வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது….
மீசை முத்தம் என்றால் பெண்ணே!
நான் உனக்குத் தருவது.
மீசை இல்லாத முத்தம் என்றால்
நீ எனக்குத் தருவது.
தண்ணீர் முத்தம் என்றால் அன்பே
தடயமில்லாமல் இடுவது
தரையின் முத்தம் என்றால் கொஞ்சம்
தடயத்தோடு விடுவது.
கட்டில் மேலே பத்துக் கட்டளை
கட்டளைப்படியே செய்வாயா?
என்னை மெதுவாய் துடிக்கவிடு
எச்சில் மாற்றி உண்டுவிடு
உடையை மெல்ல உதறிவிடு
உன்னை எனக்கு உடுத்திவிடு
சிவந்த பாகம் வெளுக்கவிடு
கறுத்த பாகம் சிவக்கவிடு
எந்தன் உயிரை உறிஞ்சிவிடு
உந்தன் உயிரால் நிரப்பிவிடு.
கட்டில் மேலே பத்துக்கட்டளை
கட்டுப்பட்டு நடப்பாயா?
நயனம் இரண்டும் மூடிவிடு
நான்கு புலன்கள் திறந்துவிடு
கூறைப் புடவை களைந்துவிடு
கூந்தல் சேலை உடுத்திவிடு
என்னைக் கொஞ்சம் ஆளவிடு
எதிர்ப்பது போல வளைந்து கொடு
கவிதை போல் சில உளறிவிடு
கட்டில் கடன்கள் திருப்பிக்கொடு
எந்த சுகங்களை நீ ரசித்தாயோ
அந்த சுகங்களைப் பேசிவிடு
அந்த சுகங்கள் தொடர்ந்திடவே
அரைமணி நேரத்தவணை கொடு.
————————————–
எதையோ தேடிக்கொண்டிருந்தேன் இணையத்தில்.
இது வந்து மாட்டியது – யார் எழுதியது ?
எப்போது எழுதியது ? எதில் எழுதியது ?
விவரம் பார்த்தேன் – திகைத்துப் போனேன் !
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்
மனசாட்சி அவரிடம் எப்படிப் பேசுமோ –
நமக்குத் தெரியாது. ஆனால் -இப்படிப் பேசி இருந்தால்
நன்றாக இருந்திருக்கும் –
———————————
35 ஆண்டுக்காலம்.
பல நூறு திரைப்படங்கள்.
பல ஆயிரம் சினிமாப் பாடல்கள்.
இன்னும் திருப்தி அடையவில்லையா
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே ?
திரை உலகில் நீங்கள் சம்பாதித்தது போதாதா ?
அரசியல் தொடர்புகள் – அதிகாலைத்
தொலைபேசி அழைப்புகள் – அதன் மூலம்
கிடைத்த வர்த்தகத் துணைகள் –
கார், வீடு, பங்களா, தோட்டம்-துறவு,
நிலம்-நீச்சு, மனைவி, மகன்கள் –
நல்ல அந்தஸ்து –
இன்னும் என்ன தான் தேவை உங்களுக்கு ?
இந்த சமூகத்துக்கு – உங்களை இந்த
நிலையில் தூக்கி வைத்துள்ள – தமிழ்ச் சமூகத்துக்கு
இது வரை நீங்கள் செய்தது என்ன என்று
யாராவது கேட்டால் பெருமையாக நீங்கள்
பதில் சொல்ல முடியுமா ?
சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும்
ஒவ்வொருவருக்கு ஒரு சமுதாயக்கடமை இருப்பது
உங்கள் நினைவிற்கு வரவில்லையா ?
உங்களை இந்த நிலைக்கு உயர்த்தி விட்ட
தமிழ் மக்களுக்கு நீங்கள் இது வரை செய்தது என்ன ?
அருமையான தமிழ்ப் புலமை -சொல் ஆளுமை,
மொழி அறிவு, சிந்திக்கும் அறிவாற்றல் –
அத்தனையும் உங்களுக்கு உண்டு.
உங்கள் எழுத்தை ரசித்துக்கொண்டே இருக்கலாம் –
உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
உண்மை – ஆனால் அவை அனைத்தும் நீங்கள்
பணம் பண்ண மட்டும் தானா ?
இந்த சமுதாயத்துக்கு நீங்கள் செய்தது என்ன ?
அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
கவிப்பேரரசு என்ற பட்டத்தை சுமந்து கொண்டிருக்கும்
நீங்கள் அந்த பட்டத்திற்காவது நியாயம்
தந்திருக்கிறீர்களா ?
தமிழ் இலக்கியத்திற்கு நீங்கள் ஆற்றிய பணி என்ன ?
உங்கள் படைப்பாற்றல் திரைப்படங்களோடு நின்றால்
போதுமா ? இத்தனை திரைப்படப் பாடல்களும் எத்தனை
நாட்கள் நிலைக்கும் என்று நினைக்கிறீர்கள் ?
தமிழில் -காலத்தால் அழியாத காவியங்களைப்
படைக்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு இல்லையா ?
காசுக்காக போதையூட்டும் பாடல்கள் எழுதியது போதும் –
60 வயதிற்கு மேலாவது நல்ல இலக்கியப்படைப்புகளையும்
உருவாக்குவோம் என்று தோன்றவில்லையா
உங்களுக்கு ?
உடனே கேட்கலாம் – நான் என்ன
இலக்கியம் படைக்கவில்லையா ? இதிகாசம்
எழுதவில்லையா என்று !
ஆமாம் – உங்களுக்கே சந்தேகம் மற்றவர்கள்
கூறுவார்களோ இல்லையோ என்று –
எனவே நீங்களே தலைப்பில் இட்டு விட்டீர்கள்
கள்ளிக்கோட்டை “இதிகாசம்”
கருவாச்சி “காவியம்” என்று !
வேறு என்ன செய்திருக்கிறீர்கள் சொல்லுங்கள்
பார்ப்போம்.
சரி … போகட்டும். இன்னும் உங்களுக்கு
நிறைய வயதிருக்கிறது – அவகாசம் இருக்கிறது.
இப்போதாவது துவங்குங்கள்.
தமிழ்ச் சமுதாயத்துக்கும், தமிழ் இலக்கியத்துக்கும்
நீங்கள் ஆற்ற வேண்டிய பணியை இனியாவது
துவக்குங்கள் -கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே !
Good post.