செவிடர்கள் காதில் ஊதிய சங்கு !
இலங்கை பற்றிய மிக முக்கியமான செய்தி –
இன்றைய தினம் தினமணி
நாளிதழின் தலையங்கத்தில் இலங்கை பற்றிய
அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியாகியுள்ளன!
விவரம் கீழே –
இலங்கைத் தமிழர் பிரச்னையை மட்டுமல்ல,
இலங்கை தொடர்புடைய எந்தப் பிரச்னையையும்
ஏதோ நமக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே
இல்லாத அன்னிய நாட்டின் பிரச்னை என்று
இந்தியா ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில்
மீன்பிடிக்கும் உரிமை என்பது இந்திய மீனவர்களைப்
பாதிக்கக்கூடியது என்ற வகையில் மட்டுமல்லாமல்,
இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்
தரக்கூடிய ஒரு பிரச்னை என்பதையும்
நாம் மறந்துவிடக் கூடாது.
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும்,
இலங்கையில் முல்லைத் தீவு பகுதிகளில்
மீன்பிடிக்க சீனர்களுக்கு அனுமதி அளிக்க
இலங்கை தயாராகி விட்டதாகத் தெரிகிறது.
இலங்கையின் வளர்ச்சிப் பணிகளில்
துணைபுரிகிறோம் என்கிற சாக்கில்,
பெருமளவில் சீனா கால் பதித்திருப்பதுடன்
இலங்கை ராணுவத்துக்கும் அதிக அளவில்
உதவ முன்வந்திருப்பது, இந்தியாவுக்கு
மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக
மாறும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்த
தமிழர்களின் சம உரிமைப் போராட்டம்
தகர்க்கப்பட்ட நிலையில், இப்போதைக்கு
வட இலங்கையில் வசிக்கும் பெருவாரியான
தமிழர்களின் ஒரே வாழ்வாதாரம் கடலில்
மீன்பிடிப்பது மட்டுமே.
விவசாயம் முழுமையாக அழிந்துவிட்ட நிலைமை.
தொழில்வளம் என்பது பெயருக்குக்கூடக்
கிடையாது. பழைய நிலைமைக்குத் திரும்பி
இந்தப் பகுதிகளில் சகஜ வாழ்க்கை ஏற்பட
வேண்டுமானால் குறைந்தது 20 ஆண்டுகளாவது
தேவைப்படும் என்கிற சூழ்நிலையில், இவர்கள்
மீன்பிடித்து வாழும் பிழைப்பிலும் மண் விழுந்து
விடுமோ என்கிற நியாயமான அச்சம் எழுகிறது.
இலங்கையில் முல்லைத் தீவு கடல் பகுதியில்
மீன் பிடிக்கலாம் என்கிற அறிவிப்பு,
பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் தேடிக் காத்திருந்த
தமிழர்களுக்கு மட்டுமல்ல,
இந்திய மீனவர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை
ஏற்படுத்தியது. ஆனால், இந்த அறிவிப்பைத்
தொடர்ந்து, நந்திக்கடல் பகுதியில்
இறால் பண்ணைகளை அமைக்க சீனர்களுக்கு
இலங்கை அரசு அனுமதி அளிப்பதாக வந்த
தகவல், அதிர்ச்சி அலைகளை
ஏற்படுத்தி இருக்கிறது.
நந்திக்கடல் பகுதிகளில் 60.45 சதுர கி.மீ.
சுற்றளவுக்குப் பல்வேறு வகையான இறால்கள்
அதிக அளவில் காணப்படுகின்றன.
இந்தப் பகுதியில் இறால் பண்ணைகளை
அமைப்பதன் மூலமும், மீன் பிடிப்பதன் மூலமும்
பெரிய அளவில் இறால் ஏற்றுமதியில் சீனர்கள்
ஈடுபடுவர் என்று கருத வாய்ப்பிருக்கிறது.
இந்த இறால் பண்ணைத் திட்டத்தை சீன அரசின்
உதவியுடன் இலங்கை அரசே மேற்கொள்ளப்
போவதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம்
இருக்கின்றன.
ஒருவேளை, விடுதலைப் புலிகளுக்கும்
இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த
போரில் மரணமடைந்த ஆயிரக்கணக்கான
விடுதலைப் புலியினரின் உடல்கள்
இந்தப் பகுதியில் இன்னும் அகற்றப்படாமல்
இருக்கலாம் என்றும், சீனர்களின் உதவியுடன்
அந்த உடல்களை முறையாக அழிக்காவிட்டால்,
தொற்றுநோய் பரவும் ஆபத்து ஏற்படும் என்றும்
சில இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.
இறால் பண்ணை என்கிற பெயரில், சீன
உதவியுடன் நாற்றமடித்துக் கொண்டிருக்கும்
பிணங்களை அப்புறப்படுத்தித் துப்புரவு செய்யும்
நோக்கத்தில்தான் இப்படி ஒரு முயற்சி
நடைபெறுகிறது என்கிற ஐயமும் ஏற்படுகிறது.
எது எப்படி இருந்தாலும், இலங்கையின்
வடக்குப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை
சீனர்களுக்குத் தரப்படுவதை இந்தியா
அனுமதிப்பது என்பது, தேவையில்லாத
பாதுகாப்பு அச்சுறுத்தலை வலிய வரவழைத்துக்
கொள்வதற்கு ஒப்பானது என்பதில்
மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
ராஜபட்ச தலைமையிலான இலங்கை அரசு,
சீனா என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டி
இந்தியாவை மிரட்டிப் பணிய வைத்துக்
கொண்டிருப்பது போதாதென்று,
இன்று இல்லையென்றால் நாளை,
சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு
இந்தியாவுக்கு எதிராக அணிசேரும் வாய்ப்பை
நாம் ஏற்படுத்திக் கொடுத்துவிடலாகாது.
ஆப்கானிஸ்தான் பிரச்னையில் இந்தியாவுக்குக்
கருத்துச் சொல்லும் உரிமையும், தனது
பாதுகாப்புக் கருதித் தலையிடும் உரிமையும்
உண்டு என்று இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர்
தெரிவிக்கிறார்.
நேபாளம் இந்தியாவை ஒட்டிய தேசம் என்பதால்
அந்த நாட்டு நிகழ்வுகளில் இந்தியாவுக்கு
அக்கறை உண்டு என்று பிரதமர் உரிமை
கொண்டாடுகிறார்.
மியான்மரிலும், வங்க தேசத்திலும்
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான
சக்திகள் இயங்குவதை நாம் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று
வெளிவிவகாரத்துறை அமைச்சர்
தெளிவுபடுத்துகிறார்.
ஆனால், இலங்கை பற்றிய பேச்சு
வரும்போது மட்டும், இவர்கள்
அனைவருமே ஒத்த குரலில்
“அது இன்னொரு நாடு சம்பந்தப்பட்ட
விஷயம்’ என்று கைகழுவி வேறுபக்கம்
திரும்பிக் கொள்கிறார்களே, ஏன்?
அறுபதுகளில் காமராஜ், பக்தவத்சலம் போன்ற
தலைவர்கள் தமிழகத்தின் நலனிலும்,
இலங்கைத் தமிழர் நலனிலும், இந்தியாவின்
நலனிலும் அக்கறை கொண்டிருந்ததுடன்,
தமிழர் நலன் சம்பந்தப்பட்டிருந்ததால்
இலங்கைப் பிரச்னையில் அன்றைய மத்திய
ஆட்சியாளர்களுக்கு சரியான வழிகாட்டுதலை
அளித்து வந்தனர்.
எழுபதுகளில், சி. சுப்பிரமணியம்,
பழ. நெடுமாறன் போன்றோர், தென்னிந்தியா
அமைதிப் பூங்காவாக இருக்க இலங்கை
இந்தியாவுக்கு அடங்கி இருப்பது அவசியம்
என்பதை தில்லிக்கு உணர்த்திச்
செயல்பட வைத்தனர்.
எண்பதுகளில் எம்.ஜி.ஆர்., ஆர். வெங்கட்ராமன்,
ஜி.கே. மூப்பனார் போன்றவர்களின் வார்த்தைக்கு
தில்லி செவி சாய்த்தது. இலங்கை அரசு நமது
கட்டுக்குள் அடங்கி இருந்தது.
இலங்கையில் நடைபெற்று வரும்
இனப்படுகொலையும், தமிழர்கள் மீதான தொடர்
தாக்குதல்களும், வருங்காலத்தில்
தென்னிந்தியாவின் அமைதிக்கு ஊறு
விளைவிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து,
மத்திய அரசைப் புரிய வைத்து, நடவடிக்கை
எடுக்க வைக்கும் திறமையற்ற சக்திகளிடம்
20 ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஆட்சி
சிக்கிவிட்டதன் விளைவு,
இப்போது சீனா இலங்கையில் பலமாகக்
காலூன்றத் தொடங்கிவிட்டிருக்கிறது.
இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம்
அதிகரிக்க அதிகரிக்க, அருணாசலப் பிரதேசமும்,
அந்தமான் நிக்கோபார் தீவுகளும் மட்டுமல்ல,
ஒட்டுமொத்த இந்தியாவே ஆபத்தை
எதிர்கொள்ள வேண்டிய நிலைமை
ஏற்படப் போகிறது.
ஒரு ராஜபட்சவை எதிர்கொள்ளும்
ராஜதந்திரம்கூடத் தெரியாதவர்களின்
கையில் நாடும், ஆட்சியும்,
அதிகாரமும் சிக்கிச் சீரழிகிறது.
இந்தக் குழம்பிய குட்டையில் ஏன் சீனாவும்,
இலங்கையும் மீன் பிடிக்க முற்படாது?
ஈழத்தமிழர்கள் காலகாலமாக சொல்லி வந்த உண்மை. இந்தியாவின் நன்பனாக சிங்கள அரசு எப்போழுதும் இருக்காதென்பது. அன்று மறுத்தவர்கள் இனியாவது புரிந்து கொள்ளட்டும். அன்மைய வரலாறுகளில் இருந்தாவது இந்தியா என்ற தமிழரின் இன அழிப்பிற்கு உதவிய நாசகார நாடு புரிந்து கொள்ளுமா? ஈழத்தமிரின் தலைமைத்துவம் அடிக்கடி சொல்லி வந்த உண்மைகள் புறந்தள்ளியவர்கள் அதற்கான பலனை விரைவில் அனுபவிக்கப் போகின்றார்கள் என்பதே நிதர்சனம். ஆபத்து கதவைத் தட்டிக் கொண்டிருப்பதை இனியாவது இந்த கோமாளி இந்திய அரசியல் வியாதிகள் புரிந்து கொள்வார்களா?