிரெஞ்சுப்பிரதேசங்களாக இருந்ததால் –
விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே இல்லை…..!!
சிலர் இலங்கையில் (ஜாப்னா) இருந்தும் குடியேறினார்கள்.
இப்போது உள்ளவர்களில் பலர் அவர்களின் சந்ததியினர்.
ஆரம்பத்தில் ஒப்பந்தக்கூலியாக அழைத்துச் செல்லப்பட்டாலும்,
பிற்காலத்தில் பிரெஞ்சு அரசு இவர்கள் அத்தனை பேருக்கும்
பிரெஞ்சு குடியுரிமை அளித்து
கௌரவமிக்க பிரெஞ்சு குடிமக்களாக ஏற்றுக்கொண்டது.
இவர்கள் அனைவரும் இன்று சம உரிமை பெற்று மகிழ்ச்சியான
பிரெஞ்சு குடிமக்களாக வாழ்கிறார்கள்.
பிரெஞ்சுத் தமிழர்கள் என்று பெருமையுடன்
கூறிக்கொள்கிறார்கள்….!
ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரங்களுடன் ஒன்று கலந்து விட்டாலும்,
இன்னமும் இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில்,
தமிழ்ப் பண்பாட்டு வழிகளையும் விடாமல் தொடர்கிறார்கள்.
தைப்பூசம், பங்குனி உத்திரம், காவடியாட்டம், கரகாட்டம்,
காளியம்மன், முருகன், சிவன் எல்லாம் இவர்களை இன்னமும்
தமிழுடன் இணைத்து வைத்திருக்கின்றன (ர்)…! அத்தனையையும்
இப்போதும் விடாமல் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
வெளியில் ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரம் இருந்தாலும்,
வீட்டுக்குள் இன்னமும் தமிழ் வாழ்கிறது.
தமிழ் நாட்டிலிருந்து கலாச்சார தொடர்பை அவர்கள்
எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு தாய்த் தமிழகத்திடம் உள்ள
ஒரே வேண்டுகோள் –
அவர்களுக்கு தமிழும், இசையும், நடனமும், இலக்கியமும்
கற்றுத்தர தாய்த்தமிழகம் உதவ வேண்டும் என்பது தான் !!
————————————————————————–
(கடல்களை கடந்து பழைய தொடர்புகள் –
பகுதி 1 மற்றும் 2 – காம்போஜம்,
பகுதி -3 தென்னாப்பிரிக்கா,
பகுதி -4 சாவகம் (இந்தோனேஷியா – 3 பகுதிகளில்)
பகுதி -5 ரீ யூனியன் )
————————————————————————-
அற்புதமான இயற்கை வளம் நிரம்பிய ரீ யூனியனின்
அழகான காட்சிகள் பலவற்றை கீழே புகைப்படங்களாக தொகுத்து
கொடுத்திருக்கிறேன்.
இதுவரை 100 முறைகளுக்கு மேல் நெருப்புக் குழம்பைக் கக்கியுள்ள
இரண்டு எரிமைலைகள் இந்த தீவின் சிறப்பம்சம்-
ஒன்று சுமார் 2600 மீட்டர் உயரமுள்ளது
மற்றொன்று 3200 மீட்டர் உயரமுள்ளது.
இந்த எரிமலைகளின் சரிவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன.
ரீ யூனியனின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் –
அதன் மழை வளம்….!
1966 ஜனவரி 7 மற்றும் 8ந்தேதிக்கு இடைப்பட்ட 24 மணிநேரங்களில்,
இங்கு 1,870 மில்லிமீட்டர் (சுமார் 73.6 இஞ்ச் ) மழை பெய்தது
ஒரு உலக ரிக்கார்டு -இதுவரை முறியடிக்கப்படவில்லை…..!!!
மற்ற புகைப்படங்கள் – விமான நிலையம்,
இயற்கைக் காட்சிகள், தமிழர் திருவிழாக்கள் – காவடி, கரகாட்டம்,
தமிழ் முகங்கள், உள்ளூர் மக்களின் -ப்ரெஞ்ச்+ஆப்பிரிக்க
கோலாகல நடனங்கள், கொண்டாட்டங்கள்…… குறித்தவை….!!
———————————————————————–
தற்போது வெளியாகியிருக்கும் காணொலி –
…..
…..
.
—————————————————————————————————————————
நான் இந்தப் பகுதியோ இல்லை இன்னொரு ப்ரெஞ்சுப் பகுதியிலோ, சரஸ்வதி போன்ற படங்கள் வைத்து dilute ஆன முறையில் பூசாரி பூஜை செய்யும் காணொளி (தேங்காய் போன்றவற்றை வைத்து) பார்த்திருக்கிறேன். நான் வேலை பார்த்த ஆஃபீஸில் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்தவர், கை நிறைய தாயத்து, கயிறுகள் கட்டியிருந்தார். அவர், தான் ‘தென்னாப்பிரிக்க இந்து சமயக் குழுவில் துணைத்தலைவராகவோ இல்லை வேறு பொசிஷனிலோ இருப்பதாகச் சொன்னார் (அவங்களோட மூதாதையர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்).
இந்தக் காணொளி, படங்கள் பார்க்கும்போது பாப்பிலோன் நாவலில் படித்தவைகள் என் நினைவுக்கு வருகின்றன.
எனக்கு இந்தப் பயம் (அதாவது நம் கலாச்சாரம் என்று நாம் நம்பிக்கொண்டிப்பவைகளை எனக்கு அடுத்த அடுத்த ஜெனெரேஷன் விட்டுவிடுவார்களோ) இருந்ததால்தான் அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்லவில்லை-25 வருடங்களுக்கு முன். அந்தக் காரணத்துக்காகத்தான் அப்போ கேனடாவுக்கு மைக்ரேட் ஆக விரும்பவில்லை. ஆனால் இந்தப் பயத்தில் அர்த்தம் உண்டா என்று கேட்டால், என்னிடம் பதில் இல்லை. (நங்கநல்லூரில் இருப்பவர் சொன்னார்..பையன் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கே பெர்மனண்டா போகணும் என்றால் போயிடுவேன். அங்க நான் விஸிட் விஸாவுல சில மாதங்கள் தங்கியபோதே என் பையனைவிட எனக்கு அங்கு நண்பர்கள் அனேகர் இருந்தார்கள் என்றார். அப்போ மரணிக்கும்போது தமிழகத்துல இருக்கணும்னுலாம் நீங்க நினைக்கலையா என்று கேட்டேன். எங்க போனா என்ன, எந்த கலாச்சாரப்படி சடங்குகள் நடந்தால் என்ன’ என்று சொன்னார். அவர் காஞ்சி மடத்தின் தொடர்பு உள்ளவர். அவரது எண்ணம் எனக்கு வியப்பைத் தந்தது and also gave an opportunity to rethink whether my thinking in good old days was correct or not)
புதியவன்,
வெளிநாடு எதிலுமே நிரந்தரமாக அல்லது
நீண்ட காலம் தங்கியிருப்பது என் மனம்
ஏற்காத ஒரு விஷயம்.
கோடி ரூபாய் கொடுத்தாலும் என் நிலை
மாறாது.
ஆனால், ஒரு டூரிஸ்டாக விஜயம்
செய்ய நினைக்கும் பல நாடுகள் என்
பட்டியலில் உள்ளன. ஆனால்,என் வயதும்,
உடல் நிலையும்…இடம் கொடுக்காது.
நம் மண்ணில் தான் நாம் வாழவேண்டும்.
இறப்பதும் இங்கே தான் நிகழ வேண்டும்
என்பது என் விருப்பம். காவிரிக்கரையில்
என் உடல் தகனம் செய்யப்பட்டு, அதன்
சாம்பல் காவிரி நீரில் கரைக்கப்பட வேண்டும்
என்பதும் என் ஆசை…!!!
என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ – தெரியாது…!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்…. ஆசை வேறு… விதிக்கப்பட்டிருப்பது என்பது வேறு என்றே நினைக்கிறேன். கனவிலும் நான் நினைத்ததில்லை வெகு சாதாரண நிலையிலிருந்து கொஞ்சம் சுமார் நிலைக்கு வருவேன் என்று. பல நாடுகளுக்குப் பிரயாணம் செய்வேன் என்று. உயரச் சென்று கீழே விழுவேன் என்றும். இதைச் செய்வேன், நான் இன்ன பண்ணுவேன் என்று நினைத்தால் அது என்றுமே நடந்ததில்லை. ஆனால் எடுத்த காரியங்கள் பெரும்பாலும், என்னை மீறிய சக்தி ஒன்றினால் சரியாக நடந்துள்ளது. தோல்வி அடையப்போகிறது என்றால் அந்த முடிவை நான் எடுத்தாலும் செயல்படுத்த முடியாதபடி அமைந்துவிடும். ஆனால் சில வருடங்களுக்கு முன், நடந்தவைகள் என் வாழ்க்கையையே திருப்பிப்போட்டுவிட்டது. இந்த மாதிரி அனுபவங்களுக்குப் பின், எதுவுமே நம்மிடம் கிடையாது, விதிப்படி நடப்பது என்ற நம்பிக்கையும் எனக்கு எப்போதும் இருக்கிறது. எந்த இடத்தில், வீட்டில் வாழ்வேன் என்பதும் தானாகவே நிகழ்கிறது. இதைத்தான் கண்ணதாசன்,
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை
என்று எழுதினாரோ என்னவோ.
நீங்கள் நினைத்தபடியே, அதுவும் எந்தக் கஷ்டமுமில்லாமல் நிகழவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.
நன்றி புதியவன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
தமிழ் கற்றுக்கொள்ள யூ டியூபில்
“learn Tamil through English” என தேடவும் .
மற்றும் http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/tamil.html
University of Pennsylvania’s Website for Learning and Teaching Tamil.
மெய்ப்பொருள்,
உங்கள் தகவலுக்கு
மிக்க நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்